Saturday, May 29, 2010

லும்பினியில் புதிய கட்டுரைகள்

தமிழீழப் போராட்டமும் தமிழகமும் - அடுத்து...? - அ.மார்க்ஸ்

நாடு கடந்த தமிழீழ அரசு - ஷோபாசக்தி

இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலேப்பா! - அசாதி

ஒரு பெட்டைநாயின் கூச்சல் - லீனாமணிமேகலை

அந்தரத்தில் ’தமிழின உணர்வு’ உருவாகுமா? - புதியபோராளி பாஸ்கர்.

மேலும்...

Monday, May 17, 2010

பானுபாரதியின் (நார்வே) “பிறத்தியாள்” கவிதைத்தொகுப்பு விமர்சனம் - கலந்துரையாடல்


நாள் : 20, மே 2010, வியாழன் மாலை 6 மணி

இடம்: தேவநேயப்பாவாணர் அரங்கு ( LLA)
அண்ணா சாலை, சென்னை - 2.

பங்கேற்போர் :

வ.கீதா
அ.வெண்ணிலா
பிரபஞ்சன்
மதிவண்ணன்
சுகுணா திவாகர்
யாழினி முனுசாமி
கவின் மலர்
அமுதா

அன்புடன் அழைக்கும்
கருப்புப் பிரதிகள்

தொடர்புக்கு : 9444272500


Saturday, May 15, 2010

வினவு- முகிலன் - சந்தனமுல்லை வாதங்களைத் தொடர்ந்து... தடை-தணிக்கை-தண்டனை...

சந்தனமுல்லையின் ‘முஸ்லிம் பெண்கள் சம்பாதிப்பது ஹராமா?’ என்கிற பதிவிற்காக எழுதப்பட்ட பின்னூட்டம். சற்றே நீண்டுவிட்டதால் அதை இங்கே பதிவாக இடுகிறேன்.


நன்றி முகிலனுக்கு.

அனேகமாக சுமஜ்லாவின் பர்தா பதிவு குறித்த சர்ச்சையில் நான் மற்றும் வினவு ஆகியோரின் பார்வைகள் மற்ற பதிவர்களிடமிருந்து மாறுபட்டதாக இருந்தமையால் இத்தகையதொரு பரிந்துரைப்பு எழுந்திருக்கும் என்று கருதுகிறேன். ஆனால் எனதோ வினவின் நோக்கமோ முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெண்ணடிமையை ஆதரிப்பதில்லை, மாறாக அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் வெளிப்பட்ட இந்துமனோபாவப் பார்வைகளை விமர்சிப்பதும் கூடுதலாக மதங்களைக் கடந்த ஒரு ஆணாதிக்க எதிர்ப்பை வலியுறுத்துவதும்தான். முஸ்லீம் சமூகத்தில் மட்டும்தான் ஆணாதிக்கம் இருப்பதைப் போன்ற பிரமை, பெரும்பாலான ’இந்துக்களுக்கு’ இருக்கிறது. அதற்கு பர்தா என்கிற வடிவம் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்துமதம் என்பதும் ஆணாதிக்கத்தில் இஸ்லாத்துக்குச் சளைத்ததில்லை என்பதை நிறுவுவதற்காகத்தான் அவ்வளவு பாடு. இங்கேயும் கூட சந்தனமுல்லை எழுதியிருக்கும் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், பத்வா விதித்திருக்கும் தியோபந்த் முஸ்லீம் அமைப்பு, ‘டூ லேட்’தான். ஏனென்றால் இதையெல்லாம் நமது லோககுரு முன்பே சொல்லிவிட்டார். ஜெயேந்திரனோ அல்லது இந்த முஸ்லீம் அமைப்போ அடிப்படையில் ஆண்கள் அமைப்பு என்ற புரிதல் அவசியம் தேவை. சமயங்களில் அங்கு ஆண்கள் இல்லாவிட்டாலும் ஆணாதிக்கக் கருத்தியலை உள்வாங்கிக் கொண்ட பெண்களே இத்தகைய அதிகாரத்தைச் செலுத்துவதற்குப் போதுமானவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்துத்துவ அமைப்புகளின் மகளிர் அமைப்புகளைச் சொல்லலாம்.

