Wednesday, December 2, 2009

ஒரு துணிச்சலான வலைப்பதிவு

ஒரு பெண்ணால் எழுதப்படும் இந்த வலைப்பதிவின் ஆக்கங்கள் துணிச்சல்மிக்க பல முன்னெடுப்புகளை முன்வைக்கின்றன.

http://womenrules-menobeys.blogspot.com

Monday, November 30, 2009

சாருநிவேதிதாவின் புன்னகை


''சாலையில் செல்லும் போது அந்தச் சாலையில் நீங்களும் இன்னொருவரும் மட்டுமே இருந்தால் அவரைப் பார்த்து புன்னகை புரிவது மரபு. அல்லது, ஒரு இடத்தில் காத்திருக்கிறீர்கள். அங்கே இன்னொருவர் வந்து உங்கள் அருகில் அமர்கிறார். அவரைப் பார்த்துப் புன்னகைக்கிறீர்கள். அல்லது, ஒரு பஸ்ஸில் ஏறி நடத்துனரிடம் டிக்கட் கேட்கும் போது நட்புடன் புன்னகை செய்கிறீர்கள். அல்லது... வேண்டாம். அடுத்த மனிதரைப் பார்த்து புன்னகை செய்ய இந்த உலகத்தில் ஆயிரக் கணக்கான தருணங்களும் சூழ்நிலைகளும் இருக்கின்றன. சரியா? நான் அப்படிப்பட்ட தருணங்களில் புன்னகை செய்யும் போது மற்றவர்கள் என்னை மிக விரோதத்துடனும், விநோதமாகவும், ஏதோ ஒரு காட்டுமிராண்டியைப் பார்ப்பது போலவும்தான் பார்த்திருக்கிறார்கள். எனக்கு அதன் காரணம் புரியவில்லை. நண்பர்களிடம் கேட்டபோது “பைத்தியங்கள்தான் அப்படிச் சிரிக்கும் ” என்றார்கள். எனக்கு அவர்கள் சொன்னதில் உடன்பாடு இல்லை."



சாருவின் இந்த வரிகளைப் படிக்கும்போது தானாகவே கொசுவர்த்தி பற்றவைத்து புகைந்தது. ஒரு சின்ன பிளாஷ்பேக். இந்த சம்பவம சாருவிற்கு இப்போது நினைவிருக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் அப்போது எனக்கு 21 வயதுதான். சாருநிவேதிதா என்றால் எனக்கு யார் என்றே தெரியாது. சாருவிற்கும் என்னைப் பரிச்சயமில்லை. 1999 - கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாட்டு விளிம்பில் உள்ள களியக்காவிளை என்னும் ஊரில் பறணியறத்தலவிளை என்னும் பகுதியில் இரண்டுநாட்கள் இலக்கியக்கருத்தரங்கு ஏற்பாடாகியிருந்தது. ஏற்பாடு செய்தவர்கள் வானவில் இலக்கிய வட்டத்தினர். அவர்கள் சார்பாக ‘கேப்பியார்’ என்னும் இலக்கிய இதழ் வெளிவந்துகொண்டிருந்தது. இன்று தொழிலதிபர்களையும் சினிமாநட்சத்திரங்களையும் மட்டுமே தெரிந்த புதிய எழுத்தாளர்களுக்கு கேப்பியார் என்ற இதழ் பற்றி தெரியுமா என்று தெரியவில்லை. பெரியாரியம், தலித்தியம், பின்நவீனம் ஆகிய கோட்பாட்டு அடிப்படைகளைக் கொண்டு இயங்கிய இதழ். ஆசிரியர் கே.புஷ்பராஜ். அதுவே கேப்பியார். அந்த குழுவில் முக்கியமானவர் எழுத்தாளர் குமாரசெல்வா.

‘குறுவெட்டி’ போன்ற பல அற்புதமான சிறுகதைகளைத் தமிழுக்குத் தந்த குமாரசெல்வா போதிய அளவு கவனம் பெறாத எழுத்தாளர். அதை விட முக்கியமாய், சிங்கத்தின் குகைக்குள்ளேயே பிடரியைப் பிடித்தாட்டுவதைப் போல, சுந்தரராமசாமி கும்பலின் உள்ளொளி தகிடுதத்தங்களுக்கு எதிராய் நாகர்கோவிலில் தொடர்ச்சியாகப் போராடி வந்த தோழர்கள். கேப்பியாரும் ஜே.ஆர்.வி எட்வர்டும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலத்தின் கோலம், சமீபத்தில் குமாரசெல்வாவின் சிறுகதைகள் காலச்சுவடு தொகுப்பாய் வந்ததைப் பார்க்க மனது வலித்தது. ஆனால் அப்போதைய நாகர்கோவில் கூட்டங்களில் காலச்சுவடு ஆதரவாளர்களாய் வந்து கச்சைகட்டுபவர்கள் லெட்சுமிமணிவண்ணனும் சங்கரராமசுப்பிரமணியனும். அவர்கள் இருவரும் இப்போது காலச்சுவடு எதிரிகள். வரலாறு வினோதமானதுதான்.

சரி விடுவோம். நான் சொல்ல வந்தது அதுவல்ல. எனக்கு அந்த இலக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் முன்புவரை நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது. எனக்குத் தெரிந்த எழுத்தாளர்கள் அண்ணா, கலைஞர், வைரமுத்து, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், எண்டமூரிவீரேந்திரநாத், சு.சமுத்திரம், பிரபஞ்சன். நவீன இலக்கியம் என்ற ‘நிழல் உலகத்தை’ எனக்கு 99வாக்கில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் யவனிகாசிறீராமும் செல்மாபிரியதர்சனும். எந்த வாசிப்பும் பரிச்சயமும் இல்லாமல்தான் அந்த களியக்காவிளைக் கூட்டத்திற்குச் சென்றது.

முதல்நாள் முழுக்க கள்ளும் அயல்நாட்டு மதுவும் மாட்டுக்கறியும் மீனும் இலக்கிய விவாதமும் நடு இரவில் அ.ராமசாமியை வம்பிழுத்து செல்மா போட்ட ஆட்டமுமாகப் பொழுது போனது. எனக்கு அப்போது இரண்டு ‘கெட்ட பழக்கங்கள்’ இல்லை. குடித்தும் பழகியதில்லை, வாசித்தும் நவீன கவிதை எழுதியும் பழக்கமில்லை. வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தேன். அந்த கூட்டத்திற்கு வருவார் என்று பல இளைஞர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட அ.மார்க்ஸ் வரவில்லை. வந்தது பொ.வேல்சாமி மட்டுமே.

இரண்டாம்நாள் அமர்வு. அந்த மதிய அமர்வில்தான் ‘சீரோடிகிரி’ விமர்சனம். என் அருகில் வந்து அமர்ந்த நபர் அழகாய் இருந்தார். பார்த்தவுடனே பழக வேண்டும் என்பதான தோற்றம். சினேகபூர்வமான முகம். அவரை யாரென்றே தெரியாவிட்டாலும் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன். அவரும் புன்னகைத்தார். அவர் சாரு. அவரது ‘சீரோடிகிரி’ புத்தகத்தை மேடையில் விமர்சித்துக்கொண்டிருந்தார் ஒரு எழுத்தாளர். பூக்கோ தொடங்கி பல்வேறு கோட்பாடுகள் அடிப்படையில் சீரோடிகிரியை எப்படி வாசிக்கலாம், அணுகலாம் என்பதாய் இருந்தது அவரது உரை. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

திடீரென்று கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து ‘‘அதெல்லாம் இருக்கட்டும், அந்த நாவலோட கதைச்சுருக்கத்தைச் சொல்லுங்க’’ என்றார். சீரோடிகிரியைப் படித்தவர்களுக்குத் தெரியும், அது எவ்வளவு காமெடியான கேள்வி என்று. ஏனெனில் சீரோடிகிரி ஒரு நான்லீனியர் நாவல். நாவலின் கட்டமைப்பை உடைக்கும் கதையற்ற கதை. அதை மெகாசீரியலில் முன்கதைச்சுருக்கம் சொல்வதைப் போல சொல்ல முடியாது. மேடையில் பேசிக்கொண்டிருந்த விமர்சகருக்கு வந்ததே கோபம். கூட்டத்தில் ஆங்காங்கு குழப்பம். அப்போது கடுமையான விவாதத்தில் ஈடுபட்டிருந்த நபர்களில் கவர்ந்தவர் ராஜன்குறை.

பங்க் முடியும், பெர்முடாஸ§மாக வினோதமான தோற்றத்தில் ஆக்ரோஷமாக விவாதித்துக்கொண்டிருந்தார் ராஜன்குறை. அப்போதைய இலக்கியச்சூழலில் சாருவின் பெயர் ‘பெர்முடாஸ் கலகக்காரர்’ என்று பின்னாளில் தெரிந்துகொண்டேன். ஆனால் அன்றையக் கூட்டத்தில் பெர்முடாஸ் கலகக்காரர் ராஜன்குறைதான். சாரு ஜீன்ஸ் அணிந்திருந்ததாக ஞாபகம். பிறகு, ராஜன்குறை தனது உரையைத் தொடங்கும்போது கே.ஏ.குணசேகரனின் இந்த பாடலைப் பாடினார்,

‘‘ஒரு காலத்திலே
பகல் வேளையிலே
பொதுவீதியிலே - நாங்க
நடக்கவே முடியவில்லே!
எங்க பாதம் பட்டா
பொதுவீதியெல்லாம் - தீட்டு
பட்டுவிடும் என்பதாலே! - இடுப்பிலே
துடைப்பம் கட்டிக்கொண்டால்- நாங்க
நடக்கலாம் என்கிறநிலை!

இந்த கொடுமையைச் செஞ்சது இந்துமதம் -அதைக்
குழிதோண்டிப் புதைக்கணும் அவசியம்!’’.

சமீபத்தில் இரண்டு மூன்று விழாக்களில் ராஜன்குறையைப் பார்த்தபோது அவரது பங்க் முடி, பழைய தோற்றம், இளமைத்துடிப்பு எல்லாம் காணாமல் போயிருந்தன. அந்த கூட்டத்தில் அறிமுகமான இன்னொரு நபர் மதுரை மோகன். ஒரு மார்க்சிய-லெனினிய இயக்கத்தில் பணிபுரிந்து பின்பு அதிலிருந்து விலகிய மோகன் மனச்சிதைவுக்கு உள்ளாகியிருந்தார்.

மதுரையில் புத்தகக்கடை நடத்திவந்த மோகன், கஞ்சாவிற்கு அடிமையாகியிருந்தார். கஞ்சாவும் மதுவும் இலக்கியமும்தான் மோகனுக்குப் போதை. பழகியபிறகு மோகனைச் சந்திக்கும்போதெல்லாம் கைகளைப் பற்றி, ‘‘சிவா, நல்லாயிருக்கீங்களா?’’ என்பார். அது சாதாரணமான நலம் விசாரிப்பாக இருக்காது. முதல்முதல் பார்க்கிற பரவசமும் அளவுக்கு அதிகமான கரிசனமும் பதட்டமும் கொண்டதாக இருக்கும் அந்த கைகுலுக்கலும் விசாரிப்பும். அய்ந்து வருடங்களுக்குப் பிறகு தற்கொலை செய்துகொண்டார் மோகன். அந்த மோகன்தான் அன்று களியக்காவிளையில் குடி மற்றும் கஞ்சா போதையில் அரற்றிக்கொண்டிருந்தார்.

நாங்கள் நிகழ்ச்சி முடித்து ஊருக்குக் கிளம்பிய நேரத்தில் மோகனின் அரற்றல் இன்னும் அதிகமானது. ஒரு குழந்தையைப் போல அரற்றிக்கொண்டிருந்த மோகனை ஒரு தாயைப் போல தேற்றிக்கொண்டிருந்தவர் சாருநிவேதிதா. எல்லாம் முடிந்து எங்களை வழியனுப்பும்போது, சாருநிவேதிதா என்னைப் பார்த்துக் கேட்டார், ‘‘என்னைப் பார்த்து சிரிச்சீங்களே, என்னைத் தெரியுமா? எப்படி புன்னகைத்தீங்க?’’. ‘‘தெரியவில்லை’’ என்றேன்.

Saturday, November 14, 2009

திருக்குறள் ஒரு சைவநூலா?

சிவத்தமிழோன் என்பவர் 'திருக்குறள் ஒரு சைவசமய நூலே' என்பதாக எழுதிய பதிவிற்கான எதிர்வினை. எனவே இந்த பதிவைப் படித்துவிட்டு இங்கே வரவும்.


திருக்குறள் சமணநூல் என்பதாக மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் தொ.பரமசிவன் வரை பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கான தரவுகளாக அவர்கள் முன்வைக்கும் தரவுகளோடு நீங்கள் குறிப்பிடும் தரவுகளை ஒப்பிடும்போது உங்கள் தரப்பு மிகவும் பலவீனமாக உள்ளது. பொதுத் தன்மையில் எழுத நேர்ந்ததால் வள்ளுவர் சிவன் பற்றிக் குறிப்பிடவில்லை என்று யூகிக்கிறீர்கள். இத்தகைய யூகங்கள் மட்டுமே ஆராய்ச்சியாகாது. மேலும் அவர் அப்படி கருதியது உங்களுக்குத் தெரிந்த அளவுக்குத் திருவள்ளுவர் உங்களுக்கு நெருக்கமானவரா என்பதையும் நான் அறியேன். சைவநெறிகள் என்று அறியப்பட்டவற்றுள் எவற்றைக் குறள் மொழிகிறது என்பதை விளக்கினால்தான் மேலும் உரையாட ஏதுவாயிருக்கும்.

/பெரியார் "திருக்குறளின் முதலாவது அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து என்பதை மாற்றி மனித இனத்தின் குறிக்கோள் என்று அதற்குத் தலைப்புத் தரவேண்டும்" என்று வேண்டியதாக க.அப்பாத்துரையார் குறிப்பிட்டுள்ளமை கடவுள் வாழ்த்தை ஏற்றுக் கொள்ளமுடியாத மனநிலையில் பெரியார் இருந்துள்ளார் என்பதைப் புலனாகின்றது. ஆரியர் இடையில் கலப்படம் செய்துவிட்டனர் என்று கதறுகின்ற பெரியார்வாதிகள் பெரியார் செய்யமுயன்ற கலப்படத்தை என்னவென்று சொல்வார்கள்? /

முதலில் க.அப்பாதுரையார் எங்கு இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார் என்றே தெரியவில்லை. நீங்கள் இத்தகைய கட்டுரைகள் எழுதும்போது பயன்பட்ட நூல்கள் குறித்த விவரங்களைத் தந்திருக்க வேண்டும். அல்லது தொடர்புடைய இடத்திலாவது கா.அப்பாத்துரை, இந்த நூலில் இப்படி கூறுகின்றார் என்றாவது குறிப்பிட வேண்டும். நான் கா.அப்பாத்துரையாரை அதிகம் படித்ததில்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் சொன்னது போல்தான் கா.அ கூறியிருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியாயின் அது அப்பாத்துரையின் புரிதலில் இருக்கும் குறைபாடு. பெரியார் 'கடவுள் வாழ்த்து' குறித்த விமர்சனத்தில், 'கடவுள்' என்கிற வார்த்தை திருக்குறளின் எந்தவொரு அத்தியாயத்திலும் எந்தவொரு குறளிலும் பயன்படுத்தப் படாமையைச் சுட்டிக் காட்டுகிறார். பொதுவாக வள்ளுவர் 'அடக்கம்' என்று ஒரு அத்தியாயத்திற்குத் தலைப்பிட்டால் அது அந்த அத்தியாயத்தில் உள்ள ஏதேனுமொரு குறளிலாவது 'அடக்கம்' என்னும் சொல் பயன்படுத்தப்படும். ஆனால் 'கடவுள் வாழ்த்து' என்னும் அத்தியாயத்தில் ஒரு குறளில் கூட 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப் படாததையும் அதுமட்டுமின்றி 1330 குறள்களில் எந்தவொரு இடத்திலும் 'கடவுள்' என்னும் வார்த்தை பயன்படுத்தப்படாதையும் பெரியார் தெளிவாகவே சுட்டிக்காட்டுகிறார். எனவே 'கடவுள்' என்பதே திருவள்ளுவர் காலத்து வார்த்தை இல்லை என்று தர்க்கபூர்வமாக வாதிடும் பெரியார் அந்த பத்துக் குறள்களுக்கும் வைக்கப்பட்ட 'கடவுள் வாழ்த்து' என்னும் தலைப்பு பிற்கால இடைச்செருகல் என்கிறார். தர்க்கரீதியாக பெரியாரின் வாதம் சரிதான். ஆனால் நீங்களோ பெரியாரே ஏதோ இடைச்செருகல் செய்ததைப் போல் திரிக்கிறீர்கள். பெரியாரைப் பற்றிய ஆய்வே இந்த லட்சணத்தில் இருக்கும்போது

/பாரதிதாசன், சைவ சித்தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு படித்தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம் "என்று குறிப்பிட்டார் என க.அப்பாத்துரையார் குறிப்பிடுகின்றார். /

என்னும் உங்கள் வார்த்தைகள் குறித்து எனக்கு நல்லவிதமான அபிமானம் தோன்றவில்லை.

/நக்கீரர்,ஔவையார்,இடைக்காடர் எனப் பல சைவப் புலவர்களால் போற்றி புகழப்பட்ட நூலே திருக்குறள்./

என்று போகிற போக்கில் வேறு வெடிகுண்டுகளை வீசி விட்டுப் போகிறீர்கள். நக்கீரர், அவ்வையார் என்ற பெயர்களில் வழங்கப்பட்டவர்கள் எல்லாம் ஒரே நபர்கள் இல்லை என்பதும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல நபர்கள் என்பதும் தமிழ் இலக்கியம் குறித்த சிற்றறிவு அனுபவம் உள்ளவர்களுக்கே தெரிந்த விடயம். அவ்வையாரையே 'துணிந்து' சைவர் ஆக்கிவிட்டபிறகு

/சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் கூட சைவநெறியைச் சார்ந்தவரே என்ற கருத்து வலிமைபெற்றுள்ளது./

என்று நீங்கள் சொல்வதிலே என்ன தடை இருக்கப் போகிறது? சரி, உங்கள் கட்டுரைக்குத் துணை சேர்க்கும் 'ஆய்வுகள்' என்ன என்று பார்த்தால் ஒருபக்கம் பெரியாரும் பாரதிதாசனும் 'சொன்னதாக' கா.அப்பாத்துரை 'சொன்னதாக' நீங்கள் சொல்வது, இன்னொருபுறம் திருவாவடுதுறை ஆதினத்தின் 'ஆய்வு'. நடத்துங்கள் உங்கள் நகைச்சுவைநாடகத்தை.

Monday, October 26, 2009

பேராண்மை - மங்கிய புகை மூட்டமாய் மார்க்சியம்....















சி
றுபத்திரிகைகள் மற்றும் வெகுஜனப்பத்திரிகைகளால் ‘மாற்றுசினிமாக்காரர்கள்’ என்று கொண்டாடப்படுபவர்கள் பட்டியலில் பாலா, அமீர், சேரன், சசிகுமார், தங்கர்பச்சான் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறும் அளவிற்கு ஏனோ ஜனநாதனின் பெயர் இடம்பெறுவதில்லை. ஒருவேளை அவர் இவர்கள் அளவிற்கு தமிழ்த்தேசிய அரசியல் பேசாததாலா என்னவோ. ஆனால் தமிழின் புதிய பரிசோதனை முயற்சிகளை முன்வைப்பதிலும் அரசியல் சினிமாக்களை இயக்குவதிலும் ஜனநாதன் தனித்துவமான முன்மாதிரி என்பதே என் கருத்து.

