ரீ.சிவக்குமார் படங்கள் : க.தனசேகரன் இன வெறி, சாதி வெறி இரண்டுக்கும் எதிரான போராட்டங்களின் குறியீட்டுப் பெயர்தான் கொளத்தூர் மணி. உள்ளூர்ச் சேரிகளில் தீண்டாமை திணிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட தமிழர்களுக்கும் ஈழத்து முள்வேலிகளில் அடைக்கப்பட்ட தமிழர்களுக்கும் சற்றும் சமரசம் இன்றிக் குரல் கொடுப்பவர். மூன்று தமிழர்களின் உயிர் காக்க மரண தண்டனை எதிர்ப்புப் பிரசாரப் பயணத்தில் இருந்தவரைச் சந்தித்தேன். ''நீங்கள் பெரியார் கொள்கைகள்பால் எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?'' ''கொளத்தூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, புலவர் வ.வேணுகோபால் என்ற தமிழ் ஆசிரியர்தான் எனக்கு முதன்முதலில் பகுத்தறிவுச் சிந்தனைகளை அறிமுகப்படுத்தினார். வகுப்பறையில் புராணக் கதைகள் குறித்து அவ்வப்போது விமர்சனங்களை முன் வைப்பார். 'புராணம் என்றால் பழமை, நவீனம் என்றால் புதுமை. புராணக் கதை என்றால் பழைய பொய்’ என்று சொன்ன அவர், 'விடுதலையில் தீபாவளிபற்றி ஒரு கதை வந்திருக்கிறது. படியுங்கள்’ என்றார். அப்போதுதான் முதல்முதலாக விடுதலை இதழைப் படித்தேன். கொஞ்சம் கொஞ்ச மாகப் பெரியாரின் கருத்துகள் என்னை ஈர்த்தன. 1962-ல் அப்போதைய மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசுவதற்காக பெரியார் எங்கள் ஊருக்கு வந்தார். அப்போது பெரியாரின் பேச்சை முழுமையாக உள் வாங்கிக்கொண்டேன் என்று சொல்ல முடியாது. 1971-ல் கொளத்தூரில் பெரியாரை வைத்து பொதுக் கூட்டம் நடத்தியதில் இருந்து என் இயக்கச் செயல்பாடுகள் தொடங்கின.'' ''ஒரு பெரியாரிஸ்ட் என்ற முறையில் இன்றைய சூழலில் பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை, விட்டுவிட வேண்டியவை என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?'' ''சாதி ஒழிப்பும் பெண் விடுதலையும்தான் பெரியார் கொள்கைகளின் அடித்தளம். அவரது கடவுள் மறுப்பும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்கூட, சாதி ஒழிப்புக் கொள்கை யின் நீட்சிதான். நான் மட்டும் அல்ல, இந்த மானிட சமுதாயமே பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது சுய மரியாதையையும் சமத்துவத்தையும்தான். பெரியாரிடம் இருந்து விட்டுவிட வேண்டியது என்று எதுவும் இல்லை. ஆனால், பெரியார் இறந்து 38 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அணு உலை எதிர்ப்பு போன்ற விஷயங்கள் பெரியார் காலத்தில் இல்லை. இப்போது அதை எல்லாம் சேர்த்துப் பேச வேண்டும். மேலும், உலகின் தலைசிறந்த பெண் விடுதலைக் கருத்துகளைச் சொன்னவர் பெரியார். இப்போது பெண் விடுதலை என்பதைத் தாண்டி திருநங்கைகளின் உரிமைபற்றிப் பேசப்படுகிறது. அதேபோல், ஒருகாலத்தில் 'எதை முதன்மைப்படுத்துவது சாதியையா... வர்க்கத்தையா?’ என்கிற கருத்துப் போராட் டம் பெரியார் இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் டுகளுக்கும் இடையே இருந்துவந்தது. ஆனால், சில பத்தாண்டுகளாக கம்யூ னிஸ்ட்டுகள் இந்துத்துவ எதிர்ப்பை முன் வைக்கிறார்கள்; தீண்டாமைப் பிரச்னை களைக் கையில் எடுத்துப் போராடுகிறார் கள். இது பெரியாரியலுக்குக் கிடைத்த வெற்றி. ஆனால், கம்யூனிஸ்ட்டுகள் எப்படி சாதிப் பிரச்னைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தவறினார்களோ, அதேபோல பெரியாருக்குப் பின் பெரியார் இயக்கங்கள் பொதுவுடைமையை அழுத்தமாகப் பேசவில்லை. இன்றைய உலகமயமாக்கச் சூழலில் 'பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டு கூட்டுக் கொள்ளை எதிர்ப்பு’ என்ற முழக்கத்தை நாங்கள் முன்வைக்கிறோம்.'' '' 'திராவிட அரசியல்தான் இன்றைய பல வீழ்ச்சிகளுக்குக் காரணம். திராவிடம் என்பதே மாயை’ என்று தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகள் பேசிவருகிறார்களே... இன்னும் திராவிட அடையாளத்தைச் சுமக்கத்தான் வேண்டுமா?'' ''போதிய புரிதல் இல்லாதவர்கள்தான் அப்படிப் பேசிவருகிறார்கள். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு, பெரியார் சாகும் வரை 'தமிழ்நாடு தமிழருக்கே’ என்று தனித் தமிழ்நாடு கோரிக்கையைத்தான் முன்வைத்தாரே தவிர, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்களைச் சேர்த்து திராவிட நாடு விடுதலையை முன்வைக்கவில்லை. திராவிடம் என்பது ஏதோ நிலப்பரப்புக்கான அடையாளம் இல்லை. அது இந்துத்துவ எதிர்ப்பின் குறியீட்டுச் சொல். நாங்களும் தனித் தமிழ்நாடு கேட்கிறோம், தமிழ் தேசியவாதிகளும் தனித் தமிழ்நாடு கேட்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறுமனே மண்ணுக்கான விடுதலையை முன்வைக்கிறார்கள். நாங்கள் மக்களுக்கான விடுதலையை முன்வைக்கிறோம். 'திராவிடர்’ என்ற சொல், பார்ப்பனர் அல்லாத மக்கள் என்ற பொருளில்தான் பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. திராவிட அரசியல் கட்சிகளின் மீது உள்ள வெறுப்பால் பலர் 'திராவிடம் என்பதே மாயை’ என்று பேசிவருகிறார்கள். உண்மையில் திராவிட அரசியல் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க.கூட தமிழர்களிடத்தில்தான் அரசியல் செய்கின்றனவே தவிர, மலையாளி கள், தெலுங்கர்கள், கன்னடர்களிடத்தில் அல்ல. மேலும், சாதி ஒழிப்பு, தாழ்த்தப் பட்டோர் விடுதலை, பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு, பெண் விடுதலை... இவை எல்லாம் சேர்ந்ததுதான் பெரியார் முன்வைத்த திராவிட அரசியல். இன்றைய திராவிட அரசியல் கட்சிகள், இவை எதையும் முன்வைப்பது இல்லை. எனவே, திராவிட அரசியல் கட்சிகளை முன்வைத்து திராவிடம் என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது அறியாமை.'' ''தொடர்ச்சியாக தீண்டாமைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். ஆனால், 'பெரியார் கேரளாவில் நடத்திய வைக்கம் போராட்டம் தவிர, தமிழகத்தில் தீண்டாமைப் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது இல்லை’ என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றதே?'' ''தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், சாதி ஒழிய வேண்டும்; சாதி ஒழிய வேண்டும் என்றால், இந்து மதம் ஒழிய வேண்டும். இதுதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கை. இதற்காகத்தான் அவர் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் சார்பாக ஏராளமான ஆதி திராவிடர் சுய மரியாதை மாநாடுகளையும் ஆதிதிராவிடர் கிறிஸ்தவர் சுய மரியாதை மாநாடுகளையும் நடத்தினார். முதுகுளத் தூர் கலவரத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கம் நின்று, 'கலவரத்துக்குக் காரணமான பசும்பொன் முத்துராமலிங் கரைக் கைதுசெய்ய வேண்டும்’ என்று உறுதியாக வலியுறுத்தியதும் பெரியார் தான். மயிலாடுதுறை அருகே உள்ள காளி மற்றும் மாதிரிமங்கலம் ஆகிய ஊர்களில் 'சாதித் தொழிலைச் செய்ய மாட்டோம்’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்திய பறை தப்பட்டையை எரிக்கும் போராட்டம், காங்கிரஸ் மாநாட்டில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் என்று ஏராளமான போராட்டங்களைப் பெரியார் இயக்கம் நடத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாம் பெரிதாக ஆவணப்படுத்தப்படாததுதான் வரலாற்றுத் துயரம். 