Friday, July 11, 2008

பதில்கள் + ?கள்

கேள்விகளுக்கு நன்றி ஆடுமாடு.

1. இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா? (சங்கர ராம சுப்பிரமணியனின் கவிதைக்கெதிராக ம.க.இ.க வினரின் பிட்நோட்டீஸ்)


முதலில் உதாரணத்தின் அடிப்படையில். முதலாவதாக அங்கு இலக்கிய மோதல் நடக்கவில்லை. சங்கரராம சுப்பிரமணியன், விக்கிரமாதித்யன், லட்சுமிமணிவண்ணன் ஆகிய மூன்று கவிஞர்களும் எழுத்ய கூட்டுக்கவிதைகள் ஈராக் மக்களுக்கு எதிரானதென்றும் ஈராக் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது என்றும் கருதிய ம.க.இ.க தோழர்கள் அவற்றிற்கெதிராக துண்டறிக்கைகளை வினியோகித்தார்கள். இலக்கியங்களுக்கெதிராகப் 'பிட்நோட்டீஸ் அடிக்கக்கூடாது' என்றோ 'புத்தகம் எழுதக்கூடாது' என்றோ சொன்னால் அண்ணாவின் 'கம்பரசத்தை'ப் பாசிசமாக அடையாளப்படுத்தலாம். ஆனால் பிரச்சினை என்னவெனில், புதிதாய் அப்போதுதான் மணமுடித்த சங்கரின் வீட்டுக்குள் புகுந்து தோழர்கள் நோட்டிஸ் வினியோகித்தது, அவரது மனைவியையை மிரளச்செய்தது, அக்கம்பக்கத்து வீட்டாரிடையே சங்கர் குறித்து ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்கியது என்பது இலக்கியவாதிகளின் குற்றச்சாட்டு.

கவிஞர்களிடமிருந்து மிரட்டிக் கையெழுத்து வாங்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை ம.க.இ.க தோழர்களிடம் (தனிப்பட்ட முறையில் பேசும்போது) மறுத்தார்கள். சங்கர் எழுதிய கவிதைக்காக அவர் வீட்டாரைக் கலவரப்படுத்துவது என்பது தவறுதான். ஆனால் அதற்காக எழுத்தாளர்களுக்கென்று எந்த சமூகப்பொறுப்புமே தேவையில்லையா என்ன?

உங்கள் அடிப்படையான கேள்விக்கு வருவோம். 'இலக்கிய மோதலை, தனி நபர் தாக்குலாக நினைத்து, அவர்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடுவது சரியா?' என்கிற கேள்வி கேட்கப்படவேண்டிய நபர்கள் ம.க.இ.க போன்ற புறச்சக்திகள் அல்ல, உண்மையில் இலக்கியவாதிகளிடம்தான் இந்தக் கேள்வி எழுப்பப்படவேண்டும். சங்கருக்கு ஆதரவாக, வன்முறைக்கு எதிர்ப்பாக இலக்கியவாதிகள் கூட்டம் நடத்தினார்கள். ஆனால் அதே வன்முறையைச் சக இலக்கியவாதிகளின் மீது (நேரடியாகவும், எழுத்து வழியாகவும்) செலுத்தத் தயங்கமாட்டார்கள். அதாவது எழுத்தாளனை வீடுபுகுந்து அடிப்பது, வக்கீல் நோட்டீஸ் விடுவது, போலீஸ் ஸ்டேசனில் புகார்கொடுப்பது, அடித்து உதைப்பது, செருப்பைத் தூக்கிக் காட்டுவது போன்ற அனைத்து 'உரிமைகளும்' இன்னொரு சக இலக்கியவாதிக்குத்தான் உண்டே தவிர இதில் 'அன்னியர் பிரவேசிக்க' அனுமதியில்லை. வாழ்க கருத்துச் சுதந்திரம்!

3. வட்டார வழக்கு குறித்து உங்கள் பார்வை?