எனவே வினவு மற்றும் எனது விழைவு, இது முஸ்லீம் விரோத வாதங்களாக, இந்துத்துவச் சார்பு விவாதங்களாகப் போய்விடக்கூடாது என்பதே தவிர, முஸ்லீம் ஆணாதிக்கத்தைக் காப்பாற்றுவது இல்லை. பெண்கள் வேலைக்குப் போவது என்பதை மத அடிப்படைவாதிகள், குறிப்பாக ஆண்கள் எதிர்ப்பதன் காரணம் மிக வெளிப்படையானது. முதலாவதாக, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே வருவது என்பதே ஆணுக்கு சகிக்க முடியாததாக இருக்கிறது. ‘அவள் தன் கண்காணிப்பு எல்லைக்கு வெளியே போய் விட்டாள்’ என்று கருதத் தொடங்குகிறார்கள். ‘வேலைக்குப் போவது’ என்பது வீட்டை விட்டு வெளியே வருவதன் ஒரு வடிவம் மட்டுமே. பெண்கள் பொதுவாழ்க்கைக்கு வருவது, குறிப்பாக அரசியலில் பங்கெடுத்துக் கொள்வது என்கிற வடிவத்தை ஆண்கள் முடிந்தவரை தீவிரமாக எதிர்க்கிறார்கள் அல்லது அப்படி வருகிற பெண்ணின் ஒழுக்கம் குறித்து சந்தேகம் கொள்கிறார்கள். ஆக, இங்கே காஞ்சி ஜெயேந்திரன், முஸ்லீம் அமைப்பு மட்டுமில்லாது பொதுவாக அனைத்து சராசரி ஆண்களுக்குமே ஒரே மாதிரியான கருத்தோட்டம்தான். ‘வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்’ - ‘பெண்கள் வேலைக்குப் போவது ஹராம்’ - ‘பொதுவெளிக்கு வருகிற பெண் ஒழுக்கங்கெட்டவள்’ - ஒத்திசைகிற இந்த குரலிசைகளின் விகிதம் கூடக் குறைய இருந்து சுருதி பிசகலாமே தவிர பொதுவாக ஆண்மனம் என்பது வீட்டை விட்டு வெளியே வருகிற பெண்ணைச் சந்தேகிக்கவே செய்கிறது. இதன் அடிப்படையை யோசித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். அவன் பெண்ணை மட்டும் சந்தேகிக்கவில்லை, வீட்டிற்கு அப்பால் அவள் சந்திக்க நேர்கிற தன்னைப் போன்ற ஒரு ஆணின் மீதும் அவனுக்கு நம்பிக்கையில்லை. தான் ஒரு ஆணாயிருப்பதாலேயே, அவன் பெண்ணை நம்ப மறுக்கிறான். இரண்டாவதாக வேலைக்குப் போவதன் மூலம் பெண்ணுக்குக் கிடைக்கும் பொருளாதார ரீதியான தற்சார்பும், இன்னொரு உலகத்தை அறிந்து கொள்கிற வாய்ப்புகளும், தேர்ந்து கொள்கிற சாத்தியங்களும் ஆணுக்குப் பெண்ணின் மீது அச்சத்தை ஏற்படுத்திக் கண்காணிப்பை இறுக்கச் செய்கிறது.

