Tuesday, March 30, 2010

19:8:18 நீதியின் தலைகீழ் விகிதங்கள்


ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உதவியதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நளினியை விடுதலை செய்ய இயலாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. 1991, ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட நளினிக்கு இன்னும் இரண்டு மாதங்களைக் கடந்தால் 19 ஆண்டுகள் சிறைவாழ்க்கை முழுமையாகிறது. ‘14 ஆண்டுகள் ஆயுள்தண்டனை’ என்கிற நடைமுறை கூட நளினியின் விஷயத்தில் காலாவதியாகி விட்டது. நளினியை விடுதலை செய்வது குறித்து ஆலோசிக்க அமைக்கப்பட்ட அறிவுரைக்குழு, ‘நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கும்” என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ‘அதிக நாட்கள் அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை’ என்று உயர்நீதிமன்றத்தில் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாயின. ஆனால் இப்போது ஆலோசனைக் குழுவின் பரிந்துரையோ அதற்கு மாறாய் உள்ளது. ராஜீவ் கொலை வழக்கிற்குப் பின்னால் கிட்டத்தட்ட அய்ந்து பிரதமர்களை இந்தியா சந்தித்து விட்டது. காங்கிரஸ் ஒருமுறை உடைந்து விட்டது. காங்கிரசின் கூட்டணிகளும் மாறிவிட்டன. ராஜிவ் கொலைக்குக் காரணமானதாகச் சொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது. 20 ஆண்டுகாலத்திற்கும் மேலாய் விளங்கி வந்த தமிழர்களின் அரச நிர்வாகம் அழிக்கப்பட்டு ‘இலங்கை அரசின் இறையாண்மை’ நிலைநாட்டப்பட்டு விட்டது. என்றாலும் 19 ஆண்டுகளாய் சிறையில் குடும்பத்தினரை விட்டு வாடிக்கொண்டிருக்கும் நளினிக்கு விடுதலை கிடைப்பதாய் இல்லை. சிறையில் உள்ள கைதிகளை தண்டனைக்காலத்திற்கு முன்பே விடுதலை செய்யும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உண்டு. அதற்கான பல உதாரணங்களைச் சொல்லலா. கடந்துபோன அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி கைதிகளைத் தமிழக அரசு விடுவித்தது அண்மைய சான்று. ஆனால் அந்த கருணை நளினிக்கு வழங்கப்படவில்லை. மேற்கண்ட உரிமையைச் சுட்டிக்காட்டி ‘’அரசியல் அமைப்புச் சட்டம் 161 பிரிவின்படி தமிழக அரசு நளினியை விடுதலை செய்ய பரிந்துரைக்கலாம்” என்று வாதிட்டிருக்கிறார் நளினிதரப்பு வழக்கறிஞர். ஆனால் அரசுத்தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நளினி - பிரியங்கா சந்திப்புக்குப் பிறகுதான் இந்திய அரசு இலங்கையின் இனப்படுகொலையை நடத்துவதில் தீவிரமாய் முன்நின்றது என்ற யூகமும் தமிழ்த்தேசியர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே அவர்களும் இனி நளினி விடுதலையில் ஆர்வம் காட்டுவார்களா என்று தெரியவில்லை. நளினி விடுதலை குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு, சட்டம் ஒழுங்கிற்குப் பாதிப்பு ஏற்படும் நளினி விடுதலையை மறுத்து, பல காரணங்களை அடுக்கியுள்ளது. அவற்றில் ஒன்று, “ நளினி விடுதலை ஆனால் நளினியின் தாயார் வீட்டில்தான் தங்கப்போகிறார் என்று தெரியவருகிறது. நளினியின் தாய் வசிக்கும் ராயப்பேட்டை வீட்டைச் சுற்றிலும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகளும் அமெரிக்க துணைத்தூதரகமும் அமைந்துள்ளன” என்பதும் உண்டு. இனி நளினியின் தாய் அந்தமான் தீவுகள், அபுகிரைப், குவாண்டனோமாவில் தன் குடியிருப்பை மாற்றினால் நளினி விடுதலை ஆகும் வாய்ப்பு உண்டு போலும்.
2002 பிப்ரவரியில் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளை ஒட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணைக்குழு நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தியுள்ளது. இதுவும் கூட தீஸ்தா சேதல்வாத் போன்ற மனித உரிமைப் போராளிகளின் தீவிர போராட்டங்களுக்குப் பிறகுதான் இது சாத்தியமாகியது. ஆனால் ‘குஜராத் மாநிலத்தில் இந்த விசாரணை நடத்தக்கூடாது’ என்ற அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒன்பதுமணி நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த மோடி, ‘’அரசியல் சட்டத்திற்கு மேலானவர்கள் யாருமில்லை. எனக்கு எதிராக குற்றம் சாட்டியவர்களின் முகத்தில் கரி பூசவே விசாரணைக்கு வந்தேன்” என்று பஞ்ச் டயலாக் அடித்துள்ளார். இந்த ஆணவத்தின் காரணம் நாம் அறியாததா?
