Monday, October 26, 2009

பேராண்மை - மங்கிய புகை மூட்டமாய் மார்க்சியம்....















சி
றுபத்திரிகைகள் மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளால் ‘மாற்றுசினிமாக்காரர்கள்’ என்று கொண்டாடப்படுபவர்கள் பட்டியலில் பாலா, அமீர், சேரன், சசிகுமார், தங்கர்பச்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் அளவிற்கு ஏனோ ஜனநாதனின் பெயர் இடம்பெறுவதில்லை. ஒருவேளை அவர் இவர்கள் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசாததாலா என்னவோ. ஆனால் தமிழின் புதிய பரிசோதனை முயற்சிகளை முன்வைப்பதிலும் அரசியல் சினிமாக்களை இயக்குவதிலும் ஜனநாதன் தனித்துவமான முன்மாதிரி என்பதே என் கருத்து.

அவரது ‘இயற்கை’ வெண்ணிற இரவுகளைத் தழுவிய காதல்சினிமாதான் என்றபோதும் ஒரு அசாதாரண அழகியல் படம் முழுவதும் கவிந்திருக்கும். கடலோர மனிதர்களின் கொண்டாட்டமும் எளியவாழ்க்கையும் இயல்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவரது இரண்டாவது படமான ‘ஈ’ மிக முக்கியமான அரசியல் சினிமா. மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களை மருந்துகளுக்கான பரிசோதனைக் களனாகப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்த படம். மேலும் ஒரு சேரி இளைஞனின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்கு முன் இவ்வளவு எதார்த்தமாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. பார் டான்சராக வரும் முஸ்லீம் பெண், காதல் புனிதமானது என்றே சொல்லப்பட்ட தமிழ்கூறு நல்லுலக சினிமா வரலாற்றில் பணம் வாங்கி தன் காதலியை விற்க முனையும் இளைஞன், வெளிப்படையான நக்சல்பாரி போராட்ட அரசியல் என்று பல்வேறு கூறுகளை இணைத்த ஒரு அற்புதமான சினிமா. அதை விடவும் முக்கியமானது வேலுபிரபாகரன் மாதிரியான பிரச்சாரகர்கள் சினிமா என்னும் காட்சி ஊடகத்தை தெருமுனைக் கூட்டமாக மாற்றியபோது, பிரச்சாரத்தின் நெடியைக் குறைத்து அரசியலைக் கலைப்படைப்பாக மாற்றியவர் ஜனநாதன்.

ஆனால் பேராண்மை படத்தின் தோல்வியே ஜனநாதன் மேற்கண்ட அம்சத்திலிருந்து சறுக்கியது என்றுதான் நான் கருதுகிறேன். பல இடங்களில் வெளிப்படையான பிரச்சார நெடி. என்.சி.சி மாணவிகளுக்கு சரக்கு & பரிமாற்றம் & உற்பத்தி & உபரி & மூலதனம் என்றெல்லாம் கிளாஸ் எடுப்பது கொஞ்சம் ஓவர்தான். அதேபோல் போலீசு விலங்குகளால் பழங்குடி மக்களின் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்படும்போது, அந்த பழங்குடி பேசும், ‘‘உழைக்கும் மக்களோட சர்வதிகாரம் வந்துதான் தீரும்’’ என்கிற வசனமும் காட்சிக்கு வெளியே துருத்தி நிற்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு உயர்சாதிப் பெண் மலையின இளைஞன் துருவன் மீது பொய்ப்புகார் எழுதும்போது சக தோழியிடம் சொல்கிறாள், ‘‘அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி’’. ஏனோ இந்த வசனம் அவ்வளவு உறுத்தலாக இல்லை. ஒரு பழங்குடி இளைஞனை ஆதிக்க சாதிக்காரர்கள், அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், தீண்டத்தகாதவனாக நடத்துகிற சாதிய மனோபாவம் குறித்த காட்சிகள் பிரச்சார வசனங்கள் இன்றி இயல்பாகவே பதிவுசெய்யப்படுகின்றன. ஆனால் அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்)