அவரது ‘இயற்கை’ வெண்ணிற இரவுகளைத் தழுவிய காதல்சினிமாதான் என்றபோதும் ஒரு அசாதாரண அழகியல் படம் முழுவதும் கவிந்திருக்கும். கடலோர மனிதர்களின் கொண்டாட்டமும் எளியவாழ்க்கையும் இயல்பாய்ப் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவரது இரண்டாவது படமான ‘ஈ’ மிக முக்கியமான அரசியல் சினிமா. மேற்கத்திய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களை மருந்துகளுக்கான பரிசோதனைக் களனாகப் பயன்படுத்துவது குறித்து வெளிப்படையாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்த படம். மேலும் ஒரு சேரி இளைஞனின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்கு முன் இவ்வளவு எதார்த்தமாக தமிழ்ச்சினிமாவில் பதிவு செய்யப்பட்டதில்லை. பார் டான்சராக வரும் முஸ்லீம் பெண், காதல் புனிதமானது என்றே சொல்லப்பட்ட தமிழ்கூறு நல்லுலக சினிமா வரலாற்றில் பணம் வாங்கி தன் காதலியை விற்க முனையும் இளைஞன், வெளிப்படையான நக்சல்பாரி போராட்ட அரசியல் என்று பல்வேறு கூறுகளை இணைத்த ஒரு அற்புதமான சினிமா. அதை விடவும் முக்கியமானது வேலுபிரபாகரன் மாதிரியான பிரச்சாரகர்கள் சினிமா என்னும் காட்சி ஊடகத்தை தெருமுனைக் கூட்டமாக மாற்றியபோது, பிரச்சாரத்தின் நெடியைக் குறைத்து அரசியலைக் கலைப்படைப்பாக மாற்றியவர் ஜனநாதன்.

ஆனால் பேராண்மை படத்தின் தோல்வியே ஜனநாதன் மேற்கண்ட அம்சத்திலிருந்து சறுக்கியது என்றுதான் நான் கருதுகிறேன். பல இடங்களில் வெளிப்படையான பிரச்சார நெடி. என்.சி.சி மாணவிகளுக்கு சரக்கு & பரிமாற்றம் & உற்பத்தி & உபரி & மூலதனம் என்றெல்லாம் கிளாஸ் எடுப்பது கொஞ்சம் ஓவர்தான். அதேபோல் போலீசு விலங்குகளால் பழங்குடி மக்களின் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்படும்போது, அந்த பழங்குடி பேசும், ‘‘உழைக்கும் மக்களோட சர்வதிகாரம் வந்துதான் தீரும்’’ என்கிற வசனமும் காட்சிக்கு வெளியே துருத்தி நிற்கிறது. ஆனால் அதே நேரத்தில், ஒரு உயர்சாதிப் பெண் மலையின இளைஞன் துருவன் மீது பொய்ப்புகார் எழுதும்போது சக தோழியிடம் சொல்கிறாள், ‘‘அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி, இந்தியாவுக்கு ஒரு பாரம்பரியம் இருக்குடி’’. ஏனோ இந்த வசனம் அவ்வளவு உறுத்தலாக இல்லை. ஒரு பழங்குடி இளைஞனை ஆதிக்க சாதிக்காரர்கள், அவர்கள் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், தீண்டத்தகாதவனாக நடத்துகிற சாதிய மனோபாவம் குறித்த காட்சிகள் பிரச்சார வசனங்கள் இன்றி இயல்பாகவே பதிவுசெய்யப்படுகின்றன. ஆனால் அவர்கள் பேசுகிற சாதிய மனோபாவத்துடன் கூடிய வசனங்களை சென்சார் கத்தரித்து, ஆதிக்கசாதி மனோபாவத்தை அழகாகக் காப்பாற்றியிருக்கிறது. (இதற்காகவெல்லாம் நமது இனமான சினிமாக்காரர்கள் போராட மாட்டார்கள்)

ஆனால் படத்தின் பிரச்சினையே தோழர் மதிமாறன் சுட்டிக்காட்டுவதைப் போல ‘இந்தியத் தேசிய அரசியல்’தான். ஒரு பழங்குடி இளைஞனைக் கக்கூஸ் கழுவ வைக்க ஆசைப்பட்டு ரசிக்கும் உயர்சாதிப் பெண்ணின் ‘இந்தியப் பாரம்பரியம்’ நிறைந்த இந்தியத் தேசியம் எப்படி ஒரு பழங்குடி இளைஞனின் இந்தியத் தேசியமாகவும் இருக்க முடியும்? பழங்குடிகள் அதிகம் நிறைந்த வடகிழக்கு மாகாணங்களில் இந்திய தேசிய வெறியாட்டத்தைப் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்?

ஆனால் நான் இங்கு பேச வருவது தேசிய இனப்பிரச்சினைகளையோ மொழிவாரி தேசியத்தையோ கூட அல்ல. அம்பேத்கர் மொழிவாரித் தேசியங்களை ஆதரித்தவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் ‘மய்யப்படுத்தப்பட்ட மத்திய அரசு’ என்னும் கருத்தாக்கத்தை ஆதரித்தவரும்கூட. ‘மொழிவாரித் தேசியம் அல்லது அதிக அதிகாரம் வாய்ந்த மாநில அரசு என்னும்போது அங்கு இயல்பாகவே சிறுபான்மையினராகிப் போகும் தலித்துகளை இவ்விரண்டும் கீழாகவே நடத்தும்’ என்னும் அம்பேத்கரின் அச்ச உளவியலிலிருந்தே நாம் இதனைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் அம்பேத்கர் ஒரு இந்திய அளவிலான ஒன்றிணைப்பை வலியுறுத்தியபோதும் அது காங்கிரசு மற்றும் இந்துத்துவவாதிகள் முன்வைத்த பார்ப்பன இந்து தேசியத்திற்கு முற்றிலும் மாறாகவும் எதிராகவும் இருந்தது. ராமன், வினாயகன் தொடங்கி பாரதமாதா வரையிலான இந்திய தேசிய இந்துத்துவக் குறியீடுகளை அம்பேத்கர் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே துருவன் தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவாக இந்தியத் தேசியத்தை நிராகரிக்க வேண்டும் என்பது எனது விருப்பமில்லை. ஏனெனில் தமிழ்த்தேசியம் என்பதும் இதுவரை மலைவாழ் மக்களை விலக்கி வைக்கிற மய்யப்படுத்தப்பட்ட அரசியலே. குணா என்னும் தமிழ்த்தேசிய ‘அறிஞர்’ படுகரை அன்னியர் என்று சொல்லி, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீக்கச் சொல்லி எழுதியவர். ஆனால் இங்கு கேள்வியே துருவனின் இந்தியத் தேசியம், ‘தேசப் பாதுகாப்பு, அன்னியச் சதி’ என்கிற வழக்கமான ஆளும் வர்க்கப் பல்லவியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறதே என்பதுதான். பாகிஸ்தானுக்குப் பதிலாக அமெரிக்கா என்று மாற்றி விட்டால் அது மார்க்சியம் ஆகி விடுமா என்ன?

எந்த காலத்தில் இந்திய அரசு விவசாயத்தை வளர்க்க, அதுவும் இயற்கை விவசாயத்தை வளர்க்க ஏவுகணை விடப்போகிறது?. அது மான்சோன்டாவின் துணையுடன் மரபணுக் கத்திரிக்காயைக் கொண்டு வர தீவிர முயற்சியில் இருக்கும்போது, ஜனநாதனின் இந்த கரு அபத்தமானதாகத் தோன்றவில்லையா? மேலும் செயற்கைக் கோள், அணு ஆயுதச் சோதனை, ராணுவத்திற்கு ஆயுதங்களை வாங்கிக் குவித்தல் ஆகியவற்றிற்கு தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை எடுத்துத்தானே அரசு செலவு செய்கிறது? தமிழக அரசால் தலித்துகளுக்காக ஒதுக்கப்பட்ட 12,000 கோடி ரூபாயைச் செலவழிக்காமலே பல துறைகள் திருப்பி அனுப்பி விட்டதாக கூறுகிறது சமீபத்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அறிக்கை. இப்படிப்பட்ட பின்னணியிலிருந்து அணுகும்போதுதான் பேராண்மை முன்வைக்க விரும்பும் மார்க்சிய அரசியலும் இந்திய தேசபக்தியும் ஒன்றுடன் ஒன்று இணையாமல் விலகி மிதக்கின்றன.

மேலும் தேசபக்தி என்பதை ஒத்துக்கொண்ட இந்திய மார்க்சிய லெனினியக்குழுக்களும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரத் தலையீட்டை மறுப்பதாகவும் இந்தியாவில் உள்ள அடித்தட்டு மற்றும் உழைக்கும் மக்களின் கலாச்சாரத்தை முன்னிறுத்துவதாகவுமே தேசபக்தியை விளக்குகின்றனர். கருவேல மரத்தை இந்தியாவிற்குள் பரப்பி செயற்கை விதைகள் இந்திய விவசாய நிலங்களை மலடாக்குவது குறித்த ஆதங்கத்தில் இத்தகைய பார்வைகள் தெரிகின்றன. ஆனால் பின் அது பாதுகாப்பை முன்னிட்ட தேசபக்தி, வல்லரசு என்றெல்லாம் பெருங்கதையாடல்களை முன்வைக்கும்போது மார்க்சியத்திலிருந்து விலகி நிற்கிறது.

என்றபோதும் ஜனநாதனின் பேராண்மையை முற்றிலுமாக எதிர்மறையில் நிறுத்தி நாம் நிராகரிக்க வேண்டியதில்லை. பழங்குடி என்றாலே மொழி தெரியாத இளைஞன், அவனுக்கு ‘அ - அம்மா, ஆ - ஆத்தா’ என்று ஆனா ஊனா கற்றுத்தரும் கதாநாயகி என்றே பழங்குடியினர் குறித்த சித்திரங்களை உருவாக்கியுள்ள தமிழ்ச்சினிமாவில் அவர்களின் இயற்கையோடு இணைந்த இயல்பையும், ‘சுள்ளி பொறுக்கிறவனைக் கூட விடமாட்டோம்’ என்று திட்டமிட்டு அவர்களையும் காட்டையும் அழிக்கும் அதிகார எந்திரங்களையும் பதிவு செய்ததற்காக, ஆண்களிடத்தில் உறைந்திருக்கும் சாதியுணர்வு குறித்தே அதிகம் பேசப்படாத தமிழ்ச்சினிமாவில் பெண்களுக்குள்ளும் படிந்து போயிருக்கும் சாதியுணர்வை நுட்பமாகப் பதிவு செய்ததற்காக, பேராண்மை என்று பெயர் வைத்து பெண்களைக் கதைநாயகிகளாய் சாகசக்காரர்களாய் முன்வைத்ததற்காக, இறுதியில் பொன்வண்ணன் குடியரசுத்தலைவர் விருது பெறுவதுபோல் காட்சி வைத்து அதிகாரவர்க்கத்தின் முகத்தில் காறி உமிழ்ந்ததற்காக ஜனநாதனுக்கு ரெட்சல்யூட்ஸ்!

சில குறிப்புகள்...

1. படத்தின் வடிவத்தில் உள்ள பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இந்த விமர்சனம் எதுவும் பேசவில்லை. உள்ளடக்கம் குறித்தானதே. திரைக்கதை, இசை, ஜெயம் ரவியின் உழைப்பு, பின்னணி இசை, ஒளிப்பதிவு என பல விஷயங்கள் குறித்து பலரும் எழுதியிருக்கின்றனர். குறிப்பாக இதுகுறித்து கேபிள்சங்கர் எழுதியதுதான் என்னுடைய கருத்தும்.

2. தோழர் மதிமாறன் குறிப்பிட்டுள்ளதைப் போல் ஆதிக்கசாதிப் பெண் இறந்தபோது ஒலிக்கும் கந்தஷடிக்கவசத்தை அப்படி புரிந்துகொள்ள வேண்டியதில்லை என்பது என் கருத்து. உயர்சாதிக் கடவுளால் காப்பாற்றப்படாமல் ஒரு பெண் இறந்து கிடக்கும்போது ‘காக்க காக்க’ கந்தசஷ்டிக்கவசம் ஒலிப்பது எவ்வளவு அழகான பகடி!

3. பாலிமர் தொலைக்காட்சியில் பாஸ்கி ஜனநாதனைப் ‘பேராண்மை’ தொடர்பாக நேர்காணல் செய்தார். அவரது முதல்கேள்வி, ‘‘நீங்க மயிலாப்பூரிலிருந்து வந்ததாச் சொன்னீங்க. (ஜனநாதனின் வீடோ அல்லது அலுவலகமோ மயிலாப்பூரில் இருக்கலாம்). மயிலாப்பூர்ன்னாலே ஜாலியா இருப்பாங்க. நீங்க எப்படி சீரியஸா படம் எடுக்கிறீங்க?’’. அந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட ஒரு நேயர் ஜனநாதனிடம் பகிர்ந்துகொண்டது, ‘ஜெயம் ரவியை நல்லா கிளாமரா காட்டியிருக்கீங்க சார். இது மாதிரி பார்த்ததே இல்லை’‘. இதையெல்லாம் பார்க்கும்போது கோபப்படாமல் இருப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

3. மிக நுட்பமாக ‘பேராண்மை’ படத்தில் உள்ள சாதி எதிர்ப்பு அரசியல் மற்றும் அதிகார வர்க்க எதிர்ப்பு ஆகியவை நீக்கம் செய்யப்பட்டு இதை ஒரு தேசபக்திப்படமாகவே காட்சி ஊடகங்கள் மீண்டும் மீண்டும் பதிவுசெய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். பேராண்மை படத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதும், ‘உன்னைப் போல் ஒருவன்’ மாதிரியான படங்களின் கறையைக் கழுவுவதற்கு அவசியமானதுதான். இந்தியத் தேசியத்தை முன்வைத்தும்கூட, உன்னைப் போல் ஒருவனைக் கொண்டாடிய அளவிற்கு பேராண்மையை நமது தேசபக்த பதிவர்கூட்டம் கொண்டாடாதையும் கவனத்தில் நிறுத்துங்கள்.

Thursday, October 15, 2009

மறந்துபோவது குறித்த சில நினைவுக்குறிப்புகள்














இந்தப் பிரதியைப் படித்து முடிப்பதற்குள் நீ உறங்கிப் போயிருக்கலாம் அல்லது என்னைக் கொலை செய்வதற்கான எரிச்சலோடு உன் கழுத்துச் சங்கிலியைக் கடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது...வழக்கம்போல் நீ போட்ட தேநீர் கருகிவிட்டதா எனப் பார்க்க அடுக்களைக்குச் சென்றிருக்கலாம் அல்லது... எப்படியாயினும் நீ இந்தப் பிரதியைப் படிக்கத் தொடங்கியிருக்கிறாய். நல்லது. - மறந்துபோவது குறித்த சில நினைவுக் குறிப்புகள் - எழுதும்போதே சிரித்துக்கொள்கிறேன் - என்ன ஒரு முரண்நகை? - "வரலாற்றில் எல்லாச் சம்பவங்களும் இருமுறை அரங்கேறுகின்றன, முதல்முறை பரிதாபகரமாகவும், மறுமுறை கேலிக்கூத்தாகவும் " - இது எத்தனையாவதுமுறை என்று எனக்கு நினைவில்லை - தாயின் முலையினின்று பாலோடு சொல்லை உறிஞ்சத்தொடங்குகிறது குழந்தை - பின் எல்லாம் சொல்லாகிறது - காதல் சொல், கலவி சொல், முத்தம் சொல், துரோகம் சொல், திருட்டு சொல், சோரம் சொல், கனவு சொல், தினவு சொல், உறவு சொல் - நீ ஒரு சொல்லிலிருந்து உன் உறவைத் தொடங்கினாய் - நான் சொன்னேன் 'இந்தச் சொல்லிற்குப் பதிலாய் என்னை நீ கொலை செய்திருக்கலாம் என்று - நெடுநாட்களுக்குப் பின் நீ அதையும் செய் - இன்னொரு சொல் மூலம் - கொலையும் சொல்லானது - ஆம் இப்படித்தான் அந்த கொலை நிகழ்ந்தது - கல்வாரியி மலையில் சொல் போல் நீண்டு வளைந்ததொரு சிலுவை சுமந்தபடி மூச்சிரைத்து சிலுவைப்பாடு தொடங்குகுறான் ஜீசஸ் - சொல்லைப் போல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது அவன் தாடி - தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நொந்து சொல்லைப்போல் கனமானதொரு பாறையை சொல்லைப் போல் கடினமான மலையுச்சிக்கு உருட்டிக்கொண்டிருக்கும் சிசிபஸ் புன்னகைக்கிறான் - வாணாள் முழுதும் யாரை விசுவாசிக்கச் சொன்னானோ அவருக்கு எதிரான அந்தச் சொற்களை உச்சரிக்கின்றன ஜீசஸின் உதடுகள் - "ஏலி லாமா சமக்தானி, ஏலி லாமா சமக்தானி" - கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர்? - கைவிடப்பட்ட சொற்களும் சொற்களால் கைவிடப்பட்டவர்களும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள் - அசைகிறது யேசுவின் தாடி - சற்றே ஒரு அரசியல் குறுக்கீடு - சொற்கள் அர்த்தங்களைப் பிரதியிடுவதில்லை மாறாக குறியீடு செய்கின்றன என்கின்றன நவீனச்சிந்தனைகள்- சொற்களின் அதிகாரத்தைப் பண்ணிப் பண்ணி விளக்கின - எல்லா விலங்குகளுக்கும் எதிராய்க் கத்தி வீசின - குறியீடு செய்யும் சொல்லின் பெயர் ஆங்கிலத்தில் signifier என்றால் அதைக் 'குறிப்பான்' என்று மொழிபெயர்த்தன - 'குறிப்பாள்' இல்லை, பால் சாரா சொல்லில்லை - மீண்டுமொரு 'ன்' விகுதி ஆண்மய்யச் சொல்லாடல் - வரலாற்றுச் சம்பவம் அரங்கேறுகிறது பரிதாபமாய் - தமிழ்நதியின் வலைப்பக்கங்களில் வந்துபோனவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் குறியீட்டின் பெயர் 'எண்ணுவான்' - மீண்டும் ஒரு 'ன்' விகுதி ஆண்மய்யச்சொல்லாடல்- இரண்டாவது சம்பவம் அரங்கேறுகிறது கேலிக்கூத்தாய் - கவிதைகள் புரிவதில்லை என்று சமயங்களில் நீயும் அரற்றுவதுண்டு -

இடுக்குகளில் இருந்து...

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"

Monday, October 12, 2009

வரவணையானும் புத்தரின் மதுக்கோப்பையும்




தீபாவளி இரவு. நானும் வரவணையானும் ஒரு பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தோம். எங்களோடு மது அருந்திக்கொண்டிருந்த இன்னொரு நபர், தமிழ்மணத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் எண்ணற்ற இயக்கங்கள், ரசிகர்மன்றங்கள், தற்கொலைப்படைகள், முன்னணிகள், பின்னணிகள், சங்கங்கள் ஆகியவற்றில் ஒரு குழுவின் தலைவர். இப்போதைக்கு நாட்டாமை என்று வைத்துக்கொள்வோம்.

நாட்டாமை 'தமிழ்மணத்தில் பேசப்படும் விசயங்களின் அடிப்படையில் 'பிளாக்கியம்' என்னும் ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கமுடியுமா' என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்தார். வரவணையானோ " பிளாக்கியம் உருவானால் அடுத்த நாளே 'போலி பிளாக்கியம்' என்று ஒன்று உருவாகிவிடுமே" என்று பதட்டமடைந்தார். ஆனால் நான் பதட்டமடைந்ததோ வரவணையானைப் பார்த்துத்தான். அவர் எதிரில் இருப்பவர் மட்டையாகாமல் விடமாட்டார். அவர் வீட்டில் குடித்துவிட்டுப்போனால் பிரச்சினை இல்லை.

அதுபோல எந்த வீட்டிலும் பிரச்சினை இருக்காது என்று நினைக்கும் அளவிற்கு அவர் ஒரு 'ஜனநாயகவாதி'. நானோ கட்டிங் மட்டுமே அடிப்பவன். 'நைன்டி'தான் என்னுடைய அளவு. அந்த விசயத்தில் நான் ஒரு தீவிர மார்க்சியவாதி. 'அளவு மாற்றம் பண்புமாற்றத்தை உருவாக்கும்'.
இப்படியாக எங்கள் உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த பாரில் புதிதாக குடிக்க வந்த ஒரு நபர் நாட்டாமையைப் பார்த்து "நீங்கள் கேரளாக்காரரா?" என்று வினவினார். நாட்டாமைக்கோ ஒரே ஆச்சரியம். "என்னைவிட நீங்கள் சிவப்பாக இருக்கிறீர்கள். ஆனால் என்னைக் கேரளாக்காரர் என்கிறாரே" என்று என்னைப்பார்த்துக் கேட்டார்.