ராஜீவ் கொலை நடந்த ஓராண்டிற்குள் 1992, டிசம்பர் 6 அன்று இந்துத்துவவாதிகளால் பாபர்மசூதி இடிக்கப்பட்டது. அதை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட லிபரன் கமிஷன் 18 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. பாபர் மசூதி இடிப்பில் அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங் ஆகியோருக்கு இருந்த பங்கை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால் இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிப்பதில் காங்கிரஸ் அரசு காட்டிய ஆர்வத்தில் நூறில் ஒரு பங்கைக்கூட லிபரன் கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இப்போது பாபர் மசூதி இடிப்பு குறித்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கிலும் அத்வானியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அஞ்சுகுப்தா, “பாபர்மசூதி இடிப்பு அத்வானி, உமாபாரதி போன்றோரின் ஆணையின் பேரிலேயே நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். நாளை ரேபரேலி தீர்ப்பின் அடிப்படையிலும் அத்வானி மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான உறுதிகள் எதுவுமில்லை. 18 ஆண்டுகால விசாரணைகளே அத்வானி மீது ஒரு துரும்பையும் கிள்ளிப் போடாதபோது எட்டாண்டுகாலத்திற்குப் பிறகான விசாரணைகள் தன்னை எதுவும் செய்யாது என்பதுதான் மோடியின் நம்பிக்கைக்குக் காரணம். பாபர் மசூதி இடிப்பு வழக்கின் குற்றவாளி அத்வானிதான் கடந்த தேர்தலில் பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் என்றால் குஜராத் இனப்படுகொலை குற்றவாளி மோடிதான் பா.ஜ.கவின் அடுத்த பிரதமர் வேட்பாளர். நளினி விடுதலையை எதிர்க்கும் சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள்தான் மோடிக்கு ‘வளர்ச்சிக்கான முதல்வர்’ என்று புகழாரம் சூட்டுகின்றனர். மத அடிப்படைவாதப் பாசிசமும் உலகமயமாக்கலும் இணையும் புள்ளியாக மோடி இருக்கிறார். அத்வானி, உமாபாரதி, கல்யாண்சிங், மோடி மீது முகம் திருப்பாத நீதிதான் நளினியின் மீது தன் கோரமுகத்தைக் காட்டுகிறது.
இத்தகைய நீதி பாரபட்சம் என்பது நீதித்துறை மற்றும் அதிகார அமைப்புகளிடம் மட்டுமில்லை. அதிகாரத்தை எதிர்த்து இயங்குபவர்களிடம் உண்டு என்பது வேதனை உண்மை. இலங்கை அரசின் இனப்படுகொலைகளை எதிர்த்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிற, காங்கிரஸ் மய்ய அரசை விமர்சித்து வருகிற வைகோதான், இந்திராகாந்தி கொலைக்குப் பின்னான சீக்கியர்களின் மீதான காங்கிரஸ் குண்டர்களின் வன்முறையை முன்வைத்து மோடியின் குஜராத் இனப்படுகொலைகளைப் பாராளுமன்றத்தில் நியாயப்படுத்திப் பேசினார் என்பதை நாம் மறந்து விடுவதிற்கில்லை. ராஜீவ் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலைக்காய் ‘மரணதண்டனை ஒழிப்பு இயக்கம்’ கட்டுபவர்கள் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பொய்வழக்கு போடப்பட்ட அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் குறித்து வாய்திறப்பதில்லை. முஸ்லீம் இளைஞர்களுக்காய்க் குரல் கொடுக்கும் முஸ்லீம் இயக்கங்கள் நளினியின் விடுதலை குறித்து அக்கறை காட்டுவதில்லை. இலங்கை இறுதிப்போரின் போது தமிழர்களின் மீது ஏவப்பட்ட இனப்படுகொலைகளையும் போருக்குப் பின் முகாம்களில் அடைபட்டுள்ள தமிழர்களின் துயரங்களையும் சமீபத்தில் இலங்கை இனவாத அரசால் தமிழர்களின் பெருமிதச் சின்னமான திலீபன் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதையும் குறித்து வட இந்தியாவில் தலித் இயக்கங்கள், மனித உரிமை இயக்கங்கள், பழங்குடி அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள் பேசுவதில்லை. இலங்கை முள்வேலி முகாம்கள் குறித்து பேசும் தமிழர்களாகிய நாம் இன்னமும் வீடு திரும்ப இயலாத நிலையில் முகாம்களில் வாழும் இரண்டரைலட்சம் குஜராத் முஸ்லீம்கள் குறித்தோ சட்டீஸ்கர் முகாம்களில் வைக்கப்பட்டுள்ள ஆதிவாசிகள் குறித்தோ பேசுவதுமில்லை, அதுகுறித்த தகவல்களும் நமக்குத் தெரியாது. எல்லா ஒடுக்குமுறை அரசாங்கங்களும் மேலும் மேலும் மக்களை அடைக்க முகாம்களைத் திறந்துகொண்டே உள்ளன. தேசமே முகாம்கள் ஆகின்றன. ஆனால் நாம் பிரிந்து நிற்கிறோம். நீதி பிளவுபட்டுள்ளது.
“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்னும் சொல்வழக்கு இந்தியாவில் உண்டு. ஆனால் கீழ்வெண்மணிப் படுகொலைகள், திண்ணியத்தில் மலம் ஊட்டப்பட்ட வழக்கு, பாபர் மசூதி இடிப்பு, தாமிரபரணிப் படுகொலைகள், பெஸ்ட் பேக்கரி வழக்கு, போபால் விஷவாயு கொடூரம் என இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நீதி என்பதே தாமதிக்கப்பட்டதாயும் மறுக்கப்பட்டதாயும்தான் உள்ளது என்பது கொடும்நிஜம்.