ஆனால் படத்தின் பிரச்சினையே தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டுவதைப் போல ‘இந்தியத் தேசிய அரசியல்’தான். ஒரு பழங்குடி இளைஞனைக் கக்கூஸ் கழுவ வைக்க ஆசைப்பட்டு ரசிக்கும் உயர்சாதிப் பெண்ணின் ‘இந்தியப் பாரம்பரியம்’ நிறைந்த இந்தியத் தேசியம் எப்படி ஒரு பழங்குடி இளைஞனின் இந்தியத் தேசியமாகவும் இருக்க முடியும்? பழங்குடிகள் அதிகம் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தேசிய வெறியாட்டத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

ஆனால் நான் இங்கு பேச வருவது தேசிய இனப்பிரச்சினைகளையோ மொழிவாரி தேசியத்தையோ கூட அல்ல. அம்பேத்கர் மொழிவாரித் தேசியங்களை ஆதரித்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் ‘மய்யப்படுத்தப்பட்ட மத்திய அரசு’ என்னும் கருத்தாக்கத்தை ஆதரித்தவரும்கூட. ‘மொழிவாரித் தேசியம் அல்லது அதிக அதிகாரம் வாய்ந்த மாநில அரசு என்னும்போது அங்கு இயல்பாகவே சிறுபான்மையினராகிப் போகும் தலித்துகளை இவ்விரண்டும் கீழாகவே நடத்தும்’ என்னும் அம்பேத்கரின் அச்ச உளவியலிலிருந்தே நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அம்பேத்கர் ஒரு இந்திய அளவிலான ஒன்றிணைப்பை வலியுறுத்தியபோதும் அது காங்கிரசு மற்றும் இந்துத்துவவாதிகள் முன்வைத்த பார்ப்பன இந்து தேசியத்திற்கு முற்றிலும் மாறாகவும் எதிராகவும் இருந்தது. ராமன், வினாயகன் தொடங்கி பாரதமாதா வரையிலான இந்திய தேசிய இந்துத்துவக் குறியீடுகளை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே துருவன் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இந்தியத் தேசியத்தை நிராகரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பதும் இதுவரை மலைவாழ் மக்களை விலக்கி வைக்கிற மய்யப்படுத்தப்பட்ட அரசியலே. குணா என்னும் தமிழ்த்தேசிய ‘அறிஞர்’ படுகரை அன்னியர் என்று சொல்லி, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கச் சொல்லி எழுதியவர். ஆனால் இங்கு கேள்வியே துருவனின் இந்தியத் தேசியம், ‘தேசப் பாதுகாப்பு, அன்னியச் சதி’ என்கிற வழக்கமான ஆளும் வர்க்கப் பல்லவியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே என்பதுதான். பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா என்று மாற்றி விட்டால் அது மார்க்சியம் ஆகி விடுமா என்ன?

எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?. அது மான்சோன்டாவின் துணையுடன் மரபணுக் கத்திரிக்காயைக் கொண்டு வர தீவிர முயற்சியில் இருக்கும்போது, ஜனநாதனின் இந்த கரு அபத்தமானதாகத் தோன்றவில்லையா? மேலும் செயற்கைக் கோள், அணு ஆயுதச் சோதனை, ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்தல் ஆகியவற்றிற்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை எடுத்துத்தானே அரசு செலவு செய்கிறது? தமிழக அரசால் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாயைச் செலவழிக்காமலே பல துறைகள் திருப்பி அனுப்பி விட்டதாக கூறுகிறது சமீபத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை. இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அணுகும்போதுதான் பேராண்மை முன்வைக்க விரும்பும் மார்க்சிய அரசியலும் இந்திய தேசபக்தியும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் விலகி மிதக்கின்றன.

மேலும் தேசபக்தி என்பதை ஒத்துக்கொண்ட இந்திய மார்க்சிய லெனினியக்குழுக்களும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலையீட்டை மறுப்பதாகவும் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகவுமே தேசபக்தியை விளக்குகின்றனர். கருவேல மரத்தை இந்தியாவிற்குள் பரப்பி செயற்கை விதைகள் இந்திய விவசாய நிலங்களை மலடாக்குவது குறித்த ஆதங்கத்தில் இத்தகைய பார்வைகள் தெரிகின்றன. ஆனால் பின் அது பாதுகாப்பை முன்னிட்ட தேசபக்தி, வல்லரசு என்றெல்லாம் பெருங்கதையாடல்களை முன்வைக்கும்போது மார்க்சியத்திலிருந்து விலகி நிற்கிறது.