அப்போது அந்த புதிய நபர் 'தன்னுடைய பெயர் பழனிச்சாமி' என்றும் 'தான் தமிழ்நாடு செக்போஸ்டிற்கும் கேரளா செக்போஸ்டிற்கும் இடையில் உள்ள கோவிந்தாபுரத்தில்' பிறந்ததாக குறிப்பிட்டார். கோவிந்தாபுரம் என்பது நாங்கள் குடித்துக்கொண்டிருந்த பாரிலிருந்து மூன்றாவது தெரு. நான் நாட்டாமையிடம் சொன்னேன் " காரல்மார்க்ஸிற்கு அடுத்து இவர் ஒரு சர்வதேசியவாதி. கோவிந்தாபுரம் கேரளாவிலிருந்தால் நீங்கள் கேரளாக்காரராக இருப்பதில் தவறே இல்லை'' என்று.

அப்போது பழனிச்சாமி, தான் புத்தமதத்தைச் சேர்ந்தவன் என்றும் சொன்னார். எனக்கு இரண்டு சந்தேகங்கள் எழுந்தன.

1. 'பழனிச்சாமி' எப்படி பவுத்தராக இருக்கமுடியும்? 'புத்தம் சரணம் கச்சாமி'தானே, 'புத்தம் சரணம் பழனிச்சாமி' இல்லையே?

2. பவுத்தர்கள் குடிக்கலாமா? (இந்த கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதில் என்னைவிட வரவணையானுக்கு ஆர்வம் அதிகம். அவருக்கு புத்தமதத்திற்கு மாறவேண்டும் என்ற ஆர்வம் அதிகம். ஆனால் அங்கே போனால் குடிக்கமுடியாதே என்ற சஞ்சலமும் உண்டு.)

பழனிச்சாமி சொன்னார். பழனிச்சாமி என்னும் சொல் பழங்கச்சாமி என்னும் பாலிமொழியிலிருந்து வந்ததாகவும் தமிழ்மொழியே பாலிமொழியிலிருந்து தான் வந்ததாகவும் குறிப்பிட்ட அவர் பாலிமொழியில் அந்த பெயருக்குப் பொருள் பழமையான துறவி என்றும் விளக்கினார். மேலும் பழனியில் இருப்பது முருகன் சிலை இல்லையென்றும் பவுத்தத்துறவிகளில் ஒருவரான ஆனந்தகீர்த்தரின் சிலையென்றும் கூறினார்.

அதேபோல குடிவிசயத்தை எடுத்துக்கொண்டால், புத்தரின் சீடர்களில் ஒருவரான அங்குலிமாலாவின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த சங்கநந்தன் என்னும் துறவி அசோகரையும் புத்தரையும் தந்தை மகனாகப் பாவித்து 'தம்மபுத்திரக்காப்பியம்' என்னும் காவியத்தை எழுதியிருப்பதாகவும் அதில் பல இடங்களில் புத்தரும் அசோகரும் மது அருந்தியபடியே உரையாடுவதாகவும் குறிப்பிட்டார். அப்போது புத்தர் சொல்வதாக வரும் ஒரு கவிதையைப் பாலிமொழியில் சொன்னார். (பழனிச்சாமிக்குப் பாலிமொழியும் தெரியும் என்பது கூடுதல் தகவல்)

அப்போது எனக்கு காப்ரியேல்கார்க்சியாமார்க்வெஸின் 'A woman travelling in oceanwings' என்னும் நாவலில் வரும் மார்த்தா என்னும் தேவதையின் வசனங்கள் நினைவுக்கு வந்தன. இரண்டு புள்ளிகளும் குறுக்கே வெட்டிக் கொள்ளும் இடத்தில் ஒரு தமிழ்க்கவிதை எனக்குள் பிறந்தது. நிசயமாக உலகின் மிகச்சிறந்த கவிதைகளுள் ஒன்று அது. இப்போது என் எதிரில் பழனிச்சாமி இல்லை. நாட்டாமையும் விடைபெற்றுப்போயிருந்தார்.

வரவணயான் மட்டும் மண்புழு, மண்வெட்டி, மண்பாண்டம் போன்ற மண் மற்றும் மண்சார்ந்த விசயங்கள் குறித்து சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். நானோ கவிதையில் கரைந்திருந்தேன். அந்த கவிதை உருவாகியபோது என் நரம்புகளெங்கும் பட்டாம்பூச்சிகள் பறந்தன. ஒரு பூக்காட்டில் குழந்தையைப் போல வாடைக்காற்று தழுவிக்கொண்டிருக்க நான் நிர்வாணமாய் ஓடிக்கொண்டிருக்கிறேன். இப்போது என் மதுக்கோப்பையில் புத்தர் தெரிந்தார். சில்வியாமரிக்கோமா என்னும் லத்தின் அமெரிக்கப் பெண்கவிஞர் சொன்னார் " நிச்சயமாக ஒரு நல்ல கவிஞரால் அய்ந்து நல்ல கவிதைகளுக்கு மேல் எழுத முடியாது. ஆனாலும்கூட ஒரே ஒரு நல்ல கவிதையை எழுதினாலும் கூட அவர் நிச்சயம் ஒரு நல்லகவிஞர்தான்" என்று. தமிழை உலகத்தரத்திற்குக் கொண்டுசெல்லப்போகும் அந்த கவிதை இதுதான்.

சொட்டு ஒன்று
சொட்டுச்சொட்டாய்ச்
சொட்டிக்கொண்டிருந்தது.
ஒரே ஒரு சொட்டு
சொட்டுச்சொட்டாய்
எப்படிச் சொட்டும்?

மாம்சம்




"வார்த்தைகளே மாம்சங்களாகவும்
மாம்சங்களே வார்த்தைகளாகவும்
மாறித்திரியும் நிலப்புலத்தில்
சிந்திச் சிதறிக்கிடக்கும்
மாம்ச மற்றும் வார்த்தைத்
துண்டுகளை என்ன செய்வது அதீதா?"

"மனிதர்கள் யாருமற்ற
வனாந்திரங்களில்
பூக்கும் பூக்களே
அழகாயிருக்கின்றன கலாபன்"

" வண்ணத்துப்பூச்சிகள் சிறகுதிர்க்கும் ஒரு மாலைப்பொழுதில் உன்னைச் சந்திக்கும்போதெல்லாம் எப்போதும் மழையை நினைவுபடுத்துகிறாய், அதீதா"

"உன் புயங்களிலிருந்து உள்ளங்கைகளுக்குப் பரவும் நடுக்கத்தை உணர்ந்தால் நீ சொல்வது உண்மைபோலத்தான் தோன்றுகிறது கலாபன்"

"பூனைக்குட்டிகளைப் பதுக்கிவைத்திருக்கும் உன் மார்புக்கூட்டுக்குள்ளும் சமயங்களில் மழையின் ஓசையை உணர்கிறேன். நீ பூனை மாமிசம் உண்டிருக்கிறாயா அதீதா?"

"என்ன இது, கனவில் கொலை நிகழ்த்துதல்போல. பூனை என்பது மென்மையின் சதை, பட்டுக்கன்னங்கள், குழந்தைகள்"

"முயல் மாமிசமாவது சாப்பிட்டிருக்கிறாயா?"

"ம். முயல்மாம்சம் மெதுமெதுப்பானது மட்டுமல்ல, வெதுவெதுப்பனதும் கூட. என் அடிவயிற்றுக்குள் கதகதப்பான வெப்பம் பாவுவதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் யோசிப்பேன், இந்த முயல் எத்தனை பச்சைப்புல்லைப் புசித்திருக்குமென்று. முயலை உண்னும்போது நானே பசும்புல்லாகிறேன், சமயங்களில் வனமாகவும்"

"சிரிப்பதைத் தவிரவும் வேறு வழியில்லை அதீதா, மேல்தோலை உரித்துவிட்டால் பூனைமாமிசமும் முயல்மாமிசமும் ஒன்றுதான்"

'நீ ஏன் இப்போது மாம்சம் பற்றிப் பேசுகிறாய்?"

"தெரியவில்லை. ஆனால் சமீபமாக என் கனவின் அறைகளில் மாம்சத்தின் வாசனை கமழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு மழைநாளின் மறுநாளில் தயாள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள், என் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் உண்மையாக இருப்பதில்லையென்றும் யார்மீதும் மரியாதை செலுத்துவதில்லையென்றும். கூடுதலாய்ச் சொன்னாள் என்னை நினைக்கும்போதெல்லாம் குத்துச்சண்டைக்காரனின் பிம்பமே விரிவதாய். நான் இப்படியாகப் பதில் அனுப்பினேன், 'நான் நரமாமிசம் சாப்பிடுபவனில்லை நம்பு' என்று"

"தயாளுக்கும் மாம்சம் பிரியமோ?"

"இல்லை. அவள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவதில்லை. மாமிசம் உண்ணாதவர்கள் மீது எனக்கு மரியாதையில்லை அதீதா. மாமிசம் உண்ணப்படாத ஞாயிறு தன் பெயரின் அர்த்தத்தை இழக்கிறது"

"எப்போதிலிருந்து மாமிசம் உனக்குப் பரிச்சயம்?"

"என் பன்னிரண்டாவது வயதில். முதல் பரிச்சயமாமிசம் மாட்டிறைச்சி. ஒரு தலித்தாகவும் முஸ்லீமாகவும் பிறப்பதற்கான பேறுபெற்றிலன் நான். ஆனாலும் வறுமை எனக்கு மாம்சமாய் மாட்டுமாமிசத்தையே அறிமுகப்படுத்தியது. ஒரு முஸ்லீம்குடும்பம்தான் எங்கள் குடும்பத்தைப் பராமரித்துவந்தது. மாட்டுமாமிசத்திலேயே அழகானதும் சுவையானதும் உப்புக்கண்டம். மூன்றுநாட்கள் கொடியில் காயும் உப்புக்கண்டம் நான்காம்நாள் தன் சாற்றில் ருசி ஊற்றியிருக்கும். மாட்டுமாமிசம் உண்ணக்கூடாது என்பவர் யாராயிருந்தாலும் மரியாதையாக இந்த நாட்டைவிட்டு வெளியேறுவதே மானமுள்ள காரியமாகும் என்கிறார் பெரியார். பின்னாளில் ஒரு அரசியல் கூட்டத்துண்டறிக்கையில் 'கோமாதா விருந்து உண்டு' என்று அச்சிட்டதற்காக உளவுத்துறையின் கண்காணிப்பிற்கு ஆளானேன் அதீ"

" கலாபன், நீ உரையாடலின் சமநிலையைக் குலைக்கிறாய். திடீரென்று எதார்த்தத்திற்குத் தாவுகிறாய், அரசியலும் பேசுகிறாய்"

"மீண்டும் சிரிக்கத் தூண்டுகிறாய். எதார்த்தமே அரசியலாயும் அரசியலே எதார்த்தமாயும் இருக்கிறது போலும். நீ விரும்பிப் புசிக்கும் முயலைப்போலவே வளைக்குள் பதுங்க முனைகிறாய்"

"நீ ஏன் என்னைத் தரையிறக்குகிறாய்? உன் காமமே மாம்சவேட்கையாய் மாறுகிறது கலாபன். நீ விரும்பிச்சுவைக்கும் என் இதழும் மார்பும் கூட மாமிசம்தானே?"

"இருக்கலாம். ஆனால் உன் கண்களை அப்படிச் சொல்லமுடியாது. அது சதைக்கோளங்களினின்று நழுவி ஓடுவது, வான், வெளி, பிரபஞ்சம் போல முடிவிலி உன் கண்கள். உன்னுடலின் உயிர்ப்புள்ள ஒரே பகுதியும்கூட"

"அப்படியானால் இப்படிச் சொல்லலாம், கண்கள் என்பவை பாதரச மாமிசம்"

"தெரியவில்லை. எனக்கு ஒரு முத்தம் தரமுடியுமா?"

"இல்லை, முடியாது. அதற்கான மனநிலை இல்லை. புத்தன் கடைசியாய்ப் புசித்த பன்றி மாமிசம் இருக்கிறது. பகிர்ந்துகொள்வோம்"

Thursday, September 24, 2009

நண்பர்கள் என்று நம்பியவர்கள்....

‘உன்னைப் போல் ஒருவன்’ படம் குறித்த விமர்சனத்தை எழுதியவுடன் பல தரப்புகளிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன. இயல்பாகப் பலரும் தத்தம் இடங்களில் பொருந்திப்போனார்கள். மேலோட்டமாக எழுதக்கூடியவர்கள், ஜாலியான பதிவுகளை எழுதியவர்கள் என்றெல்லாம் அறியப்பட்டிருந்தவர்களிடமிருந்து மூர்க்கத்தனமான எதிர்வினைகள் வெளிவந்தன. எதிர்வினைகள் என்பதை விடவும் தமக்குள் இருந்த இந்துமனோபாவத்தையும் பொதுப்புத்தி அபாயத்தையும் பார்ப்பனீயத்திற்கு ஒப்புக்கொடுத்த இயல்பையும் வெளிக்காட்டினார்கள். இது ஒன்றும் ஆச்சரியமானதில்லை. வரலாற்றின் போக்கில் நிரூபிக்கப்படும் உண்மைகள்தான். ஆனால் எதிர்பாராத இரண்டு இடங்களிலிருந்து எதிர்பாராத இரண்டு எதிர்வினைகள் வந்தன.

ஒன்று நமது ஆசிப்மீரானுடையது. செல்வேந்திரனின் பதிவில் அறத்தின் சினத்தைக் காட்டிய ஆசிப்மீரான், தன் பதிவில் எழுதியதோ அடிப்படைக்கே எதிராக இருந்தது. உன்னைப் போல் ஒருவனின் பின்னுள்ள மோசமான இந்துத்துவ அரசியலை வெளிக்கொணர்ந்த பிரதிகளை, தனக்கேயுரிய பகிடிநடையில் மோசமாகக் கிண்டலடித்திருந்தார். தமிழர்&மலையாளி பிரச்சினையாக பார்க்கலாம் என்கிற ரீதியில் ஆசிப் விமர்சனங்களை மலினப்படுத்தியிருக்கிறார்.

பகிடி என்பது எனக்கும் பிடித்தமான ஒன்று. ஆனால் நாம் அதிகாரத்தைப் பகிடி செய்ய வேண்டுமேயல்லாது அதிகாரத்திற்கு எதிரான குரல்களையல்லவே ஆசிப்! எனது பதிவில் மூர்க்கமாய்த் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த பலரும் ஆசிப்பின் பதிவில் கும்மியடித்திருந்தார்கள் என்றால் இது யாரின் வெற்றி? ‘மனநோயாளிகளின் உலகம்’ என்கிறார். எது மனநோய்? பிரதியின் பின்னுள்ள அதிகாரத்தை விமர்சனத்துக்குள்ளாக்குவதா?

பட விமர்சனம் எழுதியபோது நிறைய நண்பர்கள் பார்ப்பனர்களாய் என்னால் அறியப்படாதவர்கள். ஆனால் அந்த விமர்சனத்திற்கு எதிராகப் பதிவுகளும் பின்னூட்டங்களும் அவதூறுகளும் கிண்டல்களும் வசைகளும் செய்தவர்களில் பாதிப்பேர் பார்ப்பனர்கள் என்பதைப் பின்னால்தான் அறிய நேர்ந்தது. சுயசாதிப்பற்று என்பது மனநோய் இல்லையா ஆசிப்? அடிமனதில் ஒளிந்திருக்கும் பெரும்பான்மைவாதம் என்பது மனநோய் இல்லையா ஆசிப்?

ஆசிப்மீரான் இப்படியான எதிர்வினை புரிந்ததற்கான காரணங்களை என்னால் அறியக்கூடவில்லை. ஒருவேளை அவர் கமலின் ரசிகராக இருக்கக்கூடும். எனக்கும்கூட தனிப்பட்ட முறையில் நடிகர், நடிகைகள் மீதான விருப்பு வெறுப்புகள் உண்டு. ஆனால் எந்த அரசியலின் மீதும் அக்கறையற்று, அறத்தின் சார்பற்று குருட்டு ரசிகனாய் இருப்பதை விட மனநோயாளியாக இருக்கவே விரும்புகிறேன். நல்லா இருங்க ஆசிப்!
&&&&&&&&&

அடுத்து நமது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோழர் மாதவராஜ்.

''கமலின் இந்தப்படம் முழுக்க முழுக்க இந்துத்துவா ஆதரவுப்படம் என்றும், அப்படியெல்லாம் இல்லை என்றும் ஆரம்பித்து, நீண்டு, கமல்ஹாசன் என்னும் கலைஞன் மீது அவரவர்கள் தங்கள் பார்வைகளை செலுத்த ஆரம்பித்து இருக்கிறோம். படைப்பு குறித்த விமர்சனத்திலிருந்து, படைப்பாளி நோக்கிய விமர்சனத்திற்கு தாவி இருக்கிறோம்." என்கிறார் மாதவராஜ். படைப்பு என்பது படைப்பாளியின் துணையில்லாமலேயே அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்கிறதா மாதவராஜ்? பிளாக் மாதிரியான படங்களைத் தேர்ந்தெடுக்காமல் துரோகால், வெட்னெஸ்டே மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற கமலின் தேர்ந்தெடுப்பிற்குப் பின் எந்த அரசியலுமே இல்லையா தோழர்? அல்லது நமது முட்டாள் நண்பர்கள் உளறுவதைப் போல் ‘‘மௌனத்திலே அரசியல் பார்க்கிறார்கள், புன்முறுவலிலே அரசியல் பார்க்கிறார்கள்’’ என்று சொல்லப் போகிறீர்களா? ‘ஒவ்வொரு சொல்லுக்கும் செயலுக்கும் பின்னால் உள்ள அரசியல்’ குறித்து உங்களுக்குப் பாடம் எடுக்க நான் தயாராயில்லை.

''அரைநூற்றாண்டுக் காலம் தமிழ்ச்சினிமாவில் முக்கியப் பாத்திரமாக இருந்த ஒருவரை, சினிமா பற்றிய ஞானம் உள்ள சினிமாக் கலைஞரை, மனிதநேயமிக்க எத்தனையோ காட்சிகளை கண்முன் நிறுத்தியவரை, எத்தனையோ அற்புதமான படங்களை தமிழ்த் திரையுலகத்திற்குத் தந்தவரை சட்டென்று “ஒரு இந்துப் பாசிஸ்டு” என்று முத்திரை குத்துவது சரியல்ல. சில காட்சிகளை முன்னிறுத்தி, ஒரு கலைஞனை ஒட்டுமொத்தமாய் மதிப்பிடுவது நல்லதல்ல. அதிலும் அவரது பிறப்பை முன்னிறுத்தி பேசுவது ஆரோக்கியமானதல்ல."

என்பது தோழரின் வாதம். சினிமா பற்றிய ஞானம் உள்ளவர் இந்துப்பாசிஸ்டாக இருக்க முடியாதா என்ன? அதை விடக்கொடுமை அந்த ‘ஞானத்தை’ பாசிசத்தை நியாயப்படுத்த பயன்படுத்துவது இல்லையா?

சில காட்சிகளை விட்டு விடுவோம், ஒட்டுமொத்தமாய் இந்த படத்தின் அரசியல் என்ன என்று நீங்கள்தான் சொல்லுங்கள், பார்ப்போம். பிறப்பின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை என்பதை எத்தனை முறை சொல்லி அலுப்பது?

''நான் உட்பட பலரும் சுட்டிக்கட்டியிருக்கிற சிக்கலான கையாளல் இந்தப்படத்தில் இருக்கிறதுதான். தீவீரவாதம் என்றாலே முஸ்லீம்கள் என்னும் தோற்றத்தை இந்தப்படம் தருகிறதுதான். கமல்ஹாசன் அவர்களுக்கு இப்போது என்று இல்லை, ஹேராம் படத்திலும் ‘இந்துத்துவா’ குறித்த அவருக்கு இருக்கும் தெளிவின்மை தெரியும். குருதிப்புனலிலும் தீவீரவாதம் குறித்த கோளாறான பார்வைகள் வெளிப்படும். அதை அவரிடம் உள்ள குழப்பங்களாகவும், ஒரு சிக்கலானப் பிரச்சினையைப் புரிந்து கொள்வதில்/அணுகுவதில் ஏற்படும் மயக்கங்களாகவுமே உணர வேண்டியிருக்கிறது."

