Wednesday, June 10, 2009

அந்த நெருப்பு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது
















இது ஒரு மீள்பதிவு. சுந்தரோடும் அய்யனாரோடும் சண்டை பிடித்துத் திரிந்த தருண இடைவெளியின்போது எழுதியது. சமயங்களில் நமது பதிவுகளைச் சிறிதுகாலத்தின் பின் வாசிக்கும்போது சில பதிவுகள் நமக்கே ஆச்சரியமூட்டுபவை. இந்த பதிவும் அப்படியான ஒன்று. நாஜி வதைமுகாமொன்றில் வதைக்கப்பட்டு மீண்ட எலிவீஸல் என்பவர் தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்தது தமிழினிப் பதிப்பகத்தின் வெளியீடாய் 'இரவு" என்னும் நூலாய் வந்திருந்தது. ஒவ்வொரு ப‌க்கமும் மரணத்தின் வாதையைச் சுமந்தவை. அந்த நூலைப் படித்தபோதிருந்த மனநிலையே இப்பதிவு. முன்பு இப்பதிவைப் படிக்க வாய்ப்பற்ற வாசகநண்பர்களுக்காக இம்மீள்பதிவு. மேலும் ஈழத்து வதைமுகாம்களில் தமிழர்கள் வதைபடுவதையும் இங்கு ஒப்புநோக்கலாம். இந்த பதிவு ஜ்யோவ்ராம்சுந்தருக்குச் சமர்ப்பணம்.

இப்போது நான் யாருடனுமில்லை. யாரும் இப்போது என்னுடனுமில்லை. இப்போது இருப்பதெல்லாம் எலிவீசலின் இரவு. இரவுகளைக் கொன்ற இரவு. தூக்கத்தின் மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு.எலீ இப்போது தன்னந்தனியாய் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை ஜிபோரா எங்கிருக்கிறாள் தெரியவில்லை. அந்த நாஜிவதை முகாமின் புகைக்கூண்டில்தான் என் அடிவயிற்று மாமிசம் எரிகிறது எலீ. இரவு, அந்த இரவு, இது வெண்ணிற இரவல்ல, ஒரு புகைமூட்டம்போல் குழம்பிய கருப்பு இரவு. அந்த கடைசி இரவில்தான் புகைவண்டியில் மிருகங்களைப் போல் மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்த புழுக்கமும் வியர்வையும் நிரம்பிய அந்தப்புகைவண்டியில்தான் அவள் ஓயாது குரலெழுப்பிக்கொண்டிருக்கிறாள். தீ...தீ. மோசோ கிழவன் சொன்னதில் தவறில்லை. நீ இப்போது கப்பாலாவைக் கைவிட்டிருந்தாய். உன் கடவுள் எரியும் ஒவ்வொரு சடலத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார்கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவர் ஏற்றிருக்கக்கூடும். ஆனால் எலீ தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை, அது காற்றைப் போல், நதி போல், கண்ணீர் போல், முத்தம்போல் நில்லாது பரவுகிறது. நெடுநாட்களுக்குப்பின் அந்தத் தீ மய்யத்தை அடைந்தபோது அது ஒரு சிம்மாசனத்தின் தோற்றத்தை அடைந்திருந்தது. பிறகு அது ஆலிவ் இலைகளை ருசித்து உண்டது. அந்த நெருப்பு ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது. காலத்தின் மகுடிஓசையில் அது நெளிந்து நடனம் ஆடியது. அது ஒரு அழகிய நடனம் என்று சொல்வதிற்கில்லை. இப்போது பாம்பு யுகங்களின் மீது ஒரு மலைப்பாம்பைப் போல் புரண்டு எழுகிறது. பல நூற்றாண்டுகளை விழுங்கி அதன் வயிறு வீங்கியிருந்தது. முன்னொரு காலம் இந்தத் தீ அரச இலையின் வடிவத்திலிருந்தது. அதன் நிறமோ மஞ்சள். அது ஒரு மாங்கனியைப் போல் மஞ்சள்பூத்திருந்தபோது தீ இனிது, தீ இனிது. மஞ்சள். தர்மசக்கரத்தை உருட்டியபடி அரசமரத்தின்கீழ் அமர்ந்திருந்த புத்தன் மஞ்சளாடை அணிந்திருந்தான். மாசுமருவற்ற மனமுடையோரே மஞ்சளாடை உடுத்தத்தக்கவர். புத்தன் புன்னகத்தான். தீ சிரித்தது. பின்னாளிலும் புத்தன் புன்னகைத்ததாய்ச் சொல்லப்படட்து. அப்போது தீ அணுகுண்டாய் வெடித்தது யதீ, உண்மையில் புத்தன் புன்னகைக்கவில்லை. அவன் வாயில் குறி திணிக்கப்படட்து என்பதே உண்மை. பின்னும் பின்னுமான ஒரு பென்னம் பெருநாளில் தீயின் நிறம் காவிக்கு மாறியிருந்தது. குரங்கின் வாலிருந்த தீ ஒரு நூலகத்தை விழுங்கி முடித்திருந்தது. வரலாற்றின், ஞாபகங்களின் சாம்பல்களை துவராடை அணிந்த துறவியர் அள்ளிச்சென்றனர். ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். இப்போது பிக்குகளின் வாலிலிருந்த தீ புத்தனை எரித்திருந்தது. காலத்தினிடுக்குகளில் ஒரு அகதியின் ரகசியப்பாடல் போலவும், ஒரு தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பு போலவும் தீ ரகசியமாய்க் கசிந்தது. தீ நாயின் நாக்கைப் போன்று சிவந்திருந்தது. இப்போது தீயின் நிறம் சிவப்பு. பாலற்று குழந்தை சப்பியதால் ஜென்னியின் மார்புகளில் வழிந்த ரத்ததைப் போல் சிகப்பு. ஜென்னி தன் இடதுமுலையை அறுத்து எறிகிறாள். தீ பரவுகிறது. பிரியத்திற்கும் பிரியமான மார்க்ஸ், தயவு செய்து உன் மேல்கோட்டைக் கழற்றாதே, குளிர் உன்னைக் கொன்றுவிடும் மார்க்ஸ்... ஒரு தீயைப் புசித்து தீயைப் பிரவசித்திருந்தாய் மார்க்ஸ். உன் நெருப்புத்துண்டுகள் நாங்கள் வாழுமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது அதன் வடபகுதி நீலமாகவும் தென்பகுதி கருப்பாகவுமிருந்தது. முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ... தீ தீயோடு சேர்ந்து தீயாகிறது மதி, இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும். என் மணிக்கட்டு, தொடையெலும்பு, பச்சையாய் ஒழுகும் நிணம், 16 பற்கள், பழுப்புநிற மீசைமுடி, என அனைத்தையும் தீ தின்கிறது. ஆனாலும் தீ மடிவதில்லை நானும்கூடத்தான். இப்போதைக்கு நான் மரித்திருக்கிறேன். தீ என்னைப் புசித்து முடித்து நீ கூந்தல் அவிழ்ப்பதைப் போல சாம்பல்துகளாய் அவிழ்ந்திருக்கிறது. என் கல்லறையில் பூத்திருக்கின்றன சாம்பல்நிற மலர்கள். குட்டிம்மா, நீ கண்களை அகல விரித்துச் சிரிக்கிறாய். உன் கண்களில் உருள்கிறது சாம்பல்நிறக் கண்மணி.

