Monday, September 26, 2011

மரணதண்டனை எதிர்ப்பு : ஜெயலலிதாவை வாழ்த்த வேண்டுமா, வலியுறுத்த வேண்டுமா?

இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும், கூடங்குளம் அணு உலைப் பணிகளைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அடுக்கடுக்கான தீர்மானங்களைப் போட்டு அசத்துகிறார் ஜெயலலிதா. உண்மையிலேயே அவர் புரட்சித்தலைவிதானோ என்கிற மயக்கமும் பலருக்கு ஏற்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், நன்றாகக் கவனித்துப்பார்த்தால், ஜெயலலிதாவால் நிறைவேற்றப்படும் அனைத்து தீர்மானங்களும் மத்திய அரசை வலியுறுத்துவதே தவிர, அவரது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துபவையல்ல. பந்தை மத்திய அரசின் கோல்போஸ்ட்க்குத் தள்ளுவதே ஜெயா அரசின் தீர்மானங்கள். ஆனால், சமச்சீர்க்கல்வி குறித்த அணுகுமுறை, பரமக்குடியில் தலித்துகள் மீதான துப்பாக்கிச் சூடு, நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரதிநிதிகளை அனுப்புவது, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோதே வேட்பாளர் பட்டியலை அறிவித்தது ஆகியவை மூலம் பார்ப்பன - இந்துத்துவ - எதேச்சதிகாரப் போக்கிலிருந்து தான் இன்னும் மாறவில்லை என்பதை ஜெயலலிதா நினைவூட்டிக் கொண்டே இருக்கிறார். ஆனால் மேற்கண்ட தீர்மானங்களிலேயே திருப்தி அடைந்து விடுபவர்கள் பரமக்குடி சம்பவம் போன்றவற்றில் அழுத்தமாகத் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தயங்குவதைக் காணமுடிகிறது. இந்நிலையில் முவர் மரணதண்டனையை ரத்துசெய்யக் கோரும் ஜெயலலிதாவின் தீர்மானம் குறித்து இன்னொரு பார்வையை முன்வைக்கிறது எஸ்.வி.ஆரின் நூல்..

எஸ்.வி.ராஜதுரை எழுதி சென்னை அரசியல் பள்ளியின் வெளியீடாக வந்துள்ள ‘மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் : உரத்த சிந்தனைக்காக சில கருத்துகள்’ என்னும் நூல் மரணதண்டனை எதிர்ப்பாளர்களுக்கான இன்னொரு கருவி. எஸ்.வி.ஆர் மரணதண்டனை எதிர்ப்பு உள்ளிட்ட மனித உரிமை செயற்பாடுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொள்பவர் என்பதால் அதுதொடர்பாகச் சட்டரீதியான பல தரவுகளை இந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார். இந்நூலில் பல்வேறு விஷயங்கள் விளக்கப்பட்டாலும் முக்கியமானது மரணதண்டனையை ரத்து செய்வதில் மாநில அரசுக்கு உள்ள அதிகார வரம்பெல்லை குறித்தது. ‘பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும்’ என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய கையோடு ‘குடியரசுத்தலைவரால் ஒருவரின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு மாநில அரசு அதில் தலையிட முடியாது’ என்றும் ஜெயலலிதா கூறினார். ஆனால், இந்த வாதம் தவறானது என்பதற்குப் பல வாதங்களையும் உதாரணங்களையும் அடுக்கடுக்காக முன்வைக்கிறார் எஸ்.வி.ஆர்.

‘மரணதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் கருணைமனு மீது முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத்தலைவருக்கு வழங்குகிறது என்றால் அதே அதிகாரத்தைப் பிரிவு 161 மாநில ஆளுநருக்கு வழங்குகிறது. ஆனால் அதேநேரத்தில் இந்த அதிகாரங்கள் இணையான அதிகாரங்களே (Parellel power) தவிர படிநிலை அதிகாரங்கள்(Hierarchial power) அல்ல. அதாவது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியபிறகு அந்தத் தீர்ப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது மாதிரியான அதிகாரம் அல்ல இது. எனவே குடியரசுத்தலைவர் ஒரு கருணைமனுவை நிராகரித்த பிறகும் கூட மாநில ஆளுநர் அந்தக் கருணைமனு மீது முடிவெடுக்கலாம். மேலும் குடியரசுத்தலைவரோ ஆளுநரோ இதுதொடர்பாக்ச் சுயேச்சையாக முடிவெடிக்க முடியாது, மத்திய, மாநில அமைச்சரவைகளின் வழிகாட்டுதலின்படியே எடுக்க முடியும்’ என்று அந்தப் புத்தகத்தில் வலியுறுத்தும் எஸ்.வி.ராஜதுரை அதற்கு உதாரணமாக இரண்டு உச்சநீதிமன்ற முடிவுகளையும் சுட்டிக் காட்டுகிறார். ((MataRam vs Union of India (1981) 1SCC 107; Kehar Singh vs Union of India (1989) 1 SCC 204)