இருக்கிறதுதான், உண்மைதான் என்று தான் போடுகிற மாதவராஜிற்கு கமலின் மீதான மயக்கம் மட்டும் தெளியவில்லை. ‘ஞானம்’ உள்ளவருக்கு எங்கிருந்து குழப்பங்கள் வருகின்றன? நாத்திகராய், பகுத்தறிவுவாதியாய் இருப்பதல்ல பிரச்சினை. ஒடுக்கப்பட்ட மக்களின்பால் அக்கறையுள்ளவராகவும், தனது ஒரு அசைவுகூட ஆதிக்கத்திற்குத் துணைபோய் விடக்கூடாது என்பதிலும் கவனமாய் இருப்பதுதானே சமூக அக்கறையுள்ள கலைஞனின் பணி? கமலின் படங்களிலும் நடவடிக்கைகளிலும் புகைமூட்டம் மாதிரியான குழப்பங்கள் இருக்கின்றன என்பது உண்மைதான். இந்த குழப்பம் கமலுக்கா, நமக்கா என்பதிலும் குழப்பம் இருக்கிறது. ஆனால் எந்த குழப்பமும் இல்லாமல் கமல் தன்னை ஒரு இந்துபாசிஸ்டாகத்தான் இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றுதான் நான் கருதுகிறேன்.

ஆனாலும் மாதவராஜிற்கு நம்பிக்கையிருக்கிறது, கமல்ஹாசனை ‘வென்றெடுத்து விட முடியும்’ என்று. வாழ்த்துக்கள் தோழர். முடிப்பதற்கு முன்பு இரண்டு விஷயங்கள்.

1. ஜெயலலிதாவையே சகித்துக்கொண்டவர்கள் நீங்கள், கமல்ஹாசனை ஏற்றுக்கொள்வது கஷ்டமா, என்ன?

2. ‘பம்பாய்’ திரைப்படத்திற்கு விழா எடுத்ததைப் போல் ‘உன்னைப் போல் ஒருவனு’க்கும் நீங்கள் விழா எடுக்காமலிருக்க அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வை வேண்டுகிறேன். இன்ஷா மார்க்ஸ்!

Tuesday, September 22, 2009

உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும்

நீண்டநாட்களுக்குப் பிறகு எனது ‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப்படம் குறித்த விமர்சனம் பல்வேறு எதிர்ப்புகளையும் வசைகளையும் சந்தித்துள்ளது மகிழ்ச்சியே. நண்பர் ஜ்யோவ்ராம்சுந்தர் குறிப்பிட்டுள்ளதைப் போல் மாற்றுப்பார்வைகளையே அனுமதிக்காத மூர்க்கம் வலையுலகில் ஒரு வியாதியைப் போல் பரவியுள்ளது. முன்பு சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு எழுதிய விமர்சனங்களும் இத்தகைய நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது என்றாலும் ஒரு முக்கியமான விஷயத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நான், வரவணையான், முத்துதமிழினி, அசுரன், ராஜாவனஜ் என்று பலரும் தீவிரமாகப் பதிவுலகில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் ( அனேகமாக ரோசாவசந்த் தான் எழுதுவதை நிறுத்த தொடங்கிய காலகட்டம்) போலி டோண்டு மாதிரியான பிரச்சினைகள் ஒருபுறம் இருந்தபோதும் கூட குறைந்தபட்சம் மாற்றுப்பார்வைகளை ஆதரிக்கிற கணிசமான குரல்கள் இருந்தன. ஆனால் இப்போது அத்தகைய குரல்கள் குறைந்து போனது வருத்தமளிக்கிறது.

பதட்டப்படுகிற பெரும்பாலான பதிவர்கள் தங்கள் அளவில் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. கட்டமைக்கப்பட்ட அவர்களது பொதுப்புத்தி தொந்தரவுக்கு உள்ளாகிறது. கந்தசாமி படத்தை என்ன வேண்டுமானாலும் கிழிக்கலாம், விஜய்யையும் அஜித்தையும் என்ன வேண்டுமானாலும் கிண்டலடிக்கலாம், ஆனால் ஒரு அரசியல் சினிமாவின் பின்னுள்ள அரசியலைக் கட்டவிழ்க்கும்போது மட்டும் பதறிப் போகிறார்கள். ‘‘ஒரு இயக்குனர் இப்படியெல்லாம் பார்த்தா சினிமா எடுத்தார், நான் ஒரு பாமரன்தான்’’ என்று அலறுகிறார்கள். ‘‘இடைவேளையில் பப்ஸ் சூடாக இருக்கிறதா என்பதைத் தாண்டி ஏன் கவலைப்படுகிறீர்கள்?’’ என்று அங்கலாய்க்கிறார்கள்.

இது ஒரு சினிமாதான், சினிமாதான் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்பவர்கள்தான் நான் பதிவு எழுதுவத்ற்கு முன்பு ‘உன்னைப் போல் ஒருவன்’ தமிழகத்தைக் கடைத்தேற்ற வந்த படம் என்றார்கள், தார்மீகக் கோபம் என்றார்கள், ‘இந்த மாதிரியான படம்தான் வராதா என்று எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தோம்’ என்றார்கள். இப்போதும் கூட அவர்கள் விஜய்யோடும் அஜித்தோடும் கமலை ஒப்பிடுவதை விரும்ப மாட்டார்கள். போக்கிரியையும் உ.போ. ஒவையும் ஒப்பிடுவதை ரசிக்க மாட்டார்கள்.

போகட்டும், ஆனால் இவர்களது பார்வை சாதாரண பொதுப்புத்தி என்பதையும் தாண்டி இந்துமனோபாவத்தை ஏற்றுக்கொள்கிற, மற்றமையை விலக்கி வைக்கிற ஆபத்தான கட்டத்தை அடைவதை அவதானிக்க வேண்டும். ‘‘போங்கடா போலி செக்யூலரிஸ்ட்களா, தொப்பி போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பவர்கள், முஸ்லீம்களைத் தாஜா செய்பவர்கள், அல்லாவின் பெயரால் முஸ்லீம்கள் பல திருமணங்கள் செய்பவர்கள்’ என்னும் வகையான கருத்துக்களைத் தெரிவிப்பதிலோ அல்லது அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பிலோ மாறுபாடில்லாதவர்கள், போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகச் சொல்கிற விஷயம், ‘‘சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விஷத்தை விதைக்காதீர்கள்’’.

காலங்காலமாக சாதி எதிர்ப்புப் பார்வைக்கும் அரசியலுக்கும் சாதி அரசியல் என்றும் சாதிப் பார்வை என்றுமே முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது. அரசியலை அம்பலப்படுத்துபவர்கள் நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்களாகவும் பிரிவினைவாதிகளாகவுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். இது நமக்குப் புதிதில்லை. ஆனால் போகிற போக்கில் ‘சமூக அக்கறை’ குறித்தெல்லாம் இவர்கள் எடுக்கிற கிளாஸ்கள்தான் நமக்குத் தாங்க முடியவில்லை, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கலாம், எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை, எனவே எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் நண்பா, எல்லாம் ‘இங்கிருந்தே எடுக்கப்பட்டது’.

இதில் ஸ்டேண்ட் அப் காமெடியில் விடாமல் கலக்குபவர் செருப்பு புகழ் பதிவர். ஆனால் இவர்கள் போகிற போக்கில் ஏதோ உளறுகிறார்கள் என்றில்லாமல் எவ்வளவு ஆபத்தான பாசிச மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு அந்த 'ஜெர்மி பெந்தாம்’ தியரி ஒரு உதாரணம். மேலும் உதிர்க்கிற முத்துக்களைப் பாருங்கள்.

‘‘ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு’’

இங்கே எங்கே வந்தது ஐம்பதாண்டு? ஒருவேளை பாகிஸ்தான் உருவான காலத்திலிருந்தே முஸ்லீம்களை நாடு கடத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா? ஆனால் நண்பா, இந்தியாவில் தீவிரவாததிற்கு வயது வெறும் 50 அல்ல. சாதாரண பிளேக் நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று எலியை அழிக்கச் சொன்ன வெள்ளைக்காரனை ‘மதத்தை அழிக்கப் பார்க்கிறான்’ என்று வன்முறையைத் தூண்டி விட்டாரே பாலகங்காதர திலகர், ‘இந்து சனாதன தருமத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் பஞ்சயனைச் சுட்டுக்கொல்கிறேன்’ என்று சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்திருந்தானே வாஞ்சிநாதன், ‘‘முஸ்லீம்களுக்கு நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும்’’ என்று 1910ல் தீர்மானம் போட்டதே இந்துமகாசபை அந்த தீவிரவாதத்திற்கு அடுத்த வருடம் வந்தால் வயது 100 ஆகப்போகிறது.

‘‘எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ, ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை’’ என்கிறார் திருவாளர் பத்தாம் நம்பர்.

அட முண்டமே! வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்று வாக்கு கொடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாய் ராணுவத்தை நிறுத்தி தினமும் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கிறதே உன் இந்தியா, அஸ்ஸாமில் பெண்களை இந்திய ராணுவ மிருகங்கள் சிதைத்து தீர்த்ததே, அவ்வளவு ஏன் ஈழத்தில் கடைசி இழவு விழும் வரை காத்திருந்து விட்டு எள்ளும் தண்ணியும் இறைத்து விட்டு வந்து டாட்டாவும் அம்பானியும் பிசினஸ் செய்ய சுடுகாடுகளைப் புனரமைத்துக்கொண்டிருக்கிறதே, இன்னமும் நேபாளத்தில் ரெண்டு பார்ப்பான் பிரச்சினைக்காக ஒரு ஆட்சியைக் கவிழ்த்துத் தன் தாலியறுக்கும் குணத்தைக் காட்டியதே உன் இந்தியா, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், மேலாதிக்கம் குறித்தும், அடுத்த நாட்டில் குண்டு போடுவது குறித்தும் பேசுவதற்கு இந்திய நாய்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?

முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும். இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம், வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம், ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம், பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்? தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம். சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா? இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.

அப்புறம் ‘தனிநபர் தாக்குதல் கூடாது’ என்கிறார்கள் நண்பர்கள். நல்லது தனிநபரைத் தாக்கக் கூடாது. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் அல்லவா? ஈழ ஆதரவுப் பதிவர்களில் சிலர் கூட கமலின் உ.போ.ஒருவனைப் பாராட்டுகிறார்கள். இதே கமல்ஹாசன்தான் நண்பர்களே, ஈழப்பிரச்சினைக்காக திரையுலகம் நடத்திய கூட்டத்தில் ‘‘அடக்குமுறை இருக்கும் நாட்டில் தீவிரவாதம் வெடித்தே தீரும்’’ என்று ஆவேச வேடம் போட்டவர். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கமலின் சமூக அக்கறையின் நிறம் என்ன?

குண்டு வெடிக்கிறது, குண்டு வெடிக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களே, உலகமெங்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் வன்முறைகளை விடவும் அரச பயங்கரவாதத்தாலும் ராணுவ பயங்கரவாதத்தாலும் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம். அதுகுறித்து உங்கள் சினிமா, கலைஞானிக்கள் ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை பேசியிருப்பார்களா? அல்லது நீங்கள்தான் அதுகுறித்து என்றாவது எழுதியிருப்பீர்களா? மும்பை குண்டு வெடிப்பு பற்றி பொங்கலோ பொங்குபவர்கள் போபாலுக்காகவும் இன்னமும் கல்பாக்கத்து அணு உலைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் பொங்குவீர்களா?

‘எல்லாம் சரிதான், அந்த கெட்டவார்த்தை மட்டும் வேண்டாமே’ என்கிறார் நர்சிம். என்ன செய்வது நர்சிம். நான் கெட்டவார்த்தை பேசுவது புதிதில்லையே. மேலும் ஒரு முஸ்லீம் பெண்ணின் மரணத்தை ஏதோ நாய்க்குட்டி செத்துப்போச்சு ரேஞ்சுக்குப் பேசும்போது என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை, வெண்ணெய் போட்டு உருவி கமலுக்கு உபதேசிக்க முடியவில்லை. சென்ஷியின் பதிவைப் படித்தீர்கள்தானே, ஒரு முஸ்லீமாய் அன்னியப்படுத்தப்படும் வலி, ஒரு தலித்தாய் நிராகரிக்கப்படும் வலி இதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூட முயற்சிக்கா விட்டால் எனக்கு படைப்பெல்லாம் சு&&&&&&&&மயிருக்குத்தான் சமம். மற்றமையை உணர்வதே நீதி, அறம், தார்மீகம், படைப்பு, கலை. ‘ஆனாலும் நண்பா...’ என்ற உங்கள் நாகரீக இழுதல் கேட்கிறது.

விக்ரம் படத்தில் கமலின் மனைவி கொலை செய்யப்பட்டுவிடுவார். அதற்கப்புறம் கூட கமலுக்குச் ‘செட் ஆவதற்கு’ இரண்டு ‘பிகர்கள்’ இருப்பார்கள். ஆனாலும் கமல் தன் போலீஸ் மேலதிகாரியிடம் கேட்பார், ‘‘எந்த தேவடியா மகன் சார் என் பெண்டாட்டியைக் கொன்றது?’’. கதை - சுஜாதாவுடையது.

Saturday, September 19, 2009

'உன்னைப் போல் ஒருவன்' ‍ கமலின் இன்னுமொரு இந்துத்துவச் சினிமா















நான் ‘வெட்னஸ்டே’ படம் பார்த்ததில்லை. ஆனால் ‘உன்னைப்போல் ஒருவன்’ திரைப்படம் தந்த மன உளைச்சல் ஏராளம். வெட்னஸ் டே எப்படியிருந்தபோதிலும் அதை ரீமேக் செய்வதற்கான கமலின் தேர்வு அவரது அரசியல் சார்பைத்தான் காட்டுகிறது. இதேபோல கமல் விரும்பி ரீமேக் செய்த இன்னொரு படம் ‘குருதிப்புனல்’. இந்த படம் கோவிந்த் நிஹ்லானியின் துரோகாலை விட சிறந்த படம் என்று பாராட்டியிருப்பார் ‘ஆய்வாளர்’ யமுனாராஜேந்திரன். அ.மார்க்ஸ் குறித்து அவர் கீற்று இணையத்தில் எழுதியிருந்த கட்டுரையில் கீழ்க்கண்ட விஷயத்தைச் சுட்டிக்காட்டியிருந்தார். (கந்தசாமி படத்தில் எல்லோரும் மரத்தில் மனு கட்டித் தொங்கவிடப்போவதைப் போல அ.மாவை அர்ச்சிக்க விரும்புபவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதும் மரமாக கீற்று மாறிவிட்டது வேறு விஷயம்). ஈழப்பிரச்சினை குறித்து அறிவு இல்லாமல் ‘உன்னதசங்கீதம்’ கதை எழுதிய சாருவின் கருத்தை எப்படி அ.மா தனது புதுவிசை இதழில் கையாளலாம் என்று கேள்வி எழுப்பியிருப்பார். ஆனால் ஈழப்பிரச்சினை குறித்து விரிவும் ஆழமும் அகலமும் தேடி ஆராய்ந்த யமுனா உதிர்த்த முத்துதான், ‘குருதிப்புனலில் போராளி பாத்திரத்தில் காட்டப்பட்டிருப்பவர்கள் ஈழத்தமிழர்கள்’ என்று. அதற்கான ஒரு முகாந்திரத்தைக் கூட குருதிப்புனலில் தேடினால் கிடைக்காது. இது யமுனாவின் ஈழப்பிரச்சினை குறித்த அபாரமான அறிவு. இன்னொரு பக்கம் துரோகாலை விட சிறந்த படத்தில் நக்சல் போராளிகளின் வேலை போலீஸ்காரனின் பதின்பருவக் குழந்தை மீது பாலியல் இச்சை கொள்வது, அது கிடைக்காவிட்டால் இன்னொரு போலீசுக்காரனின் மனைவியைப் பாலியல் புணர்வு செய்வது. இந்தியா என்ன உலகம் முழுக்க இத்தகைய கேடு கெட்ட காரியங்களில் ஈடுபட்டு வருபவர்கள் போலீசும் ராணுவம்தான் என்பது மனித உரிமைகள் மீது ஆரம்பகட்ட அக்கறை கொணடவர்கள் கூட அறிந்த உண்மை. ஆனால் நம் ‘மார்க்சிஸ்டு சினிமா ஆய்வாளர்’ யமுனாவுக்கு மட்டும் அது சூப்பர் படம்.

போகட்டும் குருதிப்புனல் எப்படி ஒரு போலீஸ் சினிமாவோ அதேபோல்தான் இந்த உன்னைப்போல் ஒருவனும். இந்த படத்திலும் எல்லா போலீஸ்காரன்களும் நல்லவன்கள்தான். தன் மனைவியையும் ஒன்பது மாதக் குழந்தையையும் ஊருக்கு அனுப்பி விட்டு பாமைச் செயல் இழக்கும் தேசப்பணியில் ஈடுபடுபவர்கள். உயிருக்கு அஞ்சாத உத்தமர்கள். நல்லது கமல், வாச்சாத்தி தொடங்கி பத்மினி வரை இப்படியான ‘கண்ணியமான’ போலீஸ்களைத்தானே காவல்துறை சுமந்துகொண்டிருக்கிறது. படத்தில் கம்ப்யூட்டர் நிபுணர் சொல்கிறார், ‘அவர் ஒரு பிரைனிதான் மேதை அல்ல’ என்று. பிறகு கமலின் ‘தேசபக்தியை’ப் புரிந்துகொண்டு ‘அவர் மேதைதான்’ என்று ஒத்துக்கொள்கிறார். ஆனால் கமல் எவ்வளவு பெரிய மேதை என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்.

இந்த சினிமா ஒரு பச்சைப் பார்ப்பானால் எடுக்கப்பட்ட கேடுகெட்ட இந்துத்துவச் சினிமா என்பதற்கு சாட்சி, மூன்று இஸ்லாமிய ‘தீவிரவாதிகளையும்’ ஒரு இந்து ஆயுதவியபாரியையும் வேனில் அழைத்துவரும் காட்சி. ‘தான் தீவிரவாதியானதற்கான காரணத்தை விவரிக்கிறார், ஒரு முஸ்லீம்’. அவரது ‘மூன்றுமனைவிகளுள்’ ஒருவர் பெஸ்ட் பேக்கரி கொலையில் கொல்லப்பட்டவர். அதற்குப் பழிவாங்கத்தான் அவர் கோவையிலே குண்டுவைத்தார். கேட்கிறவன் கேணக்கூ...வா இருந்தா அக்காரவடிசிலில் அமிர்தம் வடியுதுன்னு சொல்றவர்கள்தானடா நீங்கள்! பெஸ்ட்பேக்கரி கொலை நடந்தது 2002ல். கோவை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது 1998ல். இதுதான் கமலின் மேதமை. என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்? ‘துலுக்கன்கள் எல்லாம் டைம் மிஷின்ல பின்னல் போய் பழிவாங்க குண்டு வைப்பாங்க’ன்னா?

மணிரத்னம் படம் உட்பட பல இந்துத்துவா சினிமாவில் கூட ஒரு பேலன்ஸ் செய்வதற்கு முஸ்லீம்கள் சார்பாக சில நியாயங்கள் சொல்லப்படும். ஆனால் இந்த படத்தில் அதற்கான வாய்ப்பையும் மறுத்து தான் எவ்வளவு மோசமான பாசிஸ்ட் என்று நிரூபித்திருக்கிறார் கமல். சொல்லப்படும் ஒரே நியாயம் ‘பெஸ்ட் பேக்கரி கொலைச்சம்பவம்’. அதற்கு அருகில் இருக்கும் இந்து ஆயுத வியாபாரி சொல்வான், ‘‘அதான் மூணு பொண்டாட்டியில ஒண்ணுதானே போச்சு, மீதி ரெண்டு இருக்கில்ல’’. தியேட்டரில் சிரிக்கிறார்கள். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கமலஹாசா? அந்த ‘இந்து ஆயுத வியாபாரி’ ஒரு அப்பாவி. ஆயுத வியாபாரம் செய்வதைத் தாண்டி அவனுக்கு வேறு எந்த கிரிமினல் நோக்கமும் கிடையாது.

