Saturday, March 7, 2009

சாருநிவேதிதாவின் 'நான்கடவுள்' விமர்சனம் - ‍‍ சில இடையீடுகள்



நான் கடவுள் திரைப்படத்திற்கான ட்ரெய்லரை விட அந்த படம் குறித்த சாருவின் விமர்சனத்திற்கான டிரெய்லர்கள் அதிகநாள் ஓடியிருக்கும். நாளை, நாளை மறுநாள், அதற்கு அடுத்தநாள் என்று ஒருவழியாக வந்தேவிட்டது சாருவின் விமர்சனம். கடந்தகாலங்களில் பாலாவின் ‘நந்தா‘வையும் ‘பிதாமகனை‘யும் போட்டு வறுத்திருந்தார் சாரு. நந்தாவைத் ‘தாலியறுத்தான் கதை‘ என்று விமர்சித்த சாரு ‘நான்கடவுளுக்கு‘ அளித்துள்ள விருதோ ‘பின்நவீனத்துவப்புரட்சி‘. நந்தாவை விட ருத்ரனின் வன்முறைதான் அதிகம். ஆனால் அகோரிகளுக்கு மட்டும் ‘நரமாமிசம் சிக்ஸ்ட்டி பைவ்‘ சாப்பிடும் ‘சிறப்புரிமை’ உண்டு போலும்.

&&&&&&&&&&&&&
‘அகம் பிரம்மாஸ்மி‘ &இதனுடைய நேரடியான தமிழ்வெளிப்பாடு ‘நான் கடவுள்‘ அல்ல. (கடவுள் என்பதே தமிழ்ச்சொல் இல்லை என்பது வேறு விதயம்) ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்குமான தொடர்புறவு குறித்த விவாதங்களில் ஆதிசங்கரர் முன்வைத்த கருத்தாக்கமே ‘அகம் பிரம்மாஸ்மி‘. இதை எளிதாகத் தமிழில் மொழிபெயர்த்து விட முடியாது. ஏனெனில் பக்தி இலக்கியக் காலம் முன்புவரை செழுமையான அறஞ்சார்ந்த அவைதீக மரபுகளால் செழுமைப்பட்ட தமிழ்மரபில் ஆன்மா & பிரம்மம் குறித்த ‘மலச்சிக்கல்‘ தத்துவ விவாதங்கள் கிடையாது. இந்துமததின் தத்துவார்த்த அடிப்படைகளில் ஒன்றாய் நிறுத்தப்படுவது அத்வைதமும் ‘அகம் பிரம்மாஸ்மி‘யும். ‘காணும் எல்லாம் மாயை‘ என்கிற ‘சூனியவாதம்‘ வரை அதன் தத்துவ எல்லைகள் விரிகின்றன. ஆனால் இங்கொன்றை நாம் நினைவில் நிறுத்திக்கொள்வது நலம். ‘இந்து‘ மதத்தின் ‘தத்துவார்த்த‘ அடிப்படைகள் அனைத்துமே அதற்கு முன்பிருந்த அல்லது சமகாலத்திய அவைதீகத் தத்துவ மரபுகளை உட்செரித்து உருவாக்கப்பட்டவையே தவிர, அதற்கான சுயமான, பலமான தத்துவ அடிப்படைகள் கிடையாது. அவைதீக மரபின் உச்சமாய்ப் பெருஞ் செல்வாக்காய் விளங்கியவை பவுத்தமும் சமணமும். தமிழ்ச்சமூகத்தின் அறமதிப்பீடுகளும் இந்த இரு தத்துவமரபின் செல்வாக்கிலேயே பார்ப்பனீயத்தின் பேராதிக்கத்திற்கு முன்பு வரை விளங்கிவந்தன என்பதை நா.வானமாமலை, மயிலை சீனி வேங்கடசாமி நாட்டார் தொடங்கி இன்றைய தொ.ப, ஆ.சி வரை பன்னிப்பன்னிச் சொல்லியுள்ளனர்.

பவுத்தத்திற்கு மக்கள் செல்வாக்கு, குறிப்பாக சாதியத்தால் விளிம்பில் தள்ளப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் செல்வாக்கு பெருகியபோது ‘உருவானதுதான்‘ அத்வைதம். பௌத்தமும் சமணமும் கடவுளையும் ஆன்மாவையும் மறுத்த நெறிகள். ஆனால் அத்வைதமோ ஆன்மாவிற்கும் பிரம்மத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றிப் பேசியது. சிக்கலான ‘தத்துவ விவாதங்களிலோ‘ மய்யப்படுத்தப்பட்ட சாராம்சவாதத்திலோ சிக்காமல் நடைமுறை சார்ந்த, சுயேச்சையான அற மதிப்பீடுகளை முன்வைத்தது பவுத்தம். கடவுளின் இடத்தில் அறத்தை வைத்தது பவுத்தம். ஆனால் அறத்தினிடத்தில் அகத்தையும் பிரம்மத்தையும் வைத்தது அத்வைதம். அறஞ்சார்ந்து இயங்கியதாலேயே பவுத்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலையை முன்வைக்க முடிந்தது. ஆனால் எல்லா ஆன்மாக்களிலும் பிரம்மத்தைக் காண முடிந்த ஆதிசங்கரரால் ‘சதுர்வர்ணம் ஏன் பேதத்தையும் தீண்டாமையையும் கட்டமைத்தது?‘ என்கிற கேள்வியை எதிர்கொள்ள முடியவில்லை. பவுத்தம் முன்வைத்த சமத்துவத்தினிடத்திற்காகத்தான் ஆதிசங்கரர் ‘ஆன்மாவுக்கும் பிரம்மத்திற்கான இடைவெளிக் கோடுகளை‘ அழித்தார். ஆதிசங்கரரே ‘கள்ள பவுத்தன்‘ என்று சனாதனிகளால் சந்தேகிக்கப்பட்டவர். ஆனாலும் அத்வைதம் பார்ப்பனீயத்தில்தான் முடிந்தது. அதனால்தான் இன்று சங்கரரின் வாரிசாக இருள்நீக்கிசுப்பிரமணியமே எஞ்சி நிற்கிறார்.

அதேபோல் பவுத்தமும் சமணமும் பிறவிச்சுழற்சியில் நம்பிக்கை கொண்டவை. சமணத்தைப் பொறுத்தவரை ‘முக்தி‘ என்பதே பிறப்பின் சங்கிலியை அறுப்பது. அதுவே பரிநிர்வாணம். அம்பேத்கர் ‘பவுத்தமும் தம்மமும்’ நூலில் பவுத்தத் தத்துவத்தின் மீதான அடிப்படைக் கேள்வி ஒன்றை எழுப்பினார். ‘பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆன்மாவே இல்லையென்னும்போது மறுபிறவி மட்டும் எப்படி சாத்தியம்?’. இங்குதான் அம்பேத்கர் புத்தருக்கும் அவரின் முதன்மைச் சீடரான ஆனந்தருக்கும் இடையிலான உரையாடலின் அடிப்படையில் மறுபிறவி என்பதை அறிவியல்பூர்வமாக விபரிக்கிறார். மனித உடலில் உள்ள பௌதீகப்பொருட்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் பிரபஞ்சத்தில் மறுசுழற்சிக்கு உள்ளாவதையே பவுத்தம் மறுபிறவி என்கிறது என்பது அம்பேத்கரின் துணிபு.

பவுத்தத்தின் மறுபிறவிக்கோட்பாட்டை இன்னொருவகையிலும் புரிந்துகொள்ளலாம். அவரவருக்கான வினையின் பயன்களை அவரவர்களே அனுபவிக்க வேண்டும். எனவே அவரின் செயல்பாடுகளைத் தீர்மானிக்க வேண்டியது அவரே. இங்கு தீர்மானகரமான சக்தி என்பது சுயேச்சையான தன்மதிப்பீடுகள்தானே தவிர புறத்திலிருந்து தருவிக்கப்பட்ட மதிப்பீடுகள் அல்ல. இதனாலேயே ‘ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்‘ என்கிற பயம் நிலைநாட்டப்பட்டது. ஏனெனில் ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’. ஆனால் வைதீகநெறியோ இந்த அனைத்து வினைப்பயன்களையும் ஒரு ‘பரிகாரத்தின்’ மூலம் தீர்த்துவிட முடியும் என்றது. இந்த பரிகாரத்திற்கான தரகர்களே பூசாரிகள். கோவில் என்னும் அதிகார மய்யமும் பார்ப்பனப் பூசாரிகள் என்னும் அதிகாரத் தரகர்களின் இருப்பும் வலிமையாக உறுதிசெய்யப்பட்டன.