Tuesday, March 23, 2010

பெரியாரும் லீனாமணிமேகலையும்

வெறுமனே அரசியல் தளங்களில் மட்டுமில்லாது கலாச்சாரத் தளங்களில் பெரியார் உண்டுபண்ணிய அதிர்வுகள் முக்கியமானவை. இன்றும் நாம் பேசத் தயங்குகிற, பொதுவெளியில் பதிவு செய்ய முடியாதென கருதப்படுகிற கருத்துக்களை 1927லிருந்து ஒருவர் இந்தியாவில் பேசி வந்திருக்கிறார் என்றால் அது பெரியார் ஒருவரேதான். எல்லா விஷயங்களிலும் முற்போக்காக இருக்க விரும்புபவர்கள் கூட கலாச்சார அம்சங்களில் சற்று பின்வாங்க நேர்கிற துயரத்தையும் காண்கிறோம். ’இளைய தலைமுறை கெட்டு விடக்கூடாது, ஆபாசக்கவிதைகள்’ எழுதக் கூடாது ’என்று சோ கால்ட் பெரியாரிஸ்ட்கள் இந்துத்துவ டப்பிங் பேசுகிற நகைச்சுவைக்காட்சிகளையும் கண்டுகளிக்கிறோம். ஒரு உண்மையான பெரியாரிஸ்ட் இந்நிலையில் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதற்கான அடையாளமாக பெரியாரியலை வாழ்வியல் நடைமுறையாய் மாற்ற எத்தனிக்கும் தோழர். அதிஅசுரனின் பதிவை இங்கு பதிகிறேன். ‘திருமணத்துக்கு முன்னான பாலுறவு தவறில்லை’ என்று சொன்ன குஷ்புவுக்கு எதிராகக் கலாச்சாரப் பாசிஸ்ட்கள் போராட்டங்கள் நடத்தியும் வழக்கு பதிந்தும் அழிச்சாட்டியம் பண்ணியதை நாமறிவோம். இப்போது குஷ்புவின் கருத்தை ஆதரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த பதிவை அர்த்தம் கொள்ளலாம்.

“அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகள்



தோழர் லீனா மணிமேகலை எழுதிய ஒரு கவிதை ஆபாச இலக்கியம் என்று இந்துமக்கள் கட்சியால் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதை எதிர்த்து லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அழிவு வேலைக்காரன் என்ற வலைப்பூவில் பதிவு எழுதப்பட்டுள்ளது. வினவு தளத்திலும் லீனா மணிமேகலை பற்றி விமர்சித்து எழுதப்பட்டுள்ளது. தோழர் தமிழச்சியும் ஜீனியர் விகடன் இதழில் லீனா மணிமேகலையை எதிர்த்து விமர்சனம் செய்துள்ளார்.

செங்கடல் படப்பிடிப்புச் சம்பவங்கள், அஜீதன் என்பவரது குற்றச்சாட்டுக்கள் அதற்கு லீனா மணிமேகலையின் பதில்கள், சோபா சக்தியின் பழிநாணுவர் என்ற பதிவு, அதற்கு பதிலடியாக வண்டுமுருகனும் காக்டெயில் தேதைகள் என்ற பதிவு என மிகப்பெரிய விவாதங்கள் நடக்கின்றன. இவை எதைப் பற்றியும் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் எனக்குத் தெரியாத மற்றும் புரியாத நிலையில் அந்த விவாதங்களுக்குள் போகவிரும்பவில்லை.

பெரியாரின் பெண்ணுரிமை பற்றி தோழர் லீனா மணிமேகலையும் தமிழச்சியும் பேசியுள்ளனர். யார் பேசுவது பெரியாரின் பெண்ணுரிமை என்பதை முடிவுசெய்ய பெண்ணுரிமைகுறித்த பெரியாரின் கருத்துக்கள் சிலவற்றை மட்டும் இங்கு பதிவிட்டு உள்ளேன். முடிவு உங்களிடம். இவை பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் நூலில் இருப்பவைதான். ஒருசில குடி அரசு இதழ்களில் உள்ளவை. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் தடைசெய்யப்பட்டுள்ள பெரியார் தி.க வின் குடி அரசு இதழ்கள் தொகுப்பு வெளிவந்தால் இது போன்ற பல விவாதங்களுக்கு முடிவு கிடைக்கும். குடி அரசு தடை நீங்கினால் அதன்பிறகு குடி அரசில் உள்ள பெண்ணுரிமை தொடர்பான இதுவரை வெளிவராத கட்டுரைகளை தோழர் பெரியாரில் பதிவிடுவேன்.

- அதி அசுரன்


மனிதன் இருக்கும் வரை அனுபவிக்க வேண்டியது இன்பமும் திருப்தி யுமாகும். இதற்கு ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் முக்கிய சாதனம்.
அப்படிப்பட்ட சாதனத்தில் இப்படிப்பட்ட துன்பத்திற் கிடமான இடையூறு இருக்குமானால் அதை முதலில் களைந் தெறிய வேண்டியது ஞானமுள்ள மனிதனின் கடமையாகும். மனித ஜீவ கோடிகளின் திருப்திக் கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதையே செய்ய வேண்டும்.

குடி அரசு - 17.08.1930


மக்களின் அன்பும் காதலும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு அது இன்ன விதமாக இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்ப்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில் காதல் என்பது ஜீவசுபாவமானது. அதை ஏதோ ஒரு நிர்பந்தத் திற்காகத் தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தனமே யாகும். அன்பு, காதல் ஆகியவைகள் ஏற்படுவது ஜீவனுக்கு இயற்கை சுபாவம் என்றும் அது சுதந்திரமுடையதாயும் உண்மையுடைய தாயும் இருக்க வேண்டுமென்றும் அதை ஒரு இடத்திலாவது ஒரு அளவிலாவது கட்டுப்படுத்துவது என்பது ஜீவ சுபாவத்திற்கும் இயற்கைத் தத்துவத்திற்கும் மீறினதென்றும் ஒப்புக் கொள்ளு கின்ற மக்கள் அன்பு ஒருவரிடம் தான் இருக்க வேண்டும்; காதல் ஒருவரிடம்தான் இருக்கவேண்டும் என்று சொல்ல முன் வருவது முன்னுக்குப் பின் முரண் என்றே சொல்லுவோம். ஆனால் அநுபவத்தில் உள்ள சில சவுகரிய அசவுகரியங்களை உத்தேசித்து அன்பும் காதலும் கட்டுப்பாட்டுக்குள் அடங்க வேண்டியதாக ஏற்படலாம் என்பதை நாம் மறுக்க வரவில்லை. அன்றியும் ஒப்பந்தங்களினால் கட்டுப்பட வேண்டியதாகவும் காதல் பெருக்கால் தானாகவே கட்டுப்பட்டு விட்ட தாகவும் போனாலும் போகலாம். அம்மாதிரி நிலைமைகளில் இம்மாதிரிக் கேள்விக்கே இடமில்லை. ஆதலால் அப்படிப்பட்ட காரியங்களை அவர வர்கள் இஷ்டத்திற்கே விட்டு விட வேண்டியது அவசியமாகும்.