1926-ல் சிராவயல் என்ற ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிக் கிணறு அமைக்கப்பட்டு, அதைத் திறப்பதற்காகப் பெரியார் அழைக்கப்பட்டார். ஆனால், 'பொதுக் கிணறுக்காகப் போராடுங்கள். தாகத்தால் செத்துப்போகலாமே தவிர, தனிக் கிணறு அமைப்பது தீர்வு அல்ல’ என்று பெரியார் மறுத்துவிட்டார். 'பறையன் பட்டம் போகாமல் சூத்திரன் பட்டம் போகாது’ என்று யார் தீண்டாமையை மேற்கொள்கிறார்களோ, அந்த பிற்படுத்தப்பட்டவர் களிடம் பெரியார் பேசினார். அதுதான் புரட்சி.'' ''பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்துசெய்ய வேண்டும். ராஜபக்ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றிய பிறகு, ஈழ ஆதர வாளர்கள் சமச்சீர்க் கல்வி, பரமக்குடி துப்பாக்கிச்சூடு, நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு ஆதரவு போன்ற விஷயங்களில் ஜெயலலிதாவைக் கடுமை யாக விமர்சிப்பது இல்லையே?'' ''ஈழ ஆதரவாளர்களில் பலர் சாதி ஒழிப்பு, சிறுபான்மையினர் உரிமைகள், சுற்றுச்சூழல் பிரச்னை, மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தாத போக்கு இருக்கிறது. அதே நேரத்தில், காஷ்மீர், தண்டகாரண்யம், சல்வாஜூடும்பற்றிப் பேசும் பலர் ஈழப் பிரச்னைபற்றிக் கவலைப் படுவது இல்லை. இரண்டு தரப்பிலும் போதாமைகள் இருக்கின்றன. இவை சரி செய்யப்பட வேண்டும்.''
''பிரபாகரன் உயிரோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உயிரோடு இருக்கிறாரா என்பது தெரியாது. இன்றைய சூழலில், ராஜபக்ஷேயின் போர்க் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்படு கிறது. ஆனால், ராஜபக்ஷே மட்டுமே இனப் படுகொலையில் ஈடுபடவில்லை. எல்லா இலங்கை அதிபர்களுமே தமிழர்களுக்கு எதிராக இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள்தான். உயிரோடு உள்ள எல்லா இலங்கை அதிபர்களுமே போர்க் குற்றங்களின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். ஈழப் பிரச்னைக்கான தீர்வு தமிழீழம்தான் என்று கருதுகிறோம். அந்த மக்களின் விருப்பமும் அதுதான் என்று உறுதியாக நம்புகிறோம்!'' | ||
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள் குறித்து ஆய்வு செய்பவர்கள் ரெங்கையா முருகனும் ஹரிசரவணனும். இவர்கள் இருவரும் நாட்டுப்புற ஆய்வு மாணவர்களோ, மானுடவியல் துறைப் பேராசியர்களோ அல்ல. ரெங்கையா முருகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (M.I.D.S) நூலகர். ஹரிசரவணன், ஆங்கில இலக்கியப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர். பழங்குடிகள் குறித்து இவர்கள் எழுதியுள்ள 'அனுபவங்களின் நிழல்பாதை’ நூல் தொ.பரமசிவன், பக்தவச்சல பாரதி போன்ற ஆய்வாளர்களிடம் பெரும் வர வேற்பைப் பெற்றது.
''காட்டுப் பன்றி ஒன்று கிழங்கை அகழ்ந்து தின்ற பிறகு, மிச்சம் இருக்கும் கிழங்கைப் பழங் குடிகள் தின்பதாகப் பழந்தமிழ் இலக்கியத்தில் பதிவுகள் உள்ளன. அந்த வழக்கம் இன்றும்பழங்குடி களிடம் உள்ளது. நமது ஆதி வாழ்க்கையைத் தேடி அலையும் வேட்கைதான் எங்களைக் காடுகளை நோக்கிச் செலுத்தியது. ஆதிவாசிகள் என்றாலே நிர்வாணமாகத் திரிபவர்கள், நர மாமிசம் உண்பவர் கள், வரைமுறையற்ற பாலுறவுகொள்பவர்கள் என்ற தப்பான கற்பிதங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால், உண்மையில் நாகரிகச் சமுதாயம் என்று சொல்லிக்கொள்கிற நம்மைவிட, மேம்பட்ட கலா சாரம் கொண்டவர்கள் ஆதிவாசிகள். தேவைக்கு மேல் எதையும் பயன்படுத்தாத வாழ்க்கை, அடுத்த வர் உடைமைகளை ஆக்கிரமிக்காத பேராண்மை, எல்லா வளங்களையும் பகிர்ந்து வாழ்வதுஆகியவை இந்தியா முழுக்கப் பரவிக்கிடக்கும் ஆதிவாசிகளின் பொதுக் குணங்கள்!'' என்று சொல்லும் ஹரிசரவண னின் வார்த்தைகளில் அடர்ந்து செறிந்த காட்டின் வனப்பையும் அருவியின் குளிர்ச்சியையும் உணர முடிகிறது.