Saturday, June 6, 2009

அஞ்சலி - ராஜமார்த்தாண்டன்

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும் இலக்கிய நட்புகளை தொகை தொகையாய்ப் பேணுபவருமான ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார். தமிழினி பதிப்பகத்திற்காக பாரதிக்குப் பிறகு தமிழின் முக்கியமான 150 கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கொங்குதேர் வாழ்க்கை‘ என்னும் பெயரில் புத்தகமாய்க் கொண்டு வந்தார். அந்த 150 கவிஞர்களில் நானும் ஒருவன். அதற்காக அனுமதி கேட்பதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். அப்படித்தான் ராஜமார்த்தாண்டன் பரிச்சயம். பிறகு தினமணி அலுவலகங்களில் ஓரிருமுறை. ஒருமுறை ராயப்பேட்டை மேன்ஷனில் அவரைப் பார்க்கச் சென்றபோது இரண்டு கட்டில்கள் அவர் அறையில் இருந்தன. இரண்டு கட்டில்கள் நிறைய புத்தகங்கள். அவரோ மதுவருந்தி விட்டு தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். பலமணி நேரம் காத்திருந்தும் அவர் எழுவதாகத் தெரியவில்லை. அனேகமாக நான் வந்துபோனதே அவருக்குத் தெரிந்திருக்காது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த அந்த கவிதைத்தொகுப்பு குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. யவனிகாசிறீராம், என்.டி.ராஜ்குமார் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளை அவர் நிராகரித்திருந்தார் என்பதுதான் காரணம். நான் அதிகமும் அறிமுகமாகாத கவிஞன் மற்றும் காலச்சுவடிற்கு எதிராக எழுதி வந்தவன் என்றபோதும் எனது கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவரது நடுவுநிலைமைக்குச் சாட்சி. விக்கிரமாதித்யனைப் போலவே தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்குமான இழப்பு. நண்பர்களுக்கான வருத்தங்கள்.

Thursday, June 4, 2009

வெறுப்பைக் கட்டமைக்கும் லக்கிலுக்

சமீபமாக வலையில் அதிகம் பதிவதற்கான அவகாசமும் மனநிலையுமில்லை. என்றபோதும் விடாமல் அவ்வப்போது பதிவுகளை வாசிப்பதுண்டு. ஈழப்போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவைச் சந்தித்து இலங்கை அரசின் வதைமுகாம்களில் மிச்சமிருக்கும் தமிழர்கள் உயிரோடு இருக்கும் பாவத்தாலேயே ஆகக்கீழான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தருணங்களில் கம்ப்யூட்டரும் கீபோர்டும் இருக்கிறது என்பதற்காக எழுதித்தள்ளப்படுகிற படு அபத்தங்களை வாசிக்க நேர்கையில் ஆயாசமே எஞ்சுகிறது.

நக்கீரனின் ‘பொறுக்கித்தனம்’ குறித்து பைத்தியக்காரன் எழுதிய பதிவு, ஈழப்போராட்டத்தில் ‘அகிம்சையின் முக்கியத்துவம்’ குறித்து சாருவும் ஜெயமோகனும் உதிர்த்த அபிப்பிராயங்கள், தமிழ்நதியின் எதிர்வினைப் பதிவு, சாருவின் மீதான விமர்சனப்பதிவுகள், சாருவை ஆதரித்த பதிவுகள் என தொடர்ந்து நேற்றோ அதற்கு முதல்நாளோ லக்கிலுக் எழுதிய ‘இப்போது வருந்துகிறோம்’ பதிவு.

கொஞ்சம் கொஞ்சமாக அபாயம் அதிகரித்து இப்போது வெறுப்புணர்வு உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது லக்கியின் பதிவையும் அதற்கிடப்பட்ட பின்னூட்டங்களையும் நோக்கும்போது. சாரு எழுதியிருப்பதைப் போல அகிம்சைப்போராட்டம்/ ஆயுதப்போராட்டம்தான் சரி என்றெல்லாம் கறுப்பு வெள்ளையாக பிரச்சினைகளை அணுகமுடியாது. மேலும் புலிகள் தவறு செய்திருக்கிறார்கள், இத்தகைய பாரிய தோல்விகளுக்கு புலிகள் இழைத்த தவறுகளும் ஒரு காரணம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒரு விடுதலைப்போராட்டமே தவறு என்று சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி, அதுவும் அது பின்னடைவைச் சந்தித்திருக்கும் நேரத்தில்.

சாரு, காந்தி குறித்து எழுதிய கருத்துக்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம். ஆனால் ஜெயமோகன் குறித்து தமிழ்நதி எழுதியதை யாரும் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. மீண்டும் விவாதங்கள் சாருவை ஆதரித்தும் எதிர்த்தும் சாருவை என மய்யப்படுத்தியே நிகழ்ந்தன. உண்மையில் ஜெயமோகன் ஒரு காமெடி பீஸ். அவர் சீரியசாகப் பேசுகிற பல விஷயங்கள் மிக மிக மேலோட்டமானவை. ஏதாவது உளறி, ஆனால் அது உளறல் என்று தெரியாத அளவிற்கு ‘தத்துப்பித்து தத்துவ’ முலாம் பூசுவதாலேயே அது படு பேமஸாகிவிடுகின்றன. காந்தி குறித்து ஜெமோ உதிர்த்த முத்துக்களும் அப்படியே.

உதாரணமாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான முரண் குறித்து அவர் சொல்கிற கருத்துக்கள் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் காந்தியாலேயே முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரால் அது பலமாக மறுக்கப்பட்டது. ‘தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமை தந்துவிட்டால் தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று காந்தி ‘கருதினாராம்’. அவருடைய நிலைப்பாடு சரியாக இருந்ததனால்தான் காங்கிரஸ் இட ஒதுக்கீடை அங்கீகரிக்கும் அளவுக்காவது இப்போதுவரை இறங்கிவந்திருக்கிறதாம்’.

அட லூசுகளா! கருதினார் என்ன கருதினார்? காந்தி வெளிப்படையாகவே சொல்லவே செய்தார், ‘‘முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்களுக்கான தனிவாக்காளர்தொகுதி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று. தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அபத்தமான வாதத்திற்கு அம்பேத்கர் மிகத் தெளிவாகவே பதில் சொன்னார், ‘இப்போது மட்டும் என்ன வாழுகிறது?’ என்று. தனி கிணறு, தனிச்சுடுகாடு, தனி வாழ்விடம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கிவிட்டு தனி வாக்காளர் தொகுதி கேட்டால் மட்டும் ‘அய்யோ தனிமைப்பட்டுப் போய்விடுவீர்கள்’ என்று பாசாங்கு செய்வது உச்ச அயோக்கியத்தனம்!

ஜெயமோகன் வாதப்படியே இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் ‘தனிமைப்பட்டு விட மாட்டார்களா’ என்ன? ஆக, இந்த மாதிரியான பிரதிவாதங்கள் எல்லாம் பல தசாப்தங்களுக்கு முன்பே நடந்து முடிந்த சமாச்சாரங்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளே தெரியாமல் ‘பி.தொ.நி.கு’ என்று ஒரு குப்பையை எழுதுவது, காந்தி, சேகுவாரா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஆர்யா, சூர்யா என்று சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களைக் கழிந்து செல்வது என இப்படியான முட்டாள்தனங்கள் நிகழ்வதற்கு ஜெமோ மட்டுமே காரணமில்லை. படிக்கிற வாசகி/கன் கூமுட்டையாக இருந்தால் ஜெமோ என்ன வேண்டுமானாலும் உளறலாம்தானே!. தனக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் ஜெயமோகன் உளறத்தொடங்கும்போது மிக எளிதாக அம்பலப்பட்டுப்போகிறார்.

ஜெயமோகனின் வக்கிரமும் அபத்தமும் கடைசியாக செத்துப்போன கமலாதாஸ் சுரையாவையும் விடவில்லை. ‘அவர் கறுப்பாக, குண்டாக, அவலட்சணமாக இருந்ததால்தான் பாலியல் பற்றி எழுதினார்’ என்பது ஜெமோவின் ‘கண்டுபிடிப்பு’. கமலாதாஸ் குறித்த கட்டுரையில்கூட இஸ்லாம் குறித்த வெறுப்பைக் கக்கியுள்ளார் பாருங்கள். கமலாதாஸ் இஸ்லாத்திற்கு மாறியதும், இறுதிக்காலத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பியதும் பலரும் அறிந்ததுதான். ‘‘எனக்கு மதம் அலுத்துப்போச்சு’ என்றுகூட கமலாதாஸ் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறக்கூடாது என்று ‘ரகசியமாக’ மிரட்டல்கள் வந்ததாலேயே அவர் மறுமதம் மாறவில்லையாம்! ‘இந்துக்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள், ஆனால் இஸ்லாமியர்களோ கொடூரமானவர்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறார் ஜெமோ. ‘ரகசியமாக’ மிரட்டப்பட்டது ஜெயமோகனுக்கு மட்டும் எப்படி தெரியவந்தது என்று தெரியவில்லை.