குடி அரசு - 12.10.1930



சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திர மும், சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக் குச் சிறிதும் தேவையில்லாததேயாகும்.. ஜீவசுபாவங்களுக்கு இவ்விரண்டு வார்த்தையும் சிறிதும் பொருத்தமற்றதே யாகும். வாழ்க்கை ஒப்பந்த நிபந்தனைக்கு மாத்திரம் தேவையுடையதாக யிருக்கலாம். ஆன போதிலுங்கூட அவையும் இயற்கைக்கு முரணானது என்பதை யாவரும் ஒப்புக் கொண்டுதானாக வேண்டும். அதற்கு ஆதாரம் என்ன வென்றால் மேலே சொல்லப் பட்டது போலவே அவ்விரண்டு வார்த்தையின் தத்துவங்களையும் பெண்கள் மீது மாத்திரம் சுமத்தப்பட்டு ஆண்கள் மீது சுமத்தப் படாமலும் ஆண்கள் அவற்றை ஏற்றுக் கொண்டு கட்டுப் படா மையும் அதைப் பற்றி லஷியம் செய்யாமையுமேயாகும்.

மற்றும் வேறொரு அத்தாட்சியும் என்ன வென்றால் மக்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கற்புத் தவறுதலும் விபசாரத்தனமும் கூடாது என்று பொதுவாக இருபாலர்களுக்குத் தானாகத் தோன்றாமலி ருப்பதோடு பலர் கற்பித்தும் அதற்காகப் பல நிபந்தனைகளைக் கூட ஏற்படுத்தியும் மற்றும் எவ்வளவோ பயங்களைக் காட்டியும் அதனால் சிலராவது அடிதடி விரோதம், கொலை, உடல் நலிவு முதலியவைகளால் கஷ்டப்படுவதை நேரில் காணக்கூடிய சந்தர்ப்பங்களிருந்தும் இவ்வளவை யும் மீறி மக்களுக்குக் கற்புக்கு விரோதமாகவும் விபசாரத்திற்கு அனுகூல மாகவும் உணர்ச்சியும் ஆசையும் ஏன் உண்டாக வேண்டுமென் பதைக் கவனித்தால் அது தானாக விளங்கும். இயற்கையோடு இயைந்த வாழ்வு எது என்பதையும் இயற்கைக்கு மாறுபட்ட வாழ்வு எது வென்பதையும் எவ்வித நாட்டுப்பற்று, நடப்புப் பற்று, பிறப்புப் பற்று என்பதில்லாமல் நடுநிலையிலிருந்து தன் அநுபவத்தையும் தன் மனதில் தோன்றிய, தோன்றும் உணர்ச்சி களையும், ஆசைகளையும் ஒரு உதாரணமாகவும் வைத்துக் கொண்டு பரிசுத்தமான உண்மையைக் காணுவானேயானால் அப்போதும் கற்பு, விபசாரம் என்னும் வார்த்தைகள் வெறும் புரட்டு என்பதும், மற்றவர்களை அடிமையாகக் கட்டுப்படுத்த உண்டாக்கப்பட்ட சுயநல சூட்சி நிறைந்தது என்பதும் தானாகவே விளங்கிவிடும். மற்றும் விபசாரம் என்பது ஒருவனு டைய “பாத்தியதைக்கும்” ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுப் பாட்டிற்கும் மாத்திரம் விரோதமே தவிர உண்மையான ஒழுக்கத் திற்கு விரோதமல்ல

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் என்பன பொது ஜனங்களில் யாருடைய தனி சுதந்திரத்துக்கும் பாதக மேற்பட்ட தாகவும் அதுவும் பிரயோகத்தில் சிறிதும் பாரபக்ஷம் உயர்வு தாழ்வு தத்துவம் கொண்ட தல்லாததாகவும் இருக்கவேண்டு மென்பதோடு எல்லாவற்றையும் விட அவை முக்கியமாக இயற்கையோடியைந்ததாகவு மிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைகளும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும், சுதந்திரத்திற்கும் சிறிதும் பாதகமுண்டு பண்ணாத தாகவுமிருக்க வேண்டும். நியாயமான என்றதினாலேயே எது நியாயம்? என்பதற்காக “தர்மசாஸ்திரங் களை”த் தேட வேண்டும் என்பது கருத்தல்ல. ( மற்றெப்படி கண்டு பிடிப்ப தென்றால் ஒருவன் தனக்கு நியாயம் என்று சொல்லப் படுவதானது பிறத்தி யானும் அதையே தனக்கும் நியாயமென்று சொன்னால் அவன் முதலில் சொன்னவன் ஒப்புக்கொள்ளுகின்றானா என்று பார்த்து நிர்ணயிப்பதேயாகும். அதாவது இருவருக்கும் ஒன்று போன்றது) அன்றியும் அறிவுக்கும் சாத்தியத்திற்கும், அநுபவத்திற்கும் ஏற்ற தாகவும் அவசியம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