இப்போது ‘நான்கடவுள்‘ படத்தை அவதானியுங்கள். பவுத்த, சமணக் கோட்பாடுகளின் படி மறுமையிலிருந்து உங்களுக்கு யாரும் விடுதலை அளித்துவிட முடியாது, பரிநிர்வாணம்தான் ஒரே வழி, இதற்கு நல்லொழுக்கம், நற்சிந்தனை என கடுமையான அறஞ்சார்ந்த பயிற்சியில் ஈடுபடவேண்டும். ஆனால் ‘நான்கடவுளிலோ‘ ருத்ரன் மாதிரியான அகோரிகளே உங்களுக்கு ‘இம்மையில் மோட்சத்தையும் மறுமையிலிருந்து விடுதலை‘யையும் அளித்துவிடுவார்கள். இதைவிட உட்சபட்ச வன்முறை அதிகாரத்திற்கு எதிராக நிற்பதற்குத் திராணியற்ற பாவப்பட்ட ஜீவன்களுக்கும் ‘விடுதலை’ வழங்கி விடுவார் ருத்ரன். இப்போது சொல்லுங்கள் நண்பர்களே, இது ‘நான் கடவுளா‘? ‘நானே கடவுளா?’.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இவ்வளவு விரிவான விளக்கத்திற்கும் சாருநிவேதிதாவிற்கும் என்ன சம்பந்தம்? சாருவின் ‘கடவுளும் நானும்‘ புத்தகத்தைச் சமீபத்தில் படித்தேன். சாருவின் சிறந்த படைப்புகளில் ஒன்று. நான் இன்றளவும் நாத்திகன்தான். ஆனாலும் சாருவின் அந்த புத்தகம் பிடித்திருந்தது. சாரு இறைநம்பிக்கையாளராக மாறுவது பிரச்சினையானதில்லை. இறைநம்பிக்கை என்பது தனிமனிதத் தேர்வே. ஆனால் இந்தியச் சாதியச் சமூகத்தில் கடவுள் என்பதே ‘சாதி காப்பாற்றும் கடவுளாக’ இருப்பதுதான் பிரச்சினை. சாரு இறைநம்பிக்கையாளராக இருந்தபோதும் வலதுசாரி நிலைப்பாட்டை எடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. சாதிவெறி கொண்ட நாத்திகர்களும் உண்டு. வள்ளலாரைப் போல சாதிஎதிர்ப்பு இறைநம்பிக்கையாளர்களும் உண்டு. ஆனால் இந்திய ஆன்மீகம் என்றபெயரில் இந்துத்துவத்தில் விழாமல் இருப்பதில் எச்சரிக்கை தேவை. தன்னை ஒரு இறைநம்பிக்கையாளராக அறிவித்த பிறகு என்னை மாற்றிய சிந்தனையாளர் பெரியார் என்று பேசும் துணிவும் நேர்மையும் சாருவிடம் பிடித்த அம்சம். அறமும் அன்பும் மட்டுமே ஆன்மீகத்தின் மதிப்பீடுகள் எனில் பவுத்தமே இந்தியாவின் ஆகச்சிறந்த ஆன்மீகம். பெரியாரைக் கூட ‘ஆன்மீகவாதி’ எனலாம். இப்போது சாருவிடம் ஒரு கேள்வி நீங்கள் பேசுகிற ஆன்மீகம் ஆதிசங்கரரின் ஆன்மீகமா? பவுத்தத்தின் அறஞ்சார்ந்த நெறியா?
&&&&&&&&&&&&&&&&&
‘நான்கடவுள்’ திரைப்படம் அதிகாரத்தால் விளிம்புக்குத் தள்ளப்பட்டவர்களின் வாழ்க்கையை விபரிக்கிறது என்று சாரு நெக்குருகுவதைப் பார்த்தால் அவர் ‘ஏழாம் உலகம்’ நாவலைப் படித்ததில்லையோ என்னும் அய்யம் வலுக்கிறது. ஏனெனில் நான்கடவுளில் வரும் பிச்சைக்காரரின் வாழ்க்கை, ‘மகாலெட்சுமி & ஜோதிலெட்சுமி’ மாதிரியான ‘பின்நவீனத்துவப் பகிடி’ வரை பெரும்பாலான காட்சிகள் ‘ஏழாம் உலகம்’ நாவலிலிருந்து அப்படியே கையாளப்பட்டவையே. அகோரி ருத்ரன் மட்டுமே பாலாவின் பாத்திரம். (நியாயப்படி பார்த்தால் கதை : ஜெயமோகன் & பாலா என்றுதானிருக்க வேண்டும். ஆனால் அது ஜெயமோகன் சுயமரியாதை தொடர்பான விசயம் என்பதால் அதிகமும் இங்கு விவாதிக்கத் தேவையில்லை). ‘நான்கடவுள்’ ஒரு பின்நவீனத்துவப் படம் என்று ஒத்துக்கொண்டால் காலச்சுவடு கண்ணனை ஆதரிக்கிற துரதிர்ஷ்டம் சமீபத்தில் சாருவுக்கு நேர்ந்ததைப் போல ஜெயமோகனையும் ’பின்நவீனத்துவ எழுத்தாளர்’ என்று ஒத்துக்கொள்கிற ‘அவலமும்’ நேர்ந்திருக்கும்.

‘ஏழாம் உலகம்’ நாவல் படிக்காமல் ‘நான் கடவுள்‘ படம் மட்டும் பார்த்தவர்களுக்காக...

படத்தில் வரும் மலையாள வில்லன் கதாபாத்திரம் நாவலில் ஒரு கம்யூனிஸ்ட். அவனைப் பொறுத்தவரை ‘பழனிக் கோயில் தைப்பூசத்தில் காவடி எடுத்து ஆடுவதும், புரட்சியும் ஒன்றே. இரண்டுமே மாஸ் ஹிஸ்டீரியா’. அந்த கதாபாத்திரம் ஒரு கம்யூனிஸ்டாக இருக்க வேண்டிய எந்த நியாயமும் நாவலின் கட்டமைப்பில் இல்லை. கம்யூனிஸ்ட் மலையாளியின் உருப்படிகள் என்பவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கான குறியீடே. ஆனால் ஒருபோதும் பண்டாரத்தை ( படத்தில் தாண்டவன் பாத்திரம்) ஒரு இந்து இயக்க உறுப்பினனாகப் படைக்க ஜெயமோகனுக்கு மனம் வராது. இப்படியாக கம்யூனிச எதிர்ப்பும் ஜெயமோகனின் மனவக்கிரமும் நிறைந்த குப்பைதான் ‘ஏழாம் உலகமே’ தவிர அது விளிம்புநிலைப் பாலாறும் தேனாறும் ஓடும் பின்நவீனத்துவ நாவல் எல்லாம் கிடையாது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&

கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி சாதாரண எம்.ஜி.ஆர், ரஜினி படக்காட்சி போல இருப்பதாக சாரு எழுதியிருக்கிறார். அந்த சண்டைக்காட்சி மட்டுமல்ல, பூஜாவைக் காப்பாற்றும் ஆர்யாவும் பழைய எம்ஜியார் நாயகப்பிம்பத்தின் மறுவார்ப்பே. இன்னொன்றையும் இங்கு நாம் மனங்கொள்ள வேண்டும். வடநாட்டு இடுகாட்டில் நடம் புரியும் ருத்ரனையும் ‘தென்னாட்டுடைய சிவனையும்‘ ஒரே கடவுளாக இந்துமதம் ‘உருவாக்கப்பட்டபோது‘ கட்டமைக்கப்பட்டது. (இதற்கான முயற்சிகள் பக்திக்காலகட்டத்திலேயே தொடங்கிவிட்டதற்கான சாட்சிகள் காரைக்காலம்மையார் பாடல்கள்.) அதேபோல் வடநாட்டு அகோரிகளையும் நமது சித்தர்களையும் ஒரே மாதிரியாகச் சமப்படுத்தி விட முடியாது. பவுத்த, சமணத்துறவிகள் வெறுமனே துறவு வாழ்க்கையோடு ஒதுங்கிவிடாமல் கலை, இலக்கியம் சார்ந்த முயற்சிகளிலும் அறஞ்சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டவர்கள். அஜந்தா, எல்லோரா ஓவியம் தொடங்கி நன்னூல் வரை அத்தனையும் அவைதீகத்துறவிகளின் அருட்கொடை. தமிழுக்கான இலக்கண நூல்கள் அத்தனையும் அவர்கள் போட்ட பிச்சை. போலவே சித்தர்கள் பாலாவின் அகோரிகளைப் போல் ‘காஞ்சா’ குடித்துவிட்டு வெறுமனே மோனத்தில் ஆழ்ந்தவர்கள் கிடையாது. பல அரிய மருத்துவ நூல்களைப் பங்களித்ததோடு மட்டுமில்லாது ‘பறைச்சி ஆவதேதடா? பனத்தி ஆவதேதடா? இறைச்சி எலும்பிலும் இலக்கம் இட்டிருக்குமோ?’ என்று சாதியமைப்பிற்கு எதிராய்க் கலகக்குரல் எழுப்பியவர்கள். ஆனால் படத்தில் பாலாவின் ருத்ரனோ அடிக்கடி பொசுக், பொசுக்கென்று ஆசனம் போட்டு அமர்வதைப் பார்த்தால் வித்தைக்காரன்தான் நினைவிற்கு வருகிறதே தவிர ஞானமில்லை. இன்னும் சொல்லபோனால் இன்று மத்தியதர வர்க்கத்திடம் பணக்காரச் சாமியார்கள் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் யோகா, ஆசனம் ஆகியவற்றை உருவாக்கியதே அவைதீக மரபுதான். புத்தர், மகாவீரர் என்று எல்லா சிலைகளும் தியானத்தில், ஆசனத்தில். எந்த இந்துக்கடவுள் ‘பொத்திக்கொண்டு’ உட்கார்ந்தது?
&&&&&&&&&&&&&&&&&&