ஆனால் இந்த விவாதத்தில் பின்னூட்டமிட்டிருக்கிற முஸ்லீம் ஆணாகிய ஷர்புதீனின் கருத்து எனக்கு முக்கியமானதாகப் படுகிறது. ஒருகாலத்தில் அட்டைப்படத்திலிருக்கிற நடிகை சீதாவின் புகைப்படத்தை உற்றுப் பார்ப்பதே கண்டிப்புக்கு உரியதாக இருந்தது. ஆனால் இன்று வீட்டோடு ‘மானாட மயிலாட’
பார்க்கிறோம். ஒரு காலத்தில் தமிழ்த்திரையில் கன்னத்தில் முத்தமிடுகிற காட்சி வரும்போது கூட தங்கள் குழந்தைகளைத் திரையரங்கு இருக்கைக்குக் கீழே தலையை அழுத்துகிற பெற்றோர்கள் இருந்தார்கள். இப்போது உதட்டோடு உதடு பொருத்துகிற முத்தக்காட்சிகள் தமிழ்ச்சினிமாக்களில் சாதாரணம். இதை முஸ்லீம்களும் குடும்பத்தோடு பார்க்கத்தான் செய்கிறார்கள். ஆக கலாச்சாரம்-தணிக்கை-கண்டிப்பு மாதிரியான விஷயங்களுக்கு மாறாக சமூகச்சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தை மத அடிப்படைவாதிகளாலோ கலாச்சார அடிப்படைவாதிகளாலோ தடுத்துவிட முடியாது என்பதோடு அந்த சமூகச்சூழல் மாற்றங்கள் அவர்களுக்கும் சில நன்மைகளை விளைவிக்கத்தான் செய்கின்றன. ஆக, சமூகச்சூழல் மாறும்போது தணிக்கை மற்றும் தண்டனைகளை மாற்றிக்கொள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சுதந்திரத்தின் எல்லைகளை நீட்டிக்கிறார்கள். ஆனால், பிடியைப் பத்திரமாக இறுக்கிக்கொள்கிறார்கள். இது ஒன்றும் புரிவதற்கு அவ்வளவு கஷ்டமானது அல்ல. சபரிமலைக்கு மாலை போடுவதற்கு மதுவையும் புகையையும் தவிர்ப்பது என்பது ஒரு காலத்தில் அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் மதுவை விலக்குவதைப் போல புகையை விலக்குவது அவ்வளவு எளிதானதில்லை என்பதால், ‘சிகரெட் மட்டும் பிடித்துக்கொள்ளலாம்’ என்று ‘விதி’ தளர்த்தப்பட்டது. (சில இடங்களில் தனிக்குவளையில் மதுவும் அருந்தலாம் என்கிற ‘சிறப்பு மது தரிசனச் சலுகையும்’ உண்டு.) எப்படியிருந்தபோதும் கண்காணிப்பு-சுதந்திரம், தணிக்கை-மீறல், தண்டனை-எதிர்ப்பு என்கிற எதிர்வுகள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. சுதந்திர விருப்பம், மீறல் மற்றும் எதிர்ப்பின் வெளி அதிகமாகிக் கொண்டே போகும்போது கண்காணிப்பு-தண்டனை-தணிக்கையை வலியுறுத்துகிற அடிப்படைவாதிகள் சட்டகங்களையும் வலைகளையும் தூக்கிக்கொண்டு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்னொன்று அடிப்படையில் முஸ்லீம் சமூகம் குறித்து பொதுவெளியில் நடக்கிற பெரும்பாலான விவாதங்கள் முஸ்லீம் சமூகங்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் அல்லது அரைகுறைப் புரிதல்களுடன் தான் நடைபெறுகின்றன. பர்தா, பத்வா, தாலிபான்கள் என்கிற தாங்கள் அறிந்த சில விஷயங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமாக ‘முஸ்லீம் பெண்ணடிமைத்தனம்’ குறித்து ஒரு முடிவுக்கு வந்துவிடுகிற பெரும்பாலானோரைத்தான் காண முடிகிறது. சந்தனமுல்லை பதிவில் நாஸியா என்னும் முஸ்லீம் பெண் சொல்வதைப் போல இந்த ‘பத்வா’க்களைப் பெரும்பாலான முஸ்லீம்கள் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. திண்டுக்கல்லில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தோடு இணைந்து பல கூட்டங்களை நடத்தியபோது, அந்த அமைப்பின் நகரச்செயலாளராக இருந்த முஸ்லீம் இளைஞர் ஒரு தகவலைச் சொன்னார், ‘இஸ்லாத்தில் இசை என்பதே ஹராம்’ என்றார். உண்மையில் இது எனக்கு விளங்கவில்லை. அப்படியானால் நாகூர் அனிபா, ஏ.ஆர்.ரகுமான் தொடங்கி இறுதிக்காலத்தில் இஸ்லாத்தைத் தழுவிய மைக்கேல் ஜாக்சன் வரை என்ன செய்யலாம்? எனக்குப் பாங்கோசையே அற்புதமான இசையாக இருக்கும். சமயங்களில் அரபுச்சேனல்களில் அரபுமொழி கேட்டுக்கொண்டிருப்பேன். அது செய்தியா, தொழுகையா, என்ன நிகழ்ச்சி என்று தெரியாவிட்டாலும் அரபுமொழி உச்சரிக்கப்படும் விதமே ஒரு இசையாய் இருக்கும். அப்படியானால் இசையை ‘ஹராம்’ என்று சொன்ன அந்த முஸ்லீம் நண்பரின் கருத்தை என்ன சொல்வது?