இப்படிக்கெல்லாம் இல்லாமல் வெறும் நிர்ப்பந்தத்திற்கு நாணய மற்றதும் அறிவுக்கும் அநுபவத்திற்கும் ஒவ்வாததானது மான விஷயங்களுக்காக வலுத்தவர்கள் தந்திரக்காரர்கள் தங்களுக்குத் தோன்றின படிக் கெல்லாம் கட்டுப்பாடுகள் செய்து கொண்டு போவதானது எவ்விதப் பயனையும் தராததோடு மனித சமூகத்திற்கு வீண் கஷ்டத்தை உண்டாக்கி வருவதோடு, அது வெறும் அடிமைத் தனத்தையும், அறிவுத் தடையையும் தான் உண்டாக்கும்.

மனிதனின் ஜீவசுபாவம் என்னவென்றால் உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையுமேயாகும். உணர்ச்சியின் காரணமாய் பசி, நித்திரை புணர்ச்சி மூன்றும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம். இந்திரியங்களின் காரணமாய்ப் பஞ்சேந்திரியங் களும் அதாவது சரீரம், வாய், கண், மூக்கு, காது ஆகியவைகளின் செயல்களையும் முக்கியமான இன்றியமையாத இயற்கை அனுபவமாய்க் காண்கின்றோம்.

ஆகவே பொது உணர்ச்சியும் இந்திரிய செயலும் மனிதனுக்கு ஆசையை உண்டாக்கிக் கொண்டேயிருக்கின்றது. ஆசையின் காரணமாய் எதையும் ஆசைப்படுவதும் அதுவும் அனேகமாய் அளவுக்கடங்காமல் மேலும் மேலும் போய்க் கொண்டிருப்பதும் சுபாவமாகவே இருக்கின்றதைப் பார்க்கின் றோம். ஆகவே உணர்ச்சியும் இந்திரிய செயலும் ஆசையும் மனித னால் சாமான்யத்தில் கட்டுப்படுத்தக் கூடியதல்ல. யாராலாவது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்றால் அப்படிப்பட்டவரைப் பற்றி நாம் இங்கு பேச வரவில்லை. நாம் சொல்லுவதும் அவருக் குச் சம்பந்தப்பட்டதல்ல. ( அவர்கள் பல லட்சத்திற்கு ஒருவர் இருப்பார்களோ என்னமோ) அந்தப்படிக்கில்லாத சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும் இந்திரிய செயலையும் ஆசையை யும் கட்டுப்படுத்தும் படியானதாகக் கொள்கைகளை ஒழுக்கங் களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவாணி யாகுமா? செலாவாணியாவதாயிருந்தாலும் அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளைக் கவனிக்க வேண்டாமா வென்று தான் கேட்கின்றோம்.

குடி அரசு - 26.10.1930

ஒரு மனிதனுக்கு உள்ள சுதந்திரம் ஒரு மனுஷிக்கும் இருக்க வேண்டியது என்கின்ற முறையில் பார்க்கும்போது நமது புருஷர் கள் இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழுவது போலவே நமது பெண்கள் இரண்டு புருஷர்களுடன் வாழுவதில் குற்றமில்லை என்பதே நமதபிப்பிராயம் என்பதோடு, அம் முறையை இஷ்டப்ப டுபவர்கள் கையாளுவதில் எவ்விதத்தடையும் இருக்கக் கூடாது என்பதும் நமதபிப்பிராயமாகும்.

புருஷன் பெண்சாதியாக வாழுவது என்பது, புருஷன் பெண் சாதி என்பவர்களுடைய தனித்தனி சொந்த இஷ்டத்தைப் பொறுத்ததே தவிர, அதில் ஆதிக்கம் செலுத்த வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதே அவ்விஷயத்தில் நமது அபிப்பிராய மாகும்.

ஆகவே, எந்தக் காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து அனுபவ குண தோஷம் கண்டு, மனதின் சுதந்திரத்தை மறுக்காமல், அடக்காமல், சுயேச்சையாய் நடக்க வேண்டியது தான் மனித தர்மம் என்றும், அந்தப்படி உலகமே சுயேச்சையாயிருக்க சௌகரியம் இருப்பதுதான் மனித சமூகவிடுதலை என்றும் சொல்லுகின்றோம்.

குடி அரசு - 13.09.1931


காதல்

அன்பு, ஆசை, நட்பு என்பவற்றின் பொருளைத்தவிர வேறு ஒரு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெ னில் உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அநாவசியமாய் ஆண் பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காக என்று இன்பமில்லாமல், திருப்தி இல்லாமல் தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகின்றதை ஒழிக்க வேண்டுமென் பதற்காகவேயாகும்.

ஆனால் காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்த எந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப்பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும், பொருளற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும் அதைப் பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவை கள் எளிதில் விளங்கிவிடும்.

ஆனால் அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன் படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதல் என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல, அன்பு நேசம் ஆசை காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு “நடப்பு வேறு” என்றும் அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக் குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத் திற்காக ஏற்படுவதாகும். அதுவும் இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும். “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,

“அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்; அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக இருவருக்கும் ஒருகாலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும் பிறகு வேறு ஒருவர் இடமும் அந்தக் காதல் ஏற்படாது.

“அந்தப் படி மீறி அந்தப் பெண்ணுக்கோ, ஆணுக்கோ வேறு ஒருவரிடம் ஏற்பட்டுவிட்டால் அது காதலாயிருக்க முடியாது. அதை விப சாரம் என்று தான் சொல்லவேண்டுமே யொழிய அது ஒருக்காலும் காதலா காது” என்றும்,

“ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டுவிட்டால் பிறகு யாரிடமும் காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம் ஏற்படாது” என்று சொல்லப்படு கின்றது.