‘நான்கடவுள்‘ திரைப்படம் உலகத்தரம் என்னும் ஏணியில் ஏறமுடியாமல் பாலாவின் டவுசரைப் பிடித்து இழுத்தது இளையராஜாவின் இசைதான் என்ற சாருவின் கருத்தை விவாதிக்கும் அளவு எனக்கு இசையறிவு கிடையாது. ஆனால், ‘பிச்சைப்பாத்திரம்’ பாடல் குறித்த சாருவின் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரி. கையிழந்து, காலிழந்து, தன் உடலையே பிச்சைப்பாத்திரமாக்கிக் கொண்டவர்களைப் பார்க்கும்போதும், அதன்பின்னுள்ள சமூக வன்முறை குறித்து யோசிக்கும்போதும் ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக இவ்வுலகியற்றியான்’ என்ற வள்ளுவனின் அறச்சீற்றமோ அல்லது படத்திலே விக்கிரமாதித்யன் பேசும் ‘புளுத்தி, கடவுள் ஒரு தேவடியாப்பையன்’ என்கிற கோபமோதான் வரவேண்டும். ஆனால் அந்த பாட்டில் நடப்பது என்ன? ‘பாத்திரம் என்னிடத்தில், அதன் சூத்திரம் உன்னிடத்தில்’, ‘பொருளைத் தேடும் பொருளற்ற வாழ்வு’ என்று பணக்கார நாய்களிடம் பேசவேண்டிய அசட்டுப் பிசட்டுத் தத்துவ மசிர்கள் எல்லாம் இழப்பதற்கு ஏதுமற்ற பிச்சைக்காரர்கள் குறித்த பாடலில் பாடப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு கேள்வி, பசித்தவர்க்கு முன்னான இந்த புளித்த ஏப்பம் யாருடையது. இளையராயாவுடையதா, பாலாவுடையதா?

Tuesday, February 3, 2009

முத்துக்குமாரின் மரணத்தைக் கொச்சைப்படுத்தும் துரோகிகளும் எதிரிகளும்

தோழர். முத்துக்குமாரின் தியாகத்தைக் 'கோழைத்தனம்‘ என வர்ணிக்கின்றனர் பாரதமாதாவின் யோனிபுத்திரன்கள். இன்னொருபுறம் ‘‘மாணவர்கள் நன்னாப் படிக்கணும். போராட்டத்தில் எல்லாம் ஈடுபடக் கூடாது‘‘ என்று ரத்தம் வழியும் வாயுடன் உபதேசிக்கின்றன டோண்டு மாதிரியான பார்ப்பன நரிகள். மாணவர்கள் நன்னாப் படிக்கணும், வீதிக்கு வந்து போராடக் கூடாது என்று மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலோ, அய்.அய்.டி மாணவரின் இட ஒதுக்கீட்டு எதிர்ப்புப் போராட்டத்திலோ உபதேசித்திருந்தால் பொருத்தமாயிருக்கும். அது சரி, மாணவர்கள் என்றால் படிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். மடாதிபதி என்றால் ஆன்மீகத்தில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும், சொர்ணமால்யா சோளிக்குள் கவனம் செலுத்தக்கூடாது என்று இருள்நீக்கி சுப்பிரமணியத்திற்குச் சொல்லியிருந்தால் பாராட்டலாம். எல்லாவற்றையும் விட கேவலமானது ஈனமானப் பேராசிரியர் அன்பழகனும் ‘தளபதி‘ மு.க.ஸ்டாலினும் விட்ட ஸ்டேட்மெண்ட்கள்தான்.

சட்டமன்றத்தில் முத்துக்குமாரின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி பா.ம.க தலைவர் கோ.க.மணி பேசியபோது அந்த அஞ்சலியைத் தானும் முன்மொழிவதாகச் சொன்ன அன்பழகன், பிறகு, ‘‘இந்த மாதிரி இளைஞர்கள் தீக்குளித்து இறப்பதை ஊக்குவிக்கக்கூடாது. அதனால் அஞ்சலியை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்றிருக்கிறார். நம் தளபதியோ, ‘‘ தீக்குளித்து இறப்பது தீவிரவாதம்‘‘ என்று உளறியிருக்கிறார். அடப்பாவிகளா! சின்னச்சாமியின் தீக்குளிப்புத் தியாகத்தில் தானேடா ஆட்சிக்கே வந்தீர்கள்? சின்னச்சாமி என்கிற ‘தீவிரவாதி‘ தீக்குளிக்கா விட்டால் இன்றைக்கு அழகிரி, கனிமொழி, கயல்விழி, கலாநிதி, தயாநிதி, உங்கள் வீட்டு நாய்க்குட்டிகள் எல்லாம் பதவி சுகத்தைம் அனுபவித்துக்கொண்டிருக்குமா? ‘‘தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்‘‘ என்று அறிவித்து, பிறகு தமிழகம் முழுக்க ஆங்காங்கே அப்பாவித் திமுககாரன் தீக்குளித்துச் செத்தபிறகு ‘‘ராஜினாவை வாபஸ் வாங்குகிறேன்‘‘ என்று கருணாநிதி எத்தனை முறை தமிழர்களின் தாலி அறுத்து ‘லுல்லுல்லூ‘ காட்டியிருக்கிறார்?

தமிழகம் முழுக்க இலங்கைப்பிரச்சினைக்காகப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக செயற்குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறீர்களே, யாரை எதிர்த்து அல்லது எதை எதிர்த்துப் பொதுக்கூட்டம் நடத்தப்போகிறீர்கள்? இதற்குப் ‘‘ பிரணாப் முகர்ஜியின் பியூன் இலங்கைக்குச் செல்ல வேண்டும்‘‘ என்று வழக்கம் போல தீர்மானம் போட்டிருக்க வேண்டியதுதானே!

கலைஞர் என்று சொல்வதற்கே அருவெறுப்பாக இருக்கிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார், தாமிரப்பரணி ஆற்றில் அடித்துக்கொல்லப்பட்ட தலித்துகள் என்று எத்தனையோ பிணங்களின் மீது ஏறித்தான் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி. ஆனால் அந்த கொலைகளை விட தமிழகம் முழுக்க கருணாநிதியின் துரோகத்தை வீரியத்துடன் அம்பலப்படுத்தியிருப்பவன் முத்துக்குமார்தான். கருணாநிதி யாரை மறந்தாலும் முத்துக்குமாரை மறக்க முடியாது. இன்றைக்குக் கருணாநிதிக்கு எதிரி ஜெயலலிதாவோ வைகோவோ அல்ல. முத்துக்குமார்தான் எதிரி. ஆனால் தமிழர்களாகிய நாங்கள் முத்துக்குமாரின் தியாகத்தையும் கருணாநிதியின் துரோகத்தையும் மறக்க மாட்டோம்.

முத்துக்குமாரின் மரணத்தைக் ‘கோழைத்தனம்‘ என்பவர்களே! அவனின் இறுதி அறிக்கையைப் படித்தபோது எனக்குள் தோன்றிய எண்ணம், ‘‘இத்தகைய விரிவான வாசிப்பும் கருத்தியல் தெளிவும் உடைய இளைஞன் செத்திருக்கக்கூடாது‘‘ என்பதுதான். ஆனால் நம் சுரணையை மீட்டெடுக்கவும் கருணாநிதி & காங்கிரசு கள்ளக்கூட்டுத் துரோகத்தை அம்பலப்படுத்தவும் முத்துக்குமாருக்கு இதை விட்டால் வேறு வழி இல்லையே. முத்துக்குமாரின் ‘கோழைத்தனத்தை‘ விமர்சிக்கும் மகா மகா வீரர்களே! அவன் மரணம் உங்கள் முகத்திலும் என் முகத்திலும் காறி உமிழப்பட்ட எச்சில்.

Monday, December 1, 2008

பூ - தமிழின் மகத்தான சினிமா





இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் வரைந்துகொண்டிருந்த தமிழ்ச்சினிமாப் பரப்பில் முதன்முறையாக ஒரு பெண்ணின் அதுவும் திருமணமான கிராமத்துப்பெண்ணின் காதல் நினைவுகளைத் தைரியமாய்ச் சொல்லும் படம்தான் பூ. திருமணமான பிறகும் பொங்கலுக்குத் தன் பழைய காதலன் வருவான் என்று பனைமரத்தினடியில் காத்திருக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''. கதை நாயகியின் பதில், அல்லது எதிர்க்கேள்வி இதுவரை தமிழ்ச்சினிமா கேட்டறியாதது, ''ஏன் மறக்கணும்?''. இப்படியான அரசியல் காரணங்களுக்காக மட்டுமின்றி, ஒரு அசல் சினிமாவின் பல்வேறு சாத்தியங்களையும் எத்தனித்திருக்கிறார் இயக்குனர். தமிழ்ச்சினிமாவில் அதிகம் பேசப்படாத சிவகாசி நாடார்களின் வாழ்வியலைப் பேசும் படம். முகத்தில் இத்தனை உணர்ச்சிகளைக் காட்டுவதில் கதைநாயகி பார்வதி தமிழுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஷோபா. சமகாலச் சாம்பார் சிறீகாந்த், சில செயற்கையான காமெடிக் காட்சிகள், படத்தில் ஒட்டாது தனித்துத் தெரியும் பரவை முனியம்மா பாடல்காட்சி இவற்றையெல்லாம் தவிர்த்துப் பார்த்தால் இயக்குனர் சசி ஒரு மகத்தான சினிமாவைத் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். படம் பற்றி இன்னும் கூடுதலாக எழுதினால் அது தந்த பரவசத்தை இழந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். நீங்களும் பாருங்கள்.