பொதுவாக நாம் இப்போது பயன்படுத்தும் 'எழுத்துத்தமிழ்' என்பது பல வட்டார வழக்குகளின் அடையாளங்களின் மீதேறி ஒற்றைப்படுத்தும் பாசிச வடிவமே. 19ம் நூற்றாண்டுப் படித்த மேட்டுக்குடி வர்க்கத்தால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் வெள்ளாளர்களால் உருவாக்கப்பட்டதே இந்த 'பொதுத்தமிழ்'. இந்த ஒற்றைத்துவ முயற்சிக்கு எதிராக தமிழின் பன்மைத்துவக் கூறுகளை அடையாளப்படுத்தவும், 'இங்கு தமிழ் இல்லை, தமிழ்கள்தான் உண்டு' என்று அ.மார்க்ஸ் அடிக்கடி சொல்வதைப் போல தமிழின் ஒற்றை அடையாளத்தை மறுக்கும் முயற்சியாகவே வட்டாரவழக்கின் அடிப்படையிலான இனவரைவியல் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய இரண்டு அம்சங்கள் வட்டாரவழக்கு என்பதும் ஒருபடித்தானதல்ல, கோவை வழக்கு என்பதில் கவுண்டர் வழக்கிற்கும் அருந்ததியர் வழக்கிற்கும் பறையர் வழக்கிற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

அதேபோல் இதுவரை கவிதைகளும் கதைகளுமே வட்டார வழக்கில் வந்திருக்கின்றனவே தவிர தமிழில் எழுதப்படும் அனைத்துக்கட்டுரைகளும் 'மய்யத்தமிழையே' பிடித்துத் தொங்குகின்றன.

4. சமீபத்தில் நீங்க படித்த புத்தகம் பற்றி...

மகாஸ்வேதாதேவியின் '1084ன் அம்மா'. மேற்கு வங்காளத்தில் பூர்சுவாவாகப் பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து போலிசாகச் சுட்டுக்கொல்லப்பட்ட ப்ரீதி என்னும் இளைஞனின் அம்மாவின் நினைவுகள், உணர்வுகள். மேட்டுக்குடியினரின் போலித்தனம், ஒரு சமூகப்போராளியைத் தாய் எப்படிப் புரிந்துகொள்கிறாள் என்பது குறித்த வேறு நோக்கு. பின்னுரையில் வ.கீதா குறிப்பிடுவதைப் போல 'துயரத்திற்கு மாற்றாய் நீதி'யை முன்வைக்கிறது நாவல்.

2. எந்த அரசியலுக்கும் உட்பாத இலக்கியம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். சமீபகாலமாகச் சுய இன்பம் செய்யவில்லை.

இனி ஜமாலனுக்குச் சில கேள்விகள்

1. ராமானுஜத்தின் 'காந்தியின் உடல் அரசியல்' விமர்சனக்கட்டுரையில் (தீராநதி)சமணம் இந்துமதத்தின் ஓரங்கமாகவே மாறிப்போனதையும் அதற்கான கூறுகள் அதன் இயல்பிலேயே அமைந்துள்ளதையும் மாற்றத்தை ஏற்காத அதன் தன்மை குறித்தும் விளக்கிக் காந்தியைச் சமணமரபில் பொருத்தி நீங்கள் கூறுவது சரியானது என்றே கருதுகிறேன். அதேபோல் பெரியாரைப் பவுத்தமரபில் பொருத்திச் சொல்ல இயலுமா?

2. தலித்திலக்கியத்தைப் போல் ஏன் சிறுபான்மையினர் இலக்கியம் என்ற வகையினம் உருவாக முடியவில்லை? முஸ்லிம் இலக்கியம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறித்து...

3. ஆங்கிலம் தெரிந்தால்தான் பின்நவீனத்தைப் புரிந்துகொள்ள இயலுமா?

4. 'சாரு தன் பக்கத்தில் என் வலைப்பூ பற்றிக் குறிப்பிட்டதால் 10 கோடி ஹிட்ஸ் வந்தன' என்று புல்லரிக்கும் பதிவர்கள் குறித்து...

Thursday, July 10, 2008

கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!