என்றபோதும் ஜனநாதனின் பேராண்மையை முற்றிலுமாக எதிர்மறையில் நிறுத்தி நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ - அம்மா, ஆ - ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், ‘சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்’ என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்ததற்காக, ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக, பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததற்காக, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்ததற்காக ஜனநாதனுக்கு ரெட்சல்யூட்ஸ்!

சில குறிப்புகள்...

1. படத்தின் வடிவத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த விமர்சனம் எதுவும் பேசவில்லை. உள்ளடக்கம் குறித்தானதே. திரைக்கதை, இசை, ஜெயம் ரவியின் உழைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் குறித்து பலரும் எழுதியிருக்கின்றனர். குறிப்பாக இதுகுறித்து கேபிள்சங்கர் எழுதியதுதான் என்னுடைய கருத்தும்.

2. தோழர் மதிமாறன் குறிப்பிட்டுள்ளதைப் போல் ஆதிக்கசாதிப் பெண் இறந்தபோது ஒலிக்கும் கந்தஷடிக்கவசத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. உயர்சாதிக் கடவுளால் காப்பாற்றப்படாமல் ஒரு பெண் இறந்து கிடக்கும்போது ‘காக்க காக்க’ கந்தசஷ்டிக்கவசம் ஒலிப்பது எவ்வளவு அழகான பகடி!

3. பாலிமர் தொலைக்காட்சியில் பாஸ்கி ஜனநாதனைப் ‘பேராண்மை’ தொடர்பாக நேர்காணல் செய்தார். அவரது முதல்கேள்வி, ‘‘நீங்க மயிலாப்பூரிலிருந்து வந்ததாச் சொன்னீங்க. (ஜனநாதனின் வீடோ அல்லது அலுவலகமோ மயிலாப்பூரில் இருக்கலாம்). மயிலாப்பூர்ன்னாலே ஜாலியா இருப்பாங்க. நீங்க எப்படி சீரியஸா படம் எடுக்கிறீங்க?’’. அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஒரு நேயர் ஜனநாதனிடம் பகிர்ந்துகொண்டது, ‘ஜெயம் ரவியை நல்லா கிளாமரா காட்டியிருக்கீங்க சார். இது மாதிரி பார்த்ததே இல்லை’‘. இதையெல்லாம் பார்க்கும்போது கோபப்படாமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. மிக நுட்பமாக ‘பேராண்மை’ படத்தில் உள்ள சாதி எதிர்ப்பு அரசியல் மற்றும் அதிகார வர்க்க எதிர்ப்பு ஆகியவை நீக்கம் செய்யப்பட்டு இதை ஒரு தேசபக்திப்படமாகவே காட்சி ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பதிவுசெய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். பேராண்மை படத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதும், ‘உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான். இந்தியத் தேசியத்தை முன்வைத்தும்கூட, உன்னைப் போல் ஒருவனைக் கொண்டாடிய அளவிற்கு பேராண்மையை நமது தேசபக்த பதிவர்கூட்டம் கொண்டாடாதையும் கவனத்தில் நிறுத்துங்கள்.