மேலும் இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படு கின்றது.

ஆனால் இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனு போகமும் மக்களின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கையையும், உண்மையையும் அறியாத வர்கள் என்றோ அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றோ மறைக்கின்ற வர்கள் என்றேதான் கருதவேண்டி இருக்கின்றது.

அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல், காமம், நட்பு, நேசம், மோகம், விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாரா வதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ நிர்பந்திப் பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.

இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும் அனுபவத்தை யும் கொண்டு பேசுவதானால் இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவதுபோலவும், தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும் அனாவசிய மாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.

இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமை யையும் அணி யையும் அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதின் வேறு விதமான பிரயோகமும் நமக்குத் தென்படவில்லை.

அன்றியும் அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் பெண் சேர்க்கை-கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்க ளையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருளில்லை.

ஆதலால் இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அருத்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பதும் நமக்கு விளங்கவில்லை.

நிற்க இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானா கவே உண்டாவதாயிருந்தால் எந்த சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத் தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும், உருவத் தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமேதான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

இந்தப் படியும்கூட ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண் ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் - வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது நமக்குப் புலப் படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை - திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோ பாவத்தை கவனித்தால் விளங்கா மல் போகாது.

அதாவது அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போகபோக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண்டோ, அல்லது மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும், ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்க லாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத் துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் அல்லது வேஷ­மாத்திரத்தில் காட்டப் பட்டதாக இருந்தாலும் இருக்கலாம்.

உதாரணமாக ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத் திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதிவிடுகிறாள். 4-நாள் பொருத்தபின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப்படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்த தற்கு அல்லது தனது நன்மைக்கும், திருப்திக்கும், இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன் படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் உண்மைக் காதலின் நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.

நிற்க உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகிய வுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளா மல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரீரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தி யுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவ னிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லக்ஷியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லக்ஷியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங் களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிர்ப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத தையும் அது பயன்படாததையும் காணலாம்.

ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துரவிகளாய் விட்டார்களானால் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும் வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துரவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படு வதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்தக் காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண் பெண் களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண் பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி, எப்படி பக்திவான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால் அனேகர் தங்களை பக்திவான்கள் என்று பிறர் சொல்லவேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும், பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார்களோ அதுபோலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அதுபோலும் உண்மையான காதல் களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லிவிட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அதுபோலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தை யெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.

ஆகவே ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃரிணைப்பொருள்கள் இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரி டமும் அன்பும், ஆசையும், நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால் அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்.

இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் “இது காதலல்ல” “அது காதலுக்கு விரோதம்” “அது காம இச்சை” “இது மிருக இச்சை” என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தை களை ஒருவித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.

தோழர் பெரியார் - குடி அரசு - 18.01.1931

Wednesday, March 17, 2010

அப்துல்லாவாக மாறிய பெரியார்தாசன்


அ.மார்க்சின் ‘புத்தம் சரணம்’, ‘நான் புரிந்து கொண்ட நபிகள்’ புத்தக வெளியீட்டு விழா. அ.மாவின் ‘முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு’ குறித்த சிறு புத்தகம் குறித்து நான் பேசினேன். ’புத்தம் சரணம்’ புத்தகத்தை வெளியிட்டு பேராசிரியர்.பெரியார்தாசன் பேசினார். பொதுவாக பவுத்தத்தைத் தழுவ விரும்புவர்களுக்கு இரண்டு விதமான மனத்தடைகள் இருக்கும், ஒன்று பவுத்தத்தைத் தழுவினாலும் இட ஒதுக்கீடு கிடைக்குமா, இன்னொன்று மாமிசம் சாப்பிடுவதைத் தொடர முடியுமா என்பதைக் குறிப்பிட்ட பெரியார்தாசன், ஆனால் பவுத்தத்தில் இரண்டிற்குமே சிக்கல் இல்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார். பவுத்தத்தைப் பொறுத்தவரை, நாம் விருந்தினராக ஒரு வீட்டிற்குப் போகிறோம், அப்போது நமக்குத் தயாரிக்கப்பட்ட உணவு அசைவமாக இருந்தால் அதைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் நமக்குத் தெரிந்தே அசைவ உணவைத் தயாரித்துச் சாப்பிடக்கூடாது. இதைக் குறிப்பிட்ட பெரியார்தாசன் இரண்டு உணவுமுறைக்குமான வித்தியாசங்கள் குறித்துப் பேசும்போது இஸ்லாத்தில் உள்ள ‘ஹலால்’ முறை குறித்தும் குறிப்பிட்டார். ‘ஹலால்’ என்றால் என்ன என்று அவர் கேட்டபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் விளக்கினார்கள். அப்போது பெரியார்தாசன், தன் வழக்கத்துக்கே உரிய நையாண்டித்தனத்தோடு, ‘”அதெல்லாம் சரி, நீங்க சொல்ற விஷயம்ல்லாம் சாகப்போற ஆட்டுக்குத்தெரியுமா?” என்று கமெண்ட் அடித்தார். முன்வரிசையில் அமர்ந்திருந்த பேராசிரியர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட த.மு.மு.க நண்பர்களுக்கு முகம் சுருங்கிவிட்டது.