ஆக இத்தகைய வெறுப்பின் மனநிலை இப்போது லக்கிலுக்கிற்கும் ‘பிரமாதமாக’ கைகூடி வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்குப் பதிலாக ஈழத்தமிழர்கள் என்று வெறுப்பின் இடம் மட்டும் மாறியிருக்கிறது. ‘ராஜீவ்காந்தி கொலையின்போது திமுக கொடிக்கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன, திமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதனால் அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு’ என்று சின்னப்புள்ளத்தனமாக வரலாற்றின் கணிதத்தைச் சமன் செய்கிறார் லக்கி. அதை விட மோசம் ஈழத்தமிழர்கள் x இந்தியத்தமிழர்கள் என்கிற மோசமான முரணையும் அவரது எழுத்துக்கள் கட்டமைக்கின்றன.

ராஜிவ் கொலையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் காலித்தனங்களும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். அதற்காக ஒரு இனப்படுகொலையின்போது வாளாவிருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. லக்கியின் வாதங்களையே ஒத்துக்கொண்டால் கூட, லக்கி மனச்சாட்சிப்படி பதில் சொல்லட்டும். அந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட திமுககாரர்கள்தானா இப்போது அதிகாரத்தின் ருசியை அனுபவித்துக்கொண்டிருக்கிறப்பவர்கள்?

மிசா, தடா, ராஜீவ் கொலையை ஒட்டி நிகழ்ந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசின் ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள் இவர்கள்தானா லக்கி இப்போது திமுகவின் உள் மற்றும் வெளி பதவிகளை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்? ஒரு ஊழல்மயப்பட்ட தலைமுறை அதிகாரத்தை ருசிப்பதற்காகத்தான் கடந்த தலைமுறையின் தியாகங்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது திமுக தலைமையால் மீண்டும் மீண்டும் தியாகங்கள் ‘சொல்லப்படுகின்றனவே’ தவிர மதிக்கப்படுவதில்லை. திமுக தனக்கான எல்லா அடிப்படைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறது. அதன் உச்சம் ஈழப்பிரச்சினை என்பதைக் கொஞ்சமும் மனச்சாட்சியுள்ள திமுககாரன் அறிவான். ஈழத்தமிழர்கள் மீதான லக்கியின் இத்தகைய பதிவுகள் ஒரு மோசமான பாசிச மனநிலையைக் கட்டமைக்கும் தன்மை வாய்ந்தவை. தான் சார்ந்திருக்கிற கட்சிக்கு இருக்கக்கூடிய ‘இக்கட்டுக்களையும்’, ‘நிர்ப்பந்தங்களையும்’ வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு நியாயப்படுத்துவது நீதியாகாது.

இந்திராகாந்தி கொலையையட்டி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பதை சீக்கியர்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள் என்பதன் சாட்சியம்தான் அந்த கனத்த சப்பாத்து. ஆனால் ‘ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொலைகாரர்களாக்கிய’ ஜெயின்கமிஷன் அறிக்கையையும் அதைக் காரணமாய் வைத்து திமுக ஆட்சியைக் கலைக்க வைத்த காங்கிரசையும் நோக்கித்தான் லக்கியின் கோபம் திரும்பியிருக்க வேண்டும். அல்லது அத்தகைய மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்ட காங்கிரசுடன் உறவைத் தொடர்வதற்காக எத்தகைய சமரசங்களையும் மேற்கொள்ளத் தயாராயிருக்கும் தன் கட்சித்தலைமையின் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அது அநியாயமாக ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பை உற்பத்தி செய்கிறது.

நண்பர் லக்கிக்கு, சில அபத்தமான நிகழ்வுகளை, (ஈழப்போராட்டத்தின் பின்னடைவிற்குப் பிறகு, மிக மிகச் சமீபத்தில் நிகழ்ந்தவை) எந்த மேற்கத்திய அறிஞரின் பெயர் உதிர்த்தலுமின்றி, செய்தித்தாள்களில் இருந்தே வரிசைக்கிரமமாக முன்வைக்கிறேன். கணக்கு சரியாகிறதா என்று பாருங்கள்.

1. ‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது’ சென்று கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்.

2. இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் வாக்களித்தது மட்டுமில்லாமல், இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளையும் அணிதிரட்டுகிறது.

3. ‘மாநிலச்சுயாட்சிக்காகப் பாடுபடுவதுதான் தன் பிறந்தநாள் செய்தி’ என்று அறிவிக்கிறார் மு.கருணாநிதி.

முத்தமிழே நீ வாழ்க! மூவேந்தே நீ வாழ்க! வாழ்க!
குளிர்மதியே நீ வாழ்க! குறள்வழியே நீ வாழ்க! வாழ்க!

சுபம்

Thursday, April 30, 2009

போடுங்கம்மா ஓட்டு!

’’ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் & திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால் ஜெயலலிதா கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்’’ என்கிற ‘தர்க்கபூர்வமான’ முடிவை முன்வைக்கும் மின்னஞ்சல்களால் அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்தவனில்லை என்றபோதிலும் ஒருமுறை கூட இரட்டை இலைக்கு வாக்களிக்காதவன் என்ற காரணத்தாலோ என்னவோ ஒரு மனத்தடை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது ஒரு உலகமகா பாவச்செயல் அல்ல, ‘‘விடிவுமில்லே, முடிவுமில்லே’’ என்ற ஈழமக்களின் ஓலம் கேட்டு மனம் பிசைபவர்கள் இத்தகைய முடிவு எடுப்பதில் ஒன்றும் தவறில்லைதான் என்பது பகுத்தறிவிற்குத் தெரிந்தே இருக்கிறது.

கருணாநிதி தன் வாழ்நாளில் இந்தளவுக்கு அம்பலப்பட்டிருப்பதோ, அசிங்கப்பட்டிருப்பதோ இதற்கு முன்னும் நடந்ததில்லை. இதற்குப் பின்னும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதாவை மட்டுமே பாசிஸ்ட் என்று சொல்லிப் பழகிய நம்மைக் கருணாநிதி அரசின் பாசிசத்தனமான ஒடுக்குமுறைகள் நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன. ஈழப்பிரச்சினை குறித்து நோட்டீஸ் கொடுத்தவர்கள், ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார் தி.க தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ப.சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கையில் தேர்தலில் நிற்கும் மாணவர்கள் துண்டுப்பிரச்சாரம் கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போது, ‘ஸ்டாப் தி வார்’ பனியன் அணிந்து சென்றதைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டிருக்கிறார் கார்த்திக்சிதம்பரம். ஆக மொத்தம் அம்பலப்பட்ட பாசிஸ்டாகிய கருணாநிதியை எதிர்க்க, அறியப்பட்ட பாசிஸ்ட் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

அப்பட்டமான உலகமயச் சார்பு எடுத்ததால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகள், தொகை தொகையாய் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ள அபாயம், பக்கத்து மாநிலமான கர்நாடகம் வரை வந்துவிட்ட இந்துத்துவப் பாசிசம் என பல பிரச்சினைகள் இருக்கும்போது, ஈழப்பிரச்சினை மட்டும்தான் இந்த தேர்தலின் மய்யப்பிரச்சினையா என்கிற கேள்வியைக் கூட ஒருபுறம் ஒத்திவைப்போம். ஆனால் ஈழப்பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு, சில எதார்த்த நிலைமைகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளோம்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் சென்னை மாதிரியான பெருநகரங்கள் மற்றும் நமது இணையத்தளங்களைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் இலங்கைப்பிரச்சினை தேர்தலின் தீர்மானகரமான பிரச்சினையாக இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இலங்கைப்பிரச்சினை, தேர்தலில் வாக்குகளை வாங்கித்தரும்,. அல்லது வாக்குகள் விழுவதைத் தடுக்கும் என்பதுதான் எதார்த்தமென்றால் காங்கிரஸ் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டுக் கருணாநிதியும் ஈழ ஆதரவுப் பஜனைகளில் கலந்துகொள்வார் என்பதுதான் உண்மை.