Saturday, November 15, 2008

வாரணம் ஆயிரம் - ஜிகினாப் பேப்பருக்குள் சில பீ உருண்டைகள்

பார்ப்பனீய எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு, போலீசு எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைக்கும் எதிர் அரசியலாளார்களாகிய நாம் தமிழ்ச்சினிமாவில் செருப்பாலடிக்க வேண்டியவர்கள் பட்டியலில் கௌதம்வாசுதேவ மேனனுக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. காக்க காக்க , வேட்டையாடு விளையாடு போன்ற போலீசுப் படங்களைக் கொடுத்த மேனனுக்கு என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்னும் போலீஸ் பொறுக்கிகளைக் கதாநாயகர்களாக அறிமுகப்படுத்திய பெருமை உண்டு. இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட 28 என்கவுண்டர்களில் கொல்லப்பட்டவர்களில் 20 பேர் தலித்துகள் என்னும் உண்மை உறக்கும்போது மேனனை ஏன் செருப்பாலடிக்க வேண்டும் என்பது மட்டுமில்லாது எந்த செருப்பால் அடிக்க வேண்டும் என்பதும் விளங்கும்.

வாரணம் ஆயிரம் - தவமாய்த்தவமிருந்து, ஆட்டோகிராப் போன்ற சேரன் படங்களை உயர் மத்தியதர வர்க்கக் குடும்பத்திற்குப் பொருத்தி மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள படம். ஆனால் தவமாய்த்தவமிருந்து, ஒன்பது ரூபாய் நோட்டில் இருக்கும் ஒரிஜினாலிட்டியும் பார்வையாளனின் மீதான தாக்கமும் வாரணத்திற்குக் கிடையாது. மணிரத்னம், ஷங்கர், மேனன் போன்ற வலதுசாரிச் சினிமா இயக்குனர்களின் படங்களிலிருந்து கேமிரா, இசை, அழகியல் போன்ற சமாச்சாரங்களைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் அடிப்படை அறிவும் தர்க்கமும் கூட இல்லாது அம்மணமாய் நிற்பது தெரியும். காஷ்மீர்ப் பிரச்சினை, திராவிட இயக்கங்கள் குறித்து எந்த அறிவுமின்றி எடுக்கப்பட்ட ரோஜா, இருவர் என்று பட்டியல் நீளும். உண்மையில் திராவிட இயக்கம் குறித்து காத்திரமான விமர்சனத்தை முன்வைத்தது அமைதிப்படையே தவிர இருவர் அல்ல. கமலின் ஹேராம் உள்ளிட்ட படங்களின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் படைப்பிற்கான அவரது உழைப்பு மீது எனக்கு மரியாதை உண்டு. இருவரோ ஒரு பீரியாடிக்கல் படத்திற்கான எந்த உழைப்புமில்லாத, மொழிமாற்றம் செய்யப்படட் ஒரு ஆங்கில நாடகத்தைப் போன்றுதான் இருக்கும். சரி, வாரணம் ஆயிரத்திற்கு வருவோம்.

சூர்யா, அவரது பாசமுள்ள அப்பா கிருஷ்ணா, (இன்னொரு சூர்யா) ஆகியோருக்கிடையிலான உறவு குறித்து முன்வைக்கும் பாவனையில் பல அபத்தங்களையும் ஆபத்துக்களையும் படம் முன்வைக்கிறது. வழக்கமாக தமிழ்ச்சினிமா நாயகர்கள் சிலுக்குவார்பட்டியிலிருந்து தங்கள் காதலியைத் தேடி சிங்காரச்சென்னைக்கு வருவார்கள். ஆனால் மேனன் ஒரு 'உயர்தர' இயக்குனர் அல்லவா? நாயகன் சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போகிறார். ''காதலியைத் தேடிப்போகிறேன்'' என்றதும் தூதரக அதிகாரி சிரித்துக்கொண்டே விசா வழங்குகிறார். கமல்ஹாசனின் டவுசர் விமானநிலையத்தில் கழற்றப்பட்டதைச் சாமர்த்தியமாக மேனன் மறைத்திருக்கிறார். ஜார்ஜ் பெர்ணாண்டஸ் இந்தக் காட்சியைப் பார்த்ததும் ஜட்டியை இறுக்கப் பற்றிக்கொண்டதாகக் கேள்வி.

அமெரிக்காவில் காதலிக்கும் பெண் குண்டுவெடிப்பில் இறந்துவிடுகிறார். (வேறு யார் குண்டுவைக்கப் போகிறார்கள், 'முஸ்லீம் தீவிரவாதிகளை'த் தவிர). அப்புறம் காதல் தோல்வியின் சோகத்தில் சிகரெட், கஞ்சா, பெத்தடின் என்று படிப்படியாய் முன்னேறுகிறார் சூர்யா. திடீரென்று அவர் காஷ்மீர் கிளம்பிப் போகும்போது மேனன் தன் புத்தியைக் காட்டப்போகிறாரோ என்று பயமாயிருந்தது. ஆனால் ஒரே காட்சியில் காஷ்மீர் முடிந்ததும் நிம்மதி வந்தது. இருந்தாலும் மேனன்னா சும்மாவா? தனது சிறுவயதில் பரிச்சயமான அப்பாவின் நண்பரின் மகனை டெல்லியில் கடத்திவிட்டார்கள் என்று தெரிந்ததும் சூர்யா டெல்லிக்குக் கிளம்பிப் போகிறார்.

டெல்லியின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திரிந்து, குழந்தை ஆதித்யாவைக் கடத்தியவர்களைக் கண்டுபிடித்துவிடுகிறார். குழந்தைகளைக் கடத்திக் கோடிக்கணக்கில் பேரம் பேசுபவர்கள், பெண்களைக் கடத்தி மாமா வேலை பார்ப்பவர்களின் பெயர்கள் டப்பு மாலிக், ஆசாத், பின்னணியில் மசூதி, பாங்கோசை, அப்புறம் கௌதம் வாசுதேவ மேனனின் விறைத்துநிற்கும், சுன்னத் செய்யப்படாத இந்துக்குறி. ங்கோத்தா பாடுகளா!

ஒரு இந்துக்குழந்தையை முஸ்லீம் கிரிமினல்களிடமிருந்து காப்பாற்றிய சூர்யா என்ன செய்வார்? இதற்கிடையில் கௌதம் மேனனுக்கு 'என்னடா, தன் டிரேட் மார்க் டுமீல் டுமீல் துப்பாக்கிச் சத்தத்தைக் காணோமே' என்று தோன்ற, கரெக்ட், சூர்யா மிலிட்டரியில் சேர்கிறார். 'தனக்குச் சிறுவயதிலிருந்தே மிலிட்டரியில் சேர வேண்டும் என்கிற அரிப்பு இருந்ததாகவும்' சூர்யா சொல்கிறார். எனக்கென்னவோ கஞ்சா, பெத்த்தடின், அமெரிக்கக்காதலி புணர்ச்சி என்று போதையேறிப் போன சூர்யா, மிலிட்டரி சரக்கு மற்றும் பழங்குடிப் பெண்களின் உடல்களுக்காக மிலிட்டரியில் சேர்கிறாரோ என்று தோன்றியது.

மிலிட்டரியிலோ தினம் தினம் சண்டை நடக்கிறது. வழக்கமான தமிழ்ச்சினிமா கதாநாயகன்களைப் போல பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து நாட்டையும் சூத்தையும் காப்பாற்றுகிறார். அப்பா கிருஷ்ணா மண்டையைப் போடும் சமயத்திலும் யாரோ ஒரு பெண்ணைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றும் ஜெய்ஹிந்த் இந்தியன். படம் முழுக்க, 'டாடி, (அதென்னடா அம்மாவை மட்டும் அம்மா என்று கூப்பிடுகிறீர்கள்?), லவ், தஸ், புஸ்' என்று முக்கால் படத்தில் இங்கீலீஷ் பேசிவிட்டுக் கடைசியில் 'வாரணம் ஆயிரம்' என்னும் ஆண்டாளின் பாடலுக்கு அர்த்தம் சொல்லிச் சிம்ரன் முடிக்க, பார்வையாளர்கள் அடித்துப் பிடித்துத் தியேட்டரை விட்டு ஓடி வருகிறார்கள்.