ஆனால் முஸ்லீம் ‘தீவிரவாதிகள்’, கொலை வெறி தலைக்கு ஏறியவர்கள், மத வெறியர்கள், அது மட்டுமல்ல, தன்னோடு ஒரு முஸ்லீம் ஜீப்பில் உடன் வராதபோதும் அவனுக்குத் துரோகம் செய்யத் தயங்காதவர்கள். அப்புறம் நம் ‘மேதை’ கமலின் கருத்துப்படி ‘மூணு பெண்டாட்டி வைத்துக்கொள்பவர்கள்’. இதோடு மட்டும் கமலின் பார்ப்பன வன்மம் அடங்கவில்லை. நாலு தீவிரவாதிகளையும் அழைத்துச் செல்லும் இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவன் ஆரிப் என்னும் முஸ்லீம் அதிகாரி. அப்போது இன்னொரு போலீஸ் அதிகாரியை அழைத்து மோகன்லால் கூறுகிறார், ‘‘ஆரிப் மேல ஒரு கண்ணு வச்சிக்க’. ‘‘யாரை அவங்களோட அனுப்பிச்சிருக்கீங்க?’’ என்று காமன்மேன் கமல் கேட்கும்போது, மோகன்லால் ஆரிப்பின் பெயரைச் சொல்ல, லேசாக முறுவலித்தபடி யோசனையில் ஆழ்கிறார் ‘காமன்மேன் கமல்’. அர்த்தம்... ‘போயும் போயும் துலுக்கனையும் கூட அனுப்பிச்சிரூக்கீங்களேடா’.

போலீஸ் ஸ்டேசனுக்குக் கமல் வந்த அடையாளத்தை ஏட்டு மோகன்லாலிடம் விவரிக்கும்போது சொல்கிறார், ‘‘அவர் தாடி வச்சிருந்தாரு, கையில வெங்கடாசலபதி பை வச்சிருந்தாரு’. உடனே மோகன்லால் கேட்கிறார், ‘‘அப்புறம் என்ன சிலுவை போட்டிருந்தாரா?’’. ஆக மொத்தம் மூன்று மதங்களுக்கான அடையாளம் வெங்கடாச்சலபதி & இந்து, சிலுவை & கிறிஸ்தவன், தாடி & முஸ்லீம். தாடி வைத்தவனை எல்லாம் முஸ்லீமாகவும் முஸ்லீமை எல்லாம் தீவிரவாதியாகவும் காட்டுகிற குறியீட்டுக் காட்சி மிகவும் நுட்பமாக தன் இந்துத்துவ அரசியலை நிறுவிக்கொள்கிறது.

சரி, இந்த ‘காமன் மேன்’ எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்றால், ‘தீவிரவாதத்தைத் தீவிரவாதத்தால் எதிர்க்கிறாராம்’. ங்கோத்தா, இதைத்தானேடா அவனும் செஞ்சான்? ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் பார்த்து வலையுலகில் முதன்முதலாக வந்த விமர்சனத்தில் ஒருவர், ‘மும்பையிலே குண்டு வெடிச்சா தமிழன் கவலைப்படறதில்லை’ என்னும் கமலின் வசனத்தை தமிழ்த்தேசிய நோக்கில் கடுமையாக விமர்சித்திருந்தார். ( கமல் உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதைப் போல இருந்தது அந்த பதிவு. மற்றபடி தமிழர்களைக் கமல் கொச்சைப்படுத்தாமல் இருந்தால் முஸ்லீம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதில் அவருக்கு ஒரு கருத்துமாறுபாடும் இருக்காது என்பது வேறு விஷயம்.) ஆனால் அதோடு கமல் விடவில்லை, கமல் சொல்லும் ‘தீவிரவாதம்’, மீனம்பாக்கம் குண்டுவெடிப்பு, ஸ்ரீபெரும்புதூர் வரை நீள்கிறது. ஆக கமலின் காமன்மேன் விடுதலைப்புலிகளின் ‘தீவிரவாதத்தையும்’ எதிர்ப்பவர்தான்.

கிளைமாக்ஸ் காட்சியில் கமல் கண்ணீர் வடித்த வசனம் பேசும்போது எதையாவது தூக்கி சொருகலாமா என்றிருக்கிறது. இதில் தேவையில்லாமல் கரம்சந்த் காந்தியையும் இழுத்திருக்கிறார். பாகிஸ்தான் பிரிவினை தனக்கு உவப்பு இல்லை என்றபோதும் பாகிஸ்தானுக்கு இந்திய அரசு வழங்க வேண்டிய நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தவர் கரம்சந்த். ஆனால் நீங்கள்...? செப்டம்பர் 11 தாக்கலே முஷ்ரப் ஏற்பாடு செய்தது என்று காட்டுகிற ஒரு டி.வி சேனலை, அதில் உள்ள நீரஜா என்னும் பார்ப்பனத் தொகுப்பாளினியைத் தேர்ந்தெடுத்து நீதி சொல்கிறீர்கள். ஒரு காட்சியில் கமல் கேட்கிறார், ‘மகாத்மா காந்தியைத் தெரியுமா, அவர் பெயரைச் சொல்ல உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?‘ என்று. கமல் தன் பின்புறத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது.

அப்புறம் படத்தின் தமாஷான இடம் (குரூர நகைச்சுவை) ஒரு பெண்ணின் பிறப்புறப்பு சிதைக்கப் பட்டதற்காக ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்துவது. உண்மையிலேயே ‘காமன் மேன்’ கண்ணீர் சிந்தியிருந்தால், இஸ்லாமியத் தீவிரவாதமும் வந்திருக்காது, நரேந்திரமோடியும் இன்னொரு முறை முதல்வர் ஆகியிருக்க மாட்டான். இந்த ‘காமென் மேன்’ கயர்லாஞ்சி தொடங்கி இந்தியக் கிராமங்களில் தலித் பெண்கள் உடல் சிதைக்கப்பட்டபோது எவர் மயிற்றை பிடுங்கிக்கொண்டிருந்தார் என்று சொல்ல முடியுமா கமல்?

படத்தில் முஸ்லீம்கள், ஈழக்குழுக்கள் மட்டும் அவமானப்படுத்தபடவில்லை. மனித உரிமைகளும் கூட. என்கவுண்டர் செய்வதில் தப்பில்லை, ஒரு போலீஸ்காரன் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் அடித்து நொறுக்கலாம் என்றெல்லாம் கொஞ்சமும் இரக்கமில்லாமல் முன்மொழியும் கமல் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மனித உரிமையை வலியுறுத்துகிறார். அது எந்த இடம் என்றால், கமல்ஹாசனின் பெயர் வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாதது. இந்த காமன்மேன் என்பவனே ஆதிக்கக்கருத்தியலாலும் பொதுப்புத்தியாலும் கட்டமைக்கப்பட்ட தன்னிலைதான். இவனுக்கு எல்லாம் எந்த மரியாதையும் கொடுக்க வேண்டிய அவசியம் எல்லாம் கிடையாது.

ஒருவேளை இந்த காட்சிகள் வழியாகக் கூட இது இந்துத்துவ சினிமா என்று தெரியாமல் போய்விடக் கூடாது என்பதற்காக படத்தின் கடைசி வசனம் இப்படியாக முடிகிறது, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’. உடனே ஸ்ருதிஹாசனின் இசையில் பாடல் தொடங்குகிறது, ‘சம்பவமாமி யுகே’. போங்கடா பாப்பாரப் பாடுகளா!

ஒருவேளை வெட்னஸ்டே படத்தில்தான் அத்தனைப் பிரச்சினைகள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த மலத்தைக் கொஞ்சம்ன் கொஞ்சமாக உருட்டி நம் வீட்டு வாசலுக்குக் கொண்டு வரும் கமல் என்ன மலவண்டா? படத்தில் கமல்ஹாசன் பாத்திரத்திற்குப் பெயர் இல்லை, மத அடையாளம் இல்லை, என்ன வேலை செய்கிறார் என்பதற்கான தகவல்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் இந்தியப் பெண்களுக்கே உரித்ததாக, கமலின் மனைவிக்கு முகமும் இல்லை. ஆனால் ஒன்றே ஒன்று இருக்கிறது. அது பூணூல்.

Tuesday, September 1, 2009

அறிஞர் அண்ணாவும் தம்பி பிரபாகரனும் கடைசிவரை பாம்பை வெளியே எடுக்காத தமிழவனும்

‘அண்ணா உருவாக்கிய தமிழரசியல்’ என்ற பேராசிரியர் தமிழவனின் கட்டுரையை தீராநதி ஆகஸ்ட் 2009 இதழில் படிக்க நேர்ந்தது. இது கட்டுரையின் நான்காம் பாகம். முதல் மூன்று பாகங்களைப் படிக்கும் கெடுவாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. கட்டுரையின் இரண்டாம் பத்தியிலேயே தமிழவனின் அதிரடி ஸ்டேட்மெண்ட் ஒன்று.

‘அண்ணாதுரை அவர்கள் சந்தேகமில்லாமல் தமிழர்களின் வரலாற்றில் புதிய அரசியல் தன்மையைக் கொண்டு வந்தார். இன்று பிரபாகரனையும் அப்படி பார்க்கலாம்.’ எனவே அண்ணாவின் தமிழரசியல் மற்றும் பிரபாகரனின் தமிழரசியலுக்கும் உள்ள கருத்தியல் அடிப்படைகள் குறித்து தமிழவன் பேசுவார் என்று கருதி கட்டுரையை வாசிக்க ஆரம்பித்தேன். (ஏற்கனவே நீ நான் என்றெல்லாம் பாடம் நடத்தி தமிழ் அறிவுலகைக் கதிகலங்க வைத்தவராயிற்றே!) ஆனால் நான்கு பக்கங்கள் உள்ள இந்த கட்டுரையில் இரண்டரை பக்கம் வரை தமிழவன் பாம்பை வெளியே எடுக்கவேயில்லை. சரி, அந்த இரண்டரை பக்கத்திலும் தமிழவன் அப்படி என்னதான் வித்தை காட்டியிருக்கிறார் என்று பார்த்தால் அதுவும் பிஸ்கோத்துதான்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகும் ஏன் அண்ணா ‘திராவிட’ பெயரையே சுமந்து திரிந்தார், கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் திராவிட அரசியலில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்று வழக்கமான கதைதான். சரி நம் அறிவுஜீவிகள் சமையல் குறிப்பு, ஜாதகக் கட்டம், சங்கக்கவிதை, லத்தீன் அமெரிக்க கவிதை, கிரேக்க புராணம், குறுக்கெழுத்துப்போட்டி, ஆயா பாயா தயாரித்த கதையெல்லா எழுதி விட்டுத்தானே மேட்டருக்கு வருவார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். அப்போதுதான் அண்ணா பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டது குறித்து எழுதியிருந்த எழுத்தில்தான் தமிழவனின் நகைச்சுவை உணர்வை அறிய நேர்ந்தது.

‘பிரிவினையைக் கைவிடும்போது அது ஒரு தந்திரோபாயம் என்றுதான் கட்சி கூறியது என்று சார்லஸ் ரியர்ஸன் அந்தோணி என்ற அமெரிக்க ஆய்வாளர் கூறுகிறார். திமுக பற்றிய முனைவர் பட்ட ஆய்வேட்டை சார்லஸ் ரியர்ஸன் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பிக்கும்போது இக்கருத்து அந்த ஆய்வேட்டில் இருந்தது’ என்கிறார் தமிழவன். அண்ணா தமிழ்ச்சமூகத்தின் முக்கியமான அரசியல் ஆளுமை. நாற்பதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி ‘கோரிக்கைதான் கைவிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியேதான் உள்ளன’ என்று அண்ணா குறிப்பிட்டதைக் கருணாநிதியே பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் இதைச் சொல்வதற்கு தமிழவனுக்கு டோக்ரா மோக்ரா கம்பெனியிலிருந்து ஆள் வர வேண்டியிருக்கிறது. ஒரு சாதாரண நிகழ்வைக் கூட பல பெயர்களைப் போட்டு எப்படி நம் அறிவுஜீவிகள் மிரட்டுகிறார்கள் என்பதற்குத் தமிழவனின் இந்த பாம்பு ஒரு உதாரணம். அதுசரி, நம் சிந்தனையாளர்கள் சிவகாசி ஜெயலட்சுமி பற்றிய கட்டுரையைக் கூட கிரேக்கப் புராணத்திலிருந்துதானே ஆரம்பிப்பார்கள்.!

அதோடு விட்டாரா தமிழவன்? ‘கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் மோகன்குமாரமங்கலம் துணையுடன் திராவிடக் கட்சியை இரண்டாகப் பிளப்பதற்கு இந்திராகாந்தி துணிகிறார்’ என்று அடுத்த காமெடிக்குண்டைச் சளைக்காமல் வீசுகிறார். மோகன்குமாரமங்கலம் கம்யூனிஸ்ட் சிந்தனையாளராம்! அப்படியானால் ஆன்டனிகிராம்ஷி, அல்தூசரையெல்லாம் தமிழவன் எப்படி குறிப்பிடுவார் என்று தெரியவில்லை. 34ம் வட்ட சி.பி.எம் கவுன்சிலர் முத்துசாமி கூட தமிழவனுக்கு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்தான் போலும்.
இப்படி தானே பல காமெடிகளை நிகழ்த்தியும் ஆறுமுகநாவலரின் தமிழரசியலையும் அண்ணாவின் தமிழரசியலையும் விவஸ்தைகெட்டதனமாக முடிச்சு போடும் தமிழவன்தான் ‘அண்ணாவை இப்படித்தான் உயிரோட்டமுள்ள மதிப்பீடுகள் அணுகும். அண்ணாவுக்கு மூக்குப்பொடி கொடுத்தவர் யார் யார் என்று தரங்கெட்ட ஆராய்ச்சிகள் வரக்கூடாது’ என்று மற்றவர்களை வேறு கண்டிக்கிறார்.

இப்படியான காமெடி ஷோவின் இறுதியில் விட்டகுறை தொட்டகுறையாக அண்ணாவும் பிரபாகரனும் சங்க இலக்கிய வீரமும் மார்க்ரெட் ட்ராவிக். பீட்டர் ஷால்க் என்ற வெள்ளைக்கார ஆய்வாளர்களும் என அதகளம் பண்ணியிருக்கிறார். அண்ணா ஒரு அரசியல் வகைப்போக்கை உருவாக்கியதைப் போலவே பிரபாகரனு ஒரு அரசியல்வகைப்போக்கை உருவாக்கினார் என்பது உண்மைதான். இன்றளவும் பல தமிழர்களிடத்தில் செல்வாக்கு பெற்ற அரசியல் ஆளுமைதான் பிரபாகரன். தமிழர்களின் சுயமரியாதைக்கும் வீரத்திற்கும் குறியீடாகக் கருதப்படுபவர் பிரபாகரன்.

ஆனால் அன்ணாவின் அரசியல் ஒரேநேரத்தில் அறிவு மற்றும் உணர்வுத்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. அண்ணா காலத்திய அறிவு மய்யங்கள் இரண்டு. தேசியத்தையும் பார்ப்பனீயப்பிரதிகளையும் ஒன்றிணைத்த பார்ப்பன அறிவு மய்யம். சைவ வேளாளப் பிரதிகள் வழியே பார்ப்பன எதிர்ப்பு & தமிழ்ப்பெருமிதத்தை முன்வைத்த வெள்ளாள அறிவு மய்யம். அண்ணா பார்ப்பனப் பிரதிகளை எதிர்த்தது மட்டுமில்லாது சைவப்பிரதிகளிலிருந்து விலகிய தனக்கேயான தமிழ்ப்பெருமிதத்தைக் கட்டமைத்து வெற்றி கண்டவர். அண்ணா கம்பராமாயணத்தை மட்டுமல்ல, பெரியபுராணத்தையும் எரிக்கச் சொன்னவர். கருணாநிதி தூக்கிப்பிடித்த கண்ணகியும் குண்டலகேசியும் பவுத்த சமணப்பிரதிகளில் உருவாக்கப்பட்ட பாத்திரங்கள் என்பவை கவனத்திற்கொள்ளத்தக்கது. அதேநேரத்தில் பெரியார் முன்வைத்த கருத்துருவங்களிலிருந்தும் விலகியே அண்ணா தனக்கான தமிழ் அரசியலைக் கட்டமைத்தார்.

மேலும் அண்ணா முன்வைத்த திராவிடநாடு கருத்தாக்கம் மற்றும் தமிழர் வரையறை எவ்வளவு நெகிழ்வுத்தன்மை வாய்ந்தன்மை, தேசியத்தைப் பாசிசமாக மாற்றாமல் காப்பாற்ற முனைந்தவை என்கிற ஆய்வுகளை ஏற்கனவே நிறப்பிரிகை முன்வைத்திருக்கிறது. ஆனால் பிரபாகரன் கட்டமைத்த தமிழ்த்தேசியம் எத்தன்மை வாய்ந்தது, அதற்கும் அண்ணா கட்டமைத்த தேசியத்திற்குமான கருத்தியல் ஒற்றுமைகள் மற்றும் விலக்கங்கள் குறித்து தமிழவன் எழுதியிருந்தால் அது உருப்படியான ஒரு ஆய்வாக இருந்திருக்கும். ஆனால் பிரபாகாரன் பற்றி யாராவாது கோக்ரான் மேக்ரான் வெள்ளைக்காரர் கொல்மபியா பல்கலைக்கழகத்தில் ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க வேண்டுமே. அதுவரை தமிழவன் காத்திருக்க வேண்டுமல்லவா?

அந்த கொலை வீடியோக்கள் குறித்து ஷோபாசக்தி

மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.

இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.

சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.

கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாத்தியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.

புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.

ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.

இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.

இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.

Wednesday, August 26, 2009

ஈழப் போராட்டமும் தமிழக ஆதரவாளர்களும் - அ.மார்க்ஸ்


(அ.மார்க்சின் இந்த கட்டுரையில் சிலவிடங்களில் எனக்கும் விலகல் உண்டு. குறிப்பாக கீற்று தளத்தில் பல தமாஷான கட்டுரைகளும் புலனாய்வுப் பொட்டு அம்மான்களின் புல்லரிக்க வைக்கும் புளியோதரைக் கட்டுரைகளும் வெளியிடப்பட்டாலும் பெரும்பாலும் இடது சாய்வான தளம் என்பதால் கீற்றை அந்த அடி அடித்திருக்க வேண்டாம். தமிழவன் குறித்த அ.மார்க்சின் கிண்டல் முற்றிலும் சரி. அவர் அடிக்கிற தமாஷ்கள் சிரிப்பொலி, ஆதித்யாவை மிஞ்சிவிடுகின்றன. மற்றபடி உரையாடலுக்கு வழிவிட்டு....)


தமிழ் அறிவுஜீவிகள் மத்தியில் ஒரு மரண அமைதி நிலவுவதாக சில நாட்களுக்கு முன் எழுத்தாள நண்பர் ஒருவர் கவலையோடு குறிப்பிட்டார். ஒரு சிலர் மத்தியில் ஒருவகை கையறு நிலையும் வேதனையும் நிலவுவது உண்மைதான். மே 18லிருந்து கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரம் முழுவதும், வழக்கமாக என்னிடம் பேசுகிற பழக்கமில்லாத சில எழுத்தாள நண்பர்களும் கூட என்னைத் தொடர்பு கொண்டு "கேள்விப்படுவது உண்மைதானா?" என விசாரித்த வண்ணம் இருந்தனர். தொலைக் காட்சியில் காட்டப்படும் உடல் அவருடையது அல்ல, இலங்கை அரசு பொய்ச் செய்தியைப் பரப்புகிறது என்கிற பிரச்சாரம் அவர்களில் சிலருக்குத் தெம்பூட்டவும் செய்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒரு எழுத்தாள நண்பர் தனது குடும்ப அட்டையை ( Family Ration Card) அரசிடம் திருப்பிக் கொடுக்கப்போவதாக திரும்பித் திரும்பிச் சொல்லிக் கொண்டே இருந்தார். கடும் போதையிலிருந்த அவரிடம் “யோசித்துச் செய்யுங்கள்’ என்று மட்டும் சொன்னேன். ஏற்கனவே பலமுறை Depressionக்கு ஆளாகியுள்ள மதுரை எழுத்தாள நண்பர் ஒருவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி நண்பர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இனி கவிதை எழுதி என்ன செய்யப் போகிறேன், ஏதோ சம்பாதித்தோம். சாப்பிட்டோம் என எஞ்சியுள்ள காலத்தைக் கழிப்போம் என சென்னையில் உள்ள ஒரு கவிஞர் சொல்லியதாகவும் அறிந்தேன்.