கருணாநிதியைச் சற்றுத்தள்ளி வைப்போம். தேர்தலுக்கு முன்பே ஈழப்பிரச்சினை குறித்துக் கதையாடிய சி.பி.அய், பா.ம.க, மதிமுக, வி.சி ஆகிய அமைப்புகள் கூட ஈழ ஆதரவை மய்யமாக வைத்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிட முன்வரவில்லை என்பதிலிருந்தே ஈழப்பிரச்சினைக்காக விழும் வாக்குகளின் சதவிகிதம் மிக மிகக் குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆகக்குறைந்தது ஈழப்பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கூட மாற்ற இயலாத குற்றம் யாருடையது? முத்துக்குமாரின் மரணத்தின்பின் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிகள் நாம் மறக்கக்கூடியவையல்ல. அத்தகைய எழுச்சிகளைத் தமிழகம் கண்டே நெடுநாட்களாகிவிட்டன. இனி காண்பதற்கான காலமும் அருகில் இல்லை. குறிப்பாக மாணவர்களும் வழக்கறஞர்களும் தமக்கான அடையாளங்களோடு இப்போராட்டங்களில் பங்குபற்றினர். இவ்விரு தரப்பினரின் போராட்ட உணர்வுகளைச் சிதறடித்து ஒடுக்குவதற்காக திமுக அரசு ‘சிறப்பாகவே’ திட்டம் தீட்டியது.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்காகக் கல்லூரிகளை இழுத்து மூடியது. வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்க உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போலீசை ஏவியது. ஆனால் இன்று ஈழத்தமிழருக்காய் வீராவேச வேசம் போடும் வீராதி வீரர்கள் வைகோ, நெடுமாறன், திருமா, ராமதாஸ் யாரும் கல்லூரிகள் மூடப்பட்டதையோ உயர்நீதிமன்றத் தாக்குதலை எதிர்த்தோ ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கவோ போராட்டங்களை நிகழ்த்திக்காட்டவோ தயாராக இல்லை.

மாறாக கோபால கிருஷ்ண கோகலே வாரிசாக, தூதரகங்களுக்கு மனுப்போடுவது, மனிதச்சங்கிலிப் போராட்டம், மயிரு சங்கிலிப்போராட்டம் என்று மக்கள் எழுச்சிகளைக் காட்டிக்கொடுத்து போராட்டங்களை மொன்னையாக்கினார்கள். தங்களது அரசியல் நலன்களைத் தாண்டி மாணவர்களும் வழக்கறிஞர்களும் போராட்டச் சக்திகளாக உருமாறுகிறார்கள் என்பதைத் தாங்கமுடியாததும் தடுக்க முயன்றதுமே இந்த கருங்காலிகளின் சதிகளுக்குக் காரணம். தங்களின் அரசியல் கயவாளித்தனத்தைத் தாண்டி எப்போதுமே போராட்டங்கள் உருப்பெற்று விடக்கூடாது என்பதிலே நெடுமாறன் தொடங்கி வைகோ வரை விழிப்போடு இருந்தார்கள். மாணவர் மற்றும் வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் கருணாநிதி அரசுக்கு ஒருபங்கு இருக்கிறது என்றால் இத்தகைய கருங்காலிகளுக்கு மறுபங்கு இருக்கிறது.

ஆனால் இத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தத் தொடங்கினாலே நமது சுடலைமாடன் மாதிரியான தோழர்கள், ‘‘நீங்கள் ஏன் கொளத்தூர்மணியை விமர்சிப்பதில்லை, நெடுமாறனை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கழுத்திலே துண்டு போடத்தவறுவதில்லை. கொளத்தூர்மணியும் பெரியார் தி.கவும் தமிழகம் முழுவதும் இரட்டைக்குவளைகள் அமுலில் உள்ள டீக்கடைகளைக் கணக்கெடுத்து அங்கெல்லாம் போய்க் கலகம் செய்கிற அதேவேளையில்தான் ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசுகிறார்கள். என்றைக்காவது நமது ‘தமிழர் தலைவர்’ நெடுமாறன் ஒடுக்கப்படுகிற தலித்துகளுக்காய் நின்றதுண்டா, தலித்தெல்லாம் தமிழனில்லையா?

ஆக இத்தகைய கேள்விகளை முன்வைத்தால் அடுத்து வைக்கிற பிலிம் ‘பிரியாரிட்டி பாலிடிக்ஸ்’. அட தமிழ்த்தேசியப் பாடுகளா, இதற்குத்தான் பிரியாரிட்டி, இதற்கு பிரியாரிட்டி இல்லை என்று தீர்மானிக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? என்றைக்காவது அதை எங்களுக்குத் தந்திருக்கிறீர்களா? தலித்தின் வாயில் பீ திணிக்கப்படுவது எல்லாம் உங்களுக்குப் பிரியாரிட்டி பிரச்சினைகளே இல்லையா, தாமிரபரணிப் படுகொலைகளோ மேலவளவு முருகேசன் கொலைகளோ என்றைக்காவது தேர்தல் பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்கிறதா?

இந்த லட்சணத்தில் ‘‘திருமாவளவனுக்கு சாதியவிடுதலை அளித்தது ஈழப்பிரச்சினைதான்’’ என்று அருள்வாக்கு அளிக்கிறார் தோழர்.ஆழியூரான். என்ன சாதிய விடுதலை கிடைத்துவிட்டது திருமாவிற்கு? திருமாவிற்கு வன்னியர்களும் கள்ளர்களும் லட்சக்கணக்கில் ஓட்டு போடத் தயாராகிவிட்டார்களா? ஈழப்பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த இந்த ஆறுமாத காலங்களில் செந்தட்டிப் பிரச்சினை, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டில் சிவராத்திரியன்று கோயிலில் வழிபட்ட அருந்ததியர்கள் கட்டிவைத்து உதைக்கப்பட்டது, தஞ்சைப் பெரியகோயிலில் சுத்தம் செய்யப்போன தலித் மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்ததற்காக ஒரு தலித் முதியவர் அடித்து உதைக்கப்பட்டது என பத்துக்கும் மேற்பட்ட தலித் எதிர்ப்புச் சம்பவங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. எனவே திருமாவளவன் சாதியத்தலைவர் என்னும் அடையாளத்திலிருந்து பொது அடையாளத்திற்குச் செல்வதற்குத்தான் ஈழப்பிரச்சினையும் தமிழ்த்தேசியமும் உதவியிருக்கிறது. அவர் ஒரு தலித் தலைவராக இருந்து தலித் பிரச்சினைகளைப் பேசுவதை ஆதிக்கச்சாதித் தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்களே தவிர தமிழ்த்தேசியம் பேசுவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் தலித் பிரச்சினைகளைக் காட்டி ஈழத்தமிழர் துயரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதல்ல இப்பதிவின் நோக்கம். தேர்தல் என்பது ஒரு போராட்ட வழிமுறையாகக் கருதக்கூடியவர்கள் தங்களது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாகப் பதிவு செய்வது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆக மொத்தம் ஈழத்தமிழர் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் முன் இரு வாய்ப்புகள்தான் முன்நிற்கின்றன, தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது. எதார்த்தத்தின் கொடூரம் இப்படியாய் இளிக்கிறது, ‘ஓட்டுப் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஓட்டுப் போடாமல் இருப்பதால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை’.