பேராசிரியர்.பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை அறிந்தபோது இந்த சம்பவம்தான் நினைவில் வந்தது. பெரியாரிக்கத்தைச் சேர்ந்தவர்களில் குறிப்பிடத்தக்க, தனித்துவமிக்க ஆளுமை பெரியார்தாசன். பொதுவாக அவர் எந்த நிறுவனங்களுக்குள்ளும் அவ்வளவாக அகப்பட மாட்டார். எனக்கு நினைவு தெரிந்து திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து தோழர்.கோவை.ராமகிருஷ்ணன், திராவிடர்கழகம் (ஆர்) என்ற பெயரில் இயங்கிக்கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல்லில் கூட்டப்படும் தி.க - ஆர் கூட்டங்களில் முக்கியப் பேச்சாளரே பெரியார்தாசன்தான். ராமகிருஷ்ணனை விட கூட்டம் ஆவலாக எதிர்பார்ப்பது பெரியார்தாசனின் பேச்சைத்தான். மணிக்கணக்கில் பேசும் பெரியார்தாசனின் பேச்சின் பலமே வழமையான திராவிட இயக்க மேடைபாணியிலிருந்து விலகிய எளிமையான ‘மெட்ராஸ் பாஷை’ பேச்சும் அது முழுவதும் நிரம்பி வழியும் நகைச்சுவையும்தான். திராவிடர்கழக மேடைகளில் மட்டுமில்லாது பல்வேறு திரைப்பட விழா மேடைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றிலும் தனித்துவமாய் நிற்கும் பெரியார்தாசனின் உரைகள். பெரியார்தாசனின் பேச்சு பலத்தைச் சரியாய்ப் பயன்படுத்திக்கொண்ட இன்னொரு அமைப்பு மக்கள் கலை இலக்கியக்கழகம்.

ஜெயேந்திரன் கைதை ஒட்டி நடைபெற்ற கூட்டங்கள், சேதுசமுத்திரத்திட்டத்துக்கு எதிராய் வேதாந்தி கலைஞரின் தலைக்கு விலை வைத்ததைக் கண்டித்து நடந்த கூட்டங்கள் என ம.க.இ.க மேடைகளில் பெரியார்தாசனின் பேச்சுக்குக் கூட்டத்திடமிருந்து ஆவலான எதிர்பார்ப்பு உண்டு. வெறுமனே பேச்சு என்றில்லாமல் பெரியார்தாசன் அழகாய்ப் பாடும் திறனும் வாய்ந்தவர். தமிழின் பக்தி இலக்கியங்கள் தொடங்கி சுப்ரபாதம் வரை பெரியார்தாசன் பாடிக்காட்டி விமர்சிப்பார். வெறுமனே தொழில்முறைப் பேச்சாளர் என்றில்லாமல் பெரியார், அம்பேத்கர், பவுத்தம் குறித்த விரிவான வாசிப்பு அவரிடம் உண்டு.

தி.க ராமகிருஷ்ணன் கூட்டங்களில் அவர் சிறப்புப் பேச்சாளராக இருந்தாலும் மற்றவர்களைப் போல மேடையில் அமர மாட்டார். எப்போதும் கூட்டத்துக்கு இடையிலேயே சிகரெட் பிடித்துக்கொண்டு திரிவார். அவர் கருப்புச்சட்டை போட்டும் நான் பார்த்ததில்லை. இப்படியாக ஒரு சுதந்திர மனிதராகத் திரிந்த பெரியார்தாசனுக்கு ‘பேச்சுக்கட்டணம் விஷயத்தில் கறார் ஆனவர்’ என்ற ‘கெட்ட பெயரும்’ உண்டு. அம்பேத்கரின் ‘பவுத்தமும் தம்மமும்’ நூலைத் தமிழில் முதன்முதலாக மொழிபெயர்த்தது பெரியார்தாசன்தான். மேலும் பவுத்தம் குறித்தும் அம்பேத்கர் குறித்தும் பல்வேறு தலித் இயக்க மேடைகளில் பரப்புரை செய்த பெருமையும் பெரியார்தாசனுக்கு உண்டு.

சேஷாசலம் என்ற பெயரைக் கொண்ட அவர் பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, பெரியார் ஒரு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகை தந்தாராம். அப்போது அவருக்காக வரவேற்புக்கவிதை வாசித்தபோது ‘பெரியார்தாசன்’ என்ற பெயரில் எழுதினாராம். ஆனால் அப்போது அவர் பெரியாரின் சிந்தனைகளை முழுமையாக உள்வாங்கியவராக இல்லை. இது ஜீ தொலைக்காட்சி சுதாங்கனின் நேர்காணலில் அவரே கூறியது. பெரியார்தாசன் பவுத்தத்துக்கு மாறியபிறகு ‘சித்தார்த்தன்’ என்று பெயரை மாற்றி வைத்துக்கொண்டாலும் அதைப் பெரிதாக எங்கும் அடையாளப்படுத்தியதாகத் தெரியவில்லை. இடையில் அவர் மனவியல் சார்ந்த புத்தகங்களை எழுதும்போது ‘நல்மனப் பெரியார்தாசன்’ என்ற பெயரிலும் எழுதிக்கொண்டிருந்தார்.