மென்மையான மனம் கொண்ட எழுத்தாள நண்பர்கள் இப்படியான ஒரு எதிர்வினை காட்டியதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மக்களின் எந்தப் பொதுப் பிரச்சினைகளிலும் இம்மியும் அக்கறை காட்டியிராத தமிழ் எழுத்தாளர்கள் இந்த அளவிற்கேனும் ஈழப் பிரச்சினையிலாவது அக்கறையுடன் இருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னொன்றும் என் மனதை உறுத்தியது. ஈழப் பிரச்சினை குறித்து நம் சக எழுத்தாளர்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? பிரச்சினையின் பன்முகப் பரிமாணங்களை இவர்கள் புரிந்து கொண்டு இருப்பார்களா? குறைந்த பட்சமான சில அடிப்படைத் தகவல்கள் - எடுத்துகாட்டாக இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 7.5 சதமுள்ள தமிழ் முஸ்லிம்கள் தம்மைத் தனித் தேசிய இனமாகக் கருதக் கூடிய நிலை உள்ளது- என்பது போன்றவற்றைக் கூட நம் எழுத்தாள நண்பர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். யாழ் பகுதியினருக்கும் கிழக்கு மாகாணத்தினருக்கும் உள்ள கலாச்சார, அரசியல் வேறுபாடுகள் முதலானவற்றையோ, யாழ் சமூகத்தில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை குறித்தோ கூடவும் அவர்கள் கிஞ்சித்தும் அறியார்கள்.

சமீபத்திய போரிலும் கூட ராஜபக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் “சுமார் ஒரு லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்’’ என்கிற ரீதியில்தான் அவர்கள் அறிவார்களே தவிர, விடுதலைப் புலிகளால் 3 லட்சம் தமிழ் சிவிலியன்கள் பாதுகாப்பு அரணாகப் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் நினைத்தும் பார்த்ததில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் ஈழத் தமிழ்ப் பாதிரியார் ஒருவரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தலித் எழுத்தாளர் ஒருவர் ஒரு உயர்ந்த லட்சியத்திற்காக குழந்தைப் போராளிகளைப் பயன்படுத்தினால் என்ன என்று கேட்டார். அவருக்கு முன் நான் பேசியபோது சொன்ன ஒரு கருத்தை மறுக்கத்தான் அவர் இதைச் சொன்னார். கூட்டம் முடிந்த பின் பேசிக் கொண்டிருந்தபோது கட்டாயமாகக் குழந்தைகளைப் பிடித்துச் சென்று போராளிகளாக்குவதாக விடுதலைப் புலிகளின் மீது ஒரு விமர்சனம் இருப்பது தமக்குத் தெரியாது என்றார். சாரு நிவேதிதா ஒரு முறை சொன்னதுதான் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும். பொதுப் பிரச்சினைகஷீமீ குறித்து நம் பொதுமக்கள் அறிந்த அளவையும் விடக் குறைவாகக் தெரிந்தவர்கள்தான் எம் தமிழ் எழுத்தாளர்கள்.

இன்னொரு பக்கம் இணையத் தளங்களில் நாகார்ஜுனன், தமிழவன் முதலானோரின் அதிரடியான ஈழப் போராட்ட ஆதரவு, சரியாகச் சொல்வதானால் விடுதலைப் புலி ஆதரவுக் கருத்துக்கள் இணையத்தள வாசகர்கள் மத்தியில் சில சலசலப்புகளை ஏற்படுத்தியது. இவர்களது தீவிர புலி ஆதரவுக் கட்டுரைகளை எல்லாம் நுனித்து ஆராய்ந்தால் ‘புலிகள் தவறு செய்திருக்கலாம், ஆனால் அதையெல்லாம் பேச இது நேரமில்லை, உள்முரண்பாடுகளைப் பெரிதுபடுத்தி பொது எதிரிக்கான போராட்டத்தை பலவீனப்படுத்திவிடக் கூடாது‘ என்கிற மட்டங்களைத் தாண்டி இவர்கள் பேசவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சரி இதையெல்லாம் பேசுவது ஒரு காலப்பிழை என்று வைத்துக் கொண்டால்கூட புலிகள் வெற்றிமுகத்தில் இருந்த காலத்தில் இவர்கள் இதை எல்லாம் பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், கொலைகள், குழந்தைப் போராளிகளைக் களத்தில் இறக்கிப் பலி கொடுத்தல் ஆகியவை குறித்தெல்லாம் இவர்கள் என்றும் வாயைத் திறந்ததில்லை. இது குறித்து எந்தக் குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு இல்லை.

நாகார்ஜுனனை எடுத்துக் கொண்டீர்களானால் அவர் தமிழ்ச் சூழலை விட்டுவிலகிச் சென்று சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகி விட்டது இடைக் காலத்தில் அவரது பங்களிப்புகள் குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. BBCயில் 10 ஆண்டுகள் இருந்ததாகக் கேள்விப்படுகிறோம். 'ஆம்னஸ்டி'யில் இருப்பதாகவும் அறிகிறோம். மற்றவர்கள் பலருக்கு எளிதில் வாய்த்திராத நிலைகள் இவை. இந்தப் பொறுப்புகளைப் பயன்படுத்தி அவர் தமிழ் மக்களது பிரச்சினைகளை எந்த அளவிற்கு உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றுள்ளார்? ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியச் சூழலிலும் எத்தனையோ மனித உரிமை மீறல்கள், சாதிப் பிரச்சினைகள் எதையாவது விவாதப் பொருளாக்குவதற்கு இவர் என்ன வேனும் முயன்றிருப்பாரா?

திடீரென வந்தார். தமிழ் அறிவுச் சூழல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன்னால் எப்படி விட்டுச் செல்லப்பட்டதோ அப்படியே தேங்கிக் கிடக்கிறது என்பது போல பேட்டிகள் கொடுத்தார். இங்கிருந்தபோது தான் ஏதோ ஒரு தீவிர மாவோயிஸ்டாக இருந்ததுபோல கட்டுரை ஒன்று எழுதினார். நாகார்ஜுனன் இங்கிருந்து செயல்பட்டபோது எழுதிய கட்டுரைகள் சில முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. கூடங்குளம் அணு உலைத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது அவர் செய்த மிகச் சில பணிகளும் குறிப்பிடத்தக்கவை. இது தவிர அவர் இங்கிருந்தபோது இடதுசாரி இயக்கங்களுக்கோ, மனித உரிமைச் செயற்பாடுகளுக்கோ ஆதரவளித்தது கிடையாது. சொல்லப் போனால் எல்லோரையும் போல மார்க்சியத்தை வரட்டுக்கோட்பாடு என்று வாதாடிக் கொண்டிருந்தவர்தான் அவர்.இப்போது உள்ள இந்தத் திடீர் மாற்றம்? எப்படி இதைப் புரிந்து கொள்வது?

இங்கிருந்து நிரந்தரமாகப் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் ‘செட்டில்’ ஆகிவிட்ட நமது 'மேற்சாதி' ( Elitist ) அறிவுஜீவிகளின் மனநிலை குறித்து நான் முன்பே ஒரு சில முறை எழுதியுள்ளேன். அமெரிக்கச் சொகுசு வாழ்வை விட்டு அவர்கள் திரும்பி வர இயலாது. வீடு வாசல்களோடு வாழ்ந்துகொண்டு பிள்ளைகளையும் அமெரிக்க சூழலில் படிக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் அவர்கள். அதே நேரத்தில் அவர்கள் அங்கே இரண்டாம் தரக் குடிமக்கள்தான். இது ஒருவகை உளச் சிக்கலை ( NRI Syndrome) அவர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. தமது மண்ணுக்கு, தமது கலாச்சாரத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வரும் அவர்கள் மிக எளிதாக இங்கு உருவாகி நிலைபெற்றுவிட்ட வலதுசாரி இந்து தேசிய வாதத்தில் சரண்புகுகின்றனர். இங்குள்ளவலது பாசிச அமைப்புகளுக்கு நிதி உதவி, இணையத் தளங்கள் மூலமாக Logistic Support, அமெரிக்க அரசியலில் இத்தகைய இயக்கங்களுக்காக Lobbying செய்வது முதலிய நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ‘திண்ணை’ இணையத்தளம், ‘வார்த்தை’ மாத இதழ், கோபால் ராஜாராம், சிவக்குமார் போன்ற அறிவுஜீவிகள்... இந்நிலையின் சில எடுத்துக்காட்டுகள்.

இப்படியான ஒரு வலதுசாரி ‘இமேஜ்’ ஏற்பட்டு விடாமல் தமது தூர தேச தேசியத்தை ( Long Distance Nationalism) நிலைநாட்டிக் கொள்ளும் ஒரு வழிமுறையாகத்தான் நாகார்ஜுனன் முதலானோரின் இந்தத் தீவிர புலி ஆதரவு நிலைபாட்டைச் சொல்ல முடியும். பல்வேறு அம்சங்களில் இவ்விரு நிலையினரும் எதிர்காலத்தில் ஒத்துப் போவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம்.

பெங்களூரில் ‘செட்டில்’ ஆகிவிட்ட தமிழவனையும் கூட ஒரு வகையில் இவர்களோடு சேர்க்கலாம். ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தால்தான் நவீன தமிழ் வளர்ச்சியே கெட்டுவிட்டது எனவும், அண்ணாவுக்கு சாகித்ய அகாதமி பரிசளிக்கக் கூடாது என முட்டுக்கட்டை போடவும் செய்த இவர் இப்போது எதிர் உச்சத்திற்குச் சென்று அறிஞர் அண்ணா புகழ் பாடுகிறார். 'செய் அல்லது செத்துமடி' என்று சொன்ன காந்தியடிகளின் கூற்றுக்கு விடுதலைப்புலிகள் தான நடைமுறை எடுத்துக்காட்டாம்! இப்படிச் சொன்னதோடு அவர் நிற்கவில்லை. இத்தகைய அரிய கருத்தைத் தனக்குச் சுட்டிக் காட்டிய நாகார்ஜுனனுக்கு நன்றி, நன்றி, என்று பிராக்கெட்டில் ஒரு பிரகடனம் வேறு. சமீபத்தில் நான் ரசித்த நகைச்சுவைகளில் ஒன்று இது. காந்தியையும் பிரபாகரனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க வேறு யாருக்குத் துணிச்சல் வரும். அறியாமை ஒன்றைத் தவிர இந்தத் துணிச்சலின் பின்புலமாக வேறென்ன இருக்க இயலும்?

எங்களூர் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் ( IT Professionals) குறித்தும் எனக்குப் பெரிய மரியாதை கிடையாது. “ Over specialisation cripples a man” என லூனாசார்ஸ்கி ஒரு முறை சொன்னார். தமது துறை சார்ந்த அறிவில் நுணுக்கமாக விளங்கும் இவர்கள் பிற பொதுப் பிரச்சனைகளில் பொதுமக்களின் பொது அறிவு மட்டத்தைக் கூட எட்ட மாட்டார்கள். இவர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் எந்தவித அபத்தத்தையும் யார் வேண்டுமானாலும் எழுதலாம். ‘கீற்று’ என்கிற இணையத் தளத்தில் ஈழப் போராட்டம் தொடர்பான இப்படியான பல அபத்தக்கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகின்றன.

இதை எழுதிக் கொண்டிருந்தபோது ‘கீற்று’ இணையத் தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றைப் பற்றி நண்பர்கள் குறிப்பிட்டனர். புலிகளை விமர்சித்து வருகிற சுசீந்திரன், இராகவன், ஷோபா சக்தி, சுகன் ஆகியோரை கண்டபடி ஏசி எழுதியுள்ள கட்டுரை அது. என்னையும் போகிற போக்கில் திட்டி இருப்பதை ஒட்டி நண்பர்கள் அக்கட்டுரையைப் பற்றி குறிப்பிட்டனர். புலிகளுக்கு எதிராக சுசீந்திரனையும் இராகவனையும் பின்னிருந்து இயக்குவது அகிலன் கதிர்காமராம் (பின்னவர்களை இயக்குவது நானாம்.) இதற்கு என்ன ஆதாரம் என்றெல்லாம் எந்த விளக்கமுமில்லை.

இந்த அகிலன் கதிர்காமருக்கு புலிகள் எதிர்ப்பு நோக்கம் ஏன் உள்ளது என்றால் அவர் புலிகளால் கொல்லப்பட்ட லக்ஷ்மண் கதிர்காமரின் மகனாம். இதுதான் அந்த ‘தத்துவார்த்த’க் கட்டுரையின் அடித்தளம். நானறிந்தவரை அகிலன் கதிர்காமர் லக்ஷ்மண் கதிர்காமரின் மகனல்ல. கதிர்காமர் என்பது தெற்கிலங்கை தமிழ் மேட்டுக் குடியினர் மத்தியில் பயிலப்படும் ஒரு பெயர். அமெரிக்காவில் வாழும் அகிலனின் தந்தை லங்கா சம சமாஜக் கட்சியில் இருந்தவர். அந்த வகையில் ஒரு இடதுசாரிப் பாரம்பரியம் அவருக்கு உண்டு. அகிலனும் கூட மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்புடையவர் என்றே அறிகிறேன். கதிர்காமர் என்கிற பொதுப் பெயரை வைத்து இப்படியான ஒரு தவறான முடிவுக்கு வந்ததை ஒரு தகவல் பிழை என விட்டுவிடலாம். யாருக்கும் நேரக் கூடியதுதான் இது. ஆனால் இப்படியான ஒரு தகவல் பிழையின் அடிப்படையிலேயே ஒரு தத்துவத்தைக் கட்டமைப்பதும், இணையத்தள “எடிட்டர்’’கள் அது குறித்துக் கிஞ்சித்தும் கவலைப்படாமல் அதை வெளியிட்டு மகிழ்வது தான் வேதனை. அதே கீற்று தளத்தில் எனது நட்பிற்குரிய இன்னொரு பத்திரிகையாளர் ராஜபக்ஷேவிடம் காசு வாங்கிக் கொண்டு செயல்படுவதாகக் கூசாமல் சுகனைப் பற்றி எழுதியுள்ளார்.

பொதுவாகக் கடந்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் பொது அறிவு ஜீவித மட்டமே கொஞ்சம் தாழ்ந்துள்ளது என்றுதான் சொல்வேன். உணர்ச்சி அரசியல் எல்லோரது கண்களையும் கட்டிவிட்டது. எந்தவித ஊடக அறமும் அற்ற 'இந்து' ராம் ராஜபக்சே அரசின் அத்துமீறல்களை எல்லாம் நியாயப்படுத்துவது ஒரு பக்கம் என்றால் தமிழ் இதழ்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எந்த அபத்தத்தையும் யாரும் கக்கலாம். சீமான், ஜெகத் காஸ்பர் முதலான புலி முகவர்கள் எழுதும் எத்தகைய அபத்தக் கருத்துகளையும் வெளியிடுவதற்கெனவே ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் முதலான இதழ்கள் காத்திருக்கின்றன. புலிகள் தரப்பிலேயே கூச்சப்பட்டு கண்டிக்கும் அளவிற்கு பழைய புகைப்படங்களை ‘உல்டா’ பண்ணி பிரபாகரன் உயிரோடு இருப்பதை “நிரூபித்து” சில ஆயிரம் பிரதிகள் விற்பனையை அதிகமாக்கிக் கொண்டது நக்கீரன்.

இதனால் அரண்டு போன ஜூனியர் விகடன் மதிவதனி கேரள கடற்கரை வழியாகத் தப்பிப் போனார் என்றொரு கதையை வெளியிட்டு தனது விற்பனையை உயர்த்திக் கொள்ள முயற்சித்தது. தமிழ்த் தேசியம், புலி ஆதரவு மாவோயிசம் பேசுகிற இளைஞர்கள் தமது அறிவு சேகரத்திற்கு இந்த இதழ்களை மட்டுமே நம்பியுள்ளது தான் கொடுமை. நாளிதழ்களைக் கூடத் தேடிப் படிப்பது இல்லை. எஸ்.எம்.எஸ் மூலம் வரும் செய்திகள்தான் இவர்களின் மற்ற ஆதாரம். எஸ்.எம்.எஸ் மூலம் ஈழப் போராட்டம் தொடர்பாக குறைந்தது 25 குறுஞ் செ ய்திகளாவது ஒவ்வொரு நாளும் அனுப்பப்படுகிறது. இவற்றில் பல படு அபத்தமானவை. பல மிகைப்படுத்தப்பட்டவை. பல பொய்யானவை. இவற்றை நம்பிச் செயலில் இறங்கும் பரிதாபங்களும் ஏராளம். வேறு காரணங்களுக்காகச் சென்று கொண்டிருக்கும் இராணுவ லாரி ஒன்றை இலங்கை இராணுவத்திற்கு ஆயுதம் கொண்டு செல்வதாக நம்பி தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்தச் செய்திகள் சில விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ‘‘தவறான செய்திகளின் அடிப்படையில் இப்படி நடந்துவிட்டது’’ எனப் பிறகு நீதிமன்றங்களில் பிணை விடுதலைக்காக விண்ணப்பிக்கும்போது இவர்கள் வாக்குமூலம் அளிப்பது வேதனைக் காட்சி.

ஒருநாள் இரவு 12:30 மணி இருக்கும். படித்துக் கொண்டிருந்தேன். சேலத்தைச் சேர்ந்த எனது பிரியத்திற்குரிய இளம் வழக்கறிஞர் ஒருவர் எஸ்.எம்.எஸ் ஒன்று அனுப்பியிருந்தார். ஈழ ஆதரவு நிலைப்பாட்டிற்காக மக்கள் தொலைக்காட்சி அப்போது தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகக் குறுஞ்செய்தி. உடனடியாக நண்பர்களிடம் தொடர்பு கொண்டு அங்கே போவதற்காக ஆயத்தம் செய்தேன். செய்தி அறிந்த நண்பர் ஒருவர் தோழர் கஜேந்திரனிடம் தொடர்பு கொண்ட போது அப்படி ஏதும் இல்லையே என்றார். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தன.

இப்படி எத்தனையோ சொல்லலாம். சுமார் நான்கு மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி ஒன்று. மதுரை மேலவளவு கிராமத்தில் வழக்குரைஞர் இரத்தினம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றிற்கு நானும் சுகுமாரனும் சென்றிருந்தோம். மதியம் 2 மணி இருக்கும். ஏகப்பட்ட குறுஞ்செய்திகள் செல்போன் திரைகளை அப்பின. வன்னியில் அணைக்கட்டு ஒன்றை புலிகள்உடைத்து 5000 சிங்கள இராணுவ வீரர்கள்பலி என்பதுதான் அச்செய்தி. கோத்தபய ராஜபக்ஷே, ஃபொன்சேகா முதலியோர் சுடப்பட்டு விட்டதாகவும், இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து செய்திகள். எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. ஒரே கொண்டாட்டம். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அவ்வாறே நடந்து கொண்டிருப்பதாக அறிந்தோம். கோவையில் ஒரு மரியாதைக்குரிய திராவிட இயக்கத் தலைவர் லட்டுகள் வழங்கிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து ஒரு நண்பர் தொடர்பு கொண்டு தகவல் உண்மைதானா என வினவினார். சென்னையில் உள்ள பத்திரிகையாள நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அங்கும் இப்படியே செய்திகள் பரப்பப்படுவதாகவும், வேறு ஆதாரபூர்வமான தகவல் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

அந்த நேரத்தில் லண்டனிலிருந்து நண்பர் இராகவன் வேறொரு தகவலுக்காகத் தொடர்பு கொண்டார். இங்கே உலவும் செய்தியை அவரிடம் பகிர்ந்து கொண்டபோது சிரித்தார். தாம் அந்த இடத்தில் இருந்து செயல்பட்டிருப்பதாகவும், அது அணைக்கட்டு அல்ல, ஒரு சிறிய ஏரி எனவும், அந்த ஏரி உடைக்கப்பட்டு மரணம் ஏற்படுமானால் 3 வயதுக்கும் மிகாத குழந்தைகள் வேண்டுமானால் செத்துப்போகலாம் எனவும் குறிப்பிட்டார். எனினும் அடுத்தநாள் வரை எஸ்.எம்.எஸ்கள் பறந்து கொண்டுதானிருந்தன.