''இயற்கை சார்ந்த வாழ்க்கை அவர்களுடையது. ஆனால், நாகரிகம், அறிவியல், வளர்ச்சி என்ற பெயரால் நம்மால் திணிக்கப்பட்டவை அவர்களின் வாழ்க்கையையும் இயற்கையின் ஆன்மாவையும் குலைத்து இருக்கின்றன. உதாரணத்துக்கு, மத்திய இந்தியாவில் வாழக்கூடிய பழங்குடிகள், ஊட்டியில் வசிக்கும் படுகர்கள், இருளர்கள் ஆகியோரிடம் ரத்த சோகை அதிகமாகக் காணப்படுகிறது.காரணம், அவர்களது மண்ணுக்கு ஏற்ற தானியங்களை விளைவிப்பதற்குப் பதிலாக, பிரிட்டிஷ்காரர்களால் திணிக்கப்பட்ட உருளைக் கிழங்கு, முட்டைக்கோஸ், பீட்ரூட், கேரட், காலிஃப்ளவர் போன்ற காய்களை அவர்கள் விளைவித்துக்கொண்டு இருக்கிறார்கள்!'' என்ற ரெங்கையா முருகனின் வார்த்தைகளில் அவ்வளவு வருத்தம்.
'' 'போட்டிகள் நிறைந்த உலகமயச் சூழல்’ என்ற பெயரில் யாரும் யாரையும் ஏமாற்றலாம், யாரும் எந்தப் பகுதியையும் ஆக்கிரமிக்கலாம் என்கிற தப்பான உணர்வு நம்மிடையே விதைக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதற்கு முற்றிலும் நேர்மாறானது ஆதிவாசிகளின் வாழ்க்கை. ஒடிஷா மாநிலத்தில் வசிக்கும் பூஞ்சியா பழங் குடி மக்கள், தங்கள் வாழ்க்கையைத் தங்கள் எல்லைக்குள்ளேயே அமைத்துக்கொள்கின்ற னர். இத்தனைக்கும் வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடுகள் என எதுவும் கிடையாது. எல்லாமே மனக் கணக்குதான். ஒரு பூஞ்சியா ஆதிவாசி தங்களது எல்லைப் பகுதியைத் தாண்டி வேறு ஒரு பகுதியில் ஒரு சுள்ளி பொறுக்கி வந்தால்கூட, அந்த பூஞ்சியா இனமே ஒன்று சேர்ந்து அவரின் வீட்டை எரித்துவிடுவார் கள். ஒருவர் வீடு கட்ட வேண்டும் என்றால், எல்லோரும் அவருக்கு உதவுவார்கள். விளைச் சல் அவர்களுக்குத் தனித்தனியாக இருந்தா லும் கூட்டு அறுவடைதான். 20 மூட்டை நெல் விளைவித்தவருக்கும் இரண்டு மூட்டை நெல் விளைவித்தவருக்கும் சமமாகத்தான் விளைச்சல் பகிர்ந்து அளிக்கப்படும். குஜராத் தின் டாங்கு பகுதியில் வசித்து வரும் குக்ணா பழங்குடிகளிடம் ஒரு தனியான ராமாயணம் நிலவி வருகிறது. அந்த ராமாயணத்தில் அயோத்தி, இலங்கை எல்லாமே அவர்கள் வசிக்கும் நிலப்பரப்பில் தான் அமைந்து இருக்கிறது. அந்தக் கதையில் சீதை சுள்ளி பொறுக்குபவள், விருந்தினர்களுக்குத் தேநீர் தயாரித்து உபசரிப்பவள். ராஜராஜ சோழன் காலம் தொடங்கி இன்றைய முதல்வர் வரை நமக்கு எழுதப்பட்ட வரலாறுகள் உண்டு. ஆனால், ஆதிவாசிகளுக்கோ ஆயிரக் கணக்கான ஆண்டு வரலாறும் வாய்மொழி வரலாறே. அவற்றைக் கதைப் பாடல்களாகப் பாடி பல தலைமுறைகளாகக் கடத்திச் சேகரித்து வருகின்றனர். வாய்மொழி வரலாறு, அழகான கை வினைகள், காடுகளின் ஒவ்வோர் அங்குலத்தையும் அறிந்து வைத்து இருக்கிற அறிவுநுட்பம், விலங்கு களையும் பறவைகளையும் பாது காத்து இயற்கையின் சமநிலை குலையாமல் வாழ்கிற வாழ்க்கை என்று ஒவ்வோர் அம்சத்திலும் அவர்கள் நம்மை விஞ்சியே இருக் கிறார்கள்!'' என்று ஆச்சர்யத் தகவல் சொல்கிறார் ஹரி.