நேற்று மதியம் நண்பர் ஜ்யோராம்சுந்தரின் 'காமக்கதைகள்' பதிவுகள் தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டதாக அறிந்தேன். (சுந்தர் முழுமையாக த.மணத்திலிருந்து நீக்கப்படவில்லை என்று நம்புகிறேன்.) சுந்தரிடம் பேசியபோது இதுகுறித்த முன்னறிவிப்பு மின்னஞ்சல்கள் தனக்கு எதுவும் தமிழ்மணத்திலிருந்து அனுப்பப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற பதிவர் சந்திப்பின்போது தோழர்.பைத்தியக்காரன், 'தமிழ்மணம் ஒரு பதிவரை எந்த அடிப்படையில் நீக்குகிறது?, குறிப்பாகத் தமிழச்சி' என்று அச்சந்திப்பிற்கு வந்த தமிழ்மணம் நிர்வாகிகளில் ஒருவரான தோழர்.சங்கரப்பாண்டியனைப் பார்த்து வினவினார்.

அப்போது சங்கரப்பாண்டி, " ஒரு பதிவர் தன்னைத் தமிழ்மணத்தில் இணைக்கும்போது அளிக்கப்படும் விதிகளின் அடிப்படையிலேயே அவர் நீக்கப்படுகிறார்' என்றும் 'அவரது எழுத்துக்கள் குறித்து பெரும்பான்மையினரான பதிவர்களிடமிருந்து தொடர்ச்சியான புகார்கள் வரும்போது நீக்கப்படுகிறார்' என்றும் தெரிவித்தார்.

ஆனால் பைத்தியக்காரனின் கேள்விக்கு முன்னால் ஒரு பதிவர் சுந்தருக்குத் தொடர்ச்சியான நெகட்டிவ் ரேட்டிங் விழுவது குறித்தும், வெகுஜன அபிப்பிராயம் என்ற அடிப்படையில் ஒரு படைப்பை மதிப்பிடுவது சரியா என்னும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நானும் தமிழச்சி உள்ளிட்ட பல பதிவர்கள் வெகுஜன அபிப்பிராயத்தின் அடிப்படையில் மட்டுமே நீக்கப்படுவது என்பது எப்படிச் சரியாகும், உதாரணமாகப் பார்ப்பனியம் குறித்து ஒருவர் தொடர்ச்சியாக எழுதுகிறார் என்றால், பல பார்ப்பனர்கள் அவர் குறித்து அதிகப் புகார்களை அனுப்பினால் அதனடிப்படையில் நடவடிக்கை எடுப்பது எப்படிச் சரியானதாக இருக்கும் என்று கேட்டேன். ஆனால் சங்கரப்பாண்டி 'தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்டாலும் தனிப்பட்ட முறையில் அந்தப் பதிவுகளைத் தான் படிப்பதாக'த் தெரிவித்தாரே தவிர, அவரளித்த பதில்கள் திருப்தியளிப்பதாயில்லை.

இப்போது சுந்தர் விவகாரத்திற்கு வருவோம். சங்கரப்பாண்டி சந்திப்பில் தெரிவித்ததைப் போல குறைந்தபட்சம் எச்சரிக்கைகளாவது சுந்தருக்கு அனுப்பப்பட்டிருக்கவேண்டும். எந்த முன்னறிவிப்புமின்றி பதிவர் நீக்கப்படுவது ஜனநாயகத்தின்பாற்பட்டதல்ல.

மேலும் வெகுஜனத்தளங்களில் எழுத விருப்பமில்லாதவர்கள்/ வாய்ப்பற்றவர்களே பெரும்பாலும் வலைத்தளங்களில் எழுதுகிறார்கள். இது தணிக்கைமுறையினின்று தப்பிக்கும் சுதந்திரம். ஆனால் மீண்டும் அதே வலைப்பூக்களை வழக்கமான தணிக்கைமுறைகளைக் கொண்டே கழுத்தை நெறிப்பது எவ்வகையில் நீதி?

தமிழ்மணம் இதுகுறித்து தெரிவித்துள்ள விளக்கத்தில் 'தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
'என்றும் 'தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.' என்றும் தெரிவித்துள்ளது. அப்படியானால் 'பக்தி' என்று தலைப்பிட்டு பதிவின் உள்ளே காமக்கதைகள் எழுதினால் பிரச்சினையில்லையா?