Friday, April 17, 2009

ஷகீலா திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்


இது சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே ஏப்ரலில் பதிவிட்ட பதிவு. நிலைமை அதே மாதிரியாக இருக்கிறது என்பதை விடவும் அதைவிட மோசமாகியிருக்கிறது என்பதே உண்மை. சாதாரண சினிமா ரசிகர்கள் தங்களுக்குத் திரைப்படம் பிடித்திருந்தால், ‘படம் சூப்பர்’ என்பதோடு நிறுத்திக்கொள்வார்கள். ஆனால் நம் எழுத்தாள ரசிகர்களோ, தங்களுக்குப் பிடித்த படங்களையெல்லாம் ‘பின்நவீனத்துவப் படங்கள்’ என்று திடீர் & திகில் பட்டங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இது வெறுமனே ரசனை சார்ந்தது மட்டுமல்ல, வேறு நலன்கள் சார்ந்ததும்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுக்கு அடுத்து மிகவும் மலிவாகக் கிடைப்பவை இந்த பின்நவீனத்துவப்பட்டங்கள். இந்தச் சூழலில் இந்தப் பதிவை மீள்பதிவு செய்யலாமென்று தோன்றியது


சமீபத்தில் ஏப்ரல் தீராநதி இதழில் எம்.ஜி.சுரேஷின் 'தமிழ்த்திரைப்படங்களில் பின்நவீனத்துவக்கூறுகள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. இறுக்கமான இலக்கியச்சூழலில் மனம்விட்டுச் சிரிக்க உதவுபவை சுரேஷின் கட்டுரைகள். இந்தக் கட்டுரையும் அந்தப் பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது.

தமிழில் வெளிவந்த பின்நவீனத்துவத் திரைப்படங்களாக சுரேஷ் குறிப்பிடும் படங்கள் அலைபாயுதே, ஆயுத எழுத்து, வேட்டையாடுவிளையாடு, காக்க காக்க.

இதில் வேட்டைவிளையாடு, காக்க காக்க திரைப்படங்களில் கதை என்கிற ஒன்று இல்லை (அ) எதிர்க்கதை /கதையற்ற கதை இருக்கிறது. எனவே அவை பின்நவீனத் திரைப்படங்கள் என்கிறார் சுரேஷ்.

அலைபாயுதே படத்தின் தொடக்கக்காட்சியில் கதாநாயகியைத் தேடி ரயில்நிலையத்திற்கு வருகிறான் நாயகன். ஆனால் அவள் வரவில்லை. நாயகனின் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. காட்சியமைப்புகள் முன்பின்னாக மாற்றப்பட்டிருப்பதால் அது ஒரு பின்நவீனத்துவத் திரைப்படம் என்கிறார் சுரேஷ். புல்லரித்துப்போய் உட்கார்ந்திருந்தபோது தினத்தந்தியில் ஷகீலா நடித்த ஒரு திரைப்பட விளம்பரத்தைப் பார்க்க நேர்ந்தது.

சீன் படங்கள், பிட்படங்கள், பலான படங்கள் என்றழைக்கப்படும் பாலியல் திரைப்படங்களை உங்களில் எத்தனைபேர் பார்த்திருப்பீர்களோ தெரியாது. (பெண்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை). ஆனால் அவை சுரேஜின் லாஜிக்படி பார்த்தால் நிச்சயமாக பின்நவீனத்துவத்திரைப்படங்கள்தான்.

அவைகளுக்கான கோட்வேர்ட் 'சாமிப்படங்கள்'. (கல்லூரியில் படிக்கும்போது ஒருமுறை தியேட்டர் கவுண்டரில் 'சாமிப்படம்'தான் ஓடுகிறதா என்று கவுண்டரில் உறுதிப்படுத்திக்கொண்டு டிக்கெட் வாங்கி உள்ளே போய் அமர்ந்தால் உண்மையிலேயே 'சரணம் அய்யப்பா' படம் ஓட அலறியடித்து ஓடிவந்தது தனிக்கதை). இதன்மூலம் புனித அதிகாரங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

படத்தின் அறிமுகத்தில் ஒரு பெண் நடித்துக்கொண்டிருப்பார்.ஆனால் சம்பந்தமேயில்லாமல் சில காட்சிகளுக்குப் பிறகு 'பிட்' அல்லது 'சீன்' என்றழைக்கப்படும் பாலுறவுக்காட்சியில் 'நடித்துக்கொண்டிருக்கும்' பெண்ணின் அறிமுகக் காட்சியே இடைவேளைக்குப் பின் தான் வரும் அல்லது வராமலே கூடப் போகலாம். மூன்றாவது காட்சி ஆறாவது காட்சியாகவும் ஆறாவது காட்சி பதினொன்றாவது காட்சியாகவும் முன்பின்னாக மாற்றப்பட்டு ஓட்டப்படும். இதன்மூலம் சீன்படங்கள் பிரதியின் ஒழுங்கைக்குலைக்கின்றன.

அதேபோல சமயங்களில் பிட்டில் இடம்பெறுபவர்களுக்கும் படத்திற்குமே சம்பந்தமிருக்காது. இப்படியாக இப்படங்களில் நான்லீனியர் தன்மை அமைந்திருக்கின்றன. சிலவேளைகளில் தமிழ்ப்படங்களில் இங்கிலீஸ் பிட் ஓடும், இங்கிலீஸ் படங்களில் தமிழ் பிட் ஓடும். ஆகமொத்தம் பிட்கள் மொழி, தேசம் ஆகிய எல்லைகளைத் தகர்க்கின்றன.

ஒருசில படங்களில் சென்சார் போர்டு பிரச்சினைக்காக ஆங்கில வசனங்களை இந்தியநடிகர்கள் பேசி நடித்திருப்பார்கள். இவர்களின் ஆங்கில உச்சரிப்பைக் கேட்டால் நிறுத்தி நிதானமாக பள்ளிகளில் essay ஒப்பிப்பதைப் போல ஆங்கிலம் பேசுவார்கள். இவை ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸ்களாக இருப்பதால் தமிழர்கள் இந்தப் படங்களுக்குத் தொடர்ந்து போய்த் தங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம்.

இந்தப் படங்களில் கதை என்கிற ஒன்று பெரிதாகத் தேவைப்படாது.ஆனால் கடைசியில் ஏதேனும் ஒரு 'நீதி' சொல்லப்படும். கட்டாயமாக கடைசிக்காட்சியில் யாராவது யாரையாவது துப்பாக்கியால் சுடுவார்கள். ஆனால் இந்தக் காட்சிகளைப் பார்க்க தியேட்டரில் யாரும் இருக்கமாட்டார்கள். 'சீன்' முடிந்தவுடனே பலர் எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.

ஆனால் எப்படியாவது இன்னும் சில 'சீன்'கள் ஓட்டப்படாதா என்கிற பேராசை உள்ளவர்கள் மட்டுமே தியேட்டரில் இருப்பார்கள். இன்னும் சிலபேர் யாராவது தெரிந்தவர்கள் வந்து அவர்களின் கண்களில் பட்டுவிடக்கூடாதே என்பதற்காகவே எல்லோரும் போகட்டும் என்று காத்திருப்பார்கள்.

ஆகமொத்தம் இத்தகைய பின்நவீனக்கூறுகள் கொண்ட பின்நவீனத்துவத் திரைப்படங்களில் ஷகீலா, ஷகீலாவின் தங்கை ஷீத்தல், மரியா, ரேஷ்மா, பிட்பிரதீபா ஆகிய பின்நவீனத்துவ நாயகிகள் நடித்திருப்பார்கள். (இந்தப் படங்களில் நடிக்கும் ஆண்நடிகர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது அல்லது அதுபற்றிக் கவலையில்லை.)

என் நினைவிலிருந்து தமிழில் வெளியான பின்நவீனத்துவத் திரைப்படங்கள்.

1. சாயாக்கடை சரசு
2. மாயக்கா
3. அவளோட ராவுகள்
4. அஞ்சரைக்குள்ள வண்டி
5. காமதாகம்
6. மாமனாரின் இன்பவெறி
7.....
8....
9......
.
.
.