Thursday, October 15, 2009

மறந்துபோவது குறித்த சில நினைவுக்குறிப்புகள்














இந்தப் பிரதியைப் படித்து முடிப்பதற்குள் நீ உறங்கிப் போயிருக்கலாம் அல்லது என்னைக் கொலை செய்வதற்கான எரிச்சலோடு உன் கழுத்துச் சங்கிலியைக் கடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது...வழக்கம்போல் நீ போட்ட தேநீர் கருகிவிட்டதா எனப் பார்க்க அடுக்களைக்குச் சென்றிருக்கலாம் அல்லது... எப்படியாயினும் நீ இந்தப் பிரதியைப் படிக்கத் தொடங்கியிருக்கிறாய். நல்லது. - மறந்துபோவது குறித்த சில நினைவுக் குறிப்புகள் - எழுதும்போதே சிரித்துக்கொள்கிறேன் - என்ன ஒரு முரண்நகை? - "வரலாற்றில் எல்லாச் சம்பவங்களும் இருமுறை அரங்கேறுகின்றன, முதல்முறை பரிதாபகரமாகவும், மறுமுறை கேலிக்கூத்தாகவும் " - இது எத்தனையாவதுமுறை என்று எனக்கு நினைவில்லை - தாயின் முலையினின்று பாலோடு சொல்லை உறிஞ்சத்தொடங்குகிறது குழந்தை - பின் எல்லாம் சொல்லாகிறது - காதல் சொல், கலவி சொல், முத்தம் சொல், துரோகம் சொல், திருட்டு சொல், சோரம் சொல், கனவு சொல், தினவு சொல், உறவு சொல் - நீ ஒரு சொல்லிலிருந்து உன் உறவைத் தொடங்கினாய் - நான் சொன்னேன் 'இந்தச் சொல்லிற்குப் பதிலாய் என்னை நீ கொலை செய்திருக்கலாம் என்று - நெடுநாட்களுக்குப் பின் நீ அதையும் செய் - இன்னொரு சொல் மூலம் - கொலையும் சொல்லானது - ஆம் இப்படித்தான் அந்த கொலை நிகழ்ந்தது - கல்வாரியி மலையில் சொல் போல் நீண்டு வளைந்ததொரு சிலுவை சுமந்தபடி மூச்சிரைத்து சிலுவைப்பாடு தொடங்குகுறான் ஜீசஸ் - சொல்லைப் போல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது அவன் தாடி - தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நொந்து சொல்லைப்போல் கனமானதொரு பாறையை சொல்லைப் போல் கடினமான மலையுச்சிக்கு உருட்டிக்கொண்டிருக்கும் சிசிபஸ் புன்னகைக்கிறான் - வாணாள் முழுதும் யாரை விசுவாசிக்கச் சொன்னானோ அவருக்கு எதிரான அந்தச் சொற்களை உச்சரிக்கின்றன ஜீசஸின் உதடுகள் - "ஏலி லாமா சமக்தானி, ஏலி லாமா சமக்தானி" - கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர்? - கைவிடப்பட்ட சொற்களும் சொற்களால் கைவிடப்பட்டவர்களும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள் - அசைகிறது யேசுவின் தாடி - சற்றே ஒரு அரசியல் குறுக்கீடு - சொற்கள் அர்த்தங்களைப் பிரதியிடுவதில்லை மாறாக குறியீடு செய்கின்றன என்கின்றன நவீனச்சிந்தனைகள்- சொற்களின் அதிகாரத்தைப் பண்ணிப் பண்ணி விளக்கின - எல்லா விலங்குகளுக்கும் எதிராய்க் கத்தி வீசின - குறியீடு செய்யும் சொல்லின் பெயர் ஆங்கிலத்தில் signifier என்றால் அதைக் 'குறிப்பான்' என்று மொழிபெயர்த்தன - 'குறிப்பாள்' இல்லை, பால் சாரா சொல்லில்லை - மீண்டுமொரு 'ன்' விகுதி ஆண்மய்யச் சொல்லாடல் - வரலாற்றுச் சம்பவம் அரங்கேறுகிறது பரிதாபமாய் - தமிழ்நதியின் வலைப்பக்கங்களில் வந்துபோனவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் குறியீட்டின் பெயர் 'எண்ணுவான்' - மீண்டும் ஒரு 'ன்' விகுதி ஆண்மய்யச்சொல்லாடல்- இரண்டாவது சம்பவம் அரங்கேறுகிறது கேலிக்கூத்தாய் - கவிதைகள் புரிவதில்லை என்று சமயங்களில் நீயும் அரற்றுவதுண்டு -

இடுக்குகளில் இருந்து...

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"

Monday, October 12, 2009

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்




தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.

நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான ஆனந்தகீர்த்தரின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

மாம்சம்




"வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது அதீதா?"

"மனிதர்கள் யாருமற்ற
வனாந்திரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன கலாபன்"

" வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப்பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய், அதீதா"

"உன் புயங்களிலிருந்து உள்ளங்கைகளுக்குப் பரவும் நடுக்கத்தை உணர்ந்தால் நீ சொல்வது உண்மைபோலத்தான் தோன்றுகிறது கலாபன்"

"பூனைக்குட்டிகளைப் பதுக்கிவைத்திருக்கும் உன் மார்புக்கூட்டுக்குள்ளும் சமயங்களில் மழையின் ஓசையை உணர்கிறேன். நீ பூனை மாமிசம் உண்டிருக்கிறாயா அதீதா?"

