Thursday, October 15, 2009

மறந்துபோவது குறித்த சில நினைவுக்குறிப்புகள்














இந்தப் பிரதியைப் படித்து முடிப்பதற்குள் நீ உறங்கிப் போயிருக்கலாம் அல்லது என்னைக் கொலை செய்வதற்கான எரிச்சலோடு உன் கழுத்துச் சங்கிலியைக் கடித்துக்கொண்டிருக்கலாம் அல்லது...வழக்கம்போல் நீ போட்ட தேநீர் கருகிவிட்டதா எனப் பார்க்க அடுக்களைக்குச் சென்றிருக்கலாம் அல்லது... எப்படியாயினும் நீ இந்தப் பிரதியைப் படிக்கத் தொடங்கியிருக்கிறாய். நல்லது. - மறந்துபோவது குறித்த சில நினைவுக் குறிப்புகள் - எழுதும்போதே சிரித்துக்கொள்கிறேன் - என்ன ஒரு முரண்நகை? - "வரலாற்றில் எல்லாச் சம்பவங்களும் இருமுறை அரங்கேறுகின்றன, முதல்முறை பரிதாபகரமாகவும், மறுமுறை கேலிக்கூத்தாகவும் " - இது எத்தனையாவதுமுறை என்று எனக்கு நினைவில்லை - தாயின் முலையினின்று பாலோடு சொல்லை உறிஞ்சத்தொடங்குகிறது குழந்தை - பின் எல்லாம் சொல்லாகிறது - காதல் சொல், கலவி சொல், முத்தம் சொல், துரோகம் சொல், திருட்டு சொல், சோரம் சொல், கனவு சொல், தினவு சொல், உறவு சொல் - நீ ஒரு சொல்லிலிருந்து உன் உறவைத் தொடங்கினாய் - நான் சொன்னேன் 'இந்தச் சொல்லிற்குப் பதிலாய் என்னை நீ கொலை செய்திருக்கலாம் என்று - நெடுநாட்களுக்குப் பின் நீ அதையும் செய் - இன்னொரு சொல் மூலம் - கொலையும் சொல்லானது - ஆம் இப்படித்தான் அந்த கொலை நிகழ்ந்தது - கல்வாரியி மலையில் சொல் போல் நீண்டு வளைந்ததொரு சிலுவை சுமந்தபடி மூச்சிரைத்து சிலுவைப்பாடு தொடங்குகுறான் ஜீசஸ் - சொல்லைப் போல் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது அவன் தாடி - தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நொந்து சொல்லைப்போல் கனமானதொரு பாறையை சொல்லைப் போல் கடினமான மலையுச்சிக்கு உருட்டிக்கொண்டிருக்கும் சிசிபஸ் புன்னகைக்கிறான் - வாணாள் முழுதும் யாரை விசுவாசிக்கச் சொன்னானோ அவருக்கு எதிரான அந்தச் சொற்களை உச்சரிக்கின்றன ஜீசஸின் உதடுகள் - "ஏலி லாமா சமக்தானி, ஏலி லாமா சமக்தானி" - கர்த்தரே எம்மை ஏன் கைவிட்டீர்? - கைவிடப்பட்ட சொற்களும் சொற்களால் கைவிடப்பட்டவர்களும் அலைபாய்ந்துகொண்டிருக்கிறார்கள் - அசைகிறது யேசுவின் தாடி - சற்றே ஒரு அரசியல் குறுக்கீடு - சொற்கள் அர்த்தங்களைப் பிரதியிடுவதில்லை மாறாக குறியீடு செய்கின்றன என்கின்றன நவீனச்சிந்தனைகள்- சொற்களின் அதிகாரத்தைப் பண்ணிப் பண்ணி விளக்கின - எல்லா விலங்குகளுக்கும் எதிராய்க் கத்தி வீசின - குறியீடு செய்யும் சொல்லின் பெயர் ஆங்கிலத்தில் signifier என்றால் அதைக் 'குறிப்பான்' என்று மொழிபெயர்த்தன - 'குறிப்பாள்' இல்லை, பால் சாரா சொல்லில்லை - மீண்டுமொரு 'ன்' விகுதி ஆண்மய்யச் சொல்லாடல் - வரலாற்றுச் சம்பவம் அரங்கேறுகிறது பரிதாபமாய் - தமிழ்நதியின் வலைப்பக்கங்களில் வந்துபோனவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும் குறியீட்டின் பெயர் 'எண்ணுவான்' - மீண்டும் ஒரு 'ன்' விகுதி ஆண்மய்யச்சொல்லாடல்- இரண்டாவது சம்பவம் அரங்கேறுகிறது கேலிக்கூத்தாய் - கவிதைகள் புரிவதில்லை என்று சமயங்களில் நீயும் அரற்றுவதுண்டு -

இடுக்குகளில் இருந்து...

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

கவிதையைப் புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்



செய்முறை :

நீ பொதுவாய் ஞாயிற்றுக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுபவளில்லை. இது ஞாயிறு. வெள்ளிக்கிழமைகளில் நீ சாப்பிடுகிற மாமிசத்துணுக்கள் எப்போதேனும் பல்லிடுக்களில் சிக்கிக்கொண்டு நாள்முழுதும் அவஸ்தைப்படுத்தலாம் . எப்போதேனும் உடன்படித்த, பணிபுரிந்த ஏதேனுமொரு நண்பன் அல்லது பியை நெடுநாட்கள் கழித்துச் சந்திக்கலாம். அவன் பெயரோ எப்படித் தொடர்பு என்பதோ உனக்கு மறந்திருக்கலாம். அவள்/ன் விடைபெற்றுப் போகும்வரையிலும்கூட. இத்தகைய அவஸ்தைகளை முன்பின்னாய்க் கலைத்துப் பார்த்தால் இந்தக் கவிதை உனக்குப் புரியலாம் -

- பிரதி தன் மய்யத்தை விட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டது - எனவே இது ஒரு விளிம்புநிலைப் பிரதி என்று சில பைத்தியக்காரர்கள் அபிப்பிராயப்படலாம் - ஆயினும் இது விளிம்புநிலைப்பிரதியில்லை - புனைவுவெளிகளில் உருண்டோடும் சொற்களைத் தொடர்ந்து சென்றால் ஒரு மலையுச்சியை அடைவாய் - அங்கு இன்னமும் சொல்லைப்போலொரு கனமான பாறையை சொல்லைப் போலொரு கனமான மலையுச்சிக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறான் சிசிபஸ் - தவறிவிழுந்த பாறை யேசுவின் தலையுச்சியில் விழ மலைமுகடுகளெங்கும் எதிரொலிக்கிறது "ஏலி லாமா சமக்தானி!"

5 comments:

யுவன் பிரபாகரன் said...

சாருவின் வாசம் தூக்கலாக அடிக்கிறது :))

Unknown said...

சூப்பர் :)
...ஏலி லாமா சமக்தானி!


மூளை - 1.25கிராம்
அறிவு - 0.075 மிலி கிராம்


வேறு அவசியமான ஒன்றை விட்டுடீங்களோ???? :D

Ashok D said...

படிக்க ஆராம்பிச்ச உடனே வந்ததது நல்ல தூக்கம்.

நர்சிம் said...

அசத்தல் நடையில்...

Anonymous said...

//யுவன் பிரபாகரன் said...

சாருவின் வாசம் தூக்கலாக அடிக்கிறது :))//

சாருகிட்ட யாரோட வாசம் அடிக்குதுன்னும் சொல்லிருக்கலாமே ;)

***
தூக்கத்துல உன்ன கொலபண்ணிட்டேனே :)

-பொட்"டீ"