சுருக்கம் கருதி நிறுத்திக் கொள்கிறேன். கடைசியாக ஒன்று: இரு மாதங்களுக்கு முன்னர் கிறிஸ்துவப் பாதிரிமார்கள், போதர்கள், கன்னியர் எல்லோரும் இணைந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அதைத் தொடங்கி வைக்கவும் முடித்து வைக்கவும் என்னையும், புலிகளுக்கு எப்போதும் ஆதரவாக உ ள்ள ஒரு மூத்த பேராசிரியையும் அழைத்திருந்தனர். எனக்கு முன் பேசிய அந்த அம்மையார் வழக்கம்போல பல்வேறு கதைகளை எடுத்து விட்டுக் கொண்டே இருந்தார். மன்மோகன்சிங் கொழும்புக்கு ‘சார்க்’ மாநாட்டுக்காகச் சென்றபோது பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் சென்றார்களே,அவர்கள் ஏன் திரும்பி வரவில்லை என்றொரு அதிரடியான கேள்வி ஒன்றை அங்கே அவர் உதிர்த்தார். பல்லாயிரக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் தமிழர்களைக் கொன்று கொண்டிருப்பதாகவும், சுமார் 500 இந்திய இராணுவ வீரர்களின் உடல்கள் டெல்லிக்கு முன் தினம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறிய அவர், சென்னையில் உள்ள ஒரு இராணுவ மருத்துவமனையைச் சொல்லி அதில் இலங்கையில் படுகாயமுற்ற 122 இந்திய இராணுவ வீரர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
சொன்னார். தான் சொல்கிற செய்திகள் ஆதாரபூர்வமானவை எனவும் வலியுறுத்தினார். பல்வேறு வகைப்பட்ட ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்த தாங்கள் ஏன் அந்த மருத்துவமனையை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றைச் செய்ய முனையவில்லை என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை.

மறைக்கப்பட்ட தகவல்கள், மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் மூலமாகவே கடந்த ஆறு மாத காலமாக இங்கே ஈழ ஆதரவு உணர்ச்சி அரசியல் கொடிகட்டிப் பறந்தது. கொளத்தூர் மணி முதல் பழ நெடுமாறன் வரை யாரும் இதற்கு விதிவிலக்கில்லை. இவர்களின் தவறான அறிவுரைகளை நம்பியது புலிகளின் வீழ்ச்சிக்கான இறுதிக்காரணமாக அமைந்தது என்று இரு மாதங்களுக்கு முன் ஒரு தமிழ் சஞ்சிகையில் எழுதியிருந்தேன். அதற்கு ஏராளமான ஆதாரங்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளன. புலிகளின் எந்தத் தவறுகளையும் விமர்சிக்காததன் மூலம் புலிகளை மேலும் மேலும் தவறுகளுக்குத் தூண்டியவர்கள் இவர்கள். அப்பாவி மக்களைத் தப்ப விட்டுவிட்டுச் சரணடையுங்கள் என்கிற அறிவுரையை எல்லாம் முடிவதற்கு இரண்டு மாதங்கள் முன்பே இவர்கள் புலிகளுக்குச் சொல்லியிருந்தார்களேயானால் இன்னும் சில ஆயிரம் தமிழ் மக்கள் மரணத்திலிருந்து தடுக்கப்பட்டிருப்பர். புலிகளின் தலைமையும் கூடத் தப்ப வாய்ப்பிருந்திருக்கும். எமது புலி முகவர்கள் இப்போதும் திருந்திய பாடில்லை. புலி ஆதரவு இயக்கமொன்றின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள குறு நூலொன்றின் தலைப்பு : ‘‘பிரபாகரன் தப்பியது எப்படி?’’

நன்றி: புதுவிசை

Wednesday, June 10, 2009

அந்த நெருப்பு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது
















இது ஒரு மீள்பதிவு. சுந்தரோடும் அய்யனாரோடும் சண்டை பிடித்துத் திரிந்த தருண இடைவெளியின்போது எழுதியது. சமயங்களில் நமது பதிவுகளைச் சிறிதுகாலத்தின் பின் வாசிக்கும்போது சில பதிவுகள் நமக்கே ஆச்சரியமூட்டுபவை. இந்த பதிவும் அப்படியான ஒன்று. நாஜி வதைமுகாமொன்றில் வதைக்கப்பட்டு மீண்ட எலிவீஸல் என்பவர் தனது அனுபவம் குறித்துப் பகிர்ந்தது தமிழினிப் பதிப்பகத்தின் வெளியீடாய் 'இரவு" என்னும் நூலாய் வந்திருந்தது. ஒவ்வொரு ப‌க்கமும் மரணத்தின் வாதையைச் சுமந்தவை. அந்த நூலைப் படித்தபோதிருந்த மனநிலையே இப்பதிவு. முன்பு இப்பதிவைப் படிக்க வாய்ப்பற்ற வாசகநண்பர்களுக்காக இம்மீள்பதிவு. மேலும் ஈழத்து வதைமுகாம்களில் தமிழர்கள் வதைபடுவதையும் இங்கு ஒப்புநோக்கலாம். இந்த பதிவு ஜ்யோவ்ராம்சுந்தருக்குச் சமர்ப்பணம்.

இப்போது நான் யாருடனுமில்லை. யாரும் இப்போது என்னுடனுமில்லை. இப்போது இருப்பதெல்லாம் எலிவீசலின் இரவு. இரவுகளைக் கொன்ற இரவு. தூக்கத்தின் மீது புரண்டெழுந்த இரவு. கனவுகளில் ஒரு மிருகத்தைப்போல் துரத்திய இரவு.எலீ இப்போது தன்னந்தனியாய் ஓடிக்கொண்டிருக்கிறான். அவன் தங்கை ஜிபோரா எங்கிருக்கிறாள் தெரியவில்லை. அந்த நாஜிவதை முகாமின் புகைக்கூண்டில்தான் என் அடிவயிற்று மாமிசம் எரிகிறது எலீ. இரவு, அந்த இரவு, இது வெண்ணிற இரவல்ல, ஒரு புகைமூட்டம்போல் குழம்பிய கருப்பு இரவு. அந்த கடைசி இரவில்தான் புகைவண்டியில் மிருகங்களைப் போல் மனிதர்கள் அடைக்கப்பட்டிருந்த புழுக்கமும் வியர்வையும் நிரம்பிய அந்தப்புகைவண்டியில்தான் அவள் ஓயாது குரலெழுப்பிக்கொண்டிருக்கிறாள். தீ...தீ. மோசோ கிழவன் சொன்னதில் தவறில்லை. நீ இப்போது கப்பாலாவைக் கைவிட்டிருந்தாய். உன் கடவுள் எரியும் ஒவ்வொரு சடலத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். யார்கண்டது? பிணங்களைப் புதைக்கும் வேலையை அவர் ஏற்றிருக்கக்கூடும். ஆனால் எலீ தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை, அது காற்றைப் போல், நதி போல், கண்ணீர் போல், முத்தம்போல் நில்லாது பரவுகிறது. நெடுநாட்களுக்குப்பின் அந்தத் தீ மய்யத்தை அடைந்தபோது அது ஒரு சிம்மாசனத்தின் தோற்றத்தை அடைந்திருந்தது. பிறகு அது ஆலிவ் இலைகளை ருசித்து உண்டது. அந்த நெருப்பு ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது. காலத்தின் மகுடிஓசையில் அது நெளிந்து நடனம் ஆடியது. அது ஒரு அழகிய நடனம் என்று சொல்வதிற்கில்லை. இப்போது பாம்பு யுகங்களின் மீது ஒரு மலைப்பாம்பைப் போல் புரண்டு எழுகிறது. பல நூற்றாண்டுகளை விழுங்கி அதன் வயிறு வீங்கியிருந்தது. முன்னொரு காலம் இந்தத் தீ அரச இலையின் வடிவத்திலிருந்தது. அதன் நிறமோ மஞ்சள். அது ஒரு மாங்கனியைப் போல் மஞ்சள்பூத்திருந்தபோது தீ இனிது, தீ இனிது. மஞ்சள். தர்மசக்கரத்தை உருட்டியபடி அரசமரத்தின்கீழ் அமர்ந்திருந்த புத்தன் மஞ்சளாடை அணிந்திருந்தான். மாசுமருவற்ற மனமுடையோரே மஞ்சளாடை உடுத்தத்தக்கவர். புத்தன் புன்னகத்தான். தீ சிரித்தது. பின்னாளிலும் புத்தன் புன்னகைத்ததாய்ச் சொல்லப்படட்து. அப்போது தீ அணுகுண்டாய் வெடித்தது யதீ, உண்மையில் புத்தன் புன்னகைக்கவில்லை. அவன் வாயில் குறி திணிக்கப்படட்து என்பதே உண்மை. பின்னும் பின்னுமான ஒரு பென்னம் பெருநாளில் தீயின் நிறம் காவிக்கு மாறியிருந்தது. குரங்கின் வாலிருந்த தீ ஒரு நூலகத்தை விழுங்கி முடித்திருந்தது. வரலாற்றின், ஞாபகங்களின் சாம்பல்களை துவராடை அணிந்த துறவியர் அள்ளிச்சென்றனர். ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க விருப்பம் தெரிவித்தனர். இப்போது பிக்குகளின் வாலிலிருந்த தீ புத்தனை எரித்திருந்தது. காலத்தினிடுக்குகளில் ஒரு அகதியின் ரகசியப்பாடல் போலவும், ஒரு தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பு போலவும் தீ ரகசியமாய்க் கசிந்தது. தீ நாயின் நாக்கைப் போன்று சிவந்திருந்தது. இப்போது தீயின் நிறம் சிவப்பு. பாலற்று குழந்தை சப்பியதால் ஜென்னியின் மார்புகளில் வழிந்த ரத்ததைப் போல் சிகப்பு. ஜென்னி தன் இடதுமுலையை அறுத்து எறிகிறாள். தீ பரவுகிறது. பிரியத்திற்கும் பிரியமான மார்க்ஸ், தயவு செய்து உன் மேல்கோட்டைக் கழற்றாதே, குளிர் உன்னைக் கொன்றுவிடும் மார்க்ஸ்... ஒரு தீயைப் புசித்து தீயைப் பிரவசித்திருந்தாய் மார்க்ஸ். உன் நெருப்புத்துண்டுகள் நாங்கள் வாழுமிடத்திற்கு வந்து சேர்ந்தபோது அதன் வடபகுதி நீலமாகவும் தென்பகுதி கருப்பாகவுமிருந்தது. முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ, மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ... தீ தீயோடு சேர்ந்து தீயாகிறது மதி, இப்போதும் நெருப்பின் தலை ஒரு சர்ப்பத்தைப் போல இருக்கிறது. ஆனாலும் மகுடியைக் கைப்பற்ற வேன்டிய வேலையிருக்கிறது நண்பர்களே. போராளிகளை உலகம் கைவிட்டிருக்கலாம். போராளிகள் உலகத்தைக் கைவிட்டதில்லை என்னும் மகாவாக்கியத்தின் அர்த்தம் தெரியும் வரை தீ மயங்கி ஆடட்டும். என் மணிக்கட்டு, தொடையெலும்பு, பச்சையாய் ஒழுகும் நிணம், 16 பற்கள், பழுப்புநிற மீசைமுடி, என அனைத்தையும் தீ தின்கிறது. ஆனாலும் தீ மடிவதில்லை நானும்கூடத்தான். இப்போதைக்கு நான் மரித்திருக்கிறேன். தீ என்னைப் புசித்து முடித்து நீ கூந்தல் அவிழ்ப்பதைப் போல சாம்பல்துகளாய் அவிழ்ந்திருக்கிறது. என் கல்லறையில் பூத்திருக்கின்றன சாம்பல்நிற மலர்கள். குட்டிம்மா, நீ கண்களை அகல விரித்துச் சிரிக்கிறாய். உன் கண்களில் உருள்கிறது சாம்பல்நிறக் கண்மணி.

Saturday, June 6, 2009

அஞ்சலி - ராஜமார்த்தாண்டன்

தமிழின் மிகமுக்கியமான இலக்கிய விமர்சகர்களில் ஒருவரும் இலக்கிய நட்புகளை தொகை தொகையாய்ப் பேணுபவருமான ராஜமார்த்தாண்டன் விபத்தில் சிக்கி மறைந்துவிட்டார். தமிழினி பதிப்பகத்திற்காக பாரதிக்குப் பிறகு தமிழின் முக்கியமான 150 கவிஞர்களின் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து ‘கொங்குதேர் வாழ்க்கை‘ என்னும் பெயரில் புத்தகமாய்க் கொண்டு வந்தார். அந்த 150 கவிஞர்களில் நானும் ஒருவன். அதற்காக அனுமதி கேட்பதற்காகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தார். அப்படித்தான் ராஜமார்த்தாண்டன் பரிச்சயம். பிறகு தினமணி அலுவலகங்களில் ஓரிருமுறை. ஒருமுறை ராயப்பேட்டை மேன்ஷனில் அவரைப் பார்க்கச் சென்றபோது இரண்டு கட்டில்கள் அவர் அறையில் இருந்தன. இரண்டு கட்டில்கள் நிறைய புத்தகங்கள். அவரோ மதுவருந்தி விட்டு தரையில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். பலமணி நேரம் காத்திருந்தும் அவர் எழுவதாகத் தெரியவில்லை. அனேகமாக நான் வந்துபோனதே அவருக்குத் தெரிந்திருக்காது. ராஜமார்த்தாண்டன் தொகுத்த அந்த கவிதைத்தொகுப்பு குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. யவனிகாசிறீராம், என்.டி.ராஜ்குமார் போன்ற பல கவிஞர்களின் கவிதைகளை அவர் நிராகரித்திருந்தார் என்பதுதான் காரணம். நான் அதிகமும் அறிமுகமாகாத கவிஞன் மற்றும் காலச்சுவடிற்கு எதிராக எழுதி வந்தவன் என்றபோதும் எனது கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்திருந்தது அவரது நடுவுநிலைமைக்குச் சாட்சி. விக்கிரமாதித்யனைப் போலவே தமிழ்ச்சூழலில் ஏராளமான நண்பர்களைக் கொண்டிருந்த ராஜமார்த்தாண்டனை இழந்தது எல்லா இலக்கிய நண்பர்களுக்குமான இழப்பு. நண்பர்களுக்கான வருத்தங்கள்.

Thursday, June 4, 2009

வெறுப்பைக் கட்டமைக்கும் லக்கிலுக்

சமீபமாக வலையில் அதிகம் பதிவதற்கான அவகாசமும் மனநிலையுமில்லை. என்றபோதும் விடாமல் அவ்வப்போது பதிவுகளை வாசிப்பதுண்டு. ஈழப்போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவைச் சந்தித்து இலங்கை அரசின் வதைமுகாம்களில் மிச்சமிருக்கும் தமிழர்கள் உயிரோடு இருக்கும் பாவத்தாலேயே ஆகக்கீழான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிற தருணங்களில் கம்ப்யூட்டரும் கீபோர்டும் இருக்கிறது என்பதற்காக எழுதித்தள்ளப்படுகிற படு அபத்தங்களை வாசிக்க நேர்கையில் ஆயாசமே எஞ்சுகிறது.

நக்கீரனின் ‘பொறுக்கித்தனம்’ குறித்து பைத்தியக்காரன் எழுதிய பதிவு, ஈழப்போராட்டத்தில் ‘அகிம்சையின் முக்கியத்துவம்’ குறித்து சாருவும் ஜெயமோகனும் உதிர்த்த அபிப்பிராயங்கள், தமிழ்நதியின் எதிர்வினைப் பதிவு, சாருவின் மீதான விமர்சனப்பதிவுகள், சாருவை ஆதரித்த பதிவுகள் என தொடர்ந்து நேற்றோ அதற்கு முதல்நாளோ லக்கிலுக் எழுதிய ‘இப்போது வருந்துகிறோம்’ பதிவு.

கொஞ்சம் கொஞ்சமாக அபாயம் அதிகரித்து இப்போது வெறுப்புணர்வு உச்சத்தை எட்டியிருக்கிறது என்றே நினைக்கத்தோன்றுகிறது லக்கியின் பதிவையும் அதற்கிடப்பட்ட பின்னூட்டங்களையும் நோக்கும்போது. சாரு எழுதியிருப்பதைப் போல அகிம்சைப்போராட்டம்/ ஆயுதப்போராட்டம்தான் சரி என்றெல்லாம் கறுப்பு வெள்ளையாக பிரச்சினைகளை அணுகமுடியாது. மேலும் புலிகள் தவறு செய்திருக்கிறார்கள், இத்தகைய பாரிய தோல்விகளுக்கு புலிகள் இழைத்த தவறுகளும் ஒரு காரணம் என்பதெல்லாம் உண்மையென்றாலும் ஒரு விடுதலைப்போராட்டமே தவறு என்று சொல்வது எந்த நியாயத்தில் சேர்த்தி, அதுவும் அது பின்னடைவைச் சந்தித்திருக்கும் நேரத்தில்.

சாரு, காந்தி குறித்து எழுதிய கருத்துக்களைப் பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக உரையாடலாம். ஆனால் ஜெயமோகன் குறித்து தமிழ்நதி எழுதியதை யாரும் பெரிதாகக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை. மீண்டும் விவாதங்கள் சாருவை ஆதரித்தும் எதிர்த்தும் சாருவை என மய்யப்படுத்தியே நிகழ்ந்தன. உண்மையில் ஜெயமோகன் ஒரு காமெடி பீஸ். அவர் சீரியசாகப் பேசுகிற பல விஷயங்கள் மிக மிக மேலோட்டமானவை. ஏதாவது உளறி, ஆனால் அது உளறல் என்று தெரியாத அளவிற்கு ‘தத்துப்பித்து தத்துவ’ முலாம் பூசுவதாலேயே அது படு பேமஸாகிவிடுகின்றன. காந்தி குறித்து ஜெமோ உதிர்த்த முத்துக்களும் அப்படியே.

உதாரணமாக காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான முரண் குறித்து அவர் சொல்கிற கருத்துக்கள் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன்னால் காந்தியாலேயே முன்வைக்கப்பட்டது. அம்பேத்கரால் அது பலமாக மறுக்கப்பட்டது. ‘தலித்துக்களுக்கு இரட்டை வாக்குரிமை தந்துவிட்டால் தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று காந்தி ‘கருதினாராம்’. அவருடைய நிலைப்பாடு சரியாக இருந்ததனால்தான் காங்கிரஸ் இட ஒதுக்கீடை அங்கீகரிக்கும் அளவுக்காவது இப்போதுவரை இறங்கிவந்திருக்கிறதாம்’.

அட லூசுகளா! கருதினார் என்ன கருதினார்? காந்தி வெளிப்படையாகவே சொல்லவே செய்தார், ‘‘முஸ்லீம்களும் சீக்கியர்களும் தங்களுக்கான தனிவாக்காளர்தொகுதி கேட்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் கேட்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை’’ என்று. தலித்துகள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற அபத்தமான வாதத்திற்கு அம்பேத்கர் மிகத் தெளிவாகவே பதில் சொன்னார், ‘இப்போது மட்டும் என்ன வாழுகிறது?’ என்று. தனி கிணறு, தனிச்சுடுகாடு, தனி வாழ்விடம் என்றெல்லாம் தனியாக ஒதுக்கிவிட்டு தனி வாக்காளர் தொகுதி கேட்டால் மட்டும் ‘அய்யோ தனிமைப்பட்டுப் போய்விடுவீர்கள்’ என்று பாசாங்கு செய்வது உச்ச அயோக்கியத்தனம்!