துப்பாக்கியல்ல, மேனனின் 'இந்துக் குறி'!






இடையில் ஒரே பாட்டில் என்ன இழவு வேலை பார்த்தோ சம்பாதித்து நின்றுபோன வீட்டைக் கட்டிமுடிப்பது, ஒரே பாட்டில் ராணுவத்தில் மேஜராவது போன்ற ஹைடெக் விக்ரமன் தனக் கூத்துகளுக்கும் பஞ்சமில்லை. அப்பா சூர்யாவைப் போலத்தான் அம்மா சிம்ரனும் சூர்யா மீது பாசமாக இருக்கிறார், சுதந்திரம் கொடுக்கிறார். ஆனால் ஏன் அப்பா மீது மட்டும் சூர்யாவுக்கு இவ்வளவு பிரியம் என்று தெரியவில்லை. வழக்கம் போல கௌதம மேனன் படத்துப் பெண்களைப் போலவே முதல் பாதியில் கித்தாரை வருடியபடி ஒரு காதலியும் பின்பாதியில் துப்பாக்கியை வருடியபடி ஒரு காதலியும் சூர்யாவுடன் 'படுத்து விட்டுப்' போகிறார்கள். போர்நடைமுறைகள் கூடத் தெரியாது முட்டாள்தனமாக ராணுவக்காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. மிஷின்கன்னை முதுகிலேயே வைத்துக்கொண்டு வெறும் பிஸ்டல்களால் மட்டும் சூர்யா சுடும்போது. 'ஒருவேளை முதுகில் இருப்பது கித்தார் என்று நினைத்துவிட்டாரோ' என்று நினைக்கத்தோன்றுகிறது.

இந்த மூன்றரை மணிநேரக் குப்பை நிச்சயமாக ஜெயிக்கப் போவதில்லை. அதுவும், பி, சி, பார்வையாளர்கள் படத்தின் மீது ஒண்ணுக்குத்தான் அடிப்பார்கள் என்பது ஆறுதலான செய்தி. போட்ட காசு வாராததால் மு.க.அழகிரி கௌதம் வாசுதேவ மேனனின் முதுகில் தோரணம் ஆயிரம் கட்டப்போவது வேறு விஷயம். ஆனால் இந்தக் குப்பையை 'உலக சினிமா' என்று எழுதிய சில அபத்தப் பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. தரமான இசை மற்றும் ஒளிப்பதிவு, சூர்யா என்னும் மகத்தான கலைஞனின் அபாரமான உழைப்பு என்னும் ஜாக்லேட் ஜிகினாப்பேப்பருக்குள் பார்ப்பனப் பாசிச மலத்தை (நன்றி : தோழர் பைத்தியக்காரன்)ப் பொட்டலம் கட்டித் தந்திருக்கிறார் மேனன். இந்த முஸ்லீம் விரோதச் சினிமாவை ஆசிப் மீரான் போன்ற இஸ்லாமியத் தோழர்களும் கொண்டாடுவது பயமாயிருக்கிறது. இதற்குப் பெயர்தான் உலகசினிமா என்றால் நம் பெண்களுக்கு நாப்கின் வாங்குகிற செலவு மிச்சம். இந்த உலக சினிமாக்களில் தூமையைத் துடைத்து மேனன்களின் முகத்தில் எறிவோம்.

Monday, November 10, 2008

ஜ்யோவ்ராம்சுந்தருக்கான பதில்கள்

? 1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

தெரியவில்லை.

?2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ஏகன். அதற்கு முன் துரை. ஜெண்டில்மேனுக்குப் பிறகு திரையரங்கில் பார்த்த அர்ஜூன் படம். அர்ஜூன் படங்களையும் விஜயகாந்த் படங்களையும் பேருந்துப் பயணங்களில் மட்டுமே பார்க்க (விபத்து?) 'நேர்வதுண்டு'. தொழில் நிமித்தம் திரையரங்கில் துரை மாதிரியான கொடுமைகளை அனுபவிக்க வேண்டி நேர்கிறது.

? 3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கள்ளக்குறுந்தகடில் 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம். படத்தில் இரு ஆச்சரியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். படத்தின் முதல் காட்சியிலிருந்து பெரும்பாலான காட்சிகள் நீளமான ஷாட்கள். பொதுவாக பாலுமகேந்திராவின் 'வீடு', 'சந்தியாராகம்' மாதிரியான தமிழர்களால் ஆர்ட்பிலிம் என்று ஒதுக்கப்பட்ட படங்களில் மட்டுமே இத்தகைய நீளமான ஷாட்கள் அமைவதுண்டு. ஆனால் சுப்பிரமணியபுரம் நீளமான ஷாட்களைக் கொண்டிருந்தும் வெற்றிகரமாக ஓடியது ஒரு ஆச்சரியம். இரண்டாவது காதலையும் நட்பையும் 'கொண்டாடும்' தமிழ்ச்சினிமா உலகில் காதலி மற்றும் நண்பனின் துரோகத்தைச் சொன்ன படம். பொதுவாகத் திரைப்படங்களின் பின்னுள்ள அரசியல் பார்க்கப்படுவது தவிர்க்கமுடியாதது. இங்கு நாயகியின் குடும்பம் பிள்ளைமார்க்குடும்பம் (வீட்டில் வ.உ.சியின் புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும்.) நாயகன் மற்றும் நண்பன் பரமுவின் சாதியும் அஃதே. ஆனால் கஞ்சாகருப்புவும் திருவிழாவில் பொறுப்பு வகிக்கும் அந்த மீசை பெரிசும் அனேகமாகத் தேவர் சாதியாக இருக்கலாம். கோவில் திருவிழாவை முன்னின்று நடத்தும் அதிகாரம் பிள்ளைமார்க் குடும்பத்திலிருந்து தேவர் சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு மாறுவதனால் ஏற்படும் மன உளைச்சல், அரசியல் கட்சியில் பிள்ளைமார்ச் சாதி அதிகாரத்தைக் கைப்பற்றுதல், அதற்காகத் தன் சாதி இளைஞர்களையே அடியாட்களாகப் பயன்படுத்திக்கொள்ளுதல் என பல பார்வைகள் உற்றுநோக்கின் விரியும்.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய. தமிழ்ச்சினிமாக்கள் தாக்காத தமிழர்கள் உண்டா என்ன? ஒரு காலகட்டம் வரைக்கும் சினிமாவில் தெரியும் கதாநாயகப் பிம்பனின் அசைவுகள், உடல்மொழி வரை என்னைப் பொருத்திப் பார்த்துக்கொள்கிற மனோபாவம் இருந்தது. இந்த தாக்கம் திரையரங்கை விட்டு வெளியிலில் வந்த பின்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இப்போது அந்த தாக்கம் இருப்பதில்லை. நாயகன்களை விட நாயகிகளுக்காகவே படங்கள் பார்க்க விருப்பம். மீண்டும் மீண்டும் பார்த்த படங்கள் அனேகம். வசந்த மாளிகை, புதிய பறவை, பாட்ஷா, அமைதிப்படை, பூவிழிவாசலிலே, காதல்கொண்டேன் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

நான் திமுக குடும்பத்திலிருந்து வந்தவன். சின்னவயதில் டி.ராஜேந்தர் படங்களைக் குடும்பத்தோடு பார்க்கும் பழக்கம் உண்டு. (அந்த கொடுமைகள் மட்டுமல்ல, கலைஞர் வசனம் எழுதிய பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, ராமநாராயணன் இயக்கிய சகாதேவன்மகாதேவன், தங்கமணி ரங்கமணி படங்களையும் பார்த்ததுண்டு.) டி.ராஜேந்தர் திமுகவை விட்டு வெளியேறியது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதற்கப்புறம் பெரிய அதிர்ச்சி என்றால் கல்லூரி படிக்கும்போது சில்க்சுமிதாவின் தற்கொலை. சுமிதா என்னை ஈர்த்த நடிகை அல்ல. ஆனாலும் அவர் மீது ஏதோ கரிசனமோ அனுதாபமோ இருந்தது. ஏனென்று தெரியவில்லை. பொதுவாக நடிகைகளிடம் கேட்பதற்கென்று பத்திரிகையாளர்களிடம் சில கேள்விகள் உண்டு. கவர்ச்சியாக நடிப்பீர்களா மாதிரியான 'மாற்றம் என்பதே மாறாத ஒன்று' கேள்விகள். அதில் ஒன்று ''சினிமாவில் நடிக்கவராவிட்டால் என்ன செய்வீர்கள்?'' என்பது. ''டாக்டராகியிருப்பேன், லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகியிருப்பேன்' என்று நடிகைகளிடமிருந்து வித விதமாய்ப் பதில் வருவது வழக்கம். ஆனால் சுமிதா சொன்ன பதில், 'நக்சலைட் ஆகியிருப்பேன்' என்பது. அவரின் ஆந்திராவில் நக்சல் இயக்கத்தின் செல்வாக்கும் சுமிதாவின் இளமைக்கால வறுமையும் அவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கலாம். அவர சென்னையில் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போதும் மக்கள் யுத்தக்குழுவிற்குப் பொருளாதார ரீதியாக உதவியாகச் செய்திகள்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?