Saturday, March 7, 2009

சாருநிவேதிதாவின் 'நான்கடவுள்' விமர்சனம் - ‍‍ சில இடையீடுகள்



நான் கடவுள் திரைப்படத்திற்கான ட்ரெய்லரை விட அந்த படம் குறித்த சாருவின் விமர்சனத்திற்கான டிரெய்லர்கள் அதிகநாள் ஓடியிருக்கும். நாளை, நாளை மறுநாள், அதற்கு அடுத்தநாள் என்று ஒருவழியாக வந்தேவிட்டது சாருவின் விமர்சனம். கடந்தகாலங்களில் பாலாவின் ‘நந்தா‘வையும் ‘பிதாமகனை‘யும் போட்டு வறுத்திருந்தார் சாரு. நந்தாவைத் ‘தாலியறுத்தான் கதை‘ என்று விமர்சித்த சாரு ‘நான்கடவுளுக்கு‘ அளித்துள்ள விருதோ ‘பின்நவீனத்துவப்புரட்சி‘. நந்தாவை விட ருத்ரனின் வன்முறைதான் அதிகம். ஆனால் அகோரிகளுக்கு மட்டும் ‘நரமாமிசம் சிக்ஸ்ட்டி பைவ்‘ சாப்பிடும் ‘சிறப்புரிமை’ உண்டு போலும்.

&&&&&&&&&&&&&
‘அகம் பிரம்மாஸ்மி‘ &இதனுடைய நேரடியான தமிழ்வெளிப்பாடு ‘நான் கடவுள்‘ அல்ல. (கடவுள் என்பதே தமிழ்ச்சொல் இல்லை என்பது வேறு விதயம்) ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்குமான தொடர்புறவு குறித்த விவாதங்களில் ஆதிசங்கரர் முன்வைத்த கருத்தாக்கமே ‘அகம் பிரம்மாஸ்மி‘. இதை எளிதாகத் தமிழில் மொழிபெயர்த்து விட முடியாது. ஏனெனில் பக்தி இலக்கியக் காலம் முன்புவரை செழுமையான அறஞ்சார்ந்த அவைதீக மரபுகளால் செழுமைப்பட்ட தமிழ்மரபில் ஆன்மா & பிரம்மம் குறித்த ‘மலச்சிக்கல்‘ தத்துவ விவாதங்கள் கிடையாது. இந்துமததின் தத்துவார்த்த அடிப்படைகளில் ஒன்றாய் நிறுத்தப்படுவது அத்வைதமும் ‘அகம் பிரம்மாஸ்மி‘யும். ‘காணும் எல்லாம் மாயை‘ என்கிற ‘சூனியவாதம்‘ வரை அதன் தத்துவ எல்லைகள் விரிகின்றன. ஆனால் இங்கொன்றை நாம் நினைவில் நிறுத்திக்கொள்வது நலம். ‘இந்து‘ மதத்தின் ‘தத்துவார்த்த‘ அடிப்படைகள் அனைத்துமே அதற்கு முன்பிருந்த அல்லது சமகாலத்திய அவைதீகத் தத்துவ மரபுகளை உட்செரித்து உருவாக்கப்பட்டவையே தவிர, அதற்கான சுயமான, பலமான தத்துவ அடிப்படைகள் கிடையாது. அவைதீக மரபின் உச்சமாய்ப் பெருஞ் செல்வாக்காய் விளங்கியவை பவுத்தமும் சமணமும். தமிழ்ச்சமூகத்தின் அறமதிப்பீடுகளும் இந்த இரு தத்துவமரபின் செல்வாக்கிலேயே பார்ப்பனீயத்தின் பேராதிக்கத்திற்கு முன்பு வரை விளங்கிவந்தன என்பதை நா.வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி இன்றைய தொ.ப, ஆ.சி வரை பன்னிப்பன்னிச் சொல்லியுள்ளனர்.

பவுத்தத்திற்கு மக்கள் செல்வாக்கு, குறிப்பாக சாதியத்தால் விளிம்பில் தள்ளப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் செல்வாக்கு பெருகியபோது ‘உருவானதுதான்‘ அத்வைதம். பௌத்தமும் சமணமும் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்த நெறிகள். ஆனால் அத்வைதமோ ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிப் பேசியது. சிக்கலான ‘தத்துவ விவாதங்களிலோ‘ மய்யப்படுத்தப்பட்ட சாராம்சவாதத்திலோ சிக்காமல் நடைமுறை சார்ந்த, சுயேச்சையான அற மதிப்பீடுகளை முன்வைத்தது பவுத்தம். கடவுளின் இடத்தில் அறத்தை வைத்தது பவுத்தம். ஆனால் அறத்தினிடத்தில் அகத்தையும் பிரம்மத்தையும் வைத்தது அத்வைதம். அறஞ்சார்ந்து இயங்கியதாலேயே பவுத்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை முன்வைக்க முடிந்தது. ஆனால் எல்லா ஆன்மாக்களிலும் பிரம்மத்தைக் காண முடிந்த ஆதிசங்கரரால் ‘சதுர்வர்ணம் ஏன் பேதத்தையும் தீண்டாமையையும் கட்டமைத்தது?‘ என்கிற கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. பவுத்தம் முன்வைத்த சமத்துவத்தினிடத்திற்காகத்தான் ஆதிசங்கரர் ‘ஆன்மாவுக்கும் பிரம்மத்திற்கான இடைவெளிக் கோடுகளை‘ அழித்தார். ஆதிசங்கரரே ‘கள்ள பவுத்தன்‘ என்று சனாதனிகளால் சந்தேகிக்கப்பட்டவர். ஆனாலும் அத்வைதம் பார்ப்பனீயத்தில்தான் முடிந்தது. அதனால்தான் இன்று சங்கரரின் வாரிசாக இருள்நீக்கிசுப்பிரமணியமே எஞ்சி நிற்கிறார்.

அதேபோல் பவுத்தமும் சமணமும் பிறவிச்சுழற்சியில் நம்பிக்கை கொண்டவை. சமணத்தைப் பொறுத்தவரை ‘முக்தி‘ என்பதே பிறப்பின் சங்கிலியை அறுப்பது. அதுவே பரிநிர்வாணம். அம்பேத்கர் ‘பவுத்தமும் தம்மமும்’ நூலில் பவுத்தத் தத்துவத்தின் மீதான அடிப்படைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆன்மாவே இல்லையென்னும்போது மறுபிறவி மட்டும் எப்படி சாத்தியம்?’. இங்குதான் அம்பேத்கர் புத்தருக்கும் அவரின் முதன்மைச் சீடரான ஆனந்தருக்கும் இடையிலான உரையாடலின் அடிப்படையில் மறுபிறவி என்பதை அறிவியல்பூர்வமாக விபரிக்கிறார். மனித உடலில் உள்ள பௌதீகப்பொருட்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிரபஞ்சத்தில் மறுசுழற்சிக்கு உள்ளாவதையே பவுத்தம் மறுபிறவி என்கிறது என்பது அம்பேத்கரின் துணிபு.

பவுத்தத்தின் மறுபிறவிக்கோட்பாட்டை இன்னொருவகையிலும் புரிந்துகொள்ளலாம். அவரவருக்கான வினையின் பயன்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும். எனவே அவரின் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டியது அவரே. இங்கு தீர்மானகரமான சக்தி என்பது சுயேச்சையான தன்மதிப்பீடுகள்தானே தவிர புறத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதிப்பீடுகள் அல்ல. இதனாலேயே ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்‘ என்கிற பயம் நிலைநாட்டப்பட்டது. ஏனெனில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. ஆனால் வைதீகநெறியோ இந்த அனைத்து வினைப்பயன்களையும் ஒரு ‘பரிகாரத்தின்’ மூலம் தீர்த்துவிட முடியும் என்றது. இந்த பரிகாரத்திற்கான தரகர்களே பூசாரிகள். கோவில் என்னும் அதிகார மய்யமும் பார்ப்பனப் பூசாரிகள் என்னும் அதிகாரத் தரகர்களின் இருப்பும் வலிமையாக உறுதிசெய்யப்பட்டன.