பெரியார்தாசன் மீது பலருக்கு அபிமானம் இருப்பதைப் போலவே அவர் மீது கடுமையான விமர்சனங்களும் உண்டு. அதிலொன்று மேலே நான் சொன்னதைப் போல ‘அவர் பேச்சை வணிகமாக்குகிறார்’ என்பது. அவர் மீது வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டு ‘ராஜராஜனின் நியுமராலஜி ஆதரவாளராக மாறிவிட்டார்’ என்பது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. ராஜராஜனின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார்தாசனும் இடம் பெற்றார். ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணம், ‘அப்படி என்னதான் அதில இருக்குன்னு பார்க்கத்தான் போனேன்’. அதிலொன்றும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அவரும் அதற்குப் பின் நியுமராலஜியை ஆதரித்துப் பேசியதாகத் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் அதற்குப் பின் தஞ்சையில் ம.க.இ.க நடத்திய ‘தமிழ் மக்கள் இசைவிழா’வில் பெரியார்தாசன் முழுக்க முழுக்க ராசிக்கற்கள், நியுமராலஜியைக் கண்டித்தும் கிண்டலடித்துமே பேசினார். பலபேருக்குத் தெரியாத ரகசியம், ‘பெயரியல் பேராசான்’ ராஜராஜனே முன்னாள் திராவிடர்கழகத்துக்காரர். ஆனால் பெரியார்தாசன் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனங்களின் மேடைகளில் பயிற்சிப் பேச்சாளராக பங்குபெற்றதை நானே கவனித்திருக்கிறேன். சமீபகாலமாக அவர் பெரியார், அம்பேத்கர் குறித்துப் பேசியதை விட சுயமுன்னேற்றம், மனநலம் ஆகியவை குறித்துப் பேசியதுதான் அதிகம்.

இப்போது பெரியார்தாசன் இஸ்லாத்தைத் தழுவி அப்துல்லாவாக மாறியது குறித்து தமிழக நாத்திகர்களுக்கு, குறிப்பாக பெரியாரிஸ்ட்களுக்கு இரண்டு வித சிக்கல்கள் ஏற்படும். மதமாற்றத்தை அம்பேத்கரும் பெரியாரும் உறுதியாக ஆதரித்தவர்கள். அம்பேத்கர் மதமாற்றத்திற்கு பவுத்தத்தை முன்மொழிந்தபோது பெரியார் இஸ்லாத்தைப் பரிந்துரை செய்தார். தான் ‘அனேக காரியங்களில் இஸ்லாத்தைக் கடைப்பிடித்து வருகிறவன்’ என்றும் ‘ஆனால் அதற்கான அடையாளங்கள் தேவையில்லை’ என்றும் கூட சொன்னார். அப்படியானால் பெரியார்தாசனின் மதமாற்றம் என்பதும் பெரியாரின் வழியின்பட்டதுதானே? ஆனால் தமிழகத்தில் நாத்திகம் பேசுபவர்களின் அய்கானாக நிறுத்தப்பட்டவர்களில் பெரியார்தாசனும் ஒருவர். அப்படியானால் இது இறைமறுப்புக் கொள்கைக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்று சொல்லலாமா?

ஆனால் என்னைப் பொறுத்துவரை பெரியாரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியதும் கடைப்பிடிக்க வேண்டியதுமான விஷயங்களில் நாத்திகமும் ஒன்றுதானே தவிர அதுவே முழுமையானதல்ல. ஒரு முழுமையான நாத்திகன் மோசமான ஆணாதிக்கவாதியாகவோ சாதிவெறியனாகவோ இருந்து விடுவதும் உண்டு. கடவுள் நம்பிக்கை என்பது தனிமனிதத் தேர்வு. அப்துல்லாவாக மாறியது பெரியார்தாசனுக்கான சுதந்திரம். கடவுளின் இடத்தில் அறவியல் மதிப்பீடுகளை முன்வைத்து வாழ்வியல் நடைமுறையாக மாற்றத் தெரிந்தவர்களுக்குக் கடவுளும் மதமும் தேவையில்லை. ஆனால் பெரியார்தாசனுக்கு அது தேவைப்பட்டிருக்கலாம்.

ஆனால் எனக்குப் பெரியார்தாசனிடம் சில கேள்வி உண்டு. நான் அவரின் பேச்சுகளின் ரசிகன் என்ற முறையில் அவரது எல்லா நிகழ்ச்சிகளையும் பெரும்பாலும் பார்த்துவிடுவேன், சமீபத்தில் அவர் விஜய் டி.வியில் பங்குபெறும் ‘வாங்க பேசலாம்’ உட்பட. ‘தான் எட்டாண்டுகளாக இஸ்லாத் குறித்து ஆராய்ந்து வந்ததாகவும் பத்தாண்டுகளாகவே இஸ்லாத்துக்குச் சேரும் முடிவில் இருந்ததாகவும்’ பெரியார்தாசன் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதற்கான தடயங்கள் எதுவும் அவரது சமீபகால பேச்சுக்கள் வரை இல்லை. தனது பேச்சு வல்லமையை இஸ்லாத்தைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்போவதாகச் சொல்லியிருக்கிறார். அது வெறுமனே மார்க்க உரைகளோடு நின்று விடுமா, அல்லது அவரது வழக்கமான சமூக விமர்சனங்களும் இடம் பெறுமா என்று தெரியவில்லை. ஆனால் முஸ்லீம் அடையாளத்தில் இருந்துகொண்டு இந்து மதம் குறித்தும் சாதி குறித்தும் அப்துல்லாவால் விமர்சிக்க முடியாது என்பது முள்ளாய் உறுத்தும் நடைமுறை எதார்த்தம். பெரியாருக்கு இருந்த சிக்கலும் அதுதான். மேலும் இப்போது பெரியார்தாசன் இந்து மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவவில்லை, அவர் பவுத்தத்திலிருந்து விலகியே இஸ்லாத்தைத் தழுவியிருக்கிறார். அப்படியானால் பவுத்தம் குறித்த அவரது பார்வைகள் குறித்தும் அவர் விளக்க வேண்டும்.

எப்படியிருந்தபோதும் என்னைப் பொறுத்தவரை இந்துமதத்தில் பிறந்த ஒருவர் எந்த மதத்திற்குப் போனாலும் வரவேற்கத்தக்கதே. அப்துல்லாவுக்கு வாழ்த்துக்கள்!