மணிரத்னம் - ரகுமான் வருகையின் போது இசைவடிவங்கள் மாறியது. அப்புறம் டி.டி.எஸ். திரையரங்கில் புதிய அனுபவமாக இருந்தது. முதன்முதலாக சென்னையில் ஐநாக்ஸ் திரையரங்கிற்குப் போனபோது போஸ்டர் கூட ஒட்டாமல் ஒரு தியேட்டர் இருப்பது சாத்தியமா என்று ஆச்சரியப்பட்டேன்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

நிறைய வண்ணத்திரை கிசுகிசுக்கள் தொடங்கி சிறுபத்திரிகை இதழ்களின் சினிமா கட்டுரைகள், சினிமா தொடர்பான புத்தகங்கள் என்று.

7. தமிழ்ச்சினிமா இசை?

ம்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?


இந்திய சினிமாக்களை அதிகம் பார்த்ததில்லை. உலக சினிமாக்கள் பார்த்துண்டு. சில்ட்ரன் ஆப் ஹெவன், பை சைக்கிள் தீவ்ஸ், சர்க்கிள், அகிரோ குரோசாவாவின் 'டிரீம்ஸ்' என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சினிமா நண்பர்கள் சில பேர் பழக்கம் உண்டு. அதுபோக, ஒருமுறை 'சீன்' படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. (இதைச் சினிமா அனுபவத்தில் சேர்த்துக்கொள்ளலாம்தானே!)அப்புறம் அனிமேஷன் படங்களுக்கான ஸ்கிரிப்ட் உதவி செய்ததுண்டு. பிடித்தது என்றுதான் சொல்ல வேண்டும். மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் செய்வதற்கு விருப்பம் உண்டு. ஆனால் தமிழ்ச்சினிமா மேம்படவெல்லாம் அது மயிரளவும் உதவாது என்றுதான் கருதுகிறேன்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அமீர், பாலா, மிஷ்கின், செல்வராகவன் என்று நம்பிக்கையூட்டும் இளம் இயக்குனர்கள் இருப்பதனால் பல ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்றுதான் நம்புகிறேன். 80களில் பெரிய அலைகளை ஏற்படுத்திய பாரதிராஜா, பாலச்சந்தர், பாலுமகேந்திரா ஆகியோரின் காலம் முடிந்து இது புதிய அலைக்காலம். நிச்சயம் நல்ல சினிமாக்கள் நிறைய வரும். ஆனால் வெளிப்படையாக அரசியல் பேசுகிற யாரும் தமிழ்ச்சினிமாவில் மாற்றத்தை ஏற்பத்தவில்லை. அதேபோல் ஷங்கர், மணிரத்னம் மாதிரியான வலதுசாரி இயக்குனர்கள் புதிய தொழில்நுட்பங்களைத் தமிழ்ச்சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதற்குப் பயன்படுவார்களே தவிர பயப்படும்வகையில் இவர்களுக்கான எதிர்காலம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. நாட்டாமை, கண்ணீர்க்குடும்பம் கன்றாவிகளைச் சுமக்கும் நிலப்பிரபுத்துவச் சினிமாக்களும் ஜெயிக்கப்போவதில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

தமிழர்கள் தாமாகவே புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்குப் போய்வார்கள் ((-. தம்பி படத்தின் நூறாவது நாள் விழாவில் பாலுமகேந்திரா பேசியது நினைவுக்கு வருகிறது. ''தமிழர்களுக்கு இசை என்றால் அது சினிமா இசை, கவிதை என்றால் அது சினிமா பாடல், பேஷன் என்றால் நடிகர்களின் உடைகள்''. நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து. ஸ்கைலாபு, ஒய் டூ கே மாதிரியான பதில்கள் தெரியாத, குழப்பமான, 'ஜீவாதாரப்' பிரச்சினைதான். சினிமா இல்லாத தமிழர்களின் வாழ்க்கையைக் கற்பனை செய்ய முடியவில்லை.

அழைக்கும் 5 பேர்கள்

1. பொட்டிக்கடை சத்யா.
2. தமிழ்நதி
3. பைத்தியக்காரன்
4. பாமரன்
5. வரவணையான்.

( கமர்சியல் பிரேக்)

Monday, November 3, 2008

கவுண்டமணி : சர்ச்சைகளும் சால்ஜாப்புகளும் அப்பால ஜ்யோராம்சுந்தரும் நாகார்ஜுனனும்

ஒரு பிரதி வாசகனின் முன் வாசிப்பை வேண்டி நிற்கும்போதே தனக்கான விருப்பத்தைப் பொதிந்து வைத்திருக்கிறது. அது வாசிப்புக்கல்ல என்னும் பம்மாத்தையும் அடர்த்தியான கருத்தாங்களீன் ஊடே பொருண்மையான கூறுகளையும்பொதிந்து வைப்பதன் மூலம் அது புதிர்ப்பிரதியாக உருமாற்றமடைகிறது.

- ‍நியோலி பானிஹ்


'கவுண்டமணி குறித்து எழுத வேண்டும் என்று ஆசை' என்று பதிந்து ஒரு வாரமாகியிருக்கும். நண்பர் பாலபாரதியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது, '' எம்.ஆர்.ராதாவைப் பற்றி நீங்கள் எழுதியதைப் போல கவுண்டமணியைப் பற்றியும் எழுதுவீர்களா?'' என்று கேட்டிருந்தார். அப்போது திக்கென்றிருந்தது. ஏனெனில் ராதா குறித்து எழுதுவதைப் போல கவுண்டமணி பற்றி விரிவாக எழுதுவதற்கான தரவுகள் இல்லை. ராதா ஒரு இயக்கம் சார்ந்த ஆளுமையாக இருந்ததால் இயக்கத்தின் வரலாறு ஊடேயே ராதா குறித்த தகவல்களும் கிடைக்க ஏதுவுண்டு. ஆனால் கவுண்டமணி குறித்து அணுகுவதற்கு கவுண்டமணியின் நகைச்சுவையைத் தாண்டி ஒன்றுமில்லை. கட்டுரையின் மூன்றாம் பகுதி 'உருப்படியாய்' வந்திருப்பதாக சுந்தர் உள்ளிட்ட நண்பர்கள் சொல்லியிருந்தார்கள். டுவிட்டரிலும் கவுண்டமணி விவாதம் பட்டையைக் கிளப்பியதாக அறிந்தேன். வலையுலகிலும் கணிசமான அளவு.

என்றபோதிலும் இப்போதைக்குக் கவுண்டமணி குறித்த தொடரை நிறுத்தி வைக்கிறேன். ஏனெனில் இதுவரை நான் எழுதியதில் எனக்குத் திருப்தியில்லை. இன்னும் கொஞ்சமாவது உழைக்கவேண்டும். சுந்தர் சொல்லியது போல கவுண்டமணியின் நகைச்சுவைக்காட்சிகள் தொகுக்கப்பட்ட ஒளிப்பேழைகளைப் பார்க்கவேண்டும். ராஜ் வீடியோ விஷனில் கிடைக்கும். இப்போதைக்கு அதற்கு நேரமில்லை. வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒழுங்காய் உழைத்து எழுதலாம். அல்லது ரோசா வசந்த், ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாத நாராயணன் போன்ற சான்றோர்கள் யாரேனும் தொடர்ந்தாலும் நலம்.

இப்போதைக்குக் கவுண்டமணி பதிவுகள் குறித்து வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பார்ப்போம். இந்த விமர்சனங்கள் என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவும் மாறியது குறித்து நான் பெரிதாய்ப் பேச விரும்பவில்லை. விரும்பாததன் காரணம் நான் ஒரு பெரும்பத்திரிகையில் போய்ப் 'பம்மி'யிருப்பதனால் அல்ல. கல்லூரி முடித்த காலத்திலிருந்தே ஏதேனும் ஒரு வேலை பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன். முழுநேர இலக்கியவாதியாகவோ/கலைஞன்/கலகக்காரனாகவோ வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏதும் வாய்க்கவில்லை. மேலும் நான் பெரும்பத்திரிகையில் பம்மி விட்டதாக விமர்சிப்பவர்கள் உணவுக்கு முன்பு ஒருமுறையும் உணவுக்குப் பின்வு ஒருமுறையும் புரச்சி செய்வதற்கான சான்றாதாரங்களும் இல்லை. ஆனால் இந்த சர்ச்சையில் எனக்கு ஒரே ஒரு வருத்தம். என் மனைவி ஜெயந்தியை அவள், இவள் என்றெல்லாம் ஏகவசனத்தில் பின்னூட்டமிட்டுக்கொண்ட ஒரு பதிவு. (ஏற்கனவே திருமணமான புதிதில் வந்த நள்ளிரவு தொலைபேசி மிரட்டல்களுக்கு அடுத்து இது மன உளைச்சலை ஏற்படுத்தியது) மேலும் அந்தப் பதிவு வாசகர் பரிந்துரையிலும் வந்தது. பொதுவாகத் தனிநபரைத் தாக்குகிற (அ) விமர்சிக்கிற பதிவுகள் சூடான இடுகைகளில் வருவதில் ஆச்சரியமில்லை. (என்னுடைய சில பதிவுகள் கூட அவ்வாறு வந்துள்ளன.) ''சுகுணாதிவாகருக்குச் சாமான் சிறிசா?'' என்று நீங்கள் ஒரு பதிவு எழுதினால் அது சூடான இடுகையில் வரலாம், வாசகர் பரிந்துரையிலுமா? வாழ்க வாசகர்கள் மற்றும் அவர்தம் பரிந்துரைகள்.