இதுமாதிரியான விஷயங்களுக்கு முதலில் இஸ்லாமியக் கலாச்சாரத்தை நாம் புரிந்துகொள்ள முயல வேண்டும். அவர்களுடன் ஊடாடி உரையாடத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் முஸ்லீம் சமூகம் ஒரு மூடுண்ட, இறுக்கமான சமூகம் என்கிற கருத்து நம் அனைவருக்குமே இருக்கிறது. (இதில் முற்போக்காளர்களும் அடக்கம்). இது நம்மைப் பல தவறான புரிதல்களுக்கு இட்டுச் செல்கிறது என்று கருதுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நான் இதுவரை சந்தனமுல்லையின் பதிவுகளைப் படித்ததில்லை. ஆனால் நண்பர் பா.ராஜாராம், ‘சந்தனமுல்லை பதிவில் என்னைக் குறித்தும் ஒரு குறிப்பு பின்னூட்டம் இருப்பதாகத்’ தெரிவித்ததை ஒட்டி படிக்க நேர்ந்தது. நல்ல குறிப்பிடத்தக்க நடை. இறுதியாக இந்த விஷயத்தையும் நண்பர்கள் முடிந்தால் யோசிக்க வேண்டுகிறேன். முஸ்லீம் சமூகம் இறுக்கமான பிற்போக்குச் சமூகம், முஸ்லீம் பெண்கள் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்கிற பொதுக்கருத்து நம் எல்லோரிடமும் இருக்கிறது. அது முற்றுமுழுக்க பொய் அல்லது தவறான கருத்து என்றும் சொல்லி விட முடியாது. ஆனால் ஷகீலா, மும்தாஜ், குஷ்பு என்று தமிழ்ச்சினிமாவின் கவர்ச்சிப்பிம்பங்களாக இட்டு நிரப்பப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம் பெண்களே.

தோழமையுடன்

சுகுணாதிவாகர்.