"என்ன இது, கனவில் கொலை நிகழ்த்துதல்போல. பூனை என்பது மென்மையின் சதை, பட்டுக்கன்னங்கள், குழந்தைகள்"

"முயல் மாமிசமாவது சாப்பிட்டிருக்கிறாயா?"

"ம். முயல்மாம்சம் மெதுமெதுப்பானது மட்டுமல்ல, வெதுவெதுப்பனதும் கூட. என் அடிவயிற்றுக்குள் கதகதப்பான வெப்பம் பாவுவதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன், இந்த முயல் எத்தனை பச்சைப்புல்லைப் புசித்திருக்குமென்று. முயலை உண்னும்போது நானே பசும்புல்லாகிறேன், சமயங்களில் வனமாகவும்"

"சிரிப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை அதீதா, மேல்தோலை உரித்துவிட்டால் பூனைமாமிசமும் முயல்மாமிசமும் ஒன்றுதான்"

'நீ ஏன் இப்போது மாம்சம் பற்றிப் பேசுகிறாய்?"

"தெரியவில்லை. ஆனால் சமீபமாக என் கனவின் அறைகளில் மாம்சத்தின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மழைநாளின் மறுநாளில் தயாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள், என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் உண்மையாக இருப்பதில்லையென்றும் யார்மீதும் மரியாதை செலுத்துவதில்லையென்றும். கூடுதலாய்ச் சொன்னாள் என்னை நினைக்கும்போதெல்லாம் குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே விரிவதாய். நான் இப்படியாகப் பதில் அனுப்பினேன், 'நான் நரமாமிசம் சாப்பிடுபவனில்லை நம்பு' என்று"

"தயாளுக்கும் மாம்சம் பிரியமோ?"

"இல்லை. அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. மாமிசம் உண்ணாதவர்கள் மீது எனக்கு மரியாதையில்லை அதீதா. மாமிசம் உண்ணப்படாத ஞாயிறு தன் பெயரின் அர்த்தத்தை இழக்கிறது"

"எப்போதிலிருந்து மாமிசம் உனக்குப் பரிச்சயம்?"

"என் பன்னிரண்டாவது வயதில். முதல் பரிச்சயமாமிசம் மாட்டிறைச்சி. ஒரு தலித்தாகவும் முஸ்லீமாகவும் பிறப்பதற்கான பேறுபெற்றிலன் நான். ஆனாலும் வறுமை எனக்கு மாம்சமாய் மாட்டுமாமிசத்தையே அறிமுகப்படுத்தியது. ஒரு முஸ்லீம்குடும்பம்தான் எங்கள் குடும்பத்தைப் பராமரித்துவந்தது. மாட்டுமாமிசத்திலேயே அழகானதும் சுவையானதும் உப்புக்கண்டம். மூன்றுநாட்கள் கொடியில் காயும் உப்புக்கண்டம் நான்காம்நாள் தன் சாற்றில் ருசி ஊற்றியிருக்கும். மாட்டுமாமிசம் உண்ணக்கூடாது என்பவர் யாராயிருந்தாலும் மரியாதையாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதே மானமுள்ள காரியமாகும் என்கிறார் பெரியார். பின்னாளில் ஒரு அரசியல் கூட்டத்துண்டறிக்கையில் 'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ"

" கலாபன், நீ உரையாடலின் சமநிலையைக் குலைக்கிறாய். திடீரென்று எதார்த்தத்திற்குத் தாவுகிறாய், அரசியலும் பேசுகிறாய்"

"மீண்டும் சிரிக்கத் தூண்டுகிறாய். எதார்த்தமே அரசியலாயும் அரசியலே எதார்த்தமாயும் இருக்கிறது போலும். நீ விரும்பிப் புசிக்கும் முயலைப்போலவே வளைக்குள் பதுங்க முனைகிறாய்"

"நீ ஏன் என்னைத் தரையிறக்குகிறாய்? உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது கலாபன். நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?"

"இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட"

"அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்"

"தெரியவில்லை. எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?"

"இல்லை, முடியாது. அதற்கான மனநிலை இல்லை. புத்தன் கடைசியாய்ப் புசித்த பன்றி மாமிசம் இருக்கிறது. பகிர்ந்துகொள்வோம்"