கிடக்கட்டும். இனி விமர்சனங்கள்...

1. முதலில் சுகன் குறித்த விமர்சனம்... ஏதோ சுகனுக்கும் எனக்கும் வாய்க்கால் சண்டை போலவும், அதனாலேயே நான் அவரைச் 'சீண்டினேன்' என்பது போலவும் எழுதுவது மகா அபத்தம். ஈழப்பிரச்சினை, தலித்தியம், அதிகார மறுப்பு, எதிர் இலக்கியம், பவுத்தம், பெண்ணியம், பெரியாரின் பொருத்தப்பாடுகள் என்று நானும் சுகனும் ஒத்துப்போகும் புள்ளிகள் பல. ஷோபாசக்தியும் சுகனும் தொகுத்துள்ள 'கருப்பு', 'சனதருமப்போதினி' இரு தொகுப்புகளிலும் எனது கவிதைகள் வெளியாகியுள்ளன. எனக்கும் சுகனுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான எந்த முகாந்திரங்களுமில்லை. ஆனால் சுகன் என் நண்பர் என்பதற்காகவே அவரை விமர்சிக்கவே கூடாது என்பது என்ன ஞாயம்? யமுனாராஜேந்திரன் குறித்த சுகனின் மொழிதலையே நான் விமர்சித்திருந்தேன்.எனக்கும் யமுனா மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு. குறிப்பாக மணிரத்னம், கமல்ஹாசன் குறித்த அவரது கருத்துக்களின் மீது. 'குருதிப்புனல்' திரைப்படம் துரோகாலை விட சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது, குருதிப்புனலின் தீவிரவாதிப் பாத்திரம் ஈழப்போராளிகளைக் குறிக்கிறது என்றெல்லாம் யமுனா எழுதிக்குவித்த அபத்தங்கள் ஏராளம். ஆனால் நான் இங்கு சுகனை விமர்சித்தது ஒரே ஒரு காரணம் தொட்டு.

'ரவிக்குமார் ஒரு தலித் விரோதி' என்று யமுனா சொன்னதாலேயே அவரைக் 'கவுண்டர் கல்ச்சர்' என்று சுகன் விமர்சித்திருந்தார். ரவிக்குமார் தலித் விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தார் என்று யமுனா மட்டும் சொல்லவில்லை, கோகுல்நாத்காந்தி, பியூச்சர் ராதா முதலான தலித்துகளே சொல்லியிருக்கிறார்கள். அதிலும் கோகுல்நாத்காந்தி அர்பன் தலித்தோ டர்பன் தலித்தோ அல்ல. போஸ்டர் ஒட்டுவதையே தனது பிழைப்பாகக் கொண்ட கடைநிலைத் தலித். அவர் 'ரவிக்குமாரின் பொய்முகம்' என்று சிறுவெளியீடே கொண்டுவந்திருக்கிறார். அவ்வளவு ஏன், ஷோபாசக்தி - அ.மார்க்ஸ் உரையாடலில் (தீராநதி அக்டோபர் 2008) விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஈழத்திலுள்ள சாதிப்பிரச்சினைகளை மூடிமறைத்து தலித்துகளுக்குத் துரோகமிழைப்பதாகச் சொல்லியிருக்கிறார். இதனால் ஷோபாவிற்கு சாதிய முத்திரை குத்துவதோ அல்லது தலித் விரோதி என்று சொல்வதோ நியாயமா என்ன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுகள் உண்டு. தலித் அரசியல், தேசிய அரசியல், வர்க்க அரசியல் என்று. நமது அரசியல் நிலைப்பாடுகளில் பொருந்தி வராதவர்களின் மீது இத்தகைய அடையாளங்களைச் சுமத்தி விடலாமா என்பதே என் கேள்வி. மேலும் தமிழச்சி சுகன், சோபாசக்தி குறித்து எடுக்கும் வாந்திகளுக்கும் அதற்கும் எத்தொடர்புமில்லை. நான் ஏதோ தமிழச்சி ரசிகர் மன்றத்தின் சென்னைக் கிளை தலைவர் என்பதாகப் பாவித்து அவதூறுகளைச் சுமத்துவது நீதியாகாது. அ.மார்க்ஸ், ஷோபா, சுகன் மாத்கிரியான தோழர்களின் உழைப்பு குறித்தும் பங்களிப்புகள் குறித்தும் எந்தவித அறிவுமற்ற தமிழச்சியின் கேணத்தனமான கிறுக்கல்களுக்காக நான் சுலுவை சுமக்க ஏலாது. மேலும் 'சுகனை விமர்சிக்கக்கூடாது' என்பதோடு' இந்த குரல் நிற்கவில்லை. சுந்தரை விமர்சிக்கக்கூடாது, அய்யனாரை விமர்சிக்கக்கூடாது, பைத்தியக்காரனை விமர்சிக்கக்கூடாது என்றெல்லாம் நீள்கிறது. அவர்கள் இந்தக் கணம் வரை எனக்கும் நண்பர்களே. ஆனால் இதற்காக விமர்சிக்கக்கூடாது, விமர்சிக்கக்கூடாது என்பதெல்லாம் 'சின்னப்புள்ளத்தனம்' இல்லையா? அப்படியே நான் 'சீண்டுவதாகக்' கருதினால் அதற்கு சுந்தரோ அய்யனாரோ பைத்தியக்காரனோ பதில் சொல்ல மாட்டார்களா என்ன? தனித்துவமும் சுயமரியாதையும் உள்ள இந்த நண்பர்களை ஏதோ 'யெஸ் பாஸ்' சொல்லும் அடியாட்களைப் போல பாவித்து 'விமர்சிக்காதே' என குரலெழுப்புவது எதேச்சதிகாரம் அல்லாது வேறென்ன? சுந்தரை மட்டுமல்ல, எனக்காக கச்சை கட்டிய செந்தழல் ரவி, ஓசை செல்லா, லக்கிலுக், வரவணையான், பொட்டிக்கடை சத்யா, தமிழச்சி, பெயரிலி என நான் எல்லோரையுமே பல சந்தர்ப்பங்களில் விமர்சித்திருக்கிறேன். சுகன் மீதான விமர்சனம் என்பது கட்டுரையின் தொடக்கப்புள்ளியே தவிர மய்யப்புள்ளி அல்ல.

2. கவுண்டமணியை சாதி எதிர்ப்புப் போராளியாகச் சித்தரிக்கிறேன் என்பது இன்னொரு அபத்தம். ராதாவைப் போல இயக்கம் சார்ந்த கலைஞன் அல்ல மணி. ஆனால் 'நமது கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதி காப்பாற்றும் மதம், நமது இலக்கியம் சாதி காப்பாற்றும் அரசாங்கம்' என்று பெரியார் சொன்னதோடு இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம். நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமா. இந்த சாதி காப்பாற்றும் சினிமாவில் அதற்கு எதிரான கூறுகள் சிந்திச் சிதறிக் கிடந்தபோதும் அதைத் தொகுத்துப் பதிய வேண்டியது நமது பொறுப்பு. தமிழ்ச்சினிமாவில் அப்படித் தப்பித் தவறி அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மாற்றுக் கூறுகளின் மீது கவனம் குவிக்க வைப்பதே என் நோக்கமல்லாது கவுண்டமணியைச் 'சினிமா அம்பேத்கர்' ஆகச் சித்தரிப்பது அல்ல.

3. கவுண்டமணி ஸ்கிரிப்டில் உள்ள வசனங்ககளையே பேசுவார் என்பது, குசேலனில் ரஜினி சொன்னதைப் போன்றதொரு அபத்தம். வெறுமனே ஸ்கிரிப்டில் இருப்பதை அப்படியே ஒப்பிப்பதற்குக் கவுண்டமணி போன்ற ஆளுமை தேவையில்லை. ஒருபுறம் கவுண்டமணி ஸ்கிரிப்டில் இருப்பதையே ஒப்பிக்கிறார் என்று குற்றம் சாட்டுவது, மறுபுறம் கவுண்டமணியின் நகைச்சுவை வக்கிரமானது என்பது... என்னவொரு முரண்பாடு?

