Saturday, November 14, 2009

திருக்குறள் ஒரு சைவநூலா?

சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினை. எனவே இந்த பதிவைப் படித்துவிட்டு இங்கே வரவும்.


திருக்குறள் சமணநூல் என்பதாக மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தொ.பரமசிவன் வரை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான தரவுகளாக அவர்கள் முன்வைக்கும் தரவுகளோடு நீங்கள் குறிப்பிடும் தரவுகளை ஒப்பிடும்போது உங்கள் தரப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. பொதுத் தன்மையில் எழுத நேர்ந்ததால் வள்ளுவர் சிவன் பற்றிக் குறிப்பிடவில்லை என்று யூகிக்கிறீர்கள். இத்தகைய யூகங்கள் மட்டுமே ஆராய்ச்சியாகாது. மேலும் அவர் அப்படி கருதியது உங்களுக்குத் தெரிந்த அளவுக்குத் திருவள்ளுவர் உங்களுக்கு நெருக்கமானவரா என்பதையும் நான் அறியேன். சைவநெறிகள் என்று அறியப்பட்டவற்றுள் எவற்றைக் குறள் மொழிகிறது என்பதை விளக்கினால்தான் மேலும் உரையாட ஏதுவாயிருக்கும்.

/பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? /

முதலில் க.அப்பாதுரையார் எங்கு இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றே தெரியவில்லை. நீங்கள் இத்தகைய கட்டுரைகள் எழுதும்போது பயன்பட்ட நூல்கள் குறித்த விவரங்களைத் தந்திருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய இடத்திலாவது கா.அப்பாத்துரை, இந்த நூலில் இப்படி கூறுகின்றார் என்றாவது குறிப்பிட வேண்டும். நான் கா.அப்பாத்துரையாரை அதிகம் படித்ததில்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல்தான் கா.அ கூறியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியாயின் அது அப்பாத்துரையின் புரிதலில் இருக்கும் குறைபாடு. பெரியார் 'கடவுள் வாழ்த்து' குறித்த விமர்சனத்தில், 'கடவுள்' என்கிற வார்த்தை திருக்குறளின் எந்தவொரு அத்தியாயத்திலும் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தப் படாமையைச் சுட்டிக் காட்டுகிறார். பொதுவாக வள்ளுவர் 'அடக்கம்' என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டால் அது அந்த அத்தியாயத்தில் உள்ள ஏதேனுமொரு குறளிலாவது 'அடக்கம்' என்னும் சொல் பயன்படுத்தப்படும். ஆனால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அத்தியாயத்தில் ஒரு குறளில் கூட 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப் படாததையும் அதுமட்டுமின்றி 1330 குறள்களில் எந்தவொரு இடத்திலும் 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாதையும் பெரியார் தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். எனவே 'கடவுள்' என்பதே திருவள்ளுவர் காலத்து வார்த்தை இல்லை என்று தர்க்கபூர்வமாக வாதிடும் பெரியார் அந்த பத்துக் குறள்களுக்கும் வைக்கப்பட்ட 'கடவுள் வாழ்த்து' என்னும் தலைப்பு பிற்கால இடைச்செருகல் என்கிறார். தர்க்கரீதியாக பெரியாரின் வாதம் சரிதான். ஆனால் நீங்களோ பெரியாரே ஏதோ இடைச்செருகல் செய்ததைப் போல் திரிக்கிறீர்கள். பெரியாரைப் பற்றிய ஆய்வே இந்த லட்சணத்தில் இருக்கும்போது

/பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். /

என்னும் உங்கள் வார்த்தைகள் குறித்து எனக்கு நல்லவிதமான அபிமானம் தோன்றவில்லை.

/நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள்./

என்று போகிற போக்கில் வேறு வெடிகுண்டுகளை வீசி விட்டுப் போகிறீர்கள். நக்கீரர், அவ்வையார் என்ற பெயர்களில் வழங்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே நபர்கள் இல்லை என்பதும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல நபர்கள் என்பதும் தமிழ் இலக்கியம் குறித்த சிற்றறிவு அனுபவம் உள்ளவர்களுக்கே தெரிந்த விடயம். அவ்வையாரையே 'துணிந்து' சைவர் ஆக்கிவிட்டபிறகு

/சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது./

என்று நீங்கள் சொல்வதிலே என்ன தடை இருக்கப் போகிறது? சரி, உங்கள் கட்டுரைக்குத் துணை சேர்க்கும் 'ஆய்வுகள்' என்ன என்று பார்த்தால் ஒருபக்கம் பெரியாரும் பாரதிதாசனும் 'சொன்னதாக' கா.அப்பாத்துரை 'சொன்னதாக' நீங்கள் சொல்வது, இன்னொருபுறம் திருவாவடுதுறை ஆதினத்தின் 'ஆய்வு'. நடத்துங்கள் உங்கள் நகைச்சுவைநாடகத்தை.

8 comments:

நிகழ்காலத்தில்... said...

பண்புமிக்க எதிர்வினைக்கு பாராட்டுக்கள்

வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்கள் கருத்து சரியே என நினைக்கிறேன். திருக்குறளில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் ஏறத்தாழ சமண ஒழுக்க நேரிகளைபோலவே உள்ளன. திருக்குறளில் எங்கேயுமே அறிவுக்கு பொருந்தாத கற்பனை கலந்த கருதுகோள்கள் இல்லை. சமணமும் அப்படியே. சமண கட்டுபாடுகள் மிககடினம் மற்றும் நடைமுறை சார்ந்த அணுமுறை இல்லை. மற்றபடி சமணம் நல்லொழுக்கம் சார்ந்த அர வாழ்க்கை தான் போதிக்கிறது.

சைவம் , சிவம் போன்ற வார்த்தைகளுக்கே தீர்கமான விளக்கம் இல்லை. திருக்குறள் பொது தன்மையில் எழுதபட்டுள்ளதால் எல்லோரும் தங்களுக்குதகுந்தவாறு இலகுவாக வலிந்து பொருள் கொள்ள முடிகிறது.

திருவள்ளுவர் சமணரா என்று கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் படைப்பில் சமண தாக்கம் இருந்திருக்கக்கூடும். மற்றபடி அவர் எந்த கோட்பாட்டு குழுக்களிலும் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

பதிவுக்கு நன்றி,

சிவா

வெண்பூ said...

என்ன கொடுமை சுகுணா இது??? திருக்குறளை சைவமா, அசைவமா (ச்சை) சைவமா, வைணவமா, சமணமா என்ற கருத்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை அவர்கள் பிறந்த சாதிக்காரர்கள் சொந்தம் கொண்டாடுகின்ற அளவுக்கு கேவலமாகத் தெரிகிறது.

angel said...

m neengal solvathum sari than

ena irandhalum thirukural tamiluku kidaitha arumaiyana nul

நிகழ்காலத்தில்... said...

இந்த இடுகையினை சிறந்த எதிர்வினையாக என் பதிவில் பாராட்டி இருக்கிறேன். நண்பரே

vinthaimanithan said...

அற்புதமான பதிவு, தோழரே!
மிக நுணுக்கமாக தமிழ் பண்பாட்டின்,அரசியலின் அனைத்து கூறுகளிலும் பார்ப்பனீயம் தன் கைவரிசையை காட்டி வருகின்றது. அம்பலப்படுத்த உங்களைப்போல வெகு சிலரே உள்ளனர். தொடரட்டும் உங்கள் அரிய பணி!

ஜோதிஜி said...

ஆய்வுக்குரிய விசயங்கள்.

Unknown said...
This comment has been removed by a blog administrator.