இப்போது ‘நான்கடவுள்‘ படத்தை அவதானியுங்கள். பவுத்த, சமணக் கோட்பாடுகளின் படி மறுமையிலிருந்து உங்களுக்கு யாரும் விடுதலை அளித்துவிட முடியாது, பரிநிர்வாணம்தான் ஒரே வழி, இதற்கு நல்லொழுக்கம், நற்சிந்தனை என கடுமையான அறஞ்சார்ந்த பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் ‘நான்கடவுளிலோ‘ ருத்ரன் மாதிரியான அகோரிகளே உங்களுக்கு ‘இம்மையில் மோட்சத்தையும் மறுமையிலிருந்து விடுதலை‘யையும் அளித்துவிடுவார்கள். இதைவிட உட்சபட்ச வன்முறை அதிகாரத்திற்கு எதிராக நிற்பதற்குத் திராணியற்ற பாவப்பட்ட ஜீவன்களுக்கும் ‘விடுதலை’ வழங்கி விடுவார் ருத்ரன். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, இது ‘நான் கடவுளா‘? ‘நானே கடவுளா?’.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவ்வளவு விரிவான விளக்கத்திற்கும் சாருநிவேதிதாவிற்கும் என்ன சம்பந்தம்? சாருவின் ‘கடவுளும் நானும்‘ புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். சாருவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. நான் இன்றளவும் நாத்திகன்தான். ஆனாலும் சாருவின் அந்த புத்தகம் பிடித்திருந்தது. சாரு இறைநம்பிக்கையாளராக மாறுவது பிரச்சினையானதில்லை. இறைநம்பிக்கை என்பது தனிமனிதத் தேர்வே. ஆனால் இந்தியச் சாதியச் சமூகத்தில் கடவுள் என்பதே ‘சாதி காப்பாற்றும் கடவுளாக’ இருப்பதுதான் பிரச்சினை. சாரு இறைநம்பிக்கையாளராக இருந்தபோதும் வலதுசாரி நிலைப்பாட்டை எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. சாதிவெறி கொண்ட நாத்திகர்களும் உண்டு. வள்ளலாரைப் போல சாதிஎதிர்ப்பு இறைநம்பிக்கையாளர்களும் உண்டு. ஆனால் இந்திய ஆன்மீகம் என்றபெயரில் இந்துத்துவத்தில் விழாமல் இருப்பதில் எச்சரிக்கை தேவை. தன்னை ஒரு இறைநம்பிக்கையாளராக அறிவித்த பிறகு என்னை மாற்றிய சிந்தனையாளர் பெரியார் என்று பேசும் துணிவும் நேர்மையும் சாருவிடம் பிடித்த அம்சம். அறமும் அன்பும் மட்டுமே ஆன்மீகத்தின் மதிப்பீடுகள் எனில் பவுத்தமே இந்தியாவின் ஆகச்சிறந்த ஆன்மீகம். பெரியாரைக் கூட ‘ஆன்மீகவாதி’ எனலாம். இப்போது சாருவிடம் ஒரு கேள்வி நீங்கள் பேசுகிற ஆன்மீகம் ஆதிசங்கரரின் ஆன்மீகமா? பவுத்தத்தின் அறஞ்சார்ந்த நெறியா?
&&&&&&&&&&&&&&&&&
‘நான்கடவுள்’ திரைப்படம் அதிகாரத்தால் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையை விபரிக்கிறது என்று சாரு நெக்குருகுவதைப் பார்த்தால் அவர் ‘ஏழாம் உலகம்’ நாவலைப் படித்ததில்லையோ என்னும் அய்யம் வலுக்கிறது. ஏனெனில் நான்கடவுளில் வரும் பிச்சைக்காரரின் வாழ்க்கை, ‘மகாலெட்சுமி & ஜோதிலெட்சுமி’ மாதிரியான ‘பின்நவீனத்துவப் பகிடி’ வரை பெரும்பாலான காட்சிகள் ‘ஏழாம் உலகம்’ நாவலிலிருந்து அப்படியே கையாளப்பட்டவையே. அகோரி ருத்ரன் மட்டுமே பாலாவின் பாத்திரம். (நியாயப்படி பார்த்தால் கதை : ஜெயமோகன் & பாலா என்றுதானிருக்க வேண்டும். ஆனால் அது ஜெயமோகன் சுயமரியாதை தொடர்பான விசயம் என்பதால் அதிகமும் இங்கு விவாதிக்கத் தேவையில்லை). ‘நான்கடவுள்’ ஒரு பின்நவீனத்துவப் படம் என்று ஒத்துக்கொண்டால் காலச்சுவடு கண்ணனை ஆதரிக்கிற துரதிர்ஷ்டம் சமீபத்தில் சாருவுக்கு நேர்ந்ததைப் போல ஜெயமோகனையும் ’பின்நவீனத்துவ எழுத்தாளர்’ என்று ஒத்துக்கொள்கிற ‘அவலமும்’ நேர்ந்திருக்கும்.

‘ஏழாம் உலகம்’ நாவல் படிக்காமல் ‘நான் கடவுள்‘ படம் மட்டும் பார்த்தவர்களுக்காக...

படத்தில் வரும் மலையாள வில்லன் கதாபாத்திரம் நாவலில் ஒரு கம்யூனிஸ்ட். அவனைப் பொறுத்தவரை ‘பழனிக் கோயில் தைப்பூசத்தில் காவடி எடுத்து ஆடுவதும், புரட்சியும் ஒன்றே. இரண்டுமே மாஸ் ஹிஸ்டீரியா’. அந்த கதாபாத்திரம் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய எந்த நியாயமும் நாவலின் கட்டமைப்பில் இல்லை. கம்யூனிஸ்ட் மலையாளியின் உருப்படிகள் என்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான குறியீடே. ஆனால் ஒருபோதும் பண்டாரத்தை ( படத்தில் தாண்டவன் பாத்திரம்) ஒரு இந்து இயக்க உறுப்பினனாகப் படைக்க ஜெயமோகனுக்கு மனம் வராது. இப்படியாக கம்யூனிச எதிர்ப்பும் ஜெயமோகனின் மனவக்கிரமும் நிறைந்த குப்பைதான் ‘ஏழாம் உலகமே’ தவிர அது விளிம்புநிலைப் பாலாறும் தேனாறும் ஓடும் பின்நவீனத்துவ நாவல் எல்லாம் கிடையாது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சாதாரண எம்.ஜி.ஆர், ரஜினி படக்காட்சி போல இருப்பதாக சாரு எழுதியிருக்கிறார். அந்த சண்டைக்காட்சி மட்டுமல்ல, பூஜாவைக் காப்பாற்றும் ஆர்யாவும் பழைய எம்ஜியார் நாயகப்பிம்பத்தின் மறுவார்ப்பே. இன்னொன்றையும் இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். வடநாட்டு இடுகாட்டில் நடம் புரியும் ருத்ரனையும் ‘தென்னாட்டுடைய சிவனையும்‘ ஒரே கடவுளாக இந்துமதம் ‘உருவாக்கப்பட்டபோது‘ கட்டமைக்கப்பட்டது. (இதற்கான முயற்சிகள் பக்திக்காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டதற்கான சாட்சிகள் காரைக்காலம்மையார் பாடல்கள்.) அதேபோல் வடநாட்டு அகோரிகளையும் நமது சித்தர்களையும் ஒரே மாதிரியாகச் சமப்படுத்தி விட முடியாது. பவுத்த, சமணத்துறவிகள் வெறுமனே துறவு வாழ்க்கையோடு ஒதுங்கிவிடாமல் கலை, இலக்கியம் சார்ந்த முயற்சிகளிலும் அறஞ்சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர்கள். அஜந்தா, எல்லோரா ஓவியம் தொடங்கி நன்னூல் வரை அத்தனையும் அவைதீகத்துறவிகளின் அருட்கொடை. தமிழுக்கான இலக்கண நூல்கள் அத்தனையும் அவர்கள் போட்ட பிச்சை. போலவே சித்தர்கள் பாலாவின் அகோரிகளைப் போல் ‘காஞ்சா’ குடித்துவிட்டு வெறுமனே மோனத்தில் ஆழ்ந்தவர்கள் கிடையாது. பல அரிய மருத்துவ நூல்களைப் பங்களித்ததோடு மட்டுமில்லாது ‘பறைச்சி ஆவதேதடா? பனத்தி ஆவதேதடா? இறைச்சி எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?’ என்று சாதியமைப்பிற்கு எதிராய்க் கலகக்குரல் எழுப்பியவர்கள். ஆனால் படத்தில் பாலாவின் ருத்ரனோ அடிக்கடி பொசுக், பொசுக்கென்று ஆசனம் போட்டு அமர்வதைப் பார்த்தால் வித்தைக்காரன்தான் நினைவிற்கு வருகிறதே தவிர ஞானமில்லை. இன்னும் சொல்லபோனால் இன்று மத்தியதர வர்க்கத்திடம் பணக்காரச் சாமியார்கள் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் யோகா, ஆசனம் ஆகியவற்றை உருவாக்கியதே அவைதீக மரபுதான். புத்தர், மகாவீரர் என்று எல்லா சிலைகளும் தியானத்தில், ஆசனத்தில். எந்த இந்துக்கடவுள் ‘பொத்திக்கொண்டு’ உட்கார்ந்தது?
&&&&&&&&&&&&&&&&&&