4. கவுண்டமணி செட்டில் மற்ற நடிகர்களை மதிக்கமாட்டார் என்னும் குற்றச்சாட்டு பொதுப்புத்தி சார்ந்த அற்பமான குற்றச்சாட்டு. 'செட்டில் மதிப்பது' என்றால் தமிழ்ச்சினிமா உலகத்தைப் பொறுத்தவரை, கதாநாயக நடிகர்கள் செட்டில் வந்தவுடன் எழுந்து நின்று வணக்கம் போடுவது, கூஜா தூக்குவது ஆகியவைதான். இங்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சில்க்சுமிதா ஒருமுறை செட்டில் சிவாஜிகணேசன் நுழைந்தபோது கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாராம். அதைப் பார்த்து கொதிப்படைந்த சிவாஜி அதற்குப் பின் பல படங்களில் தனது படத்தில் சில்க்கைப் புறக்கணித்தாராம். பின்பு சக நடிகை ஒருவர் சில்க்கிடம் கேட்டபோதுதான், தனக்குக் கொடுக்கப்பட்ட உடை மிகவும் டைட்டாக இருந்ததாகவும் காலைக் கீழே போட்டால் மிகவும் ஆபாசமாக இருக்கும் என்றும் தெரிவித்தாராம். (கிழக்குப் பதிப்பகம் வெளியிட்ட சில்க்சுமிதா குறித்த புத்தகம்). இப்படிப் பல்வேறு சிக்கல்கள் தமிழ்ச்சினிமாவில் உண்டு. பானுமதி, எம்.ஆர்.ராதா தொடங்கி கவுண்டமணி மாதிரியான கலைஞர்கள் இத்தகைய 'மரியாதைகளை' கதாநாயக நடிகர்களுக்கு வழங்குவதில்லையென்றால் அவர்களின் சுயமரியாதையைப் பாராட்டி அவர்களின் பக்கம் நிற்பதுதான் நீதியாகுமே தவிர, 'கவுண்டமணி மதிக்காததால் அவரைத் 'தட்டி' வைத்தார்கள் என்று அல்ப சந்தோசப்பட்டுக்கொள்வது' நீதியாகாது.

பெரிதாய்ப் பிலிம் காட்டப்பட்ட சீறிதர் நாராயணனின் பதிவையும் நாட்கள் கழிந்துதான் படிப்பதற்கான சூழல் வாய்த்தது. பிறகு அது ஒரு சப்ப மேட்டர் என்று தெரிந்தது.

சிறீதர் நாராயணனின் பதிவின் சாராம்சக்கூறுகள்.

1. கவுண்டமணியின் காமெடிக்கு லிமிட்டேசன்ஸ் உண்டு.

2. அவர் சந்திரபாபுவை விட பெரிய நடிகர் இல்லை.

3. இன்று வலைப்பதிவர்கள் பலர் பயன்படுத்தும் வார்த்தைகள் வடிவேலுவின் காமெடியிலிருந்தே பயன்படுத்தப்படுகிறது, கவுண்டமணியின் நகைச்சுவையிலிருந்து அல்ல.

4. வடிவேலுவின் நகைச்சுவைத்தான் 'நச்சு' இல்லாதது. கவுண்டமணியின் நகைச்சுவை மற்றவர் மனங்களைப் புண்படுத்துவது.

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. கவுண்டமணிக்கு லிமிட்டேசன்கள் இருக்கிறதுதான். யாருக்குத்தான் லிமிட்டேசன்கள் இல்லை? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நகைச்சுவைக்குக் கூட அதற்கான லிமிட்டேசன்கள் இருக்கின்றன. ஏன், உங்களுக்கும் எனக்கும் கூட லிமிட்டேசன்கள் இல்லையா என்ன?

2. இப்படியெல்லாம் பொத்தாம் பொதுவாக அவரவர் அபிப்பிராயங்களிலிருந்து கூறிச்செல்வது பெரிய விஷயமில்லை. சாப்ளினை விட என்.எஸ்.கே பெரிய ஆள் இல்லை,
கலைவாணரை விட சந்திரபாபு பெரிய ஆள் இல்லை, சந்திரபாபுவை விட உசிலைமணி பெரிய ஆள் இல்லை......

3. இந்த வாதம் உண்மையிலேயே பெரிய நகைச்சுவைதான். பதிவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டெல்லாம் கலைஞர்களை அளந்துவிட முடியாது. ஒருகாலத்தில் தங்கவேலுவின் 'அதான் தெரியுமே' கூற்று புகழ்பெற்றது. நாகேஷின் 'காதலிக்க நேரமில்லை', தேங்காய் சீனிவாசனின் 'டிமுக்கு டப்பா டிப்பா', கவுண்டமணியின் 'அட்ராசக்கை', இப்போது வடிவேலுவின் 'கிளம்பிட்டாய்ங்கய்யா...'. இது அந்தந்த காலத்தில் செல்வாக்கு பெற்று விளங்கும் நடிகர்களின் மார்க்கெட் தொடர்பான விவகாரம். நமது பதிவர்கள் வடிவேலுவை மட்டுமா அதிகம் பயன்படுத்துகிறார்கள், ஷகீலாவையும் நமீதாவையும் கூடத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்? (இங்கு நான் சொல்லும் 'பய்ன்படுத்துவது' வேறு((‍ ‍ ) அதற்காக ஷ்ப்னா ஆஸ்மி, சீமா பிஸ்வாஸை விட ஷகீலாவும் நமீதாவும் தான் சிறந்த நடிகைகள் என்று சொல்வாரா சிறீதர் நாராயணன்?

4. முதலில் புண்படுத்துவது, இழிவுபடுத்துவது என்பது சார்பைப் பொறுத்ததே. எம்.ஆர்.ராதா கூட 'பக்தர்கள், இந்துக்கள் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களை' இழிவுபடுத்தினார், புண்படுத்தினார் என்று ஒரே வரியில் புறங்கையால் துடைத்தெறிந்துவிட முடியும். ஆனால் அது சரியான ஆய்வு அல்ல. கவுண்டமணியின் நகைச்சுவைகளில் பிரச்சினைகளே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. நிறத்தை இழிவுபடுத்தும் (இத்தனைக்கும் கவுண்டமணியும் கறுப்புதான்), ஊனமுற்றவர்களை இழிவுபடுத்தும் மணியின் நகைச்சுவைகளை நானும் ஏற்பதில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரின் நகைச்சுவையையே 'வக்கிரம்' என்று முத்திரை குத்துவதை மறுக்கிறேன்.

தமிழ்ச்சினிமாவில் இருக்கும் அத்தனை நச்சுகளும் எல்லா அம்சங்களிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். இதற்குக் கவுண்டமணி மட்டும் விலக்கல்ல. வடிவேலுவின் நகைச்சுவையில் நச்சு இல்லை, மற்றவர் மனங்களைப் புண்படுத்தவில்லை என்று சொல்வதும் நியாயமில்லை. வடிவேலுவின் 'அவனா இவன்' காமெடி ஓரினச்சேர்க்கையாளர்களை அசிங்கப்படுத்தவில்லையா? 'சில்லுன்னு ஒரு காதல்' படத்தில் வரும் மும்பை சிவப்பு விளக்கு காமெடி திருநங்கைகளைக் கொச்சைப்படுத்தவில்லையா? உச்சமாக 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் இடம்பெறும் 'துபாயில் கக்கூஸ் கழுவும்' ஜோக் மலமள்ளும் அருந்ததியர்களை இழிவுபடுத்தவில்லையா?

சிறீதர்நாராயணனைப் பொறுத்தவரை கவுண்டமணியைச் சார்லிசாப்ளினோடு ஒப்பிட்டு விட்டார்களே என்கிற கோபம். அந்த வாதத்தை நானே மறுத்திருக்கிறேன். சாப்ளினுக்கான அளவுகோல்கள் வேறு. கலைவாணர், கவுண்டமணி, சந்திரபாபு, வடிவேலு என்று இந்த கலைஞர்கள் அனைவருக்குமான அளவுகோல்கள் வெவ்வேறு வகையானவை. சிறீதருக்குக் கோபம் சாப்ளினால் வந்தது என்றால் வேறு இடத்திலிருந்து வந்த கோபம், நான் எதை எழுதினாலும் அதை மூர்க்கத்தனமாக மறுக்க வேண்டும் என்ற குருட்டு ஆவேசம் காரணம்.

இனி ஜ்யோராம் சுந்தர் சினிமா குறித்து முன்வைத்திருக்கும் கேள்வி விளையாட்டுக்குள் புகுந்து மேலும் சில வித‌யங்கள் குறித்து உரையாடுவோம்.

(தொடரும்...)

1. 'அப்பால் ஜ்யோராம்சுந்தரும்...' என்று போட்டிருந்தால் இது இலக்கியப்பிரதியாகியிருக்கும். ஆனால் இது அப்பாலதான்.

2. ரஜினி அடுத்த படத்தில் பேச வேண்டிய பஞ்ச் டயலாக்...?

வரும்...ஆனா.... வராது.

3. பதிவின் தொடக்கத்திலுள்ள கூற்றை மொழிந்த நியோலி பானிஹ் யார்?

1) லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் 2) பிரெஞ்சு உளப்பகுப்பாய்வாளர் 3) ஜெனீவாவைச் சேர்ந்த மொழியியலாளர் 4) போஸ்ட் மார்க்சிஸ்ட்

விடை 33ம் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.


கர்நாடகத்தில் கிறித்துவர்கள் மீதான போலீசின் தாக்குதல் ‍‍‍ மனதை உறைய வைக்கும் படங்கள்