Wednesday, May 12, 2010

நிறப்பிரிகையின் தொடர்ச்சியாய் லும்பினி

தொண்ணூறுகளில் வெளிவந்த ‘நிறப்பிரிகை’ தமிழில் மாற்றுகள், சோசலிசக் கட்டுமானம், மனித உரிமைகள், பெரியாரியம், பின்நவீனம், தீவிரப்பெண்ணியம், தலித்தியம் ஆகியவை குறித்த உரையாடல்களைத் தொடங்கி வைத்தது. அதுகாறும் இலக்கியத்திற்கும் அரசியலுக்கும் இடையிலிருந்த ‘உத்தப்புரம் சுவர்’ ஒன்றை உடைத்துத் தகர்த்தது. ஏராளமான ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பெண்களும் நிறப்பிரிகையின் மூலம் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கினர். அத்தகைய நிறப்பிரிகையின் தொடர்ச்சியாக ‘லும்பினி’ என்னும் இணையதளத்தை நண்பர்கள் ஆரம்பித்திருக்கின்றனர். சரியாகவோ, தவறாகவோ, பல விமர்சனங்களுக்கு இடையில் கால்நூற்றாண்டுக்கும் மேலாக தத்துவம் மற்றும் அரசியல் தளங்களில் இயங்கி வருகிற அ.மார்க்ஸ், முதன்முதலாக இணையத்திற்காக எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. (அவர் இணையத்தில் எழுதவில்லை என்பதையும் அது ஏன் என்பதையும் அவரே ‘லும்பினி’யில் விளக்கியிருக்கிறார்.) நேபாளத்தில் இந்தியாவின் விரிவாதிக்க நோக்கங்கள், மாவோயிஸ்ட்கள் சந்திக்கும் சவால்கள், மாவோயிஸ்ட்களுக்குப் பின்னால் சீனா இருப்பதான குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து ‘எகானமிக்கல் அண்ட் பொலிடிகல் வீக்லி’யின் ஆசிரியர் கவுதம் நவ்லக்காவுடன் அ.மார்க்ஸ் நிகழ்த்தியுள்ள நேர்காணலும் ரணஜித் குகாவின் எழுத்துகளைத் தழுவி, தெலங்கானா போராட்டம் குறித்து ஒரு விளிம்புநிலை ஆய்வுநோக்குக் கட்டுரை ஒன்றையும் அ.மா எழுதியிருக்கிறார். ‘இருப்பு’ என்னும் சொல்லுக்குப் பதிலாக நாகார்ஜுனன் அறிமுகப்படுத்தும் ‘உள்ளுமை’ என்னும் சொல் எவ்வாறு பொருத்தமற்றதாயும் போதாமையுடனும் இருக்கிறது என்பதை விவாதிக்கிறது ராஜன்குறையின் கட்டுரை. ‘நான் ஏன் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்?’ என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு மறுப்பாக அமைந்துள்ள பொதியவெற்பனின் கட்டுரைத் தொடர் தமிழவன் மற்றும் ஜெயமோகனுக்கு இருக்கும் ‘திராவிட இயக்க வெறுப்பு நோய்’ குறித்த மருத்துவ அறிக்கையாக அமைந்திருப்பது புது உத்தி. கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்களின் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வுப்பதிவும் அக்கூட்டத்தில் நடந்த கலாட்டா குறித்த விமர்சனக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் இனப்படுகொலை முடிந்து ஓராண்டு நெருங்கும் வேளையில் சிங்களப்பேரினவாதத்தின் அதிகார அரசியலை அம்பலப்படுத்துகிறது ஷோபாசக்தி மற்றும் சேனனின் கட்டுரைகள். இந்திய வணிகத்திலிருந்து தலித்துகள் விலகியிருக்கிற/விலக்கி வைக்கப்பட்டிருக்கிற அவலம் குறித்து ஆராய்கிறது யவனிகாசிறீராமின் கட்டுரை. செல்மாபிரியதர்சனின் படைப்புலகம் குறித்த ரசூலின் கட்டுரை, ரமேஷ்பிரேதன், த.அகிலன். கொற்றவை, லீனாமணிமேகலை, கு.உமாதேவி , இசை, தர்மினி ஆகியோரின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. 80களில் கொங்கு வட்டாரத்தில் புழக்கத்திலிருந்த ‘பத்து ரூபாய்க்கு இரண்டு தீக்குச்சியை எரிய வைத்து பெண்ணின் நிர்வாணத்தை ரசிப்பது’ என்னும் பழக்கம் குறித்து நுட்பமாக விவரிக்கிறது ஸ்நேகிதனின் சிறுகதை. இளங்கோகிருஷ்ணனின் ‘நீலப்பூ’ சிறுகதை ஒரு குறியீட்டுக்கதை. எல்லாவற்றுக்கும் மேலாக ‘நிறப்பிரிகை’ இதழ்கள் இணையத்தில் ஏற்றப்பட்டிருப்பது கோட்பாட்டு விவாதங்களைத் தொடர்ந்து செல்ல உதவும் என்று நம்புகிறேன். ஒரு கனமான காலாண்டிதழைப் போலவே ‘லும்பினி’ அமைந்திருப்பது உவப்பு நல்குகிறது. வெறுமனே எதிர்வினைகள், பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடும் இணையதளங்களிலிருந்து விலகி, காத்திரமான சிந்தனைகளை அறிமுகப்படுத்துவது, விவாதிப்பது ஆகியவற்றை ‘லும்பினி’ தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். நண்பர்கள் ஷோபாசக்தி, வசுமித்ர மற்றும் சி.மீனா ஆகியோருக்கு வாழ்த்துக்கள். இணையதள முகவரி www.lumpini.in