ஜெயமோகன் வாதப்படியே இட ஒதுக்கீடு கொடுத்தால் மட்டும் ‘தனிமைப்பட்டு விட மாட்டார்களா’ என்ன? ஆக, இந்த மாதிரியான பிரதிவாதங்கள் எல்லாம் பல தசாப்தங்களுக்கு முன்பே நடந்து முடிந்த சமாச்சாரங்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகளே தெரியாமல் ‘பி.தொ.நி.கு’ என்று ஒரு குப்பையை எழுதுவது, காந்தி, சேகுவாரா, எம்.ஜி.ஆர், சிவாஜி, ஆர்யா, சூர்யா என்று சகட்டுமேனிக்கு அபிப்பிராயங்களைக் கழிந்து செல்வது என இப்படியான முட்டாள்தனங்கள் நிகழ்வதற்கு ஜெமோ மட்டுமே காரணமில்லை. படிக்கிற வாசகி/கன் கூமுட்டையாக இருந்தால் ஜெமோ என்ன வேண்டுமானாலும் உளறலாம்தானே!. தனக்கு நன்கு தெரிந்த விஷயத்தில் ஜெயமோகன் உளறத்தொடங்கும்போது மிக எளிதாக அம்பலப்பட்டுப்போகிறார்.

ஜெயமோகனின் வக்கிரமும் அபத்தமும் கடைசியாக செத்துப்போன கமலாதாஸ் சுரையாவையும் விடவில்லை. ‘அவர் கறுப்பாக, குண்டாக, அவலட்சணமாக இருந்ததால்தான் பாலியல் பற்றி எழுதினார்’ என்பது ஜெமோவின் ‘கண்டுபிடிப்பு’. கமலாதாஸ் குறித்த கட்டுரையில்கூட இஸ்லாம் குறித்த வெறுப்பைக் கக்கியுள்ளார் பாருங்கள். கமலாதாஸ் இஸ்லாத்திற்கு மாறியதும், இறுதிக்காலத்தில் அதிலிருந்து வெளியே வர விரும்பியதும் பலரும் அறிந்ததுதான். ‘‘எனக்கு மதம் அலுத்துப்போச்சு’ என்றுகூட கமலாதாஸ் சொல்லியிருக்கிறார். ஆனால் அவர் இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறக்கூடாது என்று ‘ரகசியமாக’ மிரட்டல்கள் வந்ததாலேயே அவர் மறுமதம் மாறவில்லையாம்! ‘இந்துக்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள், ஆனால் இஸ்லாமியர்களோ கொடூரமானவர்கள்’ என்று சொல்லாமல் சொல்கிறார் ஜெமோ. ‘ரகசியமாக’ மிரட்டப்பட்டது ஜெயமோகனுக்கு மட்டும் எப்படி தெரியவந்தது என்று தெரியவில்லை.

ஆக இத்தகைய வெறுப்பின் மனநிலை இப்போது லக்கிலுக்கிற்கும் ‘பிரமாதமாக’ கைகூடி வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்குப் பதிலாக ஈழத்தமிழர்கள் என்று வெறுப்பின் இடம் மட்டும் மாறியிருக்கிறது. ‘ராஜீவ்காந்தி கொலையின்போது திமுக கொடிக்கம்பங்கள் வெட்டிச்சாய்க்கப்பட்டன, திமுகவினர் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதனால் அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு’ என்று சின்னப்புள்ளத்தனமாக வரலாற்றின் கணிதத்தைச் சமன் செய்கிறார் லக்கி. அதை விட மோசம் ஈழத்தமிழர்கள் x இந்தியத்தமிழர்கள் என்கிற மோசமான முரணையும் அவரது எழுத்துக்கள் கட்டமைக்கின்றன.

ராஜிவ் கொலையின்போது நிகழ்ந்த வன்முறைகளும் காலித்தனங்களும் தமிழகம் நன்கு அறிந்ததுதான். அதற்காக ஒரு இனப்படுகொலையின்போது வாளாவிருப்பது என்ன நியாயம் என்று புரியவில்லை. லக்கியின் வாதங்களையே ஒத்துக்கொண்டால் கூட, லக்கி மனச்சாட்சிப்படி பதில் சொல்லட்டும். அந்த கலவரங்களால் பாதிக்கப்பட்ட திமுககாரர்கள்தானா இப்போது அதிகாரத்தின் ருசியை அனுபவித்துக்கொண்டிருக்கிறப்பவர்கள்?

மிசா, தடா, ராஜீவ் கொலையை ஒட்டி நிகழ்ந்த கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின்போது அரசின் ஒடுக்குமுறையைச் சந்தித்தவர்கள் இவர்கள்தானா லக்கி இப்போது திமுகவின் உள் மற்றும் வெளி பதவிகளை நிரப்பிக்கொண்டிருப்பவர்கள்? ஒரு ஊழல்மயப்பட்ட தலைமுறை அதிகாரத்தை ருசிப்பதற்காகத்தான் கடந்த தலைமுறையின் தியாகங்கள் பலியாக்கப்பட்டிருக்கின்றன. இப்போது திமுக தலைமையால் மீண்டும் மீண்டும் தியாகங்கள் ‘சொல்லப்படுகின்றனவே’ தவிர மதிக்கப்படுவதில்லை. திமுக தனக்கான எல்லா அடிப்படைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறது. அதன் உச்சம் ஈழப்பிரச்சினை என்பதைக் கொஞ்சமும் மனச்சாட்சியுள்ள திமுககாரன் அறிவான். ஈழத்தமிழர்கள் மீதான லக்கியின் இத்தகைய பதிவுகள் ஒரு மோசமான பாசிச மனநிலையைக் கட்டமைக்கும் தன்மை வாய்ந்தவை. தான் சார்ந்திருக்கிற கட்சிக்கு இருக்கக்கூடிய ‘இக்கட்டுக்களையும்’, ‘நிர்ப்பந்தங்களையும்’ வரலாற்று நிகழ்வுகளை முன்பின்னாக மாற்றிப்போட்டு நியாயப்படுத்துவது நீதியாகாது.

இந்திராகாந்தி கொலையையட்டி கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்குக் காரணம் யார் என்பதை சீக்கியர்கள் நன்றாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள் என்பதன் சாட்சியம்தான் அந்த கனத்த சப்பாத்து. ஆனால் ‘ஒட்டுமொத்த தமிழர்களையுமே கொலைகாரர்களாக்கிய’ ஜெயின்கமிஷன் அறிக்கையையும் அதைக் காரணமாய் வைத்து திமுக ஆட்சியைக் கலைக்க வைத்த காங்கிரசையும் நோக்கித்தான் லக்கியின் கோபம் திரும்பியிருக்க வேண்டும். அல்லது அத்தகைய மோசமான நிலைப்பாடுகளை மேற்கொண்ட காங்கிரசுடன் உறவைத் தொடர்வதற்காக எத்தகைய சமரசங்களையும் மேற்கொள்ளத் தயாராயிருக்கும் தன் கட்சித்தலைமையின் மீது திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அது அநியாயமாக ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பை உற்பத்தி செய்கிறது.

நண்பர் லக்கிக்கு, சில அபத்தமான நிகழ்வுகளை, (ஈழப்போராட்டத்தின் பின்னடைவிற்குப் பிறகு, மிக மிகச் சமீபத்தில் நிகழ்ந்தவை) எந்த மேற்கத்திய அறிஞரின் பெயர் உதிர்த்தலுமின்றி, செய்தித்தாள்களில் இருந்தே வரிசைக்கிரமமாக முன்வைக்கிறேன். கணக்கு சரியாகிறதா என்று பாருங்கள்.

1. ‘இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் கொண்டு வரும் தீர்மானத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கக்கூடாது’ சென்று கருணாநிதி பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார்.

2. இந்தியா இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தான் வாக்களித்தது மட்டுமில்லாமல், இலங்கைக்கு ஆதரவாக ஏனைய நாடுகளையும் அணிதிரட்டுகிறது.

3. ‘மாநிலச்சுயாட்சிக்காகப் பாடுபடுவதுதான் தன் பிறந்தநாள் செய்தி’ என்று அறிவிக்கிறார் மு.கருணாநிதி.

முத்தமிழே நீ வாழ்க! மூவேந்தே நீ வாழ்க! வாழ்க!
குளிர்மதியே நீ வாழ்க! குறள்வழியே நீ வாழ்க! வாழ்க!

சுபம்

Thursday, April 30, 2009

போடுங்கம்மா ஓட்டு!

’’ஈழத்தமிழர்களின் படுகொலைக்குக் காரணமான காங்கிரஸ் & திமுக கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டுமானால் ஜெயலலிதா கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும்’’ என்கிற ‘தர்க்கபூர்வமான’ முடிவை முன்வைக்கும் மின்னஞ்சல்களால் அஞ்சல்பெட்டி நிரம்பி வழிகிறது. இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்தவனில்லை என்றபோதிலும் ஒருமுறை கூட இரட்டை இலைக்கு வாக்களிக்காதவன் என்ற காரணத்தாலோ என்னவோ ஒரு மனத்தடை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதிமுகவிற்கு வாக்களிப்பது என்பது ஒரு உலகமகா பாவச்செயல் அல்ல, ‘‘விடிவுமில்லே, முடிவுமில்லே’’ என்ற ஈழமக்களின் ஓலம் கேட்டு மனம் பிசைபவர்கள் இத்தகைய முடிவு எடுப்பதில் ஒன்றும் தவறில்லைதான் என்பது பகுத்தறிவிற்குத் தெரிந்தே இருக்கிறது.

கருணாநிதி தன் வாழ்நாளில் இந்தளவுக்கு அம்பலப்பட்டிருப்பதோ, அசிங்கப்பட்டிருப்பதோ இதற்கு முன்னும் நடந்ததில்லை. இதற்குப் பின்னும் நடக்கப்போவதில்லை. ஜெயலலிதாவை மட்டுமே பாசிஸ்ட் என்று சொல்லிப் பழகிய நம்மைக் கருணாநிதி அரசின் பாசிசத்தனமான ஒடுக்குமுறைகள் நிறையவே யோசிக்க வைத்திருக்கின்றன. ஈழப்பிரச்சினை குறித்து நோட்டீஸ் கொடுத்தவர்கள், ராயப்பேட்டையில் அதிமுக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பெரியார் தி.க தோழர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ப.சிதம்பரத்திற்கு எதிராக சிவகங்கையில் தேர்தலில் நிற்கும் மாணவர்கள் துண்டுப்பிரச்சாரம் கொடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வேட்பு மனுத்தாக்கலின்போது, ‘ஸ்டாப் தி வார்’ பனியன் அணிந்து சென்றதைக் கடுமையாய் எதிர்த்து வாதிட்டிருக்கிறார் கார்த்திக்சிதம்பரம். ஆக மொத்தம் அம்பலப்பட்ட பாசிஸ்டாகிய கருணாநிதியை எதிர்க்க, அறியப்பட்ட பாசிஸ்ட் ஜெயலலிதாவை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உந்தப்பட்டிருக்கிறார்கள்.

அப்பட்டமான உலகமயச் சார்பு எடுத்ததால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிகள், தொகை தொகையாய் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ள அபாயம், பக்கத்து மாநிலமான கர்நாடகம் வரை வந்துவிட்ட இந்துத்துவப் பாசிசம் என பல பிரச்சினைகள் இருக்கும்போது, ஈழப்பிரச்சினை மட்டும்தான் இந்த தேர்தலின் மய்யப்பிரச்சினையா என்கிற கேள்வியைக் கூட ஒருபுறம் ஒத்திவைப்போம். ஆனால் ஈழப்பிரச்சினையின் அடிப்படையிலேயே இந்த தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பு, சில எதார்த்த நிலைமைகளைப் பரிசீலிக்க வேண்டியுள்ளோம்.

இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும் சென்னை மாதிரியான பெருநகரங்கள் மற்றும் நமது இணையத்தளங்களைத் தாண்டி, தமிழகத்தின் பிற பகுதிகளில், குறிப்பாக கிராமப்புறப் பகுதிகளில் இலங்கைப்பிரச்சினை தேர்தலின் தீர்மானகரமான பிரச்சினையாக இல்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. உண்மையிலேயே இலங்கைப்பிரச்சினை, தேர்தலில் வாக்குகளை வாங்கித்தரும்,. அல்லது வாக்குகள் விழுவதைத் தடுக்கும் என்பதுதான் எதார்த்தமென்றால் காங்கிரஸ் கூட்டணியை உதறித் தள்ளிவிட்டுக் கருணாநிதியும் ஈழ ஆதரவுப் பஜனைகளில் கலந்துகொள்வார் என்பதுதான் உண்மை.

கருணாநிதியைச் சற்றுத்தள்ளி வைப்போம். தேர்தலுக்கு முன்பே ஈழப்பிரச்சினை குறித்துக் கதையாடிய சி.பி.அய், பா.ம.க, மதிமுக, வி.சி ஆகிய அமைப்புகள் கூட ஈழ ஆதரவை மய்யமாக வைத்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கிட முன்வரவில்லை என்பதிலிருந்தே ஈழப்பிரச்சினைக்காக விழும் வாக்குகளின் சதவிகிதம் மிக மிகக் குறைவுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆகக்குறைந்தது ஈழப்பிரச்சினையை ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கூட மாற்ற இயலாத குற்றம் யாருடையது? முத்துக்குமாரின் மரணத்தின்பின் தமிழகத்தில் நிகழ்ந்த எழுச்சிகள் நாம் மறக்கக்கூடியவையல்ல. அத்தகைய எழுச்சிகளைத் தமிழகம் கண்டே நெடுநாட்களாகிவிட்டன. இனி காண்பதற்கான காலமும் அருகில் இல்லை. குறிப்பாக மாணவர்களும் வழக்கறஞர்களும் தமக்கான அடையாளங்களோடு இப்போராட்டங்களில் பங்குபற்றினர். இவ்விரு தரப்பினரின் போராட்ட உணர்வுகளைச் சிதறடித்து ஒடுக்குவதற்காக திமுக அரசு ‘சிறப்பாகவே’ திட்டம் தீட்டியது.

மாணவர் போராட்டங்களை ஒடுக்குவதற்காகக் கல்லூரிகளை இழுத்து மூடியது. வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்க உயர்நீதிமன்ற வளாகத்திலேயே போலீசை ஏவியது. ஆனால் இன்று ஈழத்தமிழருக்காய் வீராவேச வேசம் போடும் வீராதி வீரர்கள் வைகோ, நெடுமாறன், திருமா, ராமதாஸ் யாரும் கல்லூரிகள் மூடப்பட்டதையோ உயர்நீதிமன்றத் தாக்குதலை எதிர்த்தோ ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டியமைக்கவோ போராட்டங்களை நிகழ்த்திக்காட்டவோ தயாராக இல்லை.

மாறாக கோபால கிருஷ்ண கோகலே வாரிசாக, தூதரகங்களுக்கு மனுப்போடுவது, மனிதச்சங்கிலிப் போராட்டம், மயிரு சங்கிலிப்போராட்டம் என்று மக்கள் எழுச்சிகளைக் காட்டிக்கொடுத்து போராட்டங்களை மொன்னையாக்கினார்கள். தங்களது அரசியல் நலன்களைத் தாண்டி மாணவர்களும் வழக்கறிஞர்களும் போராட்டச் சக்திகளாக உருமாறுகிறார்கள் என்பதைத் தாங்கமுடியாததும் தடுக்க முயன்றதுமே இந்த கருங்காலிகளின் சதிகளுக்குக் காரணம். தங்களின் அரசியல் கயவாளித்தனத்தைத் தாண்டி எப்போதுமே போராட்டங்கள் உருப்பெற்று விடக்கூடாது என்பதிலே நெடுமாறன் தொடங்கி வைகோ வரை விழிப்போடு இருந்தார்கள். மாணவர் மற்றும் வழக்கறிஞர் போராட்டங்களை ஒடுக்கியதில் கருணாநிதி அரசுக்கு ஒருபங்கு இருக்கிறது என்றால் இத்தகைய கருங்காலிகளுக்கு மறுபங்கு இருக்கிறது.

ஆனால் இத்தகைய சக்திகளை அம்பலப்படுத்தத் தொடங்கினாலே நமது சுடலைமாடன் மாதிரியான தோழர்கள், ‘‘நீங்கள் ஏன் கொளத்தூர்மணியை விமர்சிப்பதில்லை, நெடுமாறனை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?’’ என்று கழுத்திலே துண்டு போடத்தவறுவதில்லை. கொளத்தூர்மணியும் பெரியார் தி.கவும் தமிழகம் முழுவதும் இரட்டைக்குவளைகள் அமுலில் உள்ள டீக்கடைகளைக் கணக்கெடுத்து அங்கெல்லாம் போய்க் கலகம் செய்கிற அதேவேளையில்தான் ஈழத்தமிழர்கள் பற்றியும் பேசுகிறார்கள். என்றைக்காவது நமது ‘தமிழர் தலைவர்’ நெடுமாறன் ஒடுக்கப்படுகிற தலித்துகளுக்காய் நின்றதுண்டா, தலித்தெல்லாம் தமிழனில்லையா?

ஆக இத்தகைய கேள்விகளை முன்வைத்தால் அடுத்து வைக்கிற பிலிம் ‘பிரியாரிட்டி பாலிடிக்ஸ்’. அட தமிழ்த்தேசியப் பாடுகளா, இதற்குத்தான் பிரியாரிட்டி, இதற்கு பிரியாரிட்டி இல்லை என்று தீர்மானிக்கிற அதிகாரத்தை உங்களுக்கு யார் தந்தது? என்றைக்காவது அதை எங்களுக்குத் தந்திருக்கிறீர்களா? தலித்தின் வாயில் பீ திணிக்கப்படுவது எல்லாம் உங்களுக்குப் பிரியாரிட்டி பிரச்சினைகளே இல்லையா, தாமிரபரணிப் படுகொலைகளோ மேலவளவு முருகேசன் கொலைகளோ என்றைக்காவது தேர்தல் பிரச்சினைகளாகப் பேசப்பட்டிருக்கிறதா?

இந்த லட்சணத்தில் ‘‘திருமாவளவனுக்கு சாதியவிடுதலை அளித்தது ஈழப்பிரச்சினைதான்’’ என்று அருள்வாக்கு அளிக்கிறார் தோழர்.ஆழியூரான். என்ன சாதிய விடுதலை கிடைத்துவிட்டது திருமாவிற்கு? திருமாவிற்கு வன்னியர்களும் கள்ளர்களும் லட்சக்கணக்கில் ஓட்டு போடத் தயாராகிவிட்டார்களா? ஈழப்பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்த இந்த ஆறுமாத காலங்களில் செந்தட்டிப் பிரச்சினை, விழுப்புரம் மாவட்டம் பள்ளிப்பட்டில் சிவராத்திரியன்று கோயிலில் வழிபட்ட அருந்ததியர்கள் கட்டிவைத்து உதைக்கப்பட்டது, தஞ்சைப் பெரியகோயிலில் சுத்தம் செய்யப்போன தலித் மாணவி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்ததற்காக ஒரு தலித் முதியவர் அடித்து உதைக்கப்பட்டது என பத்துக்கும் மேற்பட்ட தலித் எதிர்ப்புச் சம்பவங்கள் நடைபெற்றுத்தான் இருக்கின்றன. எனவே திருமாவளவன் சாதியத்தலைவர் என்னும் அடையாளத்திலிருந்து பொது அடையாளத்திற்குச் செல்வதற்குத்தான் ஈழப்பிரச்சினையும் தமிழ்த்தேசியமும் உதவியிருக்கிறது. அவர் ஒரு தலித் தலைவராக இருந்து தலித் பிரச்சினைகளைப் பேசுவதை ஆதிக்கச்சாதித் தமிழர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்களே தவிர தமிழ்த்தேசியம் பேசுவதில் அவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை என்பதுதான் உண்மை.

ஆனால் தலித் பிரச்சினைகளைக் காட்டி ஈழத்தமிழர் துயரங்களைப் பின்னுக்குத் தள்ளுவதல்ல இப்பதிவின் நோக்கம். தேர்தல் என்பது ஒரு போராட்ட வழிமுறையாகக் கருதக்கூடியவர்கள் தங்களது காங்கிரசுக்கு எதிரான வாக்குகளாகப் பதிவு செய்வது என்பது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆக மொத்தம் ஈழத்தமிழர் துயரங்களில் பங்கெடுத்துக்கொள்பவர்கள் முன் இரு வாய்ப்புகள்தான் முன்நிற்கின்றன, தேர்தலைப் புறக்கணிப்பது அல்லது அதிமுக கூட்டணிக்கு வாக்களிப்பது. எதார்த்தத்தின் கொடூரம் இப்படியாய் இளிக்கிறது, ‘ஓட்டுப் போடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, ஓட்டுப் போடாமல் இருப்பதால் ஒரு மயிரும் ஆகப்போவதில்லை’.