''ஆதிவாசிகள் நிர்வாணமாக இருப்பார்கள் என்பதும் தவறான புரிதலே! அந்தமானில் வசிக்கும் சென்டினல் பழங்குடிகள் மட்டுமே நிர்வாணமாக இருப்பார்கள். மத்திய இந்தியாவில் வசிக்கும் பழங்குடிப் பெண்கள் தங்கள் மார்புகளை வெறும் ஆபரணங்களால் மறைப்பதை அங்கு யாரும் வக்கிரமாகப் பார்ப்பது இல்லை. அங்கு பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்வதற்கும் மண விலக்கு செய்வதற்கும் முழு உரிமை உண்டு.முக்கிய மாகப் பழங்குடிகளிடத்தில் குடும்ப வன்முறை இல்லை. அவர்கள் தாங்கள் வளர்க்கும் நாயைக்கூட அடிப்பது இல்லை. விபசாரமும் இல்லை, பாலியல் பலாத்காரமும் இல்லை. அவ்வளவு ஏன், ஒரே ஒரு பிச்சைக்காரர்கூடப் பழங்குடிகளிடத்தில் இல்லை. மன நோயாளிகளை அவர்கள் தெய்வமாகக் கருதி, வீட்டுக்கு அழைத்து உணவும் மதுவும் கொடுத்து உபசரிக்கிறார்கள். ஆனால், நாமோ மெள்ள மெள்ள அவர்கள் பராமரிக்கும் காட்டு வளத்தைச் சுரண்டி, அவர்களின் வேர்களைப் பிடுங்கி வேறு ஒரு இடத்தில் நட முயற்சிக்கிறோம். பழங்குடிகளைக் கையாள்வதில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. குஜராத்தில் வசிக்கும் ரத்வா என்னும் பழங்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரையின ராக அறிவிக்கப்பட்டனர். இன்றும் அங்கு ஏதாவது திருட்டு என்றால், முதலில் போலீஸ் பிடித்துச்செல்வது அவர்களையே. ரத்வாக்களின் சுவரோவியங்களில் போலீஸ் ஜீப் இடம் பெறும் அளவுக்கு மோசமான வன்முறையை நாம் நிகழ்த்தியிருக்கிறோம்!'' என்று ஆவேசமாகிறார் ரெங்கையா முருகன்.
''பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக சிப்பாய் புரட்சிக்கு முன்பு போராடியவர்கள் பழங்குடிகளே. கேரளாவில் பழசிராஜாவுக்கு உதவிய வயநாடு பழங்குடிகளான குரிசேரியான், முண்டாக்கள், குந்தா த்ர்வாபோல ஏராளமான பழங்குடி மக்களின் விடுதலைப் போராட்டங்கள் ஆவணப்படுத்தப்படவே இல்லை.
உலகமயமாக்கல், வளர்ச்சி, தாராளமயமாக்கல் என்ற பெயர்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் வாழ்க்கையில் இருந்தே அவர்களை விரட்டிக் கொண்டு இருக்கிறோம். இன்று சென்னையில் வசிக்கும் வட இந்திய இளைஞர்களில் கணிச மானவர்கள் சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், மணிப் பூரைச் சேர்ந்த பழங்குடிகள். டெல்லியிலும் மும்பை யிலும் இருப்பதைவிட, அவர்கள் சென்னையில் பாதுகாப்பாக உணர்கிறார்கள். ஆனால், விரிந்து பரந்த மலையைத் தங்கள் வீடாக நினைக்கும் அந்தப் பழங்குடி இளைஞன் இப்போது வசிப்பதோ வெந்து கருகும் ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழேதான். பிரம்ம புத்ரா நதியிலும் மலையின் தாடியென வளர்ந்து நீண்ட அருவியிலும் நீந்திக் குளித்துக் களித்த மலைமகனுக்கு இன்று குளிக்கக் கிடைப்பதோ முக்கால் பக்கெட் தண்ணீர்!'' - முடிக்கும்போது வேட்டையாடப்பட்ட ஒரு மிருகத்தின் வலியைப் போல இருவரின் வார்த்தைகளிலும் சோகம் சூழ்ந்து நிற்கிறது!