‘குடியரசுத்தலைவரால் நிராகரிக்கப்பட்ட கருணைமனு மீது மாநில அரசு தலையிட முடியாது’ என்பதற்கான காரணமாக ஜெயலலிதா ஒரு கடிதத்தைச் சுட்டிக்காட்டினார். 1991, மார்ச் 5 அன்று மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அனுப்பிய கடிதமே அது. ஆனால் ‘இந்தக் கடிதம் என்பது நிர்வாகம் தொடர்பான ஆணையே அன்றி அரசியல் சட்டத்தைப் போல இறுதிப்படுத்தப்பட்ட அதிகாரம் அல்ல’ என்று வாதிடுகிறார் எஸ்.வி.ஆர். மேலும் இந்தக் கடிதம் எழுதப்பட்ட பின்னணியை அறிந்துகொண்டாலே மத்திய அரசின் இந்தக் கடிதம் எத்தகைய அதிகார வரம்புகளைக் கொண்டிருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

1965ல் பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப்சிங் கெய்ரோனைக் கொலை செய்ததாகத் தயாசிங் என்பவர் கைது செய்யப்பட்டவர். 1978ல் அவருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. 1980ல் செய்த மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றமும் அந்தத் தீர்ப்பை உறுதி செய்தது. அவரது கருணைமனுக்களும் ஆளுநராலும் குடியரசுத்தலைவராலும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் இதற்கிடையில் பஞ்சாபில் இருந்து பிரிக்கப்பட்டு ஹரியானா மாநிலம் அமைக்கப்பட்டிருந்தது. 1988ல் தயாசிங் ஹரியானா ஆளுநருக்கு அனுப்பிய கருணைமனுவின் அடிப்படையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அலிப்பூர் சிறைக்கைதி ஒருவர் தயாசிங்கை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டி 1990ல் உச்சநீதிமன்றத்துக்குக் கடிதம் எழுதுகிறார். இதையே ரிட் மனுவாகக் கொண்டு உச்சநீதிமன்ற பெஞ்ச் தயாசிங் வழக்கை விசாரிக்கத் தொடங்கியது. அப்போதுதான் ஜெயலலிதா சுட்டிக்காட்டும் கடிதத்தை மத்திய அரசு உச்சநீதிமன்ற பெஞ்சு முன் சமர்ப்பித்தது. ‘குடியரசுத்தலைவரால் கருணைமனு நிராகரிக்கப்பட்ட பிறகு அதில் மாநில ஆளுநர் தலையிட முடியாது’ என்றும் தெரிவித்தது. ஆனால், உச்சநீதிமன்ற பெஞ்ச் அந்தக் கடிதத்தைப் பொருட்படுத்தவேயில்லை. 1991ல் தயாசிங்கின் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஜெயலலிதா ‘மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை’ என்பதற்கான ஆதாரமாகச் சுட்டிக்காட்டும் கடிதத்தின் பின்னணியில் உள்ள வழக்கிலேயே மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 2000ல் கருணாநிதி ஆட்சியின்போது பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்கள் ஆளுநரால் நிராகரிக்கப்பட்டதையே காரணமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜெயலலிதா பல்லவி பாடுவதும் சரியானது அல்ல. ஏனெனில் ‘குடியரசுத்தலைவராலும் ஆளுநராலும் கருணைமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலும் மாறிய சூழ்நிலைமைகள் அடிப்படையில் மீண்டும் குடியரசுத்தலைவருக்கும் மாநில ஆளுநருக்கும் கருணைமனுக்கள் அனுப்பலாம்’ என்பதற்கும் தயாசிங்கின் வழக்கே உதாரணம். ஒருவேளை மூவரும் தங்கள் மரணதண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளாவிட்டாலும் அரசியல் சட்டப்பிரிவு 54ன்படி மாநில அரசு தண்டனையைக் குறைக்க சுயேச்சையாக முடிவெடுக்கலாம். புலவர் கலியபெருமாள் கருணைமனு அனுப்பாதபோதும் தமிழக அரசு முன்வந்து அவரது மரணதண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றியதே இதற்குச் சிறந்த முன்னுதாரணம்.

‘மாநில அரசாங்கமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்பதால் அது மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே மாநில அமைச்சரவை முடிவின்படி மரணதண்டனையை ரத்து செய்ய மாநில ஆளுநருக்கு உள்ள அதிகாரமும் இறையாண்மை அதிகாரம்தான்’ என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு ((2003(7)SCC 121) கூறுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ‘வகுப்புவாதத் தடுப்பு மசோதா’ மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிப்பதாக மற்ற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதும் ஜெயலலிதா, மரணதண்டனையைக் குறைப்பதிலும் மாநில அரசின் உரிமையை வலியுறுத்த வேண்டும். மாறாக, மத்திய அரசு எழுதியுள்ள ஒரு கடிதத்தையே அடிப்படையாக வைத்து தன் பொறுப்பையும் அதிகாரத்தையும் உரிமையையும் தட்டிக்கழிப்பது சரியல்ல என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சுட்டிக்காட்டுகிறார் எஸ்.வி.ஆர்.

எனவே உடனடியாக ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவருக்கும் தானாகவே மரணதண்டனையை ரத்துசெய்யும் தீர்மானத்தை அமைச்சரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் இன்று நாம் வலியுறுத்த வேண்டிய கோரிக்கை.

Friday, September 23, 2011

இவர்கள் இயற்கையின் மக்கள்!

ரீ.சிவக்குமார், படம் : கே.கார்த்திகேயன்

ந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.

''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.

''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.

'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.

''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.

''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.

உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!