‘நான்கடவுள்‘ திரைப்படம் உலகத்தரம் என்னும் ஏணியில் ஏறமுடியாமல் பாலாவின் டவுசரைப் பிடித்து இழுத்தது இளையராஜாவின் இசைதான் என்ற சாருவின் கருத்தை விவாதிக்கும் அளவு எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால், ‘பிச்சைப்பாத்திரம்’ பாடல் குறித்த சாருவின் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி. கையிழந்து, காலிழந்து, தன் உடலையே பிச்சைப்பாத்திரமாக்கிக் கொண்டவர்களைப் பார்க்கும்போதும், அதன்பின்னுள்ள சமூக வன்முறை குறித்து யோசிக்கும்போதும் ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்’ என்ற வள்ளுவனின் அறச்சீற்றமோ அல்லது படத்திலே விக்கிரமாதித்யன் பேசும் ‘புளுத்தி, கடவுள் ஒரு தேவடியாப்பையன்’ என்கிற கோபமோதான் வரவேண்டும். ஆனால் அந்த பாட்டில் நடப்பது என்ன? ‘பாத்திரம் என்னிடத்தில், அதன் சூத்திரம் உன்னிடத்தில்’, ‘பொருளைத் தேடும் பொருளற்ற வாழ்வு’ என்று பணக்கார நாய்களிடம் பேசவேண்டிய அசட்டுப் பிசட்டுத் தத்துவ மசிர்கள் எல்லாம் இழப்பதற்கு ஏதுமற்ற பிச்சைக்காரர்கள் குறித்த பாடலில் பாடப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு கேள்வி, பசித்தவர்க்கு முன்னான இந்த புளித்த ஏப்பம் யாருடையது. இளையராயாவுடையதா, பாலாவுடையதா?

Tuesday, February 3, 2009

முத்துக்குமாரின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் துரோகிகளும் எதிரிகளும்

தோழர். முத்துக்குமாரின் தியாகத்தைக் 'கோழைத்தனம்‘ என வர்ணிக்கின்றனர் பாரதமாதாவின் யோனிபுத்திரன்கள். இன்னொருபுறம் ‘‘மாணவர்கள் நன்னாப் படிக்கணும். போராட்டத்தில் எல்லாம் ஈடுபடக் கூடாது‘‘ என்று ரத்தம் வழியும் வாயுடன் உபதேசிக்கின்றன டோண்டு மாதிரியான பார்ப்பன நரிகள். மாணவர்கள் நன்னாப் படிக்கணும், வீதிக்கு வந்து போராடக் கூடாது என்று மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலோ, அய்.அய்.டி மாணவரின் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்திலோ உபதேசித்திருந்தால் பொருத்தமாயிருக்கும். அது சரி, மாணவர்கள் என்றால் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். மடாதிபதி என்றால் ஆன்மீகத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும், சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்று இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்குச் சொல்லியிருந்தால் பாராட்டலாம். எல்லாவற்றையும் விட கேவலமானது ஈனமானப் பேராசிரியர் அன்பழகனும் ‘தளபதி‘ மு.க.ஸ்டாலினும் விட்ட ஸ்டேட்மெண்ட்கள்தான்.

சட்டமன்றத்தில் முத்துக்குமாரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி பா.ம.க தலைவர் கோ.க.மணி பேசியபோது அந்த அஞ்சலியைத் தானும் முன்மொழிவதாகச் சொன்ன அன்பழகன், பிறகு, ‘‘இந்த மாதிரி இளைஞர்கள் தீக்குளித்து இறப்பதை ஊக்குவிக்கக்கூடாது. அதனால் அஞ்சலியை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்றிருக்கிறார். நம் தளபதியோ, ‘‘ தீக்குளித்து இறப்பது தீவிரவாதம்‘‘ என்று உளறியிருக்கிறார். அடப்பாவிகளா! சின்னச்சாமியின் தீக்குளிப்புத் தியாகத்தில் தானேடா ஆட்சிக்கே வந்தீர்கள்? சின்னச்சாமி என்கிற ‘தீவிரவாதி‘ தீக்குளிக்கா விட்டால் இன்றைக்கு அழகிரி, கனிமொழி, கயல்விழி, கலாநிதி, தயாநிதி, உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள் எல்லாம் பதவி சுகத்தைம் அனுபவித்துக்கொண்டிருக்குமா? ‘‘தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்‘‘ என்று அறிவித்து, பிறகு தமிழகம் முழுக்க ஆங்காங்கே அப்பாவித் திமுககாரன் தீக்குளித்துச் செத்தபிறகு ‘‘ராஜினாவை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்று கருணாநிதி எத்தனை முறை தமிழர்களின் தாலி அறுத்து ‘லுல்லுல்லூ‘ காட்டியிருக்கிறார்?

தமிழகம் முழுக்க இலங்கைப்பிரச்சினைக்காகப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக செயற்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறீர்களே, யாரை எதிர்த்து அல்லது எதை எதிர்த்துப் பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள்? இதற்குப் ‘‘ பிரணாப் முகர்ஜியின் பியூன் இலங்கைக்குச் செல்ல வேண்டும்‘‘ என்று வழக்கம் போல தீர்மானம் போட்டிருக்க வேண்டியதுதானே!

கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், தாமிரப்பரணி ஆற்றில் அடித்துக்கொல்லப்பட்ட தலித்துகள் என்று எத்தனையோ பிணங்களின் மீது ஏறித்தான் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால் அந்த கொலைகளை விட தமிழகம் முழுக்க கருணாநிதியின் துரோகத்தை வீரியத்துடன் அம்பலப்படுத்தியிருப்பவன் முத்துக்குமார்தான். கருணாநிதி யாரை மறந்தாலும் முத்துக்குமாரை மறக்க முடியாது. இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவோ அல்ல. முத்துக்குமார்தான் எதிரி. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் முத்துக்குமாரின் தியாகத்தையும் கருணாநிதியின் துரோகத்தையும் மறக்க மாட்டோம்.

முத்துக்குமாரின் மரணத்தைக் ‘கோழைத்தனம்‘ என்பவர்களே! அவனின் இறுதி அறிக்கையைப் படித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம், ‘‘இத்தகைய விரிவான வாசிப்பும் கருத்தியல் தெளிவும் உடைய இளைஞன் செத்திருக்கக்கூடாது‘‘ என்பதுதான். ஆனால் நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில்.