பொதுவாகவே கலைஞர்களும் எழுத்தாளர்களும் வெகுஜன அபிப்பிராயங்களுக்கும் பொதுப்புத்திக்கும் அப்பாற்பட்டவட்டவர்கள். பொதுப்புத்தியை அப்படியே பிரதிபலிக்க செய்தித்தாள் நிருபர் போதும், கலைஞர்களோ எழுத்தாளர்களோ தேவையில்லை. ஆனால் அத்தகைய எழுத்துக்களை மீண்டும் பொதுப்புத்தி அடிப்படையிலேயே மதிப்பிடுவதன் மூலம் தமிழ்மணம் 1, மாற்றுச்சிந்தனை எழுத்தாளர்களை உரையாடல் வெளியிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது, மீண்டும் பொதுப்புத்திக்குத் தள்ளுகிறது. இது ஆரோக்கியமான எழுத்துக்களை வளர்க்காது. இங்கே இன்னொன்றையும் குறிப்பிடவேண்டும். சுந்தர் நீக்கப்படும்போது படித்த அறிவுஜீவிகளிடமிருந்து வருகின்ற இக்கண்டனங்கள் தமிழச்சியை நீக்கப்படும்போது வராததையும் தொடர்ச்சியான கள்ளமவுனம் கடைப்பிடிக்கப்பட்டதையும் நாமறிவோம். குறிப்பாக பைத்தியக்காரன் போன்ற மாற்றுச்சிந்தனைகளை அறிமுகப்படுத்தி எம்போன்றவர்களுக்குப் பயிற்றுவிக்கும் பதிவர்களும் மவுனம் சாதித்தபோது அதிர்ந்த நான் நேரடியாகவும் பகிடியாகவும் ஒருமுறைக்குமேல் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால் பதிவர் சந்திப்பின்போதாவது பைத்தியக்காரன் தமிழச்சி நீக்கம் குறித்துக் கேள்வியெழுப்பினார். ஆனால் கருத்துரிமை, பன்மைத்துவம், பெண்ணெழுத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றின் மீது நம்பிக்கை வைத்தவர்களாக நான் நம்பும் அய்யனார், சுந்தர், ஆடுமாடு போன்ற பதிவர்கள் இதுகுறித்துச் சின்னஞ்சிறு கண்டனத்தைக் கூடப் பதிவு செய்யாதது வருத்தத்திற்குரியதே.

நானறிந்தவரை பின்நவீனம், மாற்றுச்சிந்தனைகளை முன்னிறுத்தும்/ ஆதரிக்கும் அறிஞர்களும் எழுத்தாளர்களும் பொதுவெளியில் திணிக்கப்படும் கருத்தியல் மற்றும் நேரடியான வன்முறைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றியே வந்திருக்கிறார்கள்.

மொழிவிளையாட்டு என்பது, மொழியின் அதிகாரத்தைக் கேள்விகேட்கும், அதிகாரத்தை உடைக்கும் நுண்ணரசியல் செயல்பாடு என்றே நான் நம்புகிறேன். அல்லாது அது வெறுமனே வடிவம் மற்றும் உத்தி சார்ந்த எழுத்துமுறையாக மட்டுமே நடைமுறைப்படுத்தப்படுமெனில் நாம் சிலேடைக்கவி காளமேகப்புலவரின் வாரிசாவோமேயல்லாது வேறொன்றில்லை. அது மீண்டும் விளையாட்டுகளைப் பார்த்து ரசித்து 'பலே' போடும் மேட்டுக்குடி அழகியல் பார்வைகளையே உற்பத்தி செய்யும்.

மாற்று அரசியல்/ இலக்கியம்/ சிந்தனை, அதிகாரமறுப்பு, பன்மைத்துவம் ஆகியவற்றை முன்வைக்கும் பதிவர்தோழர்கள் இனியாவது குறைந்தபட்சம் தாமியங்கும் வெளியாகிய வலைப்புலத்தில் அமுல்படுத்தப்படும் தணிக்கைக்கு எதிராகவாவது, (தணிக்கைக்கு உட்படுத்தப்படும் பதிவர் மற்றும் அவரது எழுத்துக்கள் தனக்கு உடன்பாடில்லையென்றபோதும்)குரல் கொடுக்க முன்வருவார்களா என்பதே இப்போதைய கேள்வி.

தணிக்கையை மறுப்போம். கருத்துரிமைக்காய் நிற்போம். கலாச்சாரப் போலிஸ்களுக்கு எதிராய்க் கலாச்சார ரவுடியாய